Showing posts with label Citrus Hotel. Show all posts
Showing posts with label Citrus Hotel. Show all posts

Wednesday, December 03, 2014

முதல் மரியாதை ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 2)

உறக்கச் சடைவு இருந்தாலும்,  அன்றைய நாளை வீணாக்க மனசு வருதா?   ஊர்வந்து சேர்ந்த விவரத்தை மச்சினருக்குச் சொல்லிட்டு, ஏழரைக்குக்   காலைக் கடமைகள் முடிச்சு, கீழே  ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம். சின்னதா  ஒரு ரெஸ்ட்டாரண்ட். தொட்டடுத்து வெளியே (செயற்கை) புல்வெளியில்  போட்டு வச்சுருந்த  செட்டிங்ஸ் நல்லா இருக்கு.  நம் காலை உணவு அங்கேயே இருக்கட்டும்.


மூலிகைகளும் வெள்ளரிக்காயும்  சேர்த்த  ஆரோக்கிய பானம் குட்டிட்டம்ப்ளரில்  கொண்டுவந்து  விளம்பினாங்க. பஃபேதான் என்றாலும் கூட, 'என்ன வேணும்? தோசை போட்டுக் கொண்டுவரட்டுமா?  ஆம்லெட்டுக்குச் சொல்லவா?'ன்னு   ஏகத்துக்கும் விசாரிப்பு. முகத்தில் புன்சிரிப்போடும்  இனிமையான சொற்களுடனும், பணிவோடும் நம்மை உபசரித்த பணியாட்கள்.  அப்பாடா.... நேத்து இரவு விமான நிலைய வரவேற்புக்கு மாற்றுமருந்து.

நேற்று இரவு ஹொட்டேல் வரவேற்பிலும்  மிகச் சிறிய வயதுடைய இளைஞர்களே.  மரியாதையுடனான அன்பான சொற்களும், இனிய புன்னகை முகங்களும் நமக்கு உற்சாகம் தந்தது உண்மை.

புது ஹொட்டேலாம். ஆரம்பிச்சு  ஒரு ஏழெட்டு மாசம் ஆகுதாம். இந்தியாவின் பல இடங்களில்  ஆரம்பிச்சுக்கிட்டே போகும் செயின் ஹொட்டேல் பிஸினெஸ். இதுவரை 16  ஊர்களில் ஆச்சு.



குடையைப் பார்த்தீங்களா? இதுபோல நம்மூரில்  இல்லைதானே?

அட! ஆமாம்!!!


எட்டேகாலுக்கு மச்சினர்  வந்துட்டார்.    கோபாலின் தம்பி Bபூபால். ( இவருக்கு இளையவர் நந்தகோபால். என் மாமியாருக்கு நல்ல ரசனை, பெயர் வைப்பதில்! இன்றைக்கு டிச. 3. என் மாமியாரின் நினைவுநாள்.) ட்ரைவர்  வர நேரமாகுமுன்னு  ஆட்டோவில் கிளம்பி வந்திருந்தார்.   நாங்களும்   அவருடன் வீட்டுக்குப் போனோம்.  அதிக தூரமில்லை, ஒரு அஞ்சு கிமீ வரும்.  பெங்களூர் சாலைகளை எல்லாம் சீரமைப்பு என்று தோண்டிப்போட்டு வச்சுருக்காங்க.  போகும் வழியில் எல்லா இடங்களிலும் மழைத்தண்ணீர் தேங்கலும், குப்பையும், ப்ளாஸ்டிக் குவியலும் அழுக்குமாக இருக்கு. மக்கள் தொகை கூடக்கூட இதெல்லாம்  இருக்கத்தான் செய்யும் என்ற  பதில் கிடைச்சது.
எது எப்படி இருந்தாலும் போகும் வழியில் பார்த்த சுவர் சித்திரங்கள்  அருமையே!

மைத்துனர் மனைவி சாந்தியுடன்  கொஞ்ச நேரம்  வீட்டுக்காரியங்கள் பேசினோம். ஃப்ரிட்ஜைத் திறந்தபடியே  'பகல் சமையலுக்கு  என்ன வேணும் ?'என்று கேட்டாங்க.  'எப்பப் பார்த்தாலும் அடுப்பைக் கட்டிக்கிட்டு அழணுமா?  வெளியே போய் சுற்றிப் பார்த்துட்டு அப்படியே  வேறெங்காவது சாப்பிடலாம்' என்று சாந்திக்கு ஓய்வு கொடுத்தேன். அதுக்குள்ளே ட்ரைவர் வந்துட்டார்.  அன்றாட  வீட்டு வேலைக்கான உதவியாளரும் வந்துட்டதால்    அவைகளை முடிச்சுட்டு சாந்தியை ரெடியாகச் சொல்லிட்டு,   அக்கம்பக்கம் இருக்கும் கோவிலுக்குப் போகலாமுன்னு ஐடியா கொடுத்தார் பூபால்.

ஆறே நிமிசத்தில்  கோவில்கள்,  நாலு சேர்ந்து இருக்கும் இடத்துக்கு வந்திருந்தோம்.  மல்லேஸ்வரம், பதினைஞ்சாவது குறுக்குத் தெருவாம். கோவில்வாசல்களுக்கே உரிய பூக்கடைகளும்  பக்தர்களின் கூட்டமுமா  கலகலன்னு  இருக்கு அந்தப் பகுதி. முதலில் எங்கே போகலாமுன்னு  பிரமிப்பு வந்தது.    நம்ம பெருமாளாகவே இருக்கட்டுமுன்னு (அதான் வாசலில் யானை வேற இருக்கே!) பத்துப்பதினைஞ்சு  படிகள் ஏறி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்துக்குள் நுழைஞ்சோம்.  பார்வைக்குப் பழைய கோவிலாக இருக்கே தவிர  கட்டி முடிச்சு 32 வருசங்கள்தான்  ஆகி இருக்கு.


தனியார் கோவில்தான்.சின்னக்குன்றின்மேல் கட்டி இருக்காங்க.  உள்ளேயும் அங்கங்கே  ரெண்டு மூணு படிகள் ஏறணும்.  விஸ்தாரமான  பிரகாரம் கடந்து நேரெதிராக் கருவறை முன்மண்டபம்.   அடுத்த பாகத்தில்  ஸ்ரீநரசிம்மர், லக்ஷ்மியை  இடது மடியில் அமர்த்திப்பிடிச்சு உக்கார்ந்துருக்கார். பளபளக்கும் கற்கள் வச்ச திருமண்ணும்(!) தங்கக் கண்களும், தங்கக் க்ரீடமும்,  தங்கக் கவசமுமாய் ஜொலிப்போ ஜொலிப்பு.  நீட்டிய நாக்கு முழுசும்  கெம்புக்கல் வரிசை!  அலங்காரம் அட்டகாசம்.


பட உதவி:  நம்ம கூகுளாண்டவர்

கோவிலுக்குள் நுழைஞ்சது முதல் என் இனிய தோழியின் நினைவே மனசில் வந்து மணை போட்டது. நாம் போன நேரம், நமக்கு  ரொம்ப நல்ல நேரம் போல!  பூஜை ஆரம்பிக்கப்போகுதுன்னு  தெரிஞ்சதும் சட்ன்னு கருவறை முன்மண்டபத்தில் இருந்த ஆண்களுக்கும் பெண்களுக்குமாத் தனித்தனியா இருந்த வரிசையில் சேர்ந்துக்கிட்டோம்.

சும்மாச் சொல்லக்கூடாது... இந்த கர்நாடகா கோவில்களில் பூஜைகளை ரொம்பவே  விஸ்தரிச்சு  ஆத்மார்த்தமா செய்யறாங்கன்னு தோணுச்சு. நம்மூர் கோவில்களின் பூஜை முறைகளைவிட பலவித்தியாசங்கள் இருப்பதைக் கவனிச்சேன். நரசிம்ஹப் பெருமாளுக்கு தூபதீபம் எல்லாம் காட்டுன கையோடு  அவருக்கு இடப்பக்கம் அந்த  தீபங்களை  காமிக்கிறார் பட்டர்.  நான் நிற்கும் இடத்திலிருந்து   அங்கே வேறென்ன சிலாமூர்த்தி இருக்குன்னு புலப்படலை:(

கருவறை வாயிலைச் சுற்றி  இருந்த  தங்கமூலாம் பூசிய  அலங்காரத்தில்  மஹாவிஷ்ணுவின் சிலபல அவதாரங்களையும், பாற்கடலில் பள்ளிகொண்டவனாயிருக்கும் கோலங்கள்  இருந்தாலுமே என் கவனத்தைக் கவர்ந்தது....  அங்கே இருந்த  நரசிம்மந்தான். இடப்பக்கத்துலே இருக்கும்  அவதார கோலங்களில்  ஒன்றாக தூண் ஒன்று  ரெண்டாகப்பிளக்க, நரசிம்ஹர் தோன்றுகிறார்.  இடுப்புவரை  வெளியே தெரிகிறது.  (அடடா... இப்படி இதுவரை எங்கேயும் பார்த்த நினைவு இல்லையே!)

இதுக்கு நேரா வலப்பக்கம்,  நரசிம்ஹர் மடியில்  , ஹிரண்யகசிபு கிடக்க, நகங்களால் வயிற்றைக் கீறும் தோற்றம்.

சுமார் அரைமணி நேரம் விலாவரியா பூஜை நடந்து முடிஞ்சது. யாரோ அர்ச்சனைத் தட்டை நீட்டவும்,  சுமார் பத்து நிமிசங்களுக்கு  அஷ்டோத்ரம் எல்லாம்  சொல்லி  நிதானமா அர்ச்சனை செய்தார் பட்டர். நம்மூர் கோவில்களில் அர்ச்சனை என்றால் சகஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம் (எ.கா. சாந்தாகாரம், புஜகசயனம்...) ஆரம்பிச்சு அதில் முதல்வரியைமட்டும் ஆர்ப்பாட்டமாக தொடங்கி, அடுத்த வரிகளை முணுமுணுன்னு சொல்லி முடிச்சு அரை நிமிசத்தில்  தீபாரத்தித் தட்டை நம் முன் நீட்டும் அவசரம் ஒன்றுமில்லை அங்கே!

பூஜை முடிந்ததும் எல்லோரும்  கருவறை மண்டபம் விட்டு வெளியேற, நான் அந்தப்பக்கம் (ஆண்கள் வரிசை ) ஓடிப்போய்ப் பார்த்தேன். அங்கிருந்து  அந்த சிலாமூர்த்தி தெரிஞ்சார். அட! நம்ம நேயுடு!!!

தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்ஹனை, நம்ம கோபாலுக்குக் காமிக்கலாமுன்னா....  எங்கே?  அதுக்குள்ளே  கோவிலை வலம் வர  பிரகாரத்துக்குள்  போயிட்டார். கோபாலுக்குக் கொடுத்து வைக்கலை. பூபாலுக்குக் காண்பிச்சேன்.  அவர் முகத்தில் வியப்பு! கருவறையின் பின்புறம் இன்னொரு பெரிய ஹாலும் அங்கே சில சந்நிதிகளுமா இருக்கு.   சில பல பக்தர்கள்  குடும்பத்தினர்   அங்கங்கே கூடி இருந்து  தனிப்பட்ட குடும்ப விசேஷங்களை நடத்திக்கிட்டு இருந்தாங்க.  கோவில்கள்,  ஒரு சமூகக்கூடம் போல செயல்படுவதைக் கண்ட திருப்தி எனக்கு! படம் எடுக்க முடியலையே என்ற குறை மட்டும் மனசுக்குள்ளே:(  அனுமதி  வாங்கலாமான்னா.... யாரிடம் கேட்பது என்ற தயக்கம்.

யாரோ ஒரு புண்ணியவான்   இந்தக் கோவிலில்  நடக்கும் பூஜையின் ஒரு பகுதியை  யூ ட்யூபில் போட்டுருக்கார்.   நல்லாவே இருக்கு. நேரமும் விருப்பமும் இருந்தால் இங்கே பாருங்களேன். ஒரு மூணரை நிமிசப்படம்தான். (புண்ணியவானுக்கு  நம் நன்றிகள்.)






பயணம் தொடரும்.....:-)