Showing posts with label அனுபவம் Suvarnabhumi. Show all posts
Showing posts with label அனுபவம் Suvarnabhumi. Show all posts

Wednesday, August 04, 2010

தோசகாந்த்!!!........................(தாய்லாந்து பயணம் பகுதி 13)

ஸ்ரீகாந்த், விஜயகாந்த், ரஜினிகாந்த், நளினிகாந்த் இப்படி நமக்குச் சில காந்துகளைத் தெரியும். யாருக்காவது டோ(தோ)சகாந்த் தெரியுமா? இன்னிக்கு அவரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைச்சது.

பகல் மூணுமணிவரை கூடுதல் டைம் கிடைச்சுருக்கு செக் அவுட் செய்யன்னு துணிமணிகளை அடுக்கறதும் இடைக்கிடையே ஆபீஸ் மெயில்களுக்கு மறுபடி அனுப்பறதுமா ஒருத்தர். வேளை வரட்டுமுன்னு நிதானமா வலைமேய்வது இன்னொருத்தர்.

"ஒரு மணி ஆச்சே...போய் சாப்பிட்டுட்டு வரலாமா? "

"ச்சைனா டவுன் போயிட்டு வந்து சாப்பிடலாம்."

"அடடா..... மறந்தே போயிட்டேன். ஒரு மணி நேரமாச்சு நான் வந்து . அப்பவே சொல்லி இருக்கக்கூடாதா?"

"பரவாயில்லை நீங்க உங்க வேலையைப் பார்த்து முடிக்கட்டுமுன்னு பொறுமையா இருந்தேன். என்ன செய்யறது? அப்பப்ப உங்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா வந்துருதே!"

டாக்ஸியில் போகும்போது....... 'அங்கே என்ன வாங்கணும்? இல்லே....ச்சும்மா வேடிக்கை பார்க்கவா? '

"மாத்திக்கணும். ஹாங்காங்கா இல்லை பேங்காக்கான்னு முடிவு செஞ்சுக்கலை. ஹாங்காங்கே இருக்கட்டும். அதுதான் நீங்களா ஒருமுறை வாங்கி வந்தது."

"சொல்லவே இல்லை.....கொண்டு வந்தியா அதை? "

" பின்னே?"

கால்நூற்றாண்டுக்கு முன் வந்த கடை எப்படி நினைவிருக்கும். போற போக்கில் சட்னு ஒரு கடையில் நுழைஞ்சோம். பயங்கரக்கூட்டம். சின்னதா இருக்கும் கவுண்டரில் எட்டிப்பார்க்கவும் தலையை நுழைக்க முடியாது. கொஞ்சம் மங்கலான நிறத்தில் மூணு அடுக்களாத் தொங்குது.

கிடைச்ச இடைவெளியில் நுழைஞ்சோம். நின்ன நேரத்தில் பார்த்து வச்ச ஐட்டத்தைக் காமிச்சவுடன் பரபரன்னு எடுத்துக் கையில் கொடுத்தார் 1 விற்பனையாளர். ரெண்டு தாய்பத் வெயிட்.

இங்கே தங்கத்துக்கு எடை, நம்மூர்போல கிராம், பவுன் கணக்கு இல்லை. கேரட்டும் கூடுதல். எல்லாம் 23 கேரட் மட்டுமே. நகை வகைகளிலும் காதணின்னு ஒன்னுமே இல்லை. நெக்லேஸ், கல்லுவச்சதுன்னு கிடையவே கிடையாது. சங்கிலிகள் மட்டுமே. ஒன்னு, ரெண்டுன்னு பத்து தாய்பத் எடைகள்.
(பத்துன்னதும் ஆதிகேசவனின் செயின் நினைவுக்கு வந்துச்சு.அம்மாம் பெருசெல்லாம் இங்கே இல்லை )

நீளம், குட்டைன்னு ரெண்டே அளவு.

ஒரு தாய்பத் தங்கம் = 15.16 கிராம்.

அன்றைய விலையைச் சாக்பீஸால் கண்ணாடியில் எழுதி வைச்சுடறாங்க. சேதாரம் செய்கூலின்னு தனித்தனியா இல்லாம எல்லாமே 'அடக்கம்'
ரெண்டு தாய்பத் எடைக்கு ஒன்னு செலக்ட் செஞ்சாச்சு. நம்ம ஹாங்காங் ட்விஸ்ட் செயினை மாத்திக்கணும். எடைபோட்டுப் பார்த்து அதுக்கு ***** விலை போட்டாச்சு. அனைத்துவகைக் கடனட்டையும் எடுப்பாங்கன்னு ஒட்டிவச்ச படங்களைப் பார்த்துட்டு க்ரெடிட் கார்டை வெளியில் எடுத்தால் 3 சதமானம் கூடுதல் கொடுக்கணுமாம்.

எதிரில் இருக்கும் ஏடிஎம்மைப் பார்த்துவச்சுக்கிட்டது நல்லதாப் போச்சு. கேஷாவே எடுத்துக் கொடுத்துடலாம். அங்கே போனால் அப்படியே வரமுடியுதா.... அதுக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு நகைக்கடையில் எட்டிப் பார்த்தேன். ஈ காக்கா இல்லை. வாய் வார்த்தையா இந்த செயின் எவ்வளவு பெறுமுன்னு கேட்டால் கணக்கான கணக்கைக் கேல்குலேட்டரில் போட்டு அழிச்சுப்போட்டு.......ரொம்பக் குறைவா ஒரு தொகை சொன்னாங்க. முந்திக்கடையை விட மூவாயிரம் கம்மி.

பணத்தோட பழைய கடைக்கே போனோம். அஞ்சே நிமிசம். வேலை முடிஞ்சது. நம்ம ஹாங்காங்கை ஒரு திரவத்தில் போட்டு எடுத்துவந்து சின்ன பாலித்லீன் கவரில் போடும்போது பார்த்தால் அப்படி ஜொலிக்குது. 'ஐயோ..... மாத்திட்டோமே'ன்னு மனசுலே அல்லாடல்.

சைனா டவுன் பரபரப்பில் டாக்ஸி பிடிச்சால்..... இலவசமாக் கொண்டு விடறேன்..... ஒரு நகைக்கடைன்னு ஆரம்பிச்சார் ட்ரைவர். ஆளை விடு சாமி. மீட்டரைப்போடு. நேரா ஹொட்டேல். வந்து சேர்ந்து பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு செக்கவுட் செஞ்சுட்டு இன்னொரு டாக்சியில் சுவர்ணபூமிக்குப் போய்ச் சேர்ந்தோம்.
அங்கேயும் அரசர் பலபடங்களில் பலவித போஸ்களில் நின்னு நம்மை நமஸ்காரம் செஞ்சு, வந்துட்டுப் போறவங்களுக்கு நன்றின்னார்.

வழியெல்லாம்....... ' என்னமோ ஒரு கடையில் நுழைஞ்சு இப்படி இவ்வளோ காசை தண்டம் பண்ணிட்டே. நல்ல தங்கமோ என்னவோ..... இந்தியாவைவிடக் கூடுதல் ரேட்டோ.....' ன்னு ஒரே தொணப்பல்.

"இதுக்காச்சும் ரீஸேல் உண்டு. நீங்க சொன்ன ஹேண்ட் பேகை வாங்கி இருந்தால்...................." (போதுண்டா சாமி)

அப்புறம் வலையில் கடைப்பெயரைத் தேடுனதில் அது புகழ்பெற்ற நம்பிக்கையான பெரிய கடைகளில் ஒன்னா இருக்கு. Hang Seng Heng ( Thailand ) Co., Ltd
நாம் இப்போ போறது பாங்காக் ஏர்வேஸில். கம்போடியாவில் இருக்கும் சியாம்ரீப் என்னும் ஊருக்குப் போறோம். செக் இன் ஒரு சிரமமும் இல்லாமல் முடிஞ்சது. ஏகப்பட்ட கவுண்ட்டர்கள் திறந்து வச்சுருக்காங்க.
அரண்மனைக்காவலுக்கு நிற்கும் பூதங்களும் அரக்கர்களும் இங்கே வரிசைக்கு ஒன்னா அலங்காரமா நிக்கிறாங்க. Askan Mara, Sahassadeja, Viruncamban, இப்படி மொத்தம் பனிரெண்டு பேர். இவுங்க வாழ்க்கை வரலாறுக் குறிப்புகள் கூட எழுதி வச்சுருக்காங்க.
ராவணனை இங்கேதான் முதலில் பார்த்தேன். இவருதான் அவரு. அந்த டோசகாந்த்.
மரகத புத்தரின் காவலன் சகஸ்ஸதேஜா, நம்ம ராவணனோட பெஸ்ட் ஃப்ரெண்டாம். இவருக்கு ஆயிரம் முகங்களும் ரெண்டாயிரம் கைகளுமாம். இவரைக் கொன்னது ஹனுமான்தானாம்.


முதலில் பாங்காக் வரும் பயணிகளை வரவேற்கும் விதமா அர்ரைவல் ஹாலில்தான் இவுங்களை வச்சுருந்தாங்களாம். அங்கே வேலை செய்யும் பணியாளர்கள், இது நாட்டுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவருமுன்னு அபிப்ப்ராயப்பட்டதால் இந்த பன்னெண்டு பேரையும் வழியனுப்புப் பகுதிக்கு அனுப்பிட்டாங்க. கெட்ட சமாச்சாரம், துரதிர்ஷ்டமெல்லாம் பயணிகளுடனே கிளம்பிப் போயிறட்டுமுன்னு!

.
விமானநிலையம் அமைக்க வாங்குன இடம் வெறும் எட்டாயிரம் ஏக்கர் நிலம்!!!! வளாகம் மட்டும் அறுபது லட்சத்து அறுபதாயிரம் சதுர அடிகள். உலகத்துலேயே அதி உயரமான கண்ட்ரோல் டவர் 434 அடி. முன்னூத்தி அறுபது செக்கின் கவுண்டர்கள் இப்படி எல்லாமே பிரமாண்டம்.
இந்த செப்டம்பர் 2010 வந்தால் சுவர்ணபூமிக்கு நாலு வயசு. இதைக் கட்டுனதும் உலகெங்கும் உள்ள ராஜகுடும்பத்தினரை இங்கே வரவழைச்சு பெருசாக் கொண்டாட்டம் நடத்தி இருக்காங்க.


இவ்வளவு பெரிய இடம் நகரத்துக்குள்ளே கிடைக்குமா? அதான் பாங்காக் நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்துலே சுவர்ணபூமியைக் கட்டி இருக்காங்க.

இமிக்ரேஷன் முடிஞ்சது. இங்கேயும் தரையில் கால் வரைஞ்சு வச்சுருக்கு. அதுக்குமேல் ஒவ்வொருத்த்ரா நிக்கணும். நம்மை ஒரு படம் புடிச்சு வச்சுக்கறாங்க. அப்புறம் கையில் கொண்டுபோகும் பையையும் கேபின் பேக், கணினி எல்லாம் வெளியில் எடுத்து ட்ரேவில் வச்சு ஸ்கேன் பண்ணும் சமயம் நம்ம காலணிகளையும் கழட்டி தனியா அதுக்குன்னு இருக்கும் ட்ரேவில் வச்சு ஸ்கேன் பண்ண அனுப்பனும்.
இதைக் கடந்தால் பாற்கடல். வாசுகியைக் கயிறாக்கி, மந்தரமலையை மத்தாக்கித் தலைப்பக்கம் பக்கம் அசுரரும் வால் பக்கம் தேவர்களுமா பாற்கடலைக் கடைஞ்சுக்கிட்டு இருக்காங்க.
வேடிக்கை பார்த்துக்கிட்டே போய் காஃபி வொர்ல்ட்லே கப்புச்சீனோ வாங்கிக் குடிச்சுட்டு நம்ம கேட்டை நோக்கிப் போனோம். இங்கே வெளிவிலைக்கும் விமானநிலைய விலைக்கும் வேறுபாடு ரொம்ப ஒன்னும் இல்லை. இந்த காஃபியே பாருங்க வெளியில் ஒரு நாள் இதே கடையில் குடிச்சது 70 பத். இங்கே 80. நம்மூர்போல் உள்ளே கொள்ளை அடிக்கறதில்லை(யாக்கும்)

வந்து நின்ற ஒரு விமானத்தில் இருந்து பைகளை இறக்குவதையும், சாப்பாட்டு கண்டெய்னர்கள் இறக்குவதையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு நிம்ம்மதியா சலனமில்லாம இருந்த என் மனசுலே கோபால் கல்லைத் தூக்கிப் போட்டார். சும்மா இருக்காம கம்போடியா விஸா ஃபார்ம் வாங்கிவரேன்னு போனவர் கொண்டுவந்து கொடுத்ததைத் திறந்தால்..............

ஃபோட்டோ ஒட்டணுமாம். கைவசம் இல்லையே!


ஙே :(


PIN குறிப்பு. டுக் டுக் படம் போடவில்லையாமே இதுவரை? இதோ போட்டாச்சு.



தொடரும்.....................:-)