Showing posts with label Valley of the kings. Show all posts
Showing posts with label Valley of the kings. Show all posts

Monday, May 04, 2020

ஆளாளுக்குக் கையிலே ஹேண்ட் பேக்.... (பயணத்தொடர் 2020 பகுதி 47 )

ராம்தான் ரொம்பவே ஆகிவந்த பெயர் போல இருக்கு!  நிறைய அரசர்கள் பட்டத்துக்கு வந்தவுடன்  ராம் பெயரை வச்சுக்கறாங்க.  ஒவ்வொரு மன்னருக்கும்  அஞ்சு பெயர்கள் இருக்குமாம். பொறந்தவுடன் வைக்கிற பெயர் இல்லாம.. ஒவ்வொரு காலத்திலும் ஒரு பெயர்னு வச்சுக் கடைசியில் பட்டத்துக்கு வந்தாட்டு அஞ்சாவது பெயர் வந்துருமாம்.
Rameses / Ramses   பெயரில் பதினொரு  பேரரசர்கள் இருந்துருக்காங்க.  இவர்கள் வரிசையில் ஒன்பதாம் பேரரசரின்  கல்லறைக்குகைக்குள்தான் இப்போ போறோம்.  இதுதான் கடைசி நமக்கு. மூணுதானே கணக்கு :-)
வழக்கமான முறையில்தான் நுழைவு கேட்.  குகையின் கீழ்பாகம் சமாதி என்பதால் இங்கேயும் சரிவுப்பாதைதான். ஆனால் அவ்ளோ சரிவாக இல்லை.  ரொம்பதூரம் நடந்த பிறகு கடைசிப் பகுதியில்தான் சரிவு அதிகம்.
இந்த  சமாதிக்குகை தோண்ட ஒரு பேட்டர்ன் வச்சுருக்காங்க.... மலையை அப்படியே  நேராக் குடையாம, கீழே சரிவாத் தோண்டிக்கிட்டு மலைக்குக் கீழே அடியில் போறது.....  அதுலேயும் ஒரு  கணக்கா.... ஒரு நூறு மீட்டர் தூரம் வரை (அப்போ ஏது இந்த மீட்டர் எல்லாம்....  அவங்களுக்குன்னு எதோ நீட்டளவு இருந்துருக்காது ?)   தோண்டிக்கிட்டே போறதுதான். அதனால் எல்லா சமாதிக்குகைக்கும்  கீழே இறங்கிப்போகும்படி  ஆகிருது.....
சுவர்களில் இவர்கள்   வழக்கம்போல்  சேதி சொல்லும் Hieroglyphs சித்திர எழுத்துகள்.  இதுலே கூடப் பாருங்க..... இந்த எழுத்துகள் ஏழு நூறுக்கும் மேலே இருக்காம்.  தனிப் படமா இருக்கும்  ஒரு எழுத்து, ஒரே ஒரு எழுத்தாக இல்லாம...ஒரு சொல்லாகக்கூட இருக்குமாம். அப்படி இருக்க  இந்தச் சித்திர எழுத்துகளை டீகோட் பண்ணிட்டோமுன்னு சொல்லி  A B C D  வகையில் இதுக்கு இது, அதுக்கு அதுன்னு பண்ணி வச்சுருக்கறதை என்னன்னு சொல்றது?
ஏழு நூறு எங்கே ? வெறும்  இருபத்தியாறு எங்கே ? ஙே........  இதை வச்சு....  சுவரில் இருப்பதையெல்லாம் படிச்சுப் பார்த்துட்டோமுன்னு சொல்றதை........    ப்ச்..... (எனக்கென்னமோ இது ஒரு பம்மாத்து வேலையாத்தான் தெரியுது....   )  அந்த நாட்டுலேயே   இந்த எழுத்தைப் பயன்படுத்துவது  ஏழாம் நூற்றாண்டிலேயே வழக்கொழிஞ்சு போச்சாம். எப்போ? கிறிஸ்துவம்  வந்து இடம் புடிச்சாட்டுன்னு  ஒரு தகவல்.


பாம்புகள் ஏராளம் !!!  இவுங்க கலாச்சாரத்தில்  நாகங்களுக்கு முக்கிய இடம். அதனால்தான்  தலை அலங்காரத்தில்  நெத்திச்சுட்டியைப்போல் பாம்பு படம் எடுத்து உக்கார்ந்துருக்கு.  அதுவும் இந்த  Pharoah Head dress லே ரெட்டைப்பாம்பு வேற !  பெண்களுக்கு சிங்கிள் பாம்புன்னு நம்ம க்ளியோவைப் பார்த்தால் தெரியுது...





இந்தக் குகையை ரொம்ப காலத்துக்கு முன்னாலேயே கண்டு பிடிச்சுட்டதா ஒரு தகவல். கண்டுபிடிச்சவர் 1827 இல் சாமிகிட்டே போயிட்டதால், கண்டுபிடிச்ச காலம்   அதுக்கு முன்னால்தான் இருக்கணும், இல்லே?
அப்போ இந்த மாதிரிச் சுற்றுலாப்பயணிகள்  கூட்டங்கூட்டமா வந்துருக்க வாய்ப்பே இருந்துருக்காது.

இந்தக் கல்லறைக் குகைகளுக்குள் போய், அங்கிருக்கும்  பொருட்களைத் திருடிக்கிட்டுப் போகும்  கூட்டம் ஒன்னு  அண்டை நாடுகளில் இருந்து  வந்துருக்கு. நிறைய சமாச்சாரங்களை அபேஸ் பண்ணிட்டாங்க. பேரரசருக்கு இந்த விவரம் தெரியவந்ததும்.... எப்படிக் காவல் காப்பது என்ற குழப்பத்துலே, மிச்சம் மீதி இருக்கும்  மம்மிகளும் திருடு போயிருமோன்னு  மம்மிகளையும், மற்ற பொருட்களையும் இங்கிருந்து எடுத்துப்போய்  வேற இடத்தில் காப்பாத்தி வச்சுருக்கும்படி ஆச்சு.

திருட்டுக்கூட்டம், சுவர்களில் கிறுக்கியும் வச்சுட்டுப் போயிருக்காம். எல்லாம்  பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான்.

ஆமாம்.... அப்போவே செல்ஃபோன் கண்டுபிடிச்சுட்டாங்களா என்ன ?

இது  சமீபத்திய வேலைப்பாடா இருக்கணும், இல்லே?  செங்கல் செல்ஃபோன் எல்லாம் இருந்த காலம் நினைவிருக்கோ?  இதைப் பார்த்தால் எஸ் 9+ மாதிரியில்லே இருக்கு :-)
இங்கே    Pharoah  ஒருவர்,  HORUS   (God of Vengeance) என்னும் சாமியாண்டை என்னை மன்னிச்சுருன்னு சொல்லும்விதம் கைகளை வச்சுக்கிட்டு இருந்தார். இப்போ ? சாமியை க்ளிக்கறார்....   இதுக்குத்தான்  சாமியைப் படம் எடுக்காதேன்னு நம்ம பக்கங்களில் சொல்றாங்க  போல :-) என்னமோ போங்க....
பழையகாலச்சித்திரத்தில் யாரோ நைஸா சிலுவையை நுழைச்சுட்டுப் போயிருக்காங்க....

முற்காலத்துக் கடவுளர்கள்தான் எல்லா இடங்களிலும் இருக்காங்க. இதுலே கடவுளர்களும் சரி,  அரசர்களும் சரி...  வளையம் போட்ட சிலுவை போல ஒன்னைக் கையில்  ஹேண்ட்பேக் மாதிரி பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. இதுக்கு Ankh என்று பெயராம் Eternal life and Immortality யைக் குறிக்கும் .  ரொம்பவே பவர்ஃபுல் அடையாளம்.
ஆட்டுக்கடா சாமி பெயர் Amun. இவர்  சாமிகளுக்கெல்லாம் சாமி !  இவர் சூரியனோடு சேர்ந்து Amun Ra ன்னும் இருக்கார்.  ஆமென்னு சொல்ற சொல் கூட இந்த ஆமுன் லே இருந்து வந்ததாம் !
கீழே இறங்கிப்போகும்போது ரெண்டு பக்கங்களிலும் சதுரத் தூண்கள். அதுலேயும் ஒரு சித்திரம்..... புலித்தோல் உடை போட்டுக்கிட்டு இருக்காங்க. அப்பத்துப் பூசாரிகளாம். !

கடைசியில் இருக்கும் சரிவில் இறங்கிப்போனால்  சமாதி .... ஆனால்  வெறும் தரைதான். நடுவில் இருக்க வேண்டிய  கல்லால் ஆன சமாதியைக் காணோம்.  பின்பக்கச் சுவரிலும் பக்கச் சுவர்களிலும் விதானத்திலும் கடவுளர்கள்.  நிறம் மங்காமல் கொஞ்சம் பளிச்ன்னுதான் இருக்கு.

இவருடைய ஆட்சி காலத்தில்தான்  கல்லறைத் திருடர்களுக்குப் பயந்து மம்மிகளை இடம் மாத்துனது. இப்பப் பார்த்தால் இவரையும் இடம் மாத்தியிருக்காங்க ! அப்புறம் இவரை வேறொரு இடத்தில் கண்டுபிடிச்சுட்டாங்களாம்.

 போன பதிவில் பழைய கால ஈஜிப்ட் நாட்டுலே முப்பது அரசர்கள் ஆட்சி செஞ்சுருக்காங்கன்னு சொல்லி இருந்தேனில்லையா  அந்த வரிசையில் இவர் இருபதாவது மன்னர்.  பதினெட்டு வருஷங்கள் ஆட்சி செஞ்சுருக்கார் !

ஆஞ்சியைப் பார்த்ததும் ஆச்சரியம்தான்.... இவர் எங்கே இங்கே ?   Babi / Baba  ன்னு பெயராம்.  பாதாள லோகத்தின் சாமி இவர் !
சரிவில் ஏறி மேலே வந்து  நடையாய் நடந்து குகைக்கு வெளியில் வந்தோம். ஆச்சு நம்ம மூணு கல்லறைக்குகை தரிசனங்கள். இனி கிளம்ப வேண்டியதுதான்.  இந்த மலையின் முகட்டில் பிரமிட் ஒன்னை இயற்கையே கட்டி வச்சுருக்கு ! அடுத்தடுத்து கல்லறைக்குகைகள் இருக்கு. இருக்கட்டும் :-)


வாசலில் காத்திருந்த இதிஹாபுடன்  ட்ரெய்லர் வண்டி இருக்குமிடத்துக்குப் போனோம். வண்டி ரெடி !     மூணே நிமிட்டில் முகப்புக் கட்டடம்!



இனி கிளம்ப வேண்டியதுதான்.....

சலோ......

எங்கே போறோமாம் ?

தொடரும்.......  :-)


Friday, May 01, 2020

பதிமூணா இல்லை பதினாலான்னு தாயைத்தான் கேக்கணும்.... (பயணத்தொடர் 2020 பகுதி 46 )

Ramses IV பார்த்துட்டு,  வெளியே வந்ததும் அடுத்த  கல்லறைக்குகைக்குக் கூட்டிப்போனார் இதிஹாப்.  அந்தப்பகுதியில் கொஞ்சம் அதிகமான கூட்டம்தான். செல்லம் ஒன்னு  சும்மா நின்னு வேடிக்கை பார்க்குது.  பாவம்.... இங்கே அதுக்கு யார் சாப்பாடு போடறாங்க?  ப்ச்....

பழைய ஈஜிப்ட்  நாட்டுலே  வம்சாவளியா  ஆட்சி நடத்துன  அரசர்கள்  முப்பது  பேராம்!  அந்த வரிசையிலே  பத்தொன்பதா இருந்தவருடைய கல்லறையைத்தான்  இப்போ நாம் பார்க்கப்போறோம்.  அவருடைய பெயர் Merenptah.   பேரரசர் Ramses II அவர்களின் மகன்.  பட்டத்து இளவரசனோ?  ஊஹூம்....


பதிமூணாவது பிள்ளையோ இல்லை பதினாலாவதோன்னு தெரியலை !  கணக்கெல்லாம் வச்சுக்கலை போல....     தகப்பனுக்கு ஆயுசு கெட்டி.  அறுபத்தியேழு வருஷம் அரியணையில் இருந்துருக்கார்.  அந்தக் காலக்கட்டங்களிலேயே    ஒவ்வொரு பிள்ளையா  பலவழிகளில்  சாமிகிட்டேப் போயிருக்காங்க. கடைசியில் மிஞ்சின புத்திரர், அரியணையில் ஏறுனபோது வயசு எழுபது !

(எனக்கென்னவோ இப்பத்து மஹாராணியும், புத்திரரும் நினைவுக்கு வர்றாங்க. எங்க நாட்டுக்கும் இவுங்கதான் மாட்சிமை தாங்கிய மஹாராணி !)


அரச பதவி ஏற்றதும் செஞ்ச முதல் வேலை...   தனக்கான கல்லறையைக் கட்ட ஏற்பாடு செஞ்சதுதான்.  இந்த மன்னர்கள் எல்லாம் அவுங்கவுங்க கல்லறைகளைத் தானே டிஸைன் செஞ்சு கட்டி வச்சுக்கறாங்க  போல !
பேரரசர் Pharoah Merenptah  சிறப்பான ஆட்சியைக் கொடுத்துருக்கார். இவர் ஆட்சி காலத்துலேதான் அண்டைநாடான லிபியா  சண்டைக்கு வந்து, அவுங்களைப் போரில் ஜெயிச்சுத் தன்நாட்டைக் காப்பாத்துனதால் மக்களுக்கு இவர்மேல் பெரும் மதிப்பு !  யாருடைய ஆட்சின்னாலும், தன் குடிமக்கள் நலனைப் பார்த்துக்கும்  தலைவருக்குத்தான்  மதிப்பும் மரியாதையும் தாமாய்க் கிடைக்கும், இல்லே?

ஆனாப் பாருங்க.... இவர் பத்தே வருஷம்தான் ஆட்சியில் இருந்துருக்கார்.

இன்னொரு சுவாரஸ்யமான சமாச்சாரம்....    மோசஸ் (டென் கமாண்ட்மென்ட்ஸ்) என்னும்  மூஸா  இவருடைய  சகோ வாம் !  இப்படி ஒரு தியரி இருக்கு!  ராஜகுமாரி நைல்நதியில் மிதந்துவந்த பொட்டியில் இருந்த ஆண் குழந்தையை எடுத்துப்போய் அரண்மனையில் வச்சு வளர்த்தாங்கன்னு  வாசிச்சு இருப்பது நினைவுக்கு வருது.
சரி, வாங்க உள்ளே போகலாம்.  இங்கேயும்  நீளமாப்போகும் சரிவான  மரப்பலகைப் பாதை. நூத்தறுபது மீட்டர் இறங்கணும்.  நடுநடுவில் குறுக்கே  இரும்புப் பட்டையுமா போட்டு வச்சுருக்காங்க. சறுக்காமல் இருக்க இந்த ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு. கைப்பிடியும் போட்டு வச்சுருக்காங்க.
 சுவரின் ரெண்டு பக்கமும்,  செதுக்குப் படங்களா நிறைஞ்சுருக்கு !   விதானத்தில்  சித்திரங்கள் போல  ஒன்னு....  வரைஞ்சதா இல்லை இயற்கையா கல்லில் இருந்த டிஸைனா ?

பேரரசரும், சூரியனும்  ஹலோ சொல்லிக் கைகுலுக்கறாங்க. அந்த நாட்டுலே  Pharoahவே சாமி  மாதிரிதான் இல்லையோ...

படகுப்பயணம்....
முதலைச்சாமி.....
அறைகளாட்டம் ரெண்டு பக்கமும் இருக்க நாம் கீழிறங்கிப்போறோம். தூண்கள் கூட  வச்சுக் கட்டி இருக்காங்க . கூரை இடிஞ்சு விழாமல் இருக்க சப்போர்ட்!


விதானம் முழுசும் நக்ஷத்திரங்கள்.......

நல்லாத்தான்  கட்ட ஆரம்பிச்சுருக்கார். ஆனால் சண்டைகளில் ஈடுபட்டு அதுலேயே காலம் கடந்து போயிருக்கு.  பத்தே வருஷத்துலே போயிருவாருன்னு தெரிஞ்சு போச்சோ என்னமோ....  கல்லறை வேலைகள் எல்லாம் அவசரடியா நடந்தாப்டி இருக்குன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க... ப்ச்....
இதைப்பாருங்க.... இது கால் வச்ச பாம்போ?  இப்படி கால்கள் வச்சுக்கிட்டு நடக்கும் மீன்களை ஒருமுறை சிங்கப்பூரில் பார்த்துருக்கேன்.


சரிவுப்பாதைக்கிடையில் கொஞ்சம் சமதளம்.
ஒருவழியாக் கீழிறங்கினதும்  சமாதியும், அதுக்குப் பின்னால் இன்னும் ஒரு ஹாலும் இருக்கு!  சட்னு பார்த்தால் நம்மூர்லே   ரெண்டு பக்கமும் திண்ணை வச்ச வீடு இருக்குமே அப்படி !
திண்ணைமேலே ஏறிக்கூடப் பார்க்கலாம். படிகள்  இருக்கே !  கொல்லைப்புறம் தெரியுதான்னு நான் பார்த்தேன் :-) இல்லை.  கம்பிக்கதவு இருக்கு !   உள்ளே போக ஒரு  ரகஸியப் பாதை கூட  இருக்கலாம் !  யார் கண்டா?



ஹாலில் ஒரு  கல்லில் செஞ்ச சவப்பொட்டி. மம்மி டிஸைன், மம்மியை வைக்கிறதுக்கு! இதுக்குள்ளே இன்னும் ஒரு  பொட்டி இதே மாதிரி இருக்கு. அதுக்குள்ளேதான் இவர் கிடக்கிறார்!
இந்தக் கல்லறைக்குள் இருந்த இவரை ஏதோ ஒரு  காலத்தில் வேறெ கல்லறைக்குகையில் இன்னும் நாலு மம்மிகளில் ஒருத்தராகச் சேர்த்து விட்டுருந்தாங்கன்னும்,  அப்புறம்  கண்டுபிடிச்சு இங்கே கொண்டு வந்து வச்சாங்கன்னும் ஒரு தகவல் கிடைச்சது. எப்படிக் கண்டுபிடிச்சாங்களாம் ?  இவர் ஆர்த்தரைடீஸ் நோயாளியாம்.   கால் முட்டி எல்லாம் கலாஸ்.....   ( ஆ.... நம்ம கேஸ் !!!!)   
  
அதுலே கால் வைக்கும் பகுதியில்  நீண்ட ரெக்கைகள்  உள்ள  தேவதை காலை மடிச்சு உக்காந்துருக்கு ! நல்ல பெரிய பெரிய சிறகுகள் !  நெருப்புக்கோழியின்  சிறகுகளாம்!   தேவதையின் பெயர்....  Goddess Maat .   ஓ.... சாமி!  நீதி, நேர்மை, சட்டம்,  உண்மை இப்படி முக்கியமானவைகளுக்கு அதிபதி.நீதியும் சட்டமும்  மட்டும்  எல்லோருக்கும் ஒரே மாதிரி இருந்தால்  அதுக்கப்புறம் வேறெதற்கும்  தேவையே இல்லைதானே?  அதது ஒரு ஒழுங்கில் நடக்குமா இல்லையா?    Egyptian Goddess Maat .   Goddess of truth, justice, wisdom, the stars, law, morality, order, harmony, the seasons, and cosmic balance. Maat was both the goddess and the personification of truth and justice. Her ostrich feather represents truth.

நெருப்புக்கோழியின் இறகுகள் ரொம்பவே உயர்ந்த பொருள் போல ! நம்ம Tutankhamun (குழந்தை மன்னர் ) கல்லறையில்  தங்கப்பிடி போட்ட இறகுகள் விசிறி இருந்துருக்கு !  அதைத்தான் நேத்து ம்யூஸியத்துலே பார்த்தோம்.

நெருப்புக்கோழி வேட்டைக்கு மன்னர்கள் போவாங்களாம். அப்படிப் போனப்பதான் தேர்ச்சக்கரம் உடைஞ்சு, அதுலே இருந்து கீழே விழுந்ததால்  குழந்தைமன்னர் காலில் அடிபட்டுருச்சுன்னும் ஒரு தியரி இருக்கே ! இவரோட  கல்லறைக்குள்  தேர்கள்  கூட இருப்பதாக  ஒரு தகவல்.
திண்ணையில் இருந்து எடுத்த படம்  மேலே ! சமாதியை நல்லா இன்னும் கீழிறக்கிக் கட்டி இருக்காங்க.  நாம் மேலே மரத்தரையில் நின்னு பார்க்கிறோம்.
இந்த சமாதியிலும் ரிப்பேர் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.  உதிர்ந்து போன டிஸைனை எல்லாம் புதுப்பிக்கிறாங்க.




 கூடியவரை 'சுத்தி'  பார்த்துட்டுத் திரும்ப மேலேறி வந்தோம்.
அடுத்த இடம் பார்க்கக் கூட்டிப்போனார் இதிஹாப். அப்போதான் பார்க்கிறேன்... நம்ம Tut (குழந்தை மன்னர்) கல்லறை அடுத்தாப்லேயே இருக்கு !
இதுக்குள் போகத் தனிக்கட்டணம்.  நம்ம மூணில் இது வராது.  ஆனால் உள்ளே இருக்கும் முக்கியமான செல்வங்கள் வகைகளையெல்லாம்தான் இப்போ ம்யூஸியத்தில் கொண்டு போய் வச்சுட்டாங்களே....    இப்போதைக்கு டூட் மட்டும்தான் அங்கே இருக்கார். குகையும் சாதாரண வகைதானாம்.   உண்மையைச் சொல்லணுமுன்னா.... எல்லா மம்மிகளும் ஒரே மாதிரிதான் இருக்காங்க. பாடம் பண்ணி வச்சாலும் காய்ஞ்ச கருவாடுதான், இல்லே !
குழந்தை மன்னர் டூட்டின் பெயர்  ரொம்பவே பிரபலமாகிட்டதால்  இங்கே கூட்டம்  வருதுன்னார் இதிஹாப்.  அதுவுஞ்சரி. வாசலில் நின்னு ஒரு க்ளிக், ஆச்சு :-)
வாங்க நம்ம மூணாவதுக்குப் போகலாம் :-)

தொடரும்..... :-)