Monday, October 28, 2019

புத்தம் புது உடல் கிடைச்சுக்கிட்டே இருக்கு !!!!!(பயணத்தொடர், பகுதி 161 )

ஒரு மூணு மணி ஆனதும்  'வெறுங்கை'யோடு இதோ கிருஷ்ணனைப் பார்க்கக் கோவிலுக்குப் போய்க்கிட்டு இருக்கோம். காசுக்கு மட்டும்தான் அனுமதி என்பதால் அது சட்டைப்பையில்.
 வாசலில் இருந்த ஆட்டோக்காரரிடம் பீச் ரோடு வழியா ஊருக்குள் போகச் சொன்னோம். எம்பதுன்னார். சரின்னோம்.
நேத்துப்போனது போலவே பக்கத்துத் தெருவழியா கோவில்வரை கொண்டுபோய் விடச் சொல்லி ஆட்டோக்காரரிடம் கேட்டதும் அப்படியே ஆச்சு. நேராப்போய் கொஞ்ச தூரத்தில் ரைட் எடுத்து அந்த குறுகிய சந்தில் நடந்தால் ரதங்களாண்டை போயிடலாம்.

அம்போன்னு நிற்கும் ரதங்களைப் பார்த்தால் மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. வெயிலிலும் மழையிலும் வருஷம் பூரா நிக்கறதால் சீக்கிரம் மரங்கள் உளுத்துப் போயிருது. வருஷாவருஷம் ரதயாத்திரைக்கு ஒரு மூணு மாசம் இருக்கும்போதே பழுதுபார்க்கும் வேலையை ஆரம்பிச்சுடறாங்களாம்.  பழுதுன்னு சொல்ல முடியாது....  ஏறக்கொறைய புதுசுதான்.  இதுக்குண்டான மரங்களை Daspalla என்ற ஊரில் (147 கிமீ தூரம்)  இருந்து  வெட்டி எடுத்து, அதை  மஹாநதியில் மிதக்க வச்சுப் பூரி நகருக்குப்பக்கம் வரை ஓடம் போலத் தள்ளி வந்து, அப்பாலே வெளியில் எடுத்து வண்டியில் ஏத்திச் சாலை வழியாக் கோவிலாண்டை கொண்டு சேர்க்கணுமாம்.  தச்சு வேலை செய்பவர்களுக்கு கிருஷ்ணன் படியளந்துக்கிட்டு இருக்கான்.

கோவில் வாசலுக்கு எதிர்ப்புறம் (நாம் நுழைஞ்சு வரும் சந்தின் முனையிலேயே ) இன்னொரு காலணி காப்பகம் இருக்கு. அங்கே விட்டுட்டு வந்தால், கோவில்வாசல் நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.  கோவில்வாசலில் கம்பித்தடுப்பு வச்சு பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனிவரிசையா உள்ளே விடறாங்க. செக்யூரிட்டிச் செக்கப் வசதிக்காகத்தான்.  ஒரே ஒரு கேள்விதான் 'செல்ஃபோன் ஹை?' நாமும் ஒரே ஒரு பதில்  'நஹி ஹை' ஆச்சு.  கம்பித்தடுப்பு கடந்ததும் குடும்பத்தோடு சேர்ந்துக்கலாம்.

கல்மரத்தைக் கும்பிட்டுக்கிட்டு வாசலுக்குள் நுழைஞ்சோம். நம்ம பக்கங்கள் போல கொடிமரமுன்னு தனியா ஒன்னும் இல்லை.  அதான்  கோபுர உச்சியில் கொடி பறந்துக்கிட்டு இருக்கே!
வாசலுக்குள்  மரமாடத்தில் ப்ரமாண்டமான டிவி பொட்டியில்  தெரிவதைப்போல  ஜகந்நாத் காட்சி கொடுக்கறார்.  முகப்பு வாசலுக்கந்தாண்டை அந்த இருபத்தியிரண்டு படிகளில் ஏறி  சந்நிதி மண்டபத்துக்குள் போய் தரிசனம் ஆச்சு.  இன்றுதான் பூரியில் கடைசிதினம். இதுதான் கடைசி தரிசனம் என்பதால் மனம் குழைஞ்சது உண்மை.  'போயிட்டு வரேண்டா'ன்னு சொல்லிக்கிட்டேன்.

நைவேத்யம் எல்லாம்  முடிஞ்சு திருப்தியாச் சாப்பிட்ட களை முகத்தில் இருக்கோ? ப்ரகாசமா ஜொலிக்குதே.... ராமேஸ்வரக் குளியல், த்வாரகை அலங்காரம்,  பூரி சாப்பாடு முடிஞ்சுருக்கு. இனி நேரா பத்ரிநாத் போய் தியானம்தான் பாக்கி.   உண்டமயக்கத்தில் லேசாக் கண்ணை மூடி இருந்தாலும் தியானத்துக் கணக்குதான் கேட்டோ :-)
கோவிலின் மற்ற சந்நிதிகளைச் சுத்திப் பார்த்துக்கிட்டு அங்கங்கே தரிசனம் பண்ணிக்கிட்டு  ஆனந்த பஸாராண்டை வரும்போது  எதிர்ப்புறம்  ஒரு  ஓலைப் பந்தல் மாதிரி இருக்கும் இடத்தில் நிறைய பானைகளில் பொங்கி நிற்கும் சோறும்,  சோற்றின் வெண்மை தெரியாத அளவில்  நிறைச்சு மொய்க்கும் ஈக்களுமா.....  ஐயோ.....

நாம் கிட்டே போனதும் விர்னு எல்லா ஈக்களும் டேக் ஆஃப் ஆகி , திரும்பப்போய் சோற்றில் கால் வைக்குதுகள்.
மூடி வைக்கப்படாதோ?  இல்லே....  அதுகளுக்கும் உணவளிக்கும் கடமையை இப்படிச் செய்யறானோ? ப்ச்....

கொஞ்சூண்டு வாங்கிப் பார்க்கலாமான்னு நினைச்சதை  சட்னு  மாத்திக்கிட்டேன். பெருமாளே.... மன்னிச்சுரு......  இன்னும் பத்துநாள் பயணம் பாக்கி இருக்கு. ரிஸ்க் எடுக்க முடியாது....

பெரிய விமானங்களிலும், கருவறை கட்டட வெளிப்புறங்களிலும் நிறைய சிற்பங்கள் இருக்குன்னாலும், கிட்டப்போய்ப் பார்க்க முடியாதபடி கூட்டம் அங்கங்கே.... கிடைச்ச இடத்துலே உக்கார்ந்து சாப்புடறாங்க.
எக்கச்சக்கமான மண்டபங்கள் சின்னதும் பெருசுமா.....   கங்கா, ஜமுனா, சரஸ்வதி, கோதாவரின்னு நதிகளுக்காக ஒரு பெரிய மண்டபம்.  காவிரி பெயர் இருக்கான்னு தெரியலை.....  ஒரியாலே எழுதி இருக்காங்க....  இன்னொருபக்கம்  காயத்ரி, சாபித்ரி,புபனேஸ்வரி, சஷ்டி, ஷசின்னு  தேவிகளுக்கு.....  தவிர நிறைய இடங்களில் யானை வரிசைகள்தான் !

படிக்கத்தெரியலைன்னு கூச்சப்படாம,  கொஞ்சம் விவரமுள்ள  ஆள் போல கண்ணுக்குத் தெரியும் நபர்களிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம், தப்பே இல்லை.... 'ஜி... இஸ்மே க்யா லிக்கா? ' ....   இது போதும்.

ஒரு  சந்நிதிக்குப் பக்கம் இருந்த மேடையில் கொஞ்சநேரம் உக்கார்ந்தோம். கோவிலுக்குப் போனால் கொஞ்சம் உக்கார்ந்துட்டு வரணும் என்பது  சம்ப்ரதாயம்.   ரதயாத்ரை சமயம்   வந்துருந்தால் ஒன்னையுமே சரியாப் பார்த்துருக்க முடியாதுன்னு பேச்சு வந்தப்ப, ரெண்டு வாரத்துக்கு  முன்னால் ஜொலிச்ச ரதங்கள் எப்படி இருக்கு இப்பன்னு ஆதங்கப்பட்டேன்.  மரமுன்னா அப்படித்தான்.

நம்ம ஜகந்நாத் பரிவாரமும் மரம்தானே.... கோவிலுக்குள் பாதுகாப்பாக இருப்பதால்  அவ்ளவு சீக்கிரம் பழுதாகாது...... ஆனாலும் மரம் என்பதால்  புதுப்பிக்கத்தான் வேணும். இதை ஒரு பெரிய திருவிழாவாத்தான் நடத்தறாங்க.  'நபகளேபரா'ன்னு பெயர்.

வ வர்றதில்லையே.... அதுதான் ....   நப என்றால் நவ (புதிது) களேபரான்னா உடம்பு. புது உடல். ஆஹா.... நாம்தான் களேபரத்தை ...குழப்பம் என்றதுக்குப் பயன்படுத்தறோமோ.... என்னவோ போங்க.... ஒரெ களேபரமா  இருக்கு :-)

பனிரெண்டு வருஷத்துக்கொருக்கா, புது உடம்பு கிடைச்சுருது.  பனிரெண்டுன்னா .... கரெக்ட்டா பனிரெண்டு இல்லை. சிலசமயம் பத்தொன்பது  வருஷம் கூட ஆகிருமாம். ஒருமுறை எட்டு வருஷத்தில்  உடல்மாற்றம் நடந்துச்சுன்னு கோவில் குறிப்புகள் சொல்லுது.

ஆடி மாசத்துலே ரெண்டு அமாவாசை வரும் வருஷம்தான்  கணக்காம். அநேகமா பனிரெண்டு வருஷத்துக்கொரு முறை  இப்படி அமைஞ்சுருதாம்.

இந்த நபகளேபரா சமாச்சாரத்துலே  முக்கிய அங்கம் வகிப்பது  Daitapati   Sevayats    என்னும் விசேஷ பண்டாக்கள்தான்.  கோவிலில் ஆறாயிரம் பண்டாக்கள் இருக்காங்கன்னாலும்  வெவ்வேற க்ரேடு, வெவ்வேற வேலை, வெவ்வேற படிநிலைகள் எல்லாம் உண்டு.  இந்த பண்டாக்கள் வாரிசுகள்  எல்லோருமே ரொம்ப நல்லாப் படிச்சு, பெரிய வேலைகளில்  இருப்பவர்கள்தான். ஆனாலும்   இந்த விழா சமயம்  ஜகந்நாத் சேவைகளைச் செய்யன்னு   லீவு எடுத்துக்கிட்டு வந்துருவாங்களாம். பாத்யதையை விட்டுக்கொடுக்கலாமோ? எத்தனை பேருக்கு இந்தக் கொடுப்பினை இருக்கு சொல்லுங்க !

நபகளேபராவின் ஆரம்பத்தில்  இங்கே அடுத்து ஒரு அம்பத்தியேழு கிமீ தூரத்தில் இருக்கும் ககட்பூர்  என்ற இடத்தில் இருக்கும் மங்களா  தேவி கோவிலில் போய்  பூஜை செஞ்சு, தேவியின் அனுமதியோடு, அந்த ஊர்க் காட்டில் இருக்கும்  மரங்களில் , சாமி செய்யறதுக்குப் பொருத்தமான வேப்ப மரங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதும் இந்த  ஸ்பெஷல் பண்டாக்கள்தான். பூஜை முடிஞ்சதும் தேவி சந்நிதிக்கு எதிரில்   இந்த ஸ்பெஷல் பண்டாக்களில் (Daitas) மூத்தவர்களா நாலுபேர் மட்டும்  அன்றைக்கு இரவு  படுத்துத் தூங்குவாங்க. மரங்கள் இருக்கும் இடத்தைக் கனவில் வந்து தெரிவிப்பாளாம் மங்களா தேவி !

எதாவது ஒரு மரத்தை செலக்ட் பண்ணிட முடியாது. ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு குணவிசேஷமுள்ள  மரம் தெரிஞ்செடுக்கணும்.  ஸ்ரீ பலராமருக்கு..... மரப்பட்டைக்குள்ளில்  ரொம்ப லைட் ப்ரவுன் நிறமா இருக்கும் (அநேகமாவெளுப்பு நிறமுள்ள)  மரம். இது  வளைவு நெளிவில்லாம நேரா வளர்ந்து மேலே போகப்போக ஏழு கிளைகள் பிரிஞ்சு இருக்கணும். (  ஆதிசேஷன் அவதாரம்  இல்லையோ  ஸ்ரீ பலராம் !)

சுபத்ரைக்கான மரம், அஞ்சு கிளைகளோடு  இளமஞ்சள் நிறத்தில்... அஞ்சு  இதழ் தாமரைப்பூ போல   இயற்கையாவே  ஒரு அடையாளம் இருக்கணும்.

நம்ம கிருஷ்ணனுக்கோ....  அதிகம் ஆட்கள்  புழங்காத  காட்டில்  ஆத்தங்கரையோரமாவோ இல்லை எதாவது நீர்நிலைக்குப் பக்கமாவோ, நாலு கிளைகளோடு வளர்ந்து நிக்கும்  அழுத்தமான ப்ரவுன்/ சிகப்பு கலந்த  நிறமுள்ள  மரம். இதெல்லாம் போதாதுன்னு மரத்துலே சங்கு சக்ர அடையாளம் வேற இருக்கணுமாம்!

ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு குறிப்பிட்ட உயரம், பருமன் அளவுகள் கூட இருக்கணுமாம். இப்படியெல்லாம் கிடைக்குமான்னு யோசிச்சால்...... இதுவரை கிடைச்சுக்கிட்டுத்தானே இருக்கு ! எல்லாம் அவன் கணக்கும், அவன் அருளும் இல்லையோ !

இந்த மூவரைத்தவிர சுதர்ஸனத்துக்கும் ஒரு மரம்  உண்டு. சிகப்பு நிறமும் மூணு கிளைகளும், ஒரு இடத்தில் சக்கர வடிவமும், மரத்துக்கு நடுவில் கொஞ்சம் குழிஞ்சாப்லெயும் இருக்கணும்.
மரங்கள் தெரிவானதும்  'வெட்டுனேன் கட்டுனேன்'னு முடியாது. அந்தந்த மரங்களுக்கு முன் ஹோமம் செஞ்சு, மரத்துக்கு அபிஷேகம் பூஜைகள் செய்து, மரத்தின் அனுமதி வாங்கியபின்  வெட்ட ஆரம்பிப்பாங்க.  மரம் வெட்டும் ஆட்களும்  இதுக்குண்டான நியமங்களை அனுசரிச்சுச் சுத்தபத்தமா இருப்பாங்க.
மரங்களை வெட்டி எடுத்ததும்  மரங்களுக்கு அபிஷேகம் ஆராதனை, ஸ்நானம் எல்லாம்  செஞ்சு இன்னொரு ஸ்பெஷல் பூஜை முடிச்சு,  மாட்டுவண்டிகளில் ஏற்றி ஸ்ரீக்ஷேத்ரத்துக்கு (ஸ்ரீ ஜகந்நாத் கோவில்) கொண்டு வருவாங்க.

அதன்பின் நல்ல நாள் பார்த்து மரத்தில் தெய்வங்களைச் செதுக்கும் வேலை தொடங்கும்.   மஹாராணாக்கள் என்ற தச்சுப்பணியாளர்கள்  அம்பது பேர்,  21 நாட்களுக்குள்   இவர்களைச் செதுக்கி முடிப்பார்கள்.
அதுக்குப்பிறகு  பழைய சிலைகளை எடுத்துட்டு அந்த இடத்தில் புதுச்சிலைகளை வைக்கணும். விசேஷ பண்டாக்கள்தான் இதைச் செய்வாங்க.  பழைய சிலைக்குள் ப்ரம்மபதார்த்தம் என்ற  ஆத்மா இருக்கு. அதைப் புதுச்சிலைக்கு மாத்தணும்.

இந்த  ப்ரம்மபதார்த்தத்தை இதுவரை யாருமே பார்த்ததில்லையாம். பார்க்கக்கூடாது. மீறினால் மரணம் நிச்சயம். ரொம்பவே ரகசியமாச் செய்யும் பணி என்பதால் பண்டாக்கள் கண்களைக் கட்டிக்கிட்டு,  பழைய சிலைகளின் மேல் போட்டுருக்கும் துணிகளைக் கையில் சுத்திக்கிட்டு (தொட்டு உணர்தலும் கூடாது !) பழசில் இருந்து எடுத்துப் புதுசுக்கு மாற்றி வைப்பாங்க. ரகசிய வேலை என்பதால் அன்று நள்ளிரவுக்குப் பணி தொடங்குமுன் ஊர் முழுக்க  இருட்டாகிரும். அரசே மின்சாரத்தை நிறுத்தி வச்சுரும். ஒரு ஆள் வாயத் தொறக்கப்டாது.

ரகசிய வேலை முடிஞ்சதும்,  பழைய சிலைகள் வெறும் உடல்கள்தான். அதனால் முறைப்படி சடங்குகள் செஞ்சு , கோவில் வளாகத்துக்குள் கொய்லி வைகுண்ட்   என்ற  இடத்தில் புதைச்சுருவாங்க. (Koili Vaikuntha . கோவிலில் இருக்கும் வைகுண்டம்?)
ஆக மொத்தம் நாலு மாசம் நடக்கும் விழா இது !  சாஸ்த்திர, சம்ப்ரதாயங்கள் அதிகம் என்பதால் இவ்ளோ நாட்கள்  எடுக்குது.  இந்த விழா போனமுறை நடந்தது 2015 ஆம் வருஷம். அஞ்சு லக்ஷம் பேர் விழாவுக்கு வருகை தந்தாங்கன்னு கோவில் குறிப்பு.

எப்படி இந்த  சிலைமாற்றம் ஆரம்பிச்சதுன்றதுக்கும் ஒரு வரலாறு இருக்கு. அந்நிய மதத்தினர் கலிங்கநாட்டுக்குள் புகுந்து  ஹிந்துக் கோவில்களை அழிக்கத் தொடங்கியப்ப,  மூலவர் சிலைகளைக் காப்பாத்தறதுக்காக ரகசியமா  வெளியே தொலைதூரத்துக்குக் கொண்டுபோய் மண்ணில் புதைச்சு ஒளிச்சு வச்சுருக்காங்க.

ஆபத்து நீங்கின பிறகு வெளியே எடுத்தப்ப, சிலைகள்  ஆண்டுக்கணக்காய் மண்ணில் புதையுண்டு சிதைஞ்சு போயிருந்ததால், புது சிலைகளைச் செய்ய வேண்டி வந்ததுன்னும், 1733 ஆம் ஆண்டு முதல்முறையாகப் புதிய சிலைகள் செஞ்சாங்கன்னும் கோவில் குறிப்பு. மரச்சிலைகள்  எப்படியும் சிலபல ஆண்டுகளில் பழுதாகிருது என்பதால்  புதுச்சிலை செய்ய  விழா  எடுக்க ஆரம்பிச்சு அப்படியே தொடர்ந்து வருது, இப்பவும். அடுத்த புதுச்சிலைக்கான நபகளேபரா 2035 ஆம் வருஷம்தானாம்.
நம்ம வெங்கட் நாகராஜ், அவருடைய வலைப்பதிவில் சுருக்கமாகவும் அழகாகவும்  இந்த விழா பற்றி எழுதி இருக்கார். கோவில் அதிகாரிகளே எடுத்துச் சொன்ன விளக்கங்கள் அவை.  அவ்ளோ சுருக்கமா என்னால் சொல்ல முடியுமோ?  அதான்.... ஹிஹி....   குறிப்புகள் எல்லாம் கோவில் வலைப்பக்கத்தில் இருந்தும், உள்ளுர் மக்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்து வாங்கிய தகவல்களில் இருந்தும் எடுத்துதான் 'துளசிதளத்தில்'  பகிர்ந்துள்ளேன்.

நமக்கும் இப்படி ஒவ்வொரு பத்து வருஷத்துக்கும் புது உடம்பு கிடைச்சால் எவ்ளோ நல்லா இருக்கும் இல்லே?  பளிச் கண்கள், சுருக்கமே இல்லாத  தோல், தலைநிறைய முடி, நல்லாவே கேக்கும் காது....  மொத்தத்துலே வியாதி வெக்கை இல்லாத ப்ராண்ட் நியூ உடல்! பேராசைதான்.....

இன்னும் கொஞ்சம் சுத்திப் பார்க்கலாமுன்னு  மேற்குவாசலாண்டை  போனதும்தான் , கோபுரத்துலே இருக்கும் நரசிம்ஹர் சந்நிதிக்குள் போய் வரலாமேன்னு  படிகள் வழியா மேலேறிப்போனோம்.   கொஞ்சம் உயரமான இரும்புப் படிகள்தான்.  நிதானமா ஏறிப்போனால், உள்ளே ஒரு பெரிய குழு . அவுங்க வெளியே வரும்வரை மேலேயே ஒருபக்கம் காத்திருந்தோம்.  சின்ன சந்நிதிதான். பெரிய உருவம் ஸ்ரீ நரசிம்ஹர். மேற்கு வாசலைப் பார்த்தபடி இருக்கார்.  நாமும் கும்பிட்டு முடிச்சுக் கீழே இறங்கி வந்தால்.....   கொடிமாற்றம் நடந்து முடிஞ்சு, கூடி இருந்த பக்தர்கள் எல்லாம் கலைஞ்சு போய்க்கிட்டு இருந்தாங்க.   ஆஹா..... கோட்டை விட்டுட்டோமே............ 'அதான் முந்தாநாள் பார்த்தாச்சே'ன்னார் நம்மவர்.

கோபுரத்தில் பறக்கும் கொடியை நோக்கி வணங்கிட்டு, போயிட்டு வர்றோமுன்னு சொல்லிக்கிட்டு நாமும் கோவில் முகப்பு வாசலுக்குப் போனோம்.  இனி சாலையைக் கடந்து எதிர்வாடையில் இருக்கும் காலணி பாதுகாப்பகம் போய் நம்ம காலணிகளை எடுத்துக்கணும்.

எல்லாம் ஆச்சு.  சந்து முனையில் ஒரு ஆட்டோ கிடைச்சது நம்ம பாக்கியம். சட்னு ஏறிக் கிளம்பி ஜமீந்தார் மாளிகைக்கு இருட்டுமுன் வந்தாச்சு.

படங்கள் எடுக்கமுடியலை என்பதைத் தவிர வேறு குறையொன்றுமில்லை.........

நாளைக்கு இங்கிருந்து கிளம்பறோம்.  புபனேஷ்வர் போகணும். வண்டிக்கு ஏற்பாடு செஞ்சுட்டு,  பூரிக் கடற்கரையில்  ஒரு  நடையும்  ஆச்சு.


ராத்ரி சாப்பாடு ரூம் சர்வீஸில்தான்.  சாஹி பனீர், தயிர், சாதம்..... எல்லாம் இது போதும்.....
காலையில் ஏழரைக்கு செக்கவுட் என்பதால்  சீக்கிரம் எழுந்துக்கணும்னார் 'நம்மவர்'.

இல்லையே.... எட்டுமணின்னு  பார்த்தேனே.... எதுக்கும் இருக்கட்டுமுன்னு க்ளிக்கிட்டும் வந்தேனே.....
இதோன்னு காமிச்சதும்..... அட! அப்ப எதுக்கு ஏழரைன்னான் என்னிடம்?

ஹாஹா.... அப்படிச் சொன்னால்தான் எட்டுக்காவது ரெடி ஆவாங்கன்னு  இருக்குமோ?

 சரி. தூங்கலாம். ராத்ரி மழை வராமல் இருக்கணும், பெருமாளே!

தொடரும்...... :-)


9 comments:

said...

விவரங்களும் அவற்றை ரசனையுடன் தெரிவித்ததும் அருமை. பத்து வருடங்களுக்கு ஒருமுறை நம் உடலும் புதிப்பித்துக் கொண்டால் என்றும் 16 இளமை 16 என்று இருக்கலாம். ஆனால் வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது  என்றும் கவலைப்பட வேண்டி இருக்கிறது. 

said...

விலாவாரிப் பதிவு

said...

தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

என்னையும் இப்பதிவில் குறிப்பிட்டு இருப்பதில் மகிழ்ச்சி. விரிவாக எழுதுவதால் தான் நீங்கள் டீச்சர்! ஹாஹா...

தொடரட்டும் பதிவுகள். சில பதிவுகள் விட்டிருக்கிறேன். முடிந்த போது படித்து விடுவேன்.

said...

சாமி சிலை மாற்றம் நீண்ட பூஜைகள் நியமங்கள் இவ்வளவு இருக்கிறதே படித்தே வியந்து விட்டோம்.

said...

வாங்க ஜயகுமார்,

இளமை வேண்டாம்..... குறைஞ்சபட்சம் போறவரைக்குமாவது.... நோய் நொடி இல்லாமல் வச்சால் போதும்தான் !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,

அடுத்த பதிவும் கூடக் கொஞ்சம் விலாவரிதான். ஜகந்நாத் எழுத வைக்கிறான் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உங்களைப்போல் ரத்தினச் சுருக் கைவரலையே........

said...

வாங்க மாதேவி,

இன்னும் ஏகப்பட்ட நியமங்கள் இருக்கு. நாந்தான் கொஞ்சம் எடுத்து வச்சுருக்கேன் :-)

மூச்சு முட்டுதே........

said...

நிறைய நிறைய தகவல்கள் மா ....மிக சிறப்பு