Showing posts with label அனுபவம் Haridwar Hari ki Pauri Ganga Arti. Show all posts
Showing posts with label அனுபவம் Haridwar Hari ki Pauri Ganga Arti. Show all posts

Wednesday, February 16, 2011

அடி ஆத்'தீ'........... இது ஆரத்'தீ' !!!

ஹரியின் திருவடிகளுக்கு மங்கள ஆரத்தி எடுக்கும் இந்த படித்துறையை பிரம்மகுண்டம்ன்னு சொல்றாங்க. விக்கிரமாதித்ய மகாராஜா அரசாண்ட காலத்துலே இந்தப் படித்துறையை தன் தம்பி பத்ரிஹரி இங்கே வந்து தவம் செய்த நினைவாக் கட்டுனாராம். பாற்கடலைக் கடைஞ்சு அமுதம் கிடைச்சது பாருங்க. அப்போ அந்த அமுதக்குடத்தை எடுத்துப்போகும் வழியில் அதுலே இருந்து ததும்பின துளிகளில் நாலு மண்ணுலகில் விழுந்துச்சாம். அப்படி விழுந்த இடங்களில் இது ஒன்னு. மற்ற மூணு துளிகள் வீழ்ந்த இடங்களா அலஹாபாத், நாசிக், உஜ்ஜயினி இருக்கு.

இந்த நான்கு இடங்களில்தான் மூணு வருசத்துக்கு ஒரு முறை கும்பமேளா நடக்குது. அரைக்கும்ப மேளான்னு ஆறு வருசத்துக்கு ஒரு முறை அலஹாபாத் & ஹரித்வார் நகரங்களில் நடக்கும். அப்புறம் 12 வருசங்களுக்கு ஒருமுறை பூர்ண கும்பமேளா அலஹாபாத் த்ரிவேணி சங்கமத்தில். நடக்குது. அப்புறம் 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு ஒரு முறை (144 வருசம்) அலஹாபாத்தில் மகா கும்பமேளா நடக்குமாம். என்னமா கணக்கு வச்சுருக்காங்க பாருங்க!!!!
கங்கை வரும் வழியில் இருந்து ஒரு கால்வாயாப் பிரிச்சு இங்கே கொண்டுவந்து குளிக்க ஏதுவான இடமா படித்துறை கட்டி இருக்காங்க. கால்வாய் மீண்டும் அப்படியே போய் நதியில் சேர்ந்துருது. கீழ்ப்படிகளின் பக்கத்துலே மரச்சட்டம் வச்சுக்கட்டிய நாலைஞ்சடி நீள பொட்டிக்கடை டிஸைனில் அங்கங்கே இருக்கு. ஒவ்வொன்னிலும் பூஜைக்கான சாமான்கள். ஒரு Bபண்டா(பூஜாரி). அவருக்கு ஒரு உதவியாளர் இப்படி.
அடுக்கு விளக்குகளுக்குத் திரி போட்டு நெய்யை கட்டிகட்டியா வழிச்சு வச்சுக்கிட்டு இருக்காங்க.
எதிர்ப்பக்கமும் தீவுபோல இருக்கும் கரையில் மக்கள் கூட்டம். அங்கே ஒரு மணிக்கூண்டு(பிர்லா கட்டியது) நிக்குது. அதைத்தாண்டி அகலமா ஓடும் கங்கை.

நாம் நிற்கும் மேற்படியில் இருந்து அடுக்கடுக்கா இறங்கும் படிவரிசைகளில் ஆம்ஃபி தியேட்டர் எஃபெக்ட்டில் ஷோ பார்க்கும் வகையில் மக்கள் வரிசைகட்டி உக்கார்ந்துருக்காங்க. இந்தப்பக்கம் சுவற்றில் கண்ணாடிக்கதவு போட்ட மாடங்களில் கங்கை பூமிக்கு வந்த கதைகளும் பாற்கடலில் விஷ்ணு, முதலை வாகனத்தில் கங்காதேவின்னு அணிவகுப்பு. கூம்புக் கோபுரங்களுடன் சுத்திவர ச்சின்னதும் பெருசுமா சந்நிதிகள் ஏராளம். விளக்கு வச்ச நேரமா இருப்பதால் வெளிச்சங்கள் நதியின் ஓடும் தண்ணீரில் ஆடிக்கிட்டே பிரதிபலிக்குது. தண்ணீரில் மிதந்து போகும் சிறு அகலின் முத்துப்போன்ற ஒளி ஒரு மாதிரியான மனோநிலையைக் கொடுத்துச்சு எனக்கு.

தண்ணீரில் இறங்கி கைநிறைய அள்ளி எடுத்துத் தலையில் தெளிச்சுக்கிட்டேன். செஞ்சபாவம் எல்லாம் போயே போச். (இனி புதுசாச் செய்யாம இருக்கணும்)


நம்ம பங்குக்கு நாமும் ஒரு விளக்கேத்தலாமுன்னு பூஜைபொருட்கள் அடங்கிய இலைக்கூடை வாங்கினோம். கார்பார்க்கிங் கடந்து வந்தப்ப அஞ்சு ரூபாய்க்கு கூவி வித்தது இங்கே பத்து. நம் கையில் வாங்கின அடுத்த கணம் ஒரு பண்டா நம்மைப் பிடிச்சுடறார். 'இங்கே கொடுங்க'ன்னதும் நாமும் நம்மையறியாமல் அவர்கிட்டே கொடுத்துடறோம். 'இந்தப் பக்கம் வாங்க'ன்னு நம்மை தண்ணீர்கிட்டே கூட்டிட்டுப்போய், தன் ஜிப்பா பையில் இருக்கும் தீப்பெட்டியை எடுத்து அந்த அகல்விளக்கை ஏத்திட்டு நம்ம பெயர் குடும்ப விவரங்கள் கேட்டுட்டு என்னமோ மந்திரங்கள் சொல்லிட்டு நம்ம கையில் திருப்பிக் கொடுத்து அதை தண்ணீரில் விடச் சொல்றார். நாமும் ஏதோ ட்ரான்ஸ்லே இருப்பதுபோல் அவர் சொன்ன பேச்சையெல்லாம் கேக்குறோம்...... தட்சிணைக்காக நம் பையில் இருந்து காசை வெளியே எடுக்கும் வரை. குடும்பத்தின் நலனுக்குன்னு என்ற கொக்கி இருப்பதால் ஒன்னும் சொல்லத்தோணலைன்னு நினைக்கிறேன்.
ஒருத்தர் பெரிய பால்கேனில் இருந்து பாலை அப்படியே கங்கையில் ஊத்துனார். படம் பிடிச்ச கோபால் 'அவ்வளோ பாலை எதுக்கு நதியில் ஊத்தறாரு'ன்னார். அது அவர் இத்தனை வருசப் பால் வியாபாரத்துலே கலந்தடிச்ச தண்ணிக்கு பரிகாரமா இப்போ தண்ணியில் பாலைக் கலக்கறார். மனசாட்சி உறுத்தி இருக்குமுன்னேன்.

பாலை ஊத்துனது ஒரு பண்டிட்தான். கங்கைக்குப் பாலபிஷேகம்.

கையில் இருந்த பெரிய தாம்பாளம் போலிருந்த வட்டில் ஒரு மரச்சுத்தியால் ஒருத்தர் அடிக்க, 'டணடண'ன்னு ஒரு முழக்கம். சின்னதா ஒரு அஞ்சுமுகத் திரி ஏத்துன விளக்கை ஒரு குட்டிப்பெண் கையில் கொடுத்து ஆரத்தி எடுக்கவச்சாங்க. பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்னு சங்கின் முழக்கம்.
மேடையில் இருக்கும் ஒரு கங்கா மாதா விக்கிரகத்துக்கு ஆரத்தி காமிச்சாங்க.


'ஓம் ஜெய் கங்கே மாதா.....'மங்களாரத்திப் பாடல் ஒலிக்க ஆரம்பிச்சது. அடுக்கு விளக்குகள் ஏத்தப்பட்டு கையில் உயர்த்திப்பிடிச்சு ஆரத்தி சுத்த ஆரம்பிச்சாங்க. மக்கள் வெள்ளம் பூராவும் அப்படியே பக்திப்பரவசத்தில்.......திகுதிகுன்னு பத்திக்கிட்டு எரியுது அடுக்கு விளக்கு. பித்தளைக் கைப்பிடியின் சூடு தாங்காமல் கனமான டர்க்கி டவல் போல துணியைக் கைப்பிடியிலே சுத்தி வச்சாலும் சூடு தாங்க முடியலை போல. தண்ணீரை மொண்டு மொண்டு கைப்பிடியில் உள்ள துணியை நனைச்சுக்கிட்டே இருக்கார் ஒருத்தர்.

ஆரத்தி சுற்றும்போது கை நம்ம திசையில் வரும்போது தீச்சுவாலை அப்படியே நம்ம முகத்துலே அடிக்குது. ரொம்பப் பக்கத்துலே இருந்தால் இப்படித்தான். சுவாலைக்குப் பயந்து வெப்பம் தாங்காமல் நாம் அரை உடலை எதிர்ப்பக்கமா சாய்க்கிறோம். இப்படியே சாயறதும் நிமிர்ந்து நிக்கறதுமா ஒரு அஞ்சாறு நிமிஷம் ஒரு டான்ஸ். கண்ணைச் சுழற்றினா இதே மாதிரி ஒரு பத்துப்பதினைஞ்சு அடுக்கு தீபங்கள் ஆர்த்தி எடுத்து எரிஞ்சுக்கிட்டு இருக்கு.
பாடல் முடிஞ்சதும் அடுக்கு விளக்கை அங்கிருந்த மேடையில் வச்சாங்க. திகுதிகுன்னு தீவட்டியா இன்னும் எரிஞ்சுக்கிட்டே இருக்கு. பக்தர்கள் தீச்சுவாலையில் கை காட்டி கண்ணில் ஒத்திக்கிட்டு கைகூப்பி வணங்குறாங்க.
நம்ம பக்கம் கோவில்களில் இந்த அடுக்கு விளக்கை ஏற்றி சாமிக்கு முன்னால் ஆரத்தி சுத்திக் காமிக்கும்போது எப்படி முத்துமுத்தா அந்த தீபச்சுடர் ஒளிர்ந்து அடுக்கடுக்கா அம்சமா ஜொலிக்குது. அதைப்போல ஆரவாரமில்லாம அம்சமா மஹாவிஷ்ணுவின் பாதங்களுக்கு( ஹரி கி பொவ்டி) ஆரத்தி காமிச்சால் எவ்வளவு ஐஸ்வர்யமா இருக்கும்! இங்கென்னடான்னா..... தீவட்டிபோல் ஒரு ஆள் உசரத்துக்கு ஓங்கி எரியும் தீ!!!!!!

தீபம் கொளுத்துமுன் திரியை எண்ணெயிலோ நெய்யிலோ நல்லா ஊறவச்சு விளக்குலே அடுக்கினால்....நின்னு நிதானமா எரியும். இங்கே வெறும் பஞ்சுத்திரியை கொத்துகொத்தா அள்ளிவச்சுட்டு அதுமேலே நெய்யைக் கட்டிகட்டியா வச்சா வேற எப்படி எரியுமாம்?

சின்னச் சொம்பில் இருந்து பிரசாதமா கொஞ்சம் பாலை நீட்டும் கைகளில் ஊத்தறாங்க. எங்கே பார்த்தாலும் 'தான் பாத்ர'ன்னு உண்டியல்களா இருக்கு. அங்கே இருக்கும் ஏராளமான சந்நிதிகளில் சேவிச்சுக்கிட்டே போறோம். எல்லாமே 'ப்ராச்சீன் மந்திர்கள்'தான். எதுவும் புதுசு இல்லைங்கறாங்க. ஹனுமன், புள்ளையார், மகாகாளி, பத்ரி நாத், சிவன், சத்யநாராயண், பைரவர், விஷ்ணுபாதம், ராதா கிருஷ்ணா, இப்படி.............அங்கங்கே விற்கும் வெள்ளி ரேக்குகளை வாங்கி இஷ்டதெய்வங்கள் உடம்புலே ஒட்டி வைக்கிறாங்க பக்தர்கள்.
இப்படி எல்லா பக்தர்களுக்கும் அருள்பாலிக்கும் விதமா ஊரோட பெயர்கூடப் பாருங்க ரொம்பவே ஃப்ளெக்ஸிபிள். ஹரித்துவார் மகாவிஷ்ணு (ஹரி )நிற்கும் பத்ரிநாத் போகும் வாசல் (வழி) ஹர்துவார், சிவன் (ஹரன்) இருக்கும் கேதார்நாத் போகும் வாசல்(வழி).
பத்ரியில் நிற்கும் ஹரியின் கால் பெருவிரலைத் தொட்டுக்கிட்டு இங்கே கங்கை ஓடுது. அந்த 310 கி.மீ. இந்தக் கணக்குதான்.

நம்நாட்டில் இருக்கும் முக்கியமான ஏழு மோட்சபுரிகளில் இதுவும் ஒன்னு. அவை காசி, காஞ்சி, துவார்க்கா, உஜ்ஜயினி, அயோத்தியா, மதுரா மாயாபுரி. ஹரிதுவார்தான் இந்த மாயாபுரி. இங்கிருந்து 'கிளம்பிட்டா' நேரா மோட்சம் என்பதால் பலர் தங்கள் கடைசி காலத்துலே இங்கே வந்து தங்கிடறாங்க.

இந்த முக்தி ஸ்தலங்களை தரிசிச்சாலும் இதே புண்ணியம் உண்டாம். நமக்கு ஃபோர் டௌன். த்ரீ டு கோ! ஒருமுறைக்கு நாலு முறையா மோட்சம் உறுதி ஆயிருச்சு.
வசதிக்குத்தக்கபடி கண்ணாடி அலங்காரம் புதுப்பெயிண்டு, பளிங்குச்சிலை, ஆடை ஆபரணங்கள்ன்னு ஒவ்வொன்னும் ஒவ்வொருவிதமா ஜொலிக்குது. ஆட்டுக்கடா முதல் யானை வரை விதவிதமான வாகனங்களில் பவனி வர்றாங்க கடவுளர்கள்.
கங்கைக்கு ஒரு கோவில். 'ஸ்ரீ கங்கா கோயில்'னு தமிழிலும் எழுதி வச்சுருக்காங்க. இமயம்வரை தமிழ் போய் வெற்றிவாகை சூடி இருக்குன்னு சொல்லிக்க நமக்கு ஒரு ச்சான்ஸ்.

ஆரத்தி நடந்த படித்துறை, சினிமா முடிஞ்ச தியேட்டர்போல காலியா இருக்கு. அங்கிருந்த மக்கள் வெ:ள்ளம் முழுசும் இப்போ இந்த சந்நிதிகளில் புகுந்து பொறப்பட்டுக்கிட்டு இருக்காங்க.
ஒரு பக்கம் கோவில்களுக்கே உரித்தான பாத்திரக்கடைகளில் தாமிரச்சொம்புகளா அடுக்கி வச்சுருக்காங்க. வாங்கி கங்கையை மொண்டுக்கிட்டால் மூடிபோட்டு ஈயம் வச்சு ஸீல் வச்சுத்தருவாங்க. இப்ப எதுக்கெடுத்தாலும் ப்ளாஸ்டிக் யுகமாப்போனதால் இங்கே வியாபாரம் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கு போல. கடைக்காரர்கள் மட்டுமே ஈ ஓட்டிக்கிட்டு உக்கார்ந்துருக்காங்க. வளையல்கள் அலங்காரப்பொருட்கள் கடையில் நல்ல கூட்டம்.
திரும்பிப்போய் காலணிகளை எடுத்துப் போட்டுக்கிட்டு பாலத்தில் நடந்து போகும்போது கீழே நதியில் கங்காஸ்நானம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க பலர். நதியின் வேகத்தில் கால்தவறினால் இழுத்துக்கிட்டுப்போயிருமேன்னு. இரும்புக்கம்பிகளை நட்டு அதில் இரும்புச்சங்கிலி போட்டு வச்சுருக்கு. சங்கிலியைப் பிடிச்சுக்கிட்டே முங்கி எந்திருக்கணும். பெண்களுக்குத் தனி இடமா ஒன்னு இருக்கு. தொட்டடுத்து உடை மாற்றிக்க ஒரு சின்ன அறை.

இந்த இடத்தை ஒரு பகல்பொழுதில் வந்து பார்க்கணும். அறைக்குத் திரும்பும் வழியில் அந்த ஷாந்தி குஞ்ஜ் ஆசிரமத்தைக் கண்டு பிடிச்சுட்டோம். கொஞ்சம் உள்ளடங்கி இருப்பதால் சட்னு கண்ணுக்குப் படலை.

வாசலிலேயே ஒரு சின்ன மேசை போட்டு ஒருத்தர் உக்கார்ந்துருக்கார். ஆசிரமம் பார்க்கணுமுன்னா ஒரு பாஸ் கொடுப்பாராம். . அதைக் கையில் வாங்குனதும்தான் ராத்திரியில் என்னன்னு பார்க்கறது. பகல் நேரத்தில் வரலாமேன்னு தோணுச்சு. ருத்ராட்ச மரம் இருக்கான்னு கேட்டதுக்கு இருக்கும் தோட்டத்திலேன்னார். விஸிட்டர்ஸ் பாஸைத் திருப்பிக் கொடுத்தால், ஒன்பது மணிக்கு பூஜை நடக்குமாம். நடக்கட்டுமேன்னு (மனசில் சொல்லிட்டு) சாலையைக் கடந்து ஹொட்டேலுக்குள் வந்தோம்.


அறைக்குத் திரும்பிவந்து ராச்சாப்பாட்டுக்கு கீழே உள்ள ரெஸ்ட்டாரண்ட்டுக்குப் போனோம். எனக்கு ஒரே ஒரு புதினா பரோட்டா. தொட்டுக்கக் கொஞ்சம் தயிர். கோபால் ஒரு வெஜிடபிள் பிரியாணி. அவர் முகம் போன போக்கிலேயே பிரியாணியின் லட்சணம் புரிஞ்சு போச்சு:(

தொடரும்......................:-)

PINகுறிப்பு: பதிவில் உள்ள சில படங்கள் கோபாலின் கைவண்ணம்.