என்னதான் சொல்லுங்க மதுரை மல்லிக்கு ஈடு இணையே இல்லை. எவ்ளோ நெருக்கமாத் தொடுத்து வச்சிருக்காங்க, பாருங்க. முந்தியெல்லாம் 100, 200ன்னு நூத்துக்கணக்கில் கொடுப்பது மட்டும் இப்போ முழக்கணக்கா ஆகி இருக்கு. அதுக்காக முக்கா முழத்தை கையைக் குறுக்கி முழுசாக்காட்டும் வித்தையை இவுங்க இன்னும் படிக்கலை போல இருக்கே!
மதுரையின் அரசியை தரிசிக்கப்போய்க்கிட்டு இருக்கோம். பார்க்கிங் கிடைப்பது கஷ்டமாகிப் போச்சு. இங்கே சுத்தி அங்கே சுத்தின்னு பாதி மதுரையைப் பார்த்தபின் இது வேலைக்காகாதுன்னு புரிஞ்சு போச்சு. உண்மையைச் சொன்னால்.... நாம் தங்கி இருக்கும் ராயல் கோர்ட்டில் இருந்து (மேற்கு வெளி வீதி) இடதுபக்கம் கொஞ்சம் தூரம் வந்து டவுன்ஹால் ரோடு திரும்பி நேராப்போனால் கோவிலின் மேற்கு கோபுரவாசல்! சுமார் ஒரு கிமீ.பொடிநடையில் நடந்தாலும் பத்து, பதினைஞ்சு மினிட்தான்.
எதோ ஒரு தெருவில் வண்டி நடமாட்டம் அவ்வளவா இல்லை. அங்கே வண்டியை நிறுத்திய சீனிவாசன், இப்படியே இறங்கி நடந்து போயிருங்க. நான் இங்கேயே வண்டியுடன் காத்திருக்கேன் என்றார். பொதுவாக நாம் கோவில்களுக்கோ சாப்பிடவோ போகும்போது சீனிவாசனை அம்போன்னு விட்டுட்டுப்போகும் வழக்கம் இல்லை. நம்ம கூடவே வந்து சாமிதரிசனம் செஞ்சுக்குங்கன்னு கூட்டிப்போவதுதான் எப்போதும். இதைக்கூட ஒரு முறை நாத்தழுதழுக்கச் சொன்னார், 'உங்ககூட வந்துதான் நிறைய கோவில் பார்த்துருக்கேன் மேடம். மத்தவங்களோடு போனால் கோவில் வாசலில் காத்திருக்கச் சொல்லிட்டு அவுங்க போய்க் கும்பிட்டு வருவாங்க'
அது எப்படிங்க? நம்மைப் பத்திரமாக் கூட்டிப்போகும்போது நாமும் அவர்களை நம்ம குடும்ப நபர் போல் பார்த்துக்க வேணாமா? ஆனா..ஒன்னு,சீனிவாசன் கோவிலுக்குள் வந்து விடுவிடுன்னு நேரா சாமி தரிசனம் செஞ்சுட்டு வண்டிகிட்டே போய் நின்னுக்குவார். சில சமயம் குட்டித்தூக்கம். எனக்கு ஒரு கோவிலுக்குள் போனால் பார்க்கணும். எல்லாம் பார்க்கணும். இல்லேன்னா திருப்தியே இருக்காது.
சாப்பாட்டுக்கும் சில சமயம் கூப்பிட்டவுடன் வருவார். கொஞ்சம்பெரிய இடமுன்னா சில சமயம் தயங்குவார். அப்போ அவருக்கு வெளியே சாப்பிடக் கொஞ்சம் காசு கொடுத்துருவோம். உண்மையைச் சொன்னால்... அவருக்குக் காசாக வாங்கிக்கத்தான் விருப்பம்.
"நீங்க சாமி தரிசனம் பண்ணவேணாமா சீனிவாசன்? "
பட்ன்னு பதில் வருது, "நேத்து ராத்ரிபோய் பாத்துட்டு வந்துட்டேன். எப்போ? ஹோட்டலில் உங்களை விட்டேன் பாருங்க. அதுக்குப்பின் டவுன்ஹால் ரோடுலே சாப்பாட்டுக்கு நடந்து போனப்ப , என்னமோ தோணி கோவிலுக்குள்ளே நுழைஞ்சுட்டேன். கூட்டமே இல்லை . நல்லாவே சாமி தரிசனமாச்சு."
சரின்னு இறங்கி நடந்தோம். பின்னாலேயே ஓடிவந்த சீனிவாசன், 'இப்ப ரொம்ப கெடுபிடி பண்ணறாங்க. செல் எல்லாம் வாங்கி வச்சுக்கறாங்க' என்றார். இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை, இப்படி ஒவ்வொருமுறை ஒவ்வொரு சட்டமுன்னு நம்ம செல்ஃபோன்களையும், கேமெராவையும் வண்டியிலேயே வச்சுட்டோம்.
அப்புறம் திடீர்னு கோபால் , அவரிடம், நாங்க உள்ளே போனால் எவ்ளோ நேரமாகுமுன்னு தெரியாது. நீங்க சாப்டுட்டு , ஹொட்டேலுக்குப்போய் ரெஸ்ட் எடுங்க. நாளைக்குக் காலையில் சீக்கிரமா கிளம்பணும். நாங்க ஆட்டோ எடுத்துக்கிட்டு வந்துடறோம் என்றார். 'இல்லீங்க நீங்க ஃபோன் பண்ணுங்க. நான் வந்துடறேன்னார் சீனிவாசன். நான்.... தலையை ஆட்டிவச்சேன்.
எந்தத் தெருவுக்குள் நுழையலாமுன்னு ஒருவிநாடி தயங்குனப்ப...அங்கே வந்துக்கிட்டு இருந்த ரெண்டுபேர் சட்னு ஒரு இருட்டு சந்துக்குள் நுழைஞ்சாங்க. கோவிலுக்குப் போறவழியான்னதுக்கு ஆமாவாம். நாங்களும் பின் தொடர்ந்தோம். விளக்கே இல்லை. ஆனால் தூரத்தில் டன்னலுக்குளிருந்து வருவதுபோல் ஒரு ஒளிப்புள்ளி. தப்பா வந்து மாட்டிக்கப் போறோமோன்னு ஒரு விநாடி திகைச்சது உண்மை.
சின்னச் சந்துதான். மூணு நிமிசம் ஆச்சு கடந்துபோக. அதுக்குள்ளே மனசு என்னம்மா யோசிக்குது பாருங்க. சின்னச்சின்ன கடைகள் வளையல் ,பொட்டு, சிறு தீனி இப்படி. வெளிச்சம் வந்ததும் பயம் போயிருச்சு:-)
கோவிலருகில் வந்து சேர்ந்துட்டோம்.கீழஆவணி மூலவீதின்னு நினைக்கிறேன்.... பூக்காரம்மாவிடம் பூ வாங்கி, சாமிக்கும் கொஞ்சம் பங்கு தரலாமேன்னு தோணுச்சு. அஹம் ப்ரம்மாஸ்மி மனசுக்குள்ளே வந்ததாலும் அதை ஓரங்கட்டினேன்.....
பயங்கர செக்யூரிட்டி போல! காலணிகளைப் பாதுகாக்குமிடத்தில் செருப்புகளை விட்டுட்டுத் திரைக்குள் நுழைஞ்சேன். கையில் விரல்களைத் தவிர ஒன்றுமில்லை! அப்ப பூ? அது கோபாலின் வசம்:-)
கோவிலுக்குள் காலடி எடுத்து வச்சோம். கொஞ்ச தூரத்துலேயே ஆஞ்சி இருந்தார். பூ அவர் காலடிக்குப் போச்சு. தானே தானே மாதிரி பூக்களில் கூட யார் யாருக்குன்னு பெயர் எழுதி இருக்கலாம்!
வழக்கம்போல் பிரகாரங்களைச் சுற்றி வரலாமுன்னா, அம்மன் சந்நிதிக்கு உள்ளே போக 20 ரூன்னு எழுதி இருந்தது. இப்பவே கூட்டம் அதிகமாக இருக்கே, முதலில் அம்மனை தரிசனம் செஞ்சுட்டு வந்துடலாமேன்னு இருபது ரூ. வரிசையில் சீட்டு வாங்கிக்கிட்டு அம்மன் சந்நிதிக்குப் போனோம்.
என்னென்னவோ கட்டம் போல் தடுப்புகள் போட்டு, எங்கே இருக்கோமுன்னே முதலில் புரியலை. ஒரு சின்ன கம்பிப்பாலம் போல இருப்பதில் நடக்கறோம். ரெண்டு பக்கமும் கம்பித்தடுப்பு. முன்னாலிருக்கும் மக்கள்ஸ் எல்லாம் இடது பக்க இடுப்பை நாப்பத்தியஞ்சு டிகிரி, அறுபது டிகிரின்னு வளைச்சு என்னமோ பார்க்கறாங்க. சிலர் தொன்னூறு டிகிரி வரை. என்னவா இருக்குமுன்னு எட்டிப் பார்த்தால் எனக்கொன்னும் தெரியலை.வரிசை வேகமா நகர்ந்துக்கிட்டே போகுது. நமக்கு வலது பக்கத்தில் இருக்கும் கம்பித்தடுப்பைத் தட்டி சத்தம் போட்டுக்கிட்டு இருக்கார் ஒருத்தர். தரிசனம் பண்ணுங்க தரிசனம் பண்ணுங்கன்னு. சரி நாம் சாமியைப் பார்க்கலாமுன்னு தயாரா கண்களை உள் சந்நிதிக்கு அனுப்பறேன். அதுக்குள் கால் கம்பித்தடுப்பின் முக்கால்வாசி தூரத்தில் இருக்கும் திறப்பினருகில் வந்துருக்கு. இந்தப்பக்கம் வாங்க வாங்கன்னு கூச்சல். அந்தப்பக்கம் போனால்.... மண்டபத்தின் வெளியே நிக்கறோம். அவ்ளோதான் ஆட்டம் க்ளோஸ்!
என்னடா இது சாமியைப் பார்க்கலையே? அதான் இடுப்பை ஒடிச்சுப் பார்த்திருக்கணுமாம். ஒடிக்காதது என் தப்பு:(
அண்ணனைப் பார்த்து கத்துக்கிட்டாள் போல! திருப்பதி வாசனை இங்கேயும்:( இருபதை வாங்கிக்கிட்டு ஏமாத்திப்புட்டாளே! அன்ணனும் தங்கச்சியுமா நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க!
அப்புறம் ஐயன் சந்நிதி காலியாக் கிடக்க அங்கே போய் , 'மனைவியின் அட்டகாசத்தையும் அக்கிரமத்தையும் என்னன்னு கேக்கப்டாதா நீர்? ' புலம்பிட்டு மற்ற சந்நிதிகளை ஒரு சுற்று சுற்றி வந்தோம். இது மதுரைன்றது மறந்துபோச்சான்னார் சிவர்!
சாமிகள் எல்லாம் அப்படிக்கு அப்படியேதான் இருக்காங்க. கோவில் ஆசாமிகள் பண்ணும் அட்டகாசம்தான் அதிகம்:(
ஒருமுறை மீனாட்சியை தரிசனம் செய்யப்போனப்போ... அம்மனுக்குக்கிட்டே ஒரு ஏழெட்டடி தூரத்தில் உக்கார்ந்து கும்பிட்டது நினைவுக்கு வந்துச்சு. சுமார் 10 நிமிசம் சாமிக்கு முன்னால். கோபால் கழுத்தில் பூச்சரம் எல்லாம் போட்டாங்க.
மீனாட்சி அம்மன் கோவிலும் நம்ம ஸ்ரீரங்கம் போலதான். முழுசும் பார்த்துட்டேன்னு சொல்லமுடியாத வகை. ஒருமுறை ஆற அமர உள்ளே போய் சுத்திப் பார்க்கணும். நல்லதா ஒரு பகல்நேரம் கிடைக்கணும் அதுக்கு. இதை எழுதும்போது கோபாலிடம் சொன்னதுக்கு, ஒரு நாலைஞ்சுநாள் தங்கி இருந்துட்டு வரலாம் என்றார். வேலையில் இருந்து ஓய்வு பெறும் நாளுக்குக் காத்திருக்கணும்.
கோவிலை விட்டு வெளிவந்து கடைகளை வேடிக்கை பார்த்தபடி நடக்கும்போது, எனக்கு ஒரு மீனாட்சி வாங்கிக்கணும் என்றேன். 'ஏற்கெனவே ஓவர் வெயிட்' என்றார். நானா? சீச்சீ..... பெட்டிகளின் வெயிட்டைச் சொன்னேன் என்றார்:-)))
கண்ணில் பட்ட ஒரு கடையில் நுழைஞ்சேன். இங்கேதான் போனமுறை சிவலிங்கம் வாங்கின நினைவு. மீனாட்சி வேணும் என்றதும், நம்மவர் 'சின்னதா எடுங்க'ன்னார்.
'முகத்தில் களையே இல்லையேம்மா'ன்னார்!
'இத்துனூண்டு விக்கிரஹம்ன்னால் மூக்கும் முழியும் எப்படி இருக்கும்? "
கொஞ்சம் பெருசா வாங்கிக்கலாமுன்னால்...'வெயிட் வெயிட்.....'
'ச்சும்மா இருங்க. என் கேபின் பேகில் வச்சுக்கறேன்'னேன்.
இது சரி இல்லை அது சரியில்லைன்னு பார்த்து ஒரு பனிரெண்டு இஞ்ச் முடிவு செஞ்சேன்.
நம்ம வீட்டு தாயாரை விட பெருசா இருக்கக்கூடாதுன்னு அடுத்த கண்டிஷன் போட்டார்.
ஏனாம்?
வீட்டில் தன்னை விட நாத்தனார் பெரியவளா இருந்தால் மனைவிக்குப் பிடிக்காதாம். அப்படியா?
"இப்ப நீயே பாரு, உனக்கு வாங்கிக்கொடுப்பதை விட உசத்தியா என் தங்கைக்கு வாங்கிக்கொடுக்க நீ விடுவயா?"
'நல்லா இருக்கே! அதுவும் நடந்துதானே இருக்கு! மறந்துட்டீங்களா?'ன்னு பழைய கதையை எடுத்துவிட்டேன். யானை மெமரி!!!!
எனக்கு இதுதான் வேணும் என்றதும் வேறவழி இல்லாமல் சரின்னார்:-)
என்ன விலைன்னு கேட்டதும் எடுத்துக்கிட்டுப்போய் எடை போட்டு மூணு கிலோ. கிலோவுக்கு இவ்ளோன்னு கணக்கு சொன்னார் கடைக்காரர். அடக்கடவுளே ! கடைசியில் சாமிக்குமே எடைக்குக் காசுதானா?
'தரிசனம் தராம இருந்ததுக்கு உன்னை வாங்கியே இருக்கக்கூடாது. அங்கே உன் பசங்க, வீட்டுக்காரர் எல்லாம் இருக்காங்கன்னுதான் ஃபேமிலி ரீ யூனியன் என்று உன்னைக்கொண்டு போறேன்'னு அவளிடம் சொன்னேன்.
அதே போல வீட்டுக்கு வந்ததும் துணி மணி நகை நட்டுப்போட்டுக் குடும்பத்தை ஒன்னாச் சேர்த்தும் வச்சேன். அதுக்கான புண்ணியம் உண்டா நம்ம கணக்கில்னு தெரியலை:-)
நம்ம வீட்டு மஹாலக்ஷ்மியை விட ஒன்னரை செமீ உயரம் கூடுதல். க்ரீடம் பெருசா இருப்பதாலோ?
ஆனா.... முகத்தில் பெண்மையின் நளினம் இல்லாமல் கொஞ்சூண்டு, கொஞ்சமே கொஞ்சம் ஆம்பிளத்தனமிருக்குன்னு இப்பத் தோணுது. ஒருவேளை இதுதான் ராஜ கம்பீரமோ?
அங்கிருந்து கிளம்பி வரும்போது, எங்கியாவது சாப்பாட்டை முடிச்சுக்கலாம் என்றார் கோபால். எங்கே? காலேஜ் ஹௌஸ் போகலாமுன்னு சொன்னால் அது ரொம்பதூரம். இங்கேயே முருகன் இட்லிக்கடையில் சாப்பிடலாம் என்றார்.
முதல்லே கடை எங்கே இருக்குன்னு தெரிய வேணாமா? அங்கிருந்த காவல்துறையாளரிடம் கேட்டால்... இப்படியேநேராப்போய் இடக்கைப் பக்கம் திரும்புங்கன்னார். சரின்னு அப்படியே போனதில் இட்லிக் கடைக்கு வந்தாச்சு.
மாடியில் சர்வீஸ் இருக்குன்னாங்களேன்னு மாடிக்குப்போனோம். சின்ன இடம்தான். எத்தனையோ நறுவிசாக வைக்கலாம். ஆனால் நெரியும் கூட்டத்துக்கு இது போதுமுன்னு நினைச்சிருக்கலாம். நான் ஒரு தோசை. இங்கே சட்னி எல்லாம் ஓடும் என்பதால் நான் வாங்கிக்கலை. வெறும் தோசை ஓக்கே! கோபாலுக்கு அவர் இஷ்டப்படி. ஒரு சின்னப்பையந்தான் கீழே அடுப்பங்கரைக்கும் மாடிக்குமா ஒடி ஓடி பரிமாறிக்கிட்டு இருந்தான். வாஷ் பேஸின் ஏரியா எல்லாம் ரொம்பவே சுமார்:(
கீழே இருக்கும் ஜிகர்தண்டா கடை நினைவுக்கு வந்ததும் ரெண்டு சின்ன க்ளாஸுக்கு காசைக்கட்டி சீட்டு வாங்கினோம். கீழே போய் ஜிகர்தண்டா ஆச்சு.
இப்ப ராயல்கோர்ட்டுக்குத் திரும்பணும். சீனிவாசனை வரச்சொல்லலாமுன்னா ஃபோன்? அது காரில் இருக்கே! பேசாம ஆட்டோ எடுத்துக்கலாமுன்னு நின்னதில் ஒரு வண்டி கிடைச்சது. இடம் சொல்லிட்டு ஏறி உக்கார்ந்தோம். வண்டி கிளம்புனதும் திடுக் !!
நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூடித் திரியும் தாவித் திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு....
முதுகுக்குப்பின்னால் இருந்து பாட்டு முழங்குது! ஒருவிநாடி திகைச்சவளுக்கு அப்புறம் வந்ததே சிரிப்பூ...... ஆனாலும் மதுரை ஆட்டோக்காரர்களுக்கு ரொம்பத்தான் இது. ஆட்டோ சத்ததையும் மீறி இவ்ளோ சத்தமாப் பாட்டா? எதோ கல்யாண ஊர்வலம் போறது போல!
பாட்டு முழக்கத்தோடு 'ராயல்' கோர்ட் வந்து சேர்ந்தோம்:-)
தொடரும்..........:-)
PINகுறிப்பு: படங்கள் எல்லாம் மூணரை வருசத்துக்கு முந்தி போன பயணங்களில் எடுத்தவை. காட்சி மாற்றங்கள் இல்லாதபடியால் அவைகளில் சில(!) இங்கே:-)
கேமெராச் சீட்டு வாங்கி இருந்தாலும் கோவிலுக்குள் ஃப்ளாஷ் வேண்டாமேன்னு இருந்ததால் படங்களின் தரம் சுமாராத்தான் இருக்கு:(
மற்ற மதுரைக் காட்சிகள் நாளை!
