Showing posts with label கோலாலம்பூர். Show all posts
Showing posts with label கோலாலம்பூர். Show all posts

Wednesday, August 14, 2013

கருப்பாக இருந்திருந்தால் ஆசை நிறைவேறி இருக்கும்..... (மலேசியப் பயணம் 5 )

வரைபடத்தில் பார்க்கும்போது எல்லாமே   ரொம்பப் பக்கத்தில் தான் இருக்கு. ஆனால்.... வெயில்....  சாலையில் இருந்த  கைகாட்டிப் பலகை சொல்லுது  மஸ்ஜித்  நெகரா இந்தப்பக்கமுன்னு.

முந்தியே குறிப்பிட்டமாதிரி மெனெக்கெடுதல்   ரொம்ப அதிகமில்லை. தேவையான சொற்களை அக்கம்பக்கம் இரவல் வாங்கிக்கலாம். இப்படித்தான்  நகரம்,  நெகாரா ஆகி இருக்கு.

தேசிய மசூதின்னு சொல்றாங்க. பொதுவான  மசூதிகளுக்குரிய  வெங்காயக்கூம்பு இல்லையேன்னு  பார்த்தால் வேற ஸ்டைலில் இருக்கு.  குட்டைப்பாவாடையுடன் தட்டாமாலை சுற்றும் சிறுமியின்  உடை அலைஅலையாய் வட்டம்போடுவதைப்போல்!   அச்சச்சோ..... சாமி சமாச்சாரத்துக்கு   உவமானம் சரி இல்லையே.....  குடையை விரிக்கும்போது  ஜஸ்ட் அது  முழுசுமா விரிஞ்சு க்ளிக்குமுன் இருப்பதைப்போலன்னு  வச்சுக்கலாம். ஓக்கேயா?

கைகாட்டி சொன்ன திசையில் நடந்தோம்.  மசூதி வளாகத்தில்  முன்புறத் தோட்டத்தின்  ஒரு ஓரத்தில்  ஏகப்பட்ட ஓவியங்களை வரைஞ்சு விற்பனைக்கு வச்சிருந்த ஓவியர்  சின்ன  ஸ்டூலில் உக்கார்ந்தபடி எதிரில் இருக்கும் குட்டியூண்டு  ஓவிய ஸ்டேண்டில் ஏறக்குறைய முடிஞ்சபடத்துக்கு நகாசு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கார்.  விலை ஒன்னும் அவ்ளோ அதிகமில்லை.  20 ரிங்கிட் முதல்  ஆரம்பம். நமக்கு வேணுமான்னு யோசனை .  ஆனால் நின்னு ரசிக்க தடை ஏது?  ரசிச்சுப் பாராட்டி நாலு சொற்கள் சொன்னதும் ஓவியருக்கு  முகத்தில் சிரிப்பும் நிறைவும்.




முன்புறத்தோட்டத்தில் குட்டியா ஒரு  மண்டபமும் அருகில்  உருது மொழியில் எழுதுன ஒரு  சுவரமைப்பும்.  மசூதின்னு எழுதி இருக்கும் போல!  உசர நெடுநெடுன்னு  போகும் மினாரா!  73 மீட்டர் என்றார்கள். அம்மாடியோவ்!!!

 நட்சத்திர வடிவ அமைப்பில் செயற்கை நீரூற்று. கடந்தால்  மேலே போக படிக்கட்டுகள்.  காலடி முடிஞ்சதும் கண்ணெதிரே  அற்புதம்!  இஸ்லாமியரல்லாதார் கூட உள்ளே போய்ப் பார்க்கலாமாம்! அடிச்சது ப்ரைஸ் எனக்கு.


படிகளின் அருகில்  காலியா இருந்த  காலணி ஸ்டேண்டில்  செருப்புகளைக் கழட்டி வைக்கப்போனார் கோபால்.  சட்னு அங்கிருந்த அறிவிப்பைப் பார்த்துட்டு வேணாமுன்னேன்.

berhati-hati pencuri.

திருடர்கள் ஜாக்கிரதை!  எனக்கும் கொஞ்சம்(!)   பஹாஸா மலேயு  Bahasa Melayu தெரியும்லெ:-))))))))

பார்வையாளர்களுக்கு  உதவும்  வாலண்டியர்கள்   இருக்கைக்குப் பக்கத்தில்  ரெண்டு  ஸ்டேண்டுகளில்  காலணிகள் நிறைய இருக்கு. அங்கே வச்சுட்டு இந்தப்பக்கம் வந்தோம்.  பார்வை நேரங்கள் தகவல்  எல்லாம்  சௌகரியமா இருக்கு.

ஆண்களுக்கும் பெண்களுக்கும்  மேலே போட்டுக்க  ஒரு  உடை தர்றாங்க.  தர்றது என்ன......   அணிவிச்சே  விட்டுடறாங்க. என் துப்பட்டாவை  தலையில் அழகாச்சுத்தி விட்டதும்  கண்ணாடியைத் தேடுச்சு மனம்.  நெற்றியில்  பளிச் ன்னு  கந்தசாமி கோவில் விபூதியுடன்  கோபால்!


படிகளேறி மாடிக்குப்போனோம்.  ஹைய்யோ!!!!    கண்ணில் ஒத்திக்கிறாப்போல்  பளிச்!  ஒரு தூசி துரும்பு?  ஊஹூம்....  பேசாம அங்கப்ரதக்ஷணம் செய்யலாம்.  பெரிய ஸ்விம்மிங் பூல் போல செயற்கை தடாகங்கள். பளிச்சிடும் பளிங்குத்தரைகள்.  சிம்பிளா நிற்கும் துண்கள் இப்படி எதைச் சொல்ல எதை விட?

மக்களுக்கு விளக்கிச் சொல்ல அங்கங்கே  கைடுகள். எல்லோருமே இங்கே தன்னார்வலர்களாம்.  இறைவனுக்கு சேவை செஞ்சால் புண்ணியம்.  நமக்கு உதவியவர்  ஸுரிலா. நியூஸிக்கு வந்துருக்காராம்.  ரொம்ப ஸ்நேகிதமான பேச்சும் பார்வையும்.  கிறைஸ்ட்சர்ச்சுக்கு வரலையாம். வரும்போது தகவல் சொல்லுங்கன்னு  விலாசமும் ஃபோன் நம்பரும் கொடுக்குமளவுக்கு  'கூட்டாளி'யாயிட்டொம்:-)


முன்னே சொன்ன   வட்டக்குடைக் கீழே  பெரிய வட்டமான கூடம். இதுதான்  மெயின் ப்ரேயர் ஹால். கருவறைன்னு வச்சுக்கலாம்.  இதுக்குள்ளே போக இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆனால் சங்கிலித் தடுப்பில் நின்னு பார்க்க தடை ஒன்னுமில்லை.


ஷாண்டிலியர்களும்,  வண்ணக் கண்ணாடிகளும் ,அழகான  கார்பெட்டுமா  கண்ணைப்பறிக்குது ! விதானத்தைத் தாங்கிப்பிடிக்கும்  பிரமாண்டமான வட்டத்தூண்கள். அதில் ஆள் உசரத்துக்கு  டிஸைன் உள்ள வேலைப்பாடுன்னு அசல் தர்பார் !

இவ்ளோ பரந்த வெளி ஹாலில் சூடு ஒரு பிரச்சனையே இல்லை. காத்து அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது. ஆனாலும்  நெடுக  ஃபேன்கள்  நிக்குது.

எனக்கு அதிகம் வியப்பைத் தந்ததுன்னா... அது,  அந்த சுத்தம்தான். உடனே மனசுக்குள் ஒரு குறுகுறு.....  ஏன் நம்ம ஹிந்துக்கோவில்களில் இப்படி ஒரு சுத்தத்தைப் பேணுவதில்லை?  ஒருவேளை கோவிலுக்குள் ஆயிரத்தெட்டு சந்நிதிகளை வச்சுக்கிட்டு அததுக்குத் தனித்தனியா எண்ணெய் விளக்கு, பூமாலைகள். விபூதி, குங்குமம் தீர்த்தமுன்னு  இருப்பதாலா? நாமும்  கையில் கிடைச்ச  விபூதி பிரசாதங்களை நெற்றியில் இட்ட மீதத்தை   தூண்களில் கொட்டி வச்சுட்டு வர்றதாலா?  அங்கங்கே கிண்ணங்களை வச்சு இருந்தாலும்  அங்கே கொண்டுபோய்ப் போட சோம்பும் மனசுக்கு  ஆதரவா?  இதுமட்டுமில்லாம கோவில் ப்ரசாதங்களை அதுவும்  ஆயிரம் தடா நெய்யொழுகும்  அக்காரவடிசலைத் தின்ன கையோடு தூணில் துடைச்சுகலைன்னா , எங்கே கோவிலுக்கு வந்த புண்ணியம் கிடைக்காமப் போயிடுமோ என்ற பயமா?

மொத்தம் பதிமூணு ஏக்கர் பரப்பில் கட்டி இருக்காங்க  இந்த மசூதியை.  இந்த இடத்தின் ஒரு பகுதி  முதலில் ஒரு  சர்ச்சுக்குச் சொந்தமானதாம். அதையும்   வாங்கிதான் கட்ட ஆரம்பிச்சதே!  மாடியில் கருவறையைச் சுற்றியும்  அப்படியே நாலாபக்கமும் விரிந்து பரந்து போகும்   பகுதிகள் அனைத்துமே பக்தர்கள் வழிபாட்டுக்குப் பொருத்தமான முறையிலேயே அமைக்கப்பட்டிருக்கு.  விதானத்தைத் தூக்கிப்பிடிக்கும் தூண்களின் அமைப்புகள் அபாரம்.

ஒரு விசேஷம் என்றால்....பதினைஞ்சாயிரம் நபர்கள்  இருந்து வழி பாடு நடத்தலாமாம்.  மாடியிலும் கீழேயுமாய் இடம் ஹோ ன்னு இருக்கு!   போனவாரம்  ரம்ஜான் பண்டிகைக்கு மசூதி நிறைஞ்சு வழிஞ்சுருக்கும், இல்லே???

மசூதியைக் கட்ட ஆரம்பிச்சு முடிச்சது 1965 வது  ஆண்டு.  அப்போ பிரதமராக இருந்த  (இவர்தான்  முதல் பிரதமரும் கூட!)  டுன்கு அப்துல் ரெஹ்மான் அவர்களின் பெயரை மசூதிக்குச் சூட்டவே எல்லோரும் விரும்பி இருக்காங்க. மலேயாவின் சுதந்திரம்  1957 இல் கிடைச்சது. அதுக்காக முன்னின்று பாடுபட்டவர் இவர்.  ஆனால்......  தன் பெயரை வச்சுக்க அவர் அனுமதி கொடுக்கலை.  மக்கள் ஒற்றுமையா அமைதியான முறையில்  சுதந்திரத்தைப் பெற உதவி செஞ்சதை நினைவுகூர்ந்து,  இது  தேசிய மசூதியாக(வே)   இருக்கணும் என்றார்.  (அச்சச்சோ..... எப்படிப்பட்ட சான்ஸ்! இப்படி வேணாமுன்னலாமோ? என்ன அரசியல்வாதியோ போங்க!!!!  ஒருமுறை தமிழ்நாட்டை எட்டிப் பார்த்திருக்கக்கூடாது?    அப்படிப் பார்த்திருந்தாலும் என்ன பயன்? அது வருசம்  1965 என்பதை நாம் நல்லா நினைவில் வச்சுக்கணும்)


வெளியே இந்த அழகான  கட்டிடத்தைச் சுற்றிவர செயற்கை நீர் ஊற்றுகளும்   அலங்காரமான   நடைபாதைகளுடன் தோட்டங்களும்  செடி கொடிகளுமாக  ஒரே அட்டகாசம்தான் போங்க.  ஒரு முறை நேரில் பார்த்துத்தான் ஆகணும்  என்ற வகை! எவ்வளவு நேரம் வேணுமென்றாலும்  நின்னு பார்த்து ரசிக்கலாம்தான்.  அதான் பகல் 12 வரை  அனுமதி உண்டே!

இங்கே ஒரு புண்ணியவான் எடுத்த வீடியோவைப் பாருங்க. அவருக்கு எம் நன்றிகள்.  (பயணங்களில்  நான் அவ்வளவாக வீடியோ க்ளிப்பிங்க்ஸ் எடுப்பதில்லை. என்னதான் ரெண்டு பேட்டரிகள் கைவசமிருந்தாலுமே  ரொம்பத்தேவையான இடத்தில்  பேட்டரி காலி ஆகி  என்னைத் தவிக்க விட்டுருமோ என்ற பயம்தான். அப்படியும் நடந்துருக்கு என்பதால், நான் ஒரு  சூடு பட்ட  ம்யாவ்!)


மலேசியாவின் தேசிய மதம் இஸ்லாம் என்றாலும் கூட அவர்கள் மற்ற மதத்தினரை எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும்  வைக்கவில்லை.  அவரவர்  மதத்தைத் தொடர்ந்து கொள்ளும் சுதந்திரத்திலும்  தலையிடவில்லை.  இந்த மசூதியை வந்து பார்த்த  பல்வேறு இஸ்லாமிய நாட்டவர்கள்  மசூதியின் கூரை   பாரம்பரியமாக  இல்லை என்று  சொன்னதையும்  மனதில் கொள்ளவில்லை.   மாடர்ன் மலேசியா என்ற பெயர்  உண்மையில்  வெகு பொருத்தமே!

பொதுப்பணித்துறை கட்டிட நிபுணர்கள் மூவர் சேர்ந்து செய்து கொடுத்த ஐடியாவாம். திட்டத்தை முழுமையா நிறைவேற்ற  பிரிட்டிஷ்  கட்டிடக்கலை வல்லுனர்கள்  சிலர் உதவி இருக்காங்க.

ஆமாம்..... இவ்வளவு  அருமையான  கோவிலா என்று வாய் பிளந்த நிலையில்  இஸ்லாம் மதம் அப்படி என்னதான் போதிக்கிறதுன்னு  அங்கே விசாரிச்சதில்  அஞ்சு  அடிப்படையான  கொள்கைகளைத்தான் சொன்னாங்க. அந்த அஞ்சு தூண்கள்:


கடவுள் நம்பிக்கை

ப்ரார்த்தனைகள்/வழிபாடு

தானதருமம்

உண்ணா நோன்பு

புண்ணியத் தலங்களுக்கு  யாத்திரை



அட ராமா !   இது எல்லாமும்  எல்லா மதத்திலும் குறிப்பாக (எனக்குத் தெரியுமுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கும்  ஹிந்து மதத்திலும் ) இருக்குதானே?  பின்னே எதுக்கு இப்படி அடிச்சுக்கறோமுன்னு  மனசு நொந்ததும் உண்மையே:(




வெளியே வந்து உடுப்பை அவிழ்த்துக் கொடுக்கும்போது  'எப்படி இருந்தது' என்று கேட்ட  வாலண்டியர் தோழியிடம்,  ' உங்க மசூதி சொர்கம் போல இருக்கு.  இந்த உடுப்பும் கருப்புலே இருந்திருந்தால்  எனக்கு இன்னும்கூடுதல் மகிழ்ச்சி கிடைச்சிருக்கும். என் நெடுநாள் ஆசை புர்க்கா அணிஞ்சு பார்க்கணும் என்பது' என்றதுடன், பார்வையாளர் பதிவேட்டில்,  மசூதியைப்பற்றிய என் கருத்தை  நியூஸி நாட்டின் சார்பாக பதிஞ்சுட்டுதான் வந்தேன்:-)

 சுற்றுலா போகும்போது  நாம் நமது நாட்டின் பிரதிநிதிகளாவே  அடுத்த நாட்டிற்குள்  நுழைகிறோம் என்பதை நினைவில் வச்சுக்கணும். நாம் செய்யும் சிறு தவறுகள் கூட  நமது நாட்டின் பெயருக்கு இழுக்கு,  இல்லையோ?

அடுத்த இடத்துக்குப்போக  டெக்ஸி  கிடைக்குதான்னு பார்க்கணும்.  வாங்க.

தொடரும்.......:-)





Monday, August 12, 2013

கந்தசாமியும் செங்கற் சூளையும்...... (மலேசியப் பயணம் 4)

1857 இல்  ஊர் உருவாகி  மக்களுக்குத் தேவையான  வசதிகள்  வர ஆரம்பிச்ச  24  வது வருசம் (1881) வெள்ளத்தால் ஊரில்  பாதி அழிஞ்சது. மீதிப்பாதியை அழிச்சுப் புண்ணியம் கட்டிக்கிட்டது  அக்னி.  மரமும் ஓலையும் வச்சுக் கட்டுன கட்டிடங்கள் எல்லாம்  போன இடம் தெரியலை:(


இனிமேப்பட்டு  செங்கல் வச்சுக்  கட்டிடங்களைக் கட்டணுமுன்னு  அப்போ  ரெஸிடெண்ட் ஜெனரலா இருந்த   Sir Frank Athelstane Swettenham உத்தரவு போட்டுட்டார். பிரிட்டிஷ்காரர் சொன்னதைக் கேக்கணுமா இல்லையா?  அவுங்கதானே இப்ப நாட்டைப்புடிச்சு வச்சுக்கிட்டு இருக்காங்க.

ரெண்டு நதிகள் ஓடும் நிலப்பகுதியாக இருந்ததால்,  அருமையான  களிமண் பூமி.  செங்கல் அறுத்துச் சுட்டு, கட்ட ஆரம்பிச்சாங்க. ரொம்பவே தரமான செங்கல். ஊரில் இருக்கும் முக்கிய கட்டிடங்கள் எல்லாம் அப்போ கட்டுனவைதான்.  இந்தப்பகுதிக்கு  ப்ரிக் ஃபீல்ட்ஸ் என்றே பெயரும் அமைஞ்சது. நம்ம சிங்காரச் சென்னையின் சூளை,   சூளைமேடு கூட இப்படி  நம்ம ஊர் உருவான சமயம்  செங்கல் சூளை அதிகமா இருந்த பகுதியா இருந்து, அதனால் கிடைச்ச காரணப் பெயரோ என்னவோ?


ஏராளமான இந்தியர்கள் இந்தப்பகுதியில் வசிப்பதால்  லிட்டில்  இண்டியான்னும்  ஒரு செல்லப்பெயர் உண்டு.
மலேயன் ரயில்வேஸ்  தொடங்குச்சு 1885.  இதுலே வேலை செய்ய  இங்கிலாந்துலே இருந்து  நேரடியா ஆட்களைக் கொண்டு வர்றதுக்கு பதிலா,  அவுங்க  தங்கள் அடிமை நாடுகளில் இருந்து  ஏற்கெனவே ப்ரிடிஷாரால் பயிற்றுவிக்கப்பட்ட  மக்களைக்கொண்டு வரலாமேன்ற  யோசனையால்  சிலோன்காரர்களைக்  கொண்டு வந்தாங்க. அந்தக் கூட்டத்தில் சிலோனீஸ் என்ற  வகையில்  தமிழர், சிங்களர் எல்லோரும் இருந்தாலும் தமிழர்கள் எண்ணிக்கை  கொஞ்சம் அதிகமா இருந்துச்சு.

ரயில்வே நிர்வாகம், ஸ்டேஷன் எல்லாம்  இருந்த இந்தப் பகுதியிலேயே  வசிக்கவும் ஆரம்பிச்சாங்க. கொஞ்சகாலம் கழிச்சு கோவில் ஒன்னு தேவைப்படுதுன்னு  1890  டிசம்பர்  24 க்கு சின்னப்பா  என்றவர் வீட்டுலே கூடுன சிலோன்காரர்கள,  ஜஸ்ட் வேல் ஒன்னை நட்டு வச்சு முருகனை வழிபட ஆரம்பிச்சாங்க. இந்த முருகன் இருக்கான் பாருங்க......  தமிழன்  எங்கியாவது போனால்,  கூடவே பொட்டியைக் கட்டிக்கிட்டுக் கிளம்பிருவான்:-))))

அப்புறம் கோவில் கட்ட நிலம், செலவுக்கான பணம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா  ஒரு ஒழுங்குக்கு வந்து, 1902 வருசம்  சின்ன கோபுரத்தோடும்,   மூலவர் சந்நிதியில் முருகன் சிலையாகவும்  அழகா அமைஞ்சு போச்சு.  யாழ்பாணத்தில் இருக்கும் நல்லூர் ஸ்ரீ கந்தசாமி கோவிலை  முன்மாதிரியா வச்சுக்கிட்டாங்களாம்.  கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு இடத்தையும் வாங்கி அங்கே கலாமண்டபம் என்ற பெயரில் ஒரு ஹாலும் கட்டிக்கிட்டாங்க. வீட்டு விழாக்கள் எல்லாம் இங்கே கனஜோராக நடத்திக்கலாமாம்.

கோவில் வாசலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  நூறு வருசத்துக்கு மேல் ஆச்சுன்னாலும்  புதுக்கருக்கு அழியாமல் பளிச்ன்னு  இருக்கு.   ஆகம விதிப்படி  பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் எல்லாம் தவறாமல் செஞ்சுடறாங்க.


கோபுர வாசலில் 'டூஸ் அண்ட் டோண்ட்ஸ்' (எச்சரிக்கை) ஒட்டி வச்சுருக்காங்க. அஞ்சாவது பாய்ண்ட்டைப் பார்த்ததும் மனசு அப்படியே நொந்து போச்சு:(  உள்ளே போய்   கடவுள் கந்தசாமியை தரிசனம் செஞ்சுக்கிட்டு வெளியே வந்தோம்.  கோவிலுக்கு நேர் எதிரா இருக்கும் தெருவில் நடக்க ஆரம்பிச்சோம்.

கொஞ்சதூரத்தில்  ஏகப்பட்ட புறாக்கள் தரையில்!  கிட்டப்போய்ப் பார்த்தால்  ரெண்டு மூணு கிலோ அரிசியைத் தரையில் கொட்டி வச்சுருக்காங்க. அதுவும் கார் நிறுத்தும் இடத்தில்.  என்ன வழிபாடோ தெரியலை. அடுத்து  குழலோடு க்ருஷ்ணன்,  வாவான்னான்.  வீர ஹனுமான் கோவிலாம். கோவிலைப் புதுப்பிக்கும் வேலை நடக்குதுன்னு  எல்லோரையும் தாற்காலிக கொட்டகையில் கொண்டு வந்து வச்சுருக்காங்க.





  தொட்டடுத்து இன்னொரு கோவில். மகாமுனீஸ்வரர்  ஆலயம். எல்லோரும் ஷெட்டுக்கு வந்துட்டாங்க. அவரவருக்கு அவரவர் சாமிகள் வேண்டித்தான் இருக்கு. கோவில்களுக்கு   பக்ககத்திலும்  எதிர்வாடையிலும்  பூமாலைக்கடைகள். ஆர்கிட் பூக்களை வச்சுக் கட்டுன  அழகான மாலைகள்.

இங்கிருந்து தலையைத் திருப்பிப்பார்த்தால் கந்தசாமி கோவில் கம்பீரமா இருக்கு!


இன்னும் கொஞ்சதூரம் சிறுநடையில் புத்தகக்கடை ஒன்னு கன்ணில் பட்டது. காலத்தில் உறைஞ்சு போன தோற்றம் கடைக்கும் கடை ஓனருக்கும்.  நமக்கான வாசிப்புக்கு  ஒன்னும் அகப்படலை.  அப்படியும் தேடுனதில்  ' சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது - சிவசங்கரி.'     பழையகால டைப்ரைட்டர்முன் கைகட்டி இருந்த பெண்மணி,  கையில் வாங்கிப் பார்த்து  கால்குலேட்டரில்  தட்டி 17 வெள்ளின்னார்.  இந்திய ரூபாயை  ரிங்கிட்டுக்கு மாத்தி மேலே ஒரு 12 ரிங்கிட் லாபம் வச்சுக்கறாங்க. நாள் முச்சூடும்  புத்தகங்களுக்கு முன்  வெறித்த பார்வையுடன்  இருந்து பாருங்க..... அவுங்க கஷ்டம் புரியும்!



மணி பத்தேகால் கூட இல்லை, வெயில் வாட்டி எடுக்குது.  கே எல்  சுற்றுலாப்பயணிகளுக்கான  வரைபடம், மலேசிய நாடு முழுமைக்கும்  உள்ள   வழிகாட்டிகள் இப்படி ரொம்ப அழகா அருமையா  விமானநிலையம், ஹொட்டேல்கள் இப்படி பல இடங்களில் குவிச்சுப்போட்டு வச்சுருக்காங்க.  கைப்பைக்குள் இருந்த  ப்ரோஷரைப் பார்த்து  அடுத்துப்போக வேண்டிய இடத்துக்கு ஒரு டெக்ஸி  அகப்படுமான்னு  நின்னதில்  ஒரு டெக்ஸி  கிடைச்சது.


வண்டியில் ஏறி உக்கார்ந்து வண்டி நகர ஆரம்பிச்சதும்  ரெயில்வே  ஸ்டேஷன் என்றார் நம்மவர். தலையை ஆட்டிய  ஓட்டுனர் (தமிழர்)  அடுத்த முப்பது விநாடிகளில்  ஒரு பாலத்தாண்டை வண்டியை நிறுத்தி  இந்தப்பாலத்தில் போங்க என்றார். பயணக்கட்டணம் மூணு வெள்ளி. கொடுத்துட்டு இறங்கும்போது சரியா முக்கால் நிமிசம்  ஆகி இருந்துச்சு. ஆனால் இந்தமுக்கால் நிமிசத்தில் கூட  சொல்லவேண்டிய அறிவுரையை மறக்காமல் சொன்னதுக்கு அவரைப் பாராட்டத்தான்(?!) வேணும்.

   "சங்கிலியைக் கழட்டிப் பையில் வச்சுக்குங்கம்மா. மலாய்க்காரனுங்க  சரியான திருட்டுப் பசங்க,அறுத்துக்கிட்டு ஓடிடுவாங்க"

இதென்னடா   பெரிய அபகடமா இருக்கேன்னு  பாலத்துக்குமேல் நடக்கும்போது சங்கிலியைக் கழட்டிக் கைப்பைக்குள் வச்சேன். இப்பப் பையைக் கட்டிக் காப்பாத்தணும். நல்லவேளையா நம்ம ஹொட்டேலில் எலெக்ட்ரானிக் ஸேஃப் இருப்பதால்  அதில் பாஸ்போர்ட்டுகளை வச்சுப்பூட்டி இருக்கோம். இல்லேன்னா நாந்தான் சுமப்பவள்.

பாலத்தினடியில் தண்டவாளங்களும், குஆலா லம்பூர்  என்ற  ஸ்டேஷன் பெயரும் தெரிஞ்சது
.

முதல் ரயில் போக்குவரத்து  தொடங்குனது  1886  செப்டம்பர்    KL  to  Klang . ஒரு 49 கிமீ தூரம். ரயில்வே ஸ்டெஷன் கட்டிடம் அப்போதான் கட்டி முடிச்சுருந்தாங்க. the residence of the British Resident, வீடு  அங்கே பக்கத்திலிருந்ததால் ரெஸிடெண்ட் ஸ்டேஷன் என்ற பெயர் அமைஞ்சது.  சில வருசங்களில் ரயில்பாதைகள் நீட்டிக்கப்பட்டு இந்த ஊருக்கும் சிங்கைக்கும் ரயில் பயணம் ஆரம்பிச்சது. தாய்லாந்து வரைகூட ரயிலில் போகலாம்!


ரெஸிடெண்ட் ஸ்டேஷன் கட்டிடம்  ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணர்களால்  அமைக்கப்பட்டாலும்,  இருக்கும் நாட்டின் மதம் அனுசரிச்சு முகலாய கட்டிடக்கலைப் பாணியையும் கலந்து கட்டுனதே! தரமான உள்ளூர் செங்கல் பயன்படுத்தியிருந்தாங்க.  சூளை ரொம்பவே பக்கம் என்றபடியால்  சுடச்சுடக் கிடைச்சிருக்கலாம். அப்புறம்  ஒரு இருபத்தினாலு வருசம் கழிச்சு (1910 ) புனரமைப்பு செஞ்சாங்க.


இப்பப் பார்க்கும்போதும்  ஏதோ ராக்ஷஸ சைஸ்  பறவை ஒன்னு  அப்படியே சிறகுகளை விரிச்சு இறங்கி உக்கார்ந்தது போலத்தான் தோணும்.  நம்ம கேமெராவில் ஒரு ஃப்ரேமுக்குள் அடங்காது:(பிட் பிட்டா எடுத்தோம்.


வேறொரு சென்ட்ரல் ஸ்டேஷன் கட்டுனதும் இங்கே ரயில் நடமாட்டம்  அவ்வளவா இல்லையேன்னு  அழகான இந்த பாரம்பரியமுள்ள கட்டிடத்தை வீணாக்காமல்  ஹொட்டேல் ஹெரிடேஜ், ஸ்டேஷன் ஹொட்டேலா மாத்திட்டாங்க. வெளியே இருக்கும் அழகும்  எதோ போன வருசம் கட்டுனமாதிரி இருக்கும் புதுமையும் உள்ளே இல்லையாம். கார்பெட், அறைகள் எல்லாம் மக்கல்  மணமென்று  ஹொட்டேல் ரிவ்யூஸ் சொல்லுது.  ஒருவேளை 'பழமை போற்றுதும்' வகையில் 127  வருச கார்பெட் விட்டுவைக்கப் பட்டுள்ளதோ என்னமோ!!!

இந்த ஸ்டேஷனுக்கு எதிர்சாரியில் பிரமாண்டமான ரயில்வே நிர்வாக அலுவலகம், சட்னு பார்க்க லண்டன் பார்லிமெண்ட் பில்டிங் போல  நீளமா அரைத்தெருவுக்கு  இடம் பிடிச்சிருக்கு.  இதுவும் அட்டகாசமான அழகுதான்!  நம்ம சி,சென்னையில் செண்ட்ரல் ஸ்டேஷனைத் தொட்டடுத்து ரயில்வே ஆஃபீஸ் ஒன்னு தங்கசாலைத் தெரு ஆரம்பத்தில்  அட்டகாசமா இருக்கும் கவனிச்சு இருக்கீங்களா?

நம்ம குடும்பத்தில் ரெயில்வேகாரர்கள் அதிகம் என்பதால்  ரயில்வேன்னா ஒரு பாசம் பொத்துக்கிட்டு வந்துரும், எனக்கு கேட்டோ:-)

அக்கரையில் இருந்து படம் எடுக்கலாமுன்னு நினைச்சால்..... இங்கே எங்கேயுமே  ஸீப்ரா க்ராஸிங் என் கண்ணில் படலை.  அட்லீஸ்ட் சிக்னலில் வண்டி நிற்கும்போது பச்சை மனுசன் உண்டான்னா அவரையும் காணோம்?  சர்புர்ன்னு  தலை தெறிக்கும் வேகத்தில் கார்கள்.  நான் போகும்போது கூடவே (ஓடி)வான்றார் இவர். ஒரு வழியா எதிர்க்கரை போய்ச் சேர்ந்தோம்.






இனி எங்கே? எடு ப்ரோஷரை......

தொடரும்....:-)