Wednesday, January 29, 2020

டூப்ளிகெட் தாஜ்.... (பயணத்தொடர் 2020 பகுதி 7 )

குகை விஸிட் முடிச்சு அடுத்ததாக நாம் போன இடம் பீபி கா மக்பரா.  காலையில் குகை பார்க்க  இதே வழியாத்தான் போனோம். குகையில் இருந்து ஒரு ரெண்டரை கிமீ தூரம்தான். அசப்புலே பார்த்தால் தாஜ்மஹல்தான். ஆனால் சின்ன சைஸ்........  ஒல்லியா இருக்கு.
மக்பரான்றது அரபிச் சொல். இதுக்கு சமாதி, நினைவகம் இப்படிப் பொருள் இருக்கு.   இங்கேயும் உள்ளே போய்ப் பார்க்க  கட்டணம் உண்டு. இந்தியர்களுக்கு இருபத்தியஞ்சு ரூ.  வெளிநாட்டவர்க்கு முன்னூறு ரூ.  காலை  சூர்யோதயம் முதல் ராத்ரி பத்துவரை திறந்து வைக்கிறாங்க.
நம்ம தொல்லியல் துறை, மார்பிள் கல்வெட்டுலேக் கதைச்சுருக்கம்போல் சரித்திரக்குறிப்பு  வச்சுருக்கு.
ஔரங்கஸேபோட அப்பா ஆக்ராவுலே அம்மாவுக்குக்   கட்டுன தாஜ்மஹல்  பார்த்துட்டு,  இவரோட மகன் ஆஸம் ஷா தன்னுடைய அம்மாவுக்குக் கட்டுனது இது.  மாமியாருக்கும் மருமகளுக்கும்  போட்டியே கூடாது இல்லை :-)

மொஹலாயர்கள் ஆட்சி காலத்துலே  இரான் நாட்டு அரசகுடும்பத்து ஷாநவாஸ்,   குஜராத் பகுதிக்கு வைஸ்ராயா இருக்கார். அவர் மகள்   இளவரசி ரபியா உல் துர்ரானி,   ஔரங்கஸேபைக் கல்யாணம் கட்டுனாங்க.  கல்யாணத்துக்குப்பின் இவுங்க பெயர் தில்ரஸ் பானு பேகம். இவுங்க மூத்த மகன்தான் ஆஸம் ஷா. அஞ்சாவது பிரசவத்தின்போது,  இறந்துடறாங்க.

 (இதுலேகூடப் பாருங்க.... மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரு ஒத்துமை. அவுங்களும்  பிரசவகாலத்துலே ஏற்பட்ட சிக்கல் காரணம்தான் இறந்தாங்க. பதிநாலாவது பிரசவம் !!!  )

பட்டமகிஷி இறந்துபோனது ஔரங்கஸேபுக்கு  பெரிய துக்கம்.  மகன் ஆஸம்ஷாவுக்கும் தாய் இறந்த சோகம் அதிகம். அப்பாவும் புள்ளையும் ரொம்பநாள் சோகக்கடலில் மூழ்கி இருந்துருக்காங்க. தாய் இறந்த ஏழாம் வருஷம்,  தாய்க்கு ஒரு நினைவகம் கட்டணுமுன்னு மகன் கட்டுனது இந்த பீபி கா மக்பரா.
டிக்கெட் வாங்கிக்கிட்டு உள்ளே போறோம். பெரிய தோட்டம்தான்.  மெயின் கேட்டில் இருந்து நுழைவு வாயில் ஒரு நூறு மீட்டர் இருக்கலாம்.  அதுக்குள்ளே போய் பார்க்கும்போது கண்ணெதிரே ஏறக்கொறைய தாஜ்மஹலேதான்.
அதே போல நாலுபக்கங்களிலும் மினாரா, இடைப்பட்ட தூரத்தில்  நீளமா செயற்கை நீரூற்று (தண்ணி இல்லை.....   காய்ஞ்சு கிடக்கு ) ஃபோட்டொ பாய்ன்ட்க்கு ஒரு பளிங்கு பெஞ்ச் கூட போட்டுருக்காங்க.  கூட்டம் இருந்தாலும் படம் எடுத்துக்க முடிஞ்சது.
கடந்து போய் உயரமேடையில் இருக்கும் கட்டடத்துக்குள் போறோம். ஹாலின் நடுவிலே இடுப்பளவு தடுப்பு சுத்திவரக் கட்டி இருக்காங்க. கீழே எட்டிப் பார்த்தால்  சத்தர் விரிப்பு போட்ட சமாதி.



 அங்கே ஆக்ராவில்   தாத்தா பாட்டி சமாதிகள்  கீழே நிலவறையில் இருக்கு.  நாம் உள்ளே போகும் மேல் தளத்துலே ஒன்னும் இல்லை. அங்கிருந்து நம்மால் பார்க்கவும் முடியாது.  (1994 இல் நாங்க போனபோது, இப்போ இருப்பதைப்போல் பாதுகாப்பு அச்சுறுத்தல் எல்லாம் இல்லை. கீழே நிலவறைக்குள் போய் பார்த்தோம்! 2010 இல் போனபோது கீழே போக அனுமதி இல்லைன்னுட்டாங்க)  இங்கேயும் கீழ்தளத்துலேதான்  பேகம் சமாதி இருக்குன்னாலும்  நாம் மேல்தளத்துலே இருந்து பார்க்கும் வகையில் கட்டி இருக்காங்க.
அங்கே முழுக்க முழுக்கப் பளிங்கே !  இங்கே அதுலே பாதிதான் பளிங்கு  (ஔரங்கஸேப் கொஞ்சம் கஞ்சர்ன்னு வாசிச்சது நெசம்தான் போல! )
உள்ளே  சுவர் முழுக்க இன்லே ஒர்க் வேலைப்பாடும், மேலே உசரக்கே மாடங்களும்,  மார்பிள் பலகணிகளுமா நல்ல வெளிச்சத்தோடு இருக்கு. என்னைக்கேட்டால்,  ஆக்ரா தாஜ்மஹலைவிட இந்த 'டெக்கன் தாஜ் 'ரொம்ப நல்லா இருக்குன்னுதான் சொல்வேன்.

வெளியே இடம் வரும்போது பின்பக்கத்துலே பெரிய தோட்டமும், அங்கே ஒரு வாசலுமா இருக்கு.  அந்த வாசல் இப்போ பயன்பாட்டில் இல்லை.



ஒரு மசூதி ஒன்னும்  கட்டி இருக்காங்க.  அழகானச் சின்னத் தூண்களும் வளைவுகளுமா அருமை.


மொத்த இடத்தையும் ரொம்ப சுத்தமாகவே  வச்சுருக்காங்க.  துப்புரவு செய்யும் மங்கள், உமா இருவரிடமும் பேச்சுக் கொடுத்தேன்.  வெள்ளிக்கிழமைகளில் தொழுகை  உண்டாம்.
சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்துருக்கோம்.


பதினொன்னரை ஆச்சுன்னு கிளம்பினோம். நதீம் கொடுத்த லிஸ்ட்டில்  பக்கத்துலே என்ன இருக்குன்னு பார்க்கலாம்....  வாங்க

தொடரும்.....  :-)


8 comments:

said...

அருமை நன்றி.

said...

"ஆக்ராவை விட ரொம்ப நன்றாக இருக்கிறது"
அடடா...தகவலுக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

வருகைக்கு நன்றிப்பா !

said...

பீபீ கா மக்பரா... நன்றாகவே இருக்கிறது.

படங்கள் அனைத்தும் அழகு.

தொடர்கிறேன்.

said...

அசப்புலே பார்த்தால் தாஜ்மஹல்தான். ஆனால் சின்ன சைஸ்........ ஒல்லியா இருக்கு....

ஓ..


ஒரு புதிய இடம் பார்த்து அறிந்துக் கொண்டேன் மா...

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நல்ல அழகான அமைதியான இடம்தான்!

தங்கள் வரவுக்கும் தொடர் வருகைக்கும் நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

நன்றிப்பா !