Wednesday, January 31, 2018

எங்கும் எதிலும் இருப்பான்.... அவன் யாரோ... .....(இந்திய மண்ணில் பயணம் 108) நிறைவுப்பகுதி!

முக்திநாத் போறோமுன்னு தீர்மானிச்சவுடனேயே   அங்கிருந்து கண்டகி நதியில் நாமே சாளக்ராம் எடுத்து வரணுமுன்னு ஒரு ஆசை. ஆனால் அங்கே போனப்பதான் தெரிஞ்சது,  இதை அங்கே ஒரு பெரிய வியாபாரமா ஆக்கிட்டாங்கன்னு! நதியில் இருந்து அவுங்களே எடுத்துவந்து  பெரிய கடைகள் முதல் தெருவோரக் கடைகள் வரை வியாபாரம் கொடிகட்டிப் பறக்குது.
நதியில் உருண்டுவரும் ஒரு வகைக் கற்கள்  காலப்போக்கில் மொழுமொழுன்னு  சின்ன இலந்தைப்பழம் சைஸில் இருந்து  மகாபெரிய சைஸ் வரை கிடைக்குதாம். ஏகப்பட்ட பெரியவைகளை ஏற்கெனவே எடுத்துட்டாங்க. இப்பக் கிடைப்பதெல்லாம்  உள்ளங்கை அளவு முதல் கோலிகுண்டு அளவு வரைதான். நதியின் ஆரம்பத்துலேயே வலை கட்டிக் கற்களை எடுத்துடறாங்கன்னு ஒருத்தர் சொன்னார்!
இது கொஞ்சம் ம்ருதுவான கல் வகை.  சிலபல கற்களில் இக்கினியூண்டு ஓட்டை இருக்கு(மாம்! )அதன்வழியாக ஏதோ ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிரி உள்ளே போய் அங்கேயே வளர்ந்து மரவட்டையாட்டம் சுருண்டு கிடந்து  பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மண்டையைப் போட்டுருது போல!

Fossils என்ற பெயர், ஆராய்ச்சி எல்லாம் இல்லாத காலகட்டத்தில்   'எப்பவோ' இதை கண்டகி நதியில் கண்டெடுத்த 'யாரோ'  உருண்டைக் கல்லை உடைச்சுப் பார்த்துருக்கலாம். உள்ளே இருந்த  சக்கர அடையாளத்தைப் பார்த்துட்டு, மஹாவிஷ்ணு கையில் இருக்கும் சக்கரம் என்று  உண்மையாவே நினைச்சுருக்கலாம்.
சின்னதா கோலிகுண்டு சைஸோ, 'சென்னையில் கிடைக்கும் எலுமிச்சம்பழம் சைஸோ' இருந்தால் அது முழுசாத்தான் இருக்கு.  கொஞ்சம் பெரிய கற்களைத்தான் உடைச்சு வச்சுருக்காங்க.  அதையும் ஒரு  நறுவிஸா நீட்டா உடைக்கப்டாதோ........ இன்னொரு கல்லை  வச்சு உடைக்கிறாங்க போல....   கண்டக்கா முண்டக்கான்னு உடைஞ்சுருக்கு :-( ஆனாலும் ரெண்டையும் சேர்த்து வச்சாக் கச்சிதமா பொருந்திக்குதுதான். ஜோடி பிரியாமல் இருக்க ரப்பர் பேண்ட் போட்டு வச்சுருக்காங்க.

அடடா... உடைஞ்ச கல்லா இருக்கேன்னு நாம் நினைச்சுட்டோமுன்னா..........
அங்கெதான் இருக்கு இன்னொரு ட்ரிக்.  சாளக்ராம் மட்டும் உடைஞ்சுருந்தாலும் தோஷமில்லாததே!  தாராளமா பூஜையில் வைக்கலாம்.

இது எப்படி இருக்கு?  முக்கால்வாசிக் கற்களில் சக்கரம்தான். மரவட்டை சுருண்டு இருக்கும் அடையாளம் போல!

அபூர்வமா அங்கே மட்டும் கிடைச்சுக்கிட்டு இருக்கும் இதுக்கு  ரிலிஜியஸ் மதிப்பு உண்டாயிருச்சு. சாமியையே உண்டாக்குன மனுஷனுக்கு இதெல்லாம் ஜூஜுபி இல்லையோ!  அதிலும் எத்தனைவகை உருவங்கள் சாமிக்கு! அதே போல காலப்போக்கில் சாளக்ராமில்  சாமி   சமாச்சார உருவங்கள் தென்பட்டதையும் கண்டுபிடிச்சுட்டான். சங்கு, மத்ஸ்ய, சிவலிங்கம், ஓட்டைக்குள் எழும்பி நிற்கும் குட்டி மேடுகள் உள்ளவை இப்படி ஏகப்பட்டவைகள்.  ( ரெண்டு மேடுள்ளது லக்ஷ்மிநாராயணன்! நானும் ஒன்னு வாங்கினேன் தாம்பரம் அத்தைக்குக் கொடுத்தேன்)

இதுலே இன்னொரு தோழி சொன்னாங்க.....    வீட்டுலே பூஜையில் வச்சுருக்கும் சாளக்ராம் வளர்ந்து வருதாம்........  !!!!!!

புனிதப்பொருள்!  சாமியே இதுலே வாஸம் செய்கிறார், இதுவே சாமி!  இப்படியெல்லாம் நம்ம மூதாதையர்களால் நமக்குச்  சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளதே! நாமும் வீடுகளில் பூஜையில் வச்சு வணங்குகிறோம்! இது ஒரு சொத்து என்ற அளவில்   ஆன்மிக மதிப்பு வாய்ந்ததாக ஆக்கப்பட்டுருக்கு! எனக்குத் தெரிஞ்சு  பெரியவங்க சொன்னதுக்கெல்லாம் மறுபேச்சுப் பேசாம அப்படியே நம்பி அதைக் கடைப்பிடிச்சது நம்ம தலைமுறைவரைதான்னு தோணுது. நமக்கடுத்த தலைமுறை கேள்வி கேட்கத் தொடங்கிருச்சேப்பா !!!!

பொதுவா  இந்தக் கற்களுக்கு  வயசு 140 முதல்   165  மில்லியன்  ஆண்டுகளாம்! 140 to 165 million years old.

நமக்குத்தான் சாமி இல்லாத இடமே இல்லையே....  தூணிலும் துரும்பிலும் இருக்கும் சாமி கல்லில், கல்லுக்குள்ளில் இருக்கமாட்டாரா என்ன?

இதுக்கான பூஜை விதிகள் எல்லாம் உருவாக்கியாச்சு.  தினமும் அபிஷேகம் செய்யணும்.   சாமியைப்  பட்டினி போடக்கூடாதுன்னு  தினமும் எதாவது நிவேதனம் செஞ்சுடணும்.

இந்தப் பயணத்தில் முக்திநாத் கோவிலில் பரிச்சயமான சென்னைவாசி ஒருவரும் நம்முடன் திரும்பி வரும் வழியில் சாளக்ராம் கற்கள் வாங்கினார். அவருடன் கூட வந்த உறவினர் (தேவி உபாசகராம்) கற்களை எடுத்துப் பார்த்து எது ஜீவன் உள்ளதுன்னு   தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். நாங்க இவரை சந்திக்குமுன்னேயே ஒரு பெரிய சாளக்ராம் கல் வாங்கிட்டோம். உள்ளே சக்கரம் இருக்கு.  அதை நம்மிடமிருந்து வாங்கிப் பார்த்தவர் ஒரு  அரை நிமிடம் கண்ணை மூடிக்கிட்டுக் கையில் வச்சுருந்துட்டு நல்ல வைப்ரேஷன் இருக்குன்னார்!!!! 
இவர் தான்  எனக்கு சர்ப்பதோஷம் இருக்குன்னு சொன்னவர். சர்ப்ப யாகம் செய்யணுமாம்!  நான் ஒரு ஜனமே ஜெயன்னு அப்பதான் தெரிஞ்சது.  நம்ம கோபாலுக்கு வேற பாம்பு பயம் இருக்கா....    அதை அப்படியே  எனக்கு சாதகமா செஞ்சுக்க ஒரு சான்ஸ் கிடைச்சுருக்கு இப்ப.  எதாவது சண்டைக்குன்னு வந்தால்....   சட்னு கையால்  பாம்பு ஸைன் காட்டுவேன். கப்சுப் :-)  :-)   :-) 
மறுநாள்  அங்கிருந்து கிளம்பும்போது  (ஜொம்ஸம்மில் ஒரே விடுதியில் பக்கத்துப் பக்கத்து அறையில் தங்கி இருந்தோம்! ) தேவி உபாசகர் நம் அறைக்கு வந்து பேசிக்கிட்டு இருந்தார். ஒரே ஒரு சாளக்ராம்தான் வாங்கினோமுன்னு கோபால் சொன்னப்ப, அவர் கூடுதலா ஒரு ஏழெட்டு வாங்கினதாகவும் வேணுமுன்னால் அதிலிருந்து ரெண்டு தரேன்னும் சொன்னார்.  கோபால் உடனே  'தாங்க. ஆனால் காசு வாங்கிக்கணுமு'ன்னு சொல்லி  அதுக்கான விலையையும் இண்டியன் கரன்ஸியில் தந்துட்டார்.  அப்புறம் நாந்தான் சொன்னேன் கோபாலின் ரெண்டு தம்பிகளுக்கும் ஆளுக்கொன்னு கொடுக்கலாமேன்னு. அப்போ சரின்னவர்,  பிற்பாடு சென்னை வந்தபிறகு, 'வேணாம். நேபாள் போய் வந்த சின்ன தம்பி வாங்கி வந்துருப்பார். நாமே கொண்டு போகலாம்' என்றார்.

 எங்க   அம்முவுக்குக் கற்கள் பிடிக்கும். கல்ப்ரேமி.  எங்கேபோனாலும் கற்கள் சேகரிச்சுக்கொண்டு வந்தவை, சின்ன மலை அளவு வீட்டில் இருக்கு:-)  அவளுடைய கல்யாணத்துலே எடைக்கு எடை  இந்தக் கற்களையே வரதக்ஷணையாக் கொடுத்துடலாம் என்ற ஐடியா கூட இருந்துச்சு  எனக்கு!   ஆனா மாப்பிள்ளை இங்கத்து ஆள் ஆனபடியால், வரதக்ஷணை கொடுத்துப் பழக்கப் படுத்தணுமா என்னன்னு விட்டுட்டேன் :-)

 இப்ப இந்த சாளக்ராம் கற்களை அவளுக்குத் தரலாம்னு நினைச்சேன்.  இங்கே வந்தபின் எடுத்துக் காமிச்சு 'என்னன்னு தெரியுமா' என்றதுக்கு  'ஃபாஸில்' என்றுசொன்னாள்.

"வேணுமா?"

" நோ "

 ஓக்கே. எனக்கே ஆச்சுன்னு  இருந்துட்டேன்:-)

சாமின்னு  ஆனதும் இதுலே வெறும் உருண்டையா இருக்கும் சின்னக் கற்களை தங்கக் கம்பி வளையத்துக்குள் வச்சு  (முத்து நெக்லேஸ் கட்டுவதைப்போல்)மாலையாக்கி கோவில்களில் சாமி சிலைகளுக்கு  (மூலவருக்கு)போடறாங்க. சாளக்ராம மாலை அணிஞ்ச சாமின்னு இன்னும் மதிப்பு கூடுதல், இல்லையோ!  சாளக்ராமத்தால் செஞ்ச சாமி சிலைன்னு கூட சில  கோவில்களில் சொல்றாங்க. (எ.கா. திருவட்டாறு ஆதிகேசவன். 16008 சாளக்ராமம் உள்ளடக்கிய கடுசக்கரைத் திருப்படிமம்!  உடுபி க்ருஷ்ணரும் சாளக்ராமத்தால் ஆன சிலை  என்றுதான் கோவிலில் சொன்னாங்க!  பெரிய கல்லில் செதுக்கி இருக்கலாம்.  த்வாரகையில் ஸ்ரீகிருஷ்ணர் கேட்டுக்கிட்டதுக்காக  விஸ்வகர்மா உண்டாக்கிய சிலைன்னு ஒரு நம்பிக்கை இருக்கு, கேட்டோ! )


முக்திநாத்தில் நட்பான சென்னைவாசி வீட்டுக்குப் போயிருந்தப்ப, 'சாளக்ராம் பூஜையில் வச்சாச்சா'ன்னு கேட்டேன், எதோ  ரிச்சுவல்ஸ் இருக்கும் தெரிஞ்சுக்கலாமேன்னுதான். அதுக்கு அந்த வீட்டம்மா சொன்ன பதில் ஆச்சரியம்!

' அபிஷேகம் பண்ணி, அப்படியே  பூஜையில் வச்சுட்டேன். தினமும் நைவேத்யம் கட்டாயம் பண்ணனுமாம். அதனால் அரிசிப்பெட்டியில் வச்சுட்டால் போதும்' என்று யாரோ சொன்னார்களாம். அதானே....   சாமியே ஆக்கித் தின்னுக்கட்டும்  என்ற பெரிய மனசு!  அவுங்க வீட்டு சாமி அறைக்குக்கூட்டிப்போய் காமிச்சாங்க. சின்ன அட்டைப் பொட்டிக்குள் ஒரு  ஸ்பூன் அரிசி போட்டு அதுக்குள்ளே வச்சுருந்தாங்க!  ஏம்ப்பா....  எப்படியும் தினம் சாதம் சமைக்கத்தானே செய்வாங்க. அந்த மஹாநைவேத்யத்தை சாமி கண்ணுலே காமிச்சால் ஆகாதா?

(நானும்  பல வருஷங்களா   சாமி அறையில் விக்ரகங்களுக்கு  முன்னால் ஒரு குட்டி அன்னக்கூடையில் அரிசி நிரப்பி வச்சுருக்கேன். இது நமக்கு வாழும்நாள் வரை அன்னம் கிடைக்க அருள்புரியணும் என்று அன்னமூர்த்திக்குப்  படையல்! புது மூட்டை அரிசி வாங்கும்போது பழையதை மாற்றி புது அரிசி ரொப்பி வைப்பேன். இப்பப் பார்த்தால் சின்னக் கலசம், ஒரு டம்ப்ளர், அன்னக்கூடை, இன்னொரு கிண்ணம் என்று  சாமி மேடையில் அங்கங்கே நாலு வச்சுருக்கேன்! பெரிய கூட்டுக்குடும்பம் ஆகி இருக்கு சாமி மேடை! )

தண்ணீரில் இருக்கும்போது பளபளன்னு இருக்கும் கற்கள் வெளியே எடுத்து ஈரம் உலர்ந்ததும் வெறுங்கல்லாத்தான் தெரியுது.  மகளிடம் அன்று  பேசும்போது  'குக்கிங் ஆயில் தடவி வச்சால் ஷைனிங்கா இருக்கும்' என்று சொன்னாள். 'ஓ' ன்னு கேட்டுக்கிட்டேன்.

கோவில்களில் பால் அபிஷேகம் தினம் செய்வதால்  ஒரு பளபளப்பு இருக்கு.  எண்ணெய் தடவமாட்டாங்கன்னு  நினைக்கிறேன்.

நம்ம வீட்டில் சாளக்ராமக்கற்களை பூஜைக்குத் தயார் செஞ்சப்ப,   இதுக்குன்னே முதல்நாள்  கடையில் வாங்கிய புத்தம்புது பாத்திரத்தை எடுத்து   அதில் வெந்நீர் நிரப்பி சாளக்ராமங்களைக் குளிப்பாட்டி, அப்புறம் தண்ணீரை எடுத்துட்டுப் பால்  ஊற்றி  அதில் கழுவி எடுத்தேன். பெரிய க்ளியோபாட்ராப்பா இந்தக் கற்கள்!  அப்புறம் இன்னொரு நீர் அபிஷேகம்.  அப்புறம் புத்தம் புது கைத்துவாலையால் தொடைச்சு எடுத்து பசும்நெய் துளி எடுத்து எல்லோருக்கும் நெய்ப்பூச்சு போட்டதும் பளபளா!  நெய் ஒட்டாமல் இருக்க  டிஷ்யூ பேப்பர் அடியில். நாஞ்சொல்லலை...  நம்ம வீட்டுக்குன்னு  யார் வந்தாலும் நாமத்தைச் சாத்திருவேன்னு...  ஹிஹி.... அதே போல நால்வருக்கும் நாமம் சாத்தியாச்!
எங்கே வைக்கலாமுன்னு யோசிச்சு,  கேரள டிஸைன் ஆபரணப்பெட்டி வீட்டில் இருக்கேன்னு  அதில் வச்சேன். இதுநாள் வரை சும்மாக் காலியா ஷோ கேஸில் இருந்த பெட்டி, சாளக்ராமத்துக்குக் காத்துருந்ததோ என்னவோ! (இந்தமாதிரிப் பெட்டியில்தான்  (பெரிய  சைஸில் இருக்கும்)  ஐயப்பன் நகைகளை சபரி மலைக்குக் கொண்டு போவாங்க. திருவாபரணப் பெட்டியாக்கும், கேட்டோ! )

அன்றைக்குப் பூஜையில் வச்சு  சுடச்சுட சாதம், பருப்பு, நெய் , சாளக்ராமத்துக்குக் கண்ணிலே காட்டினேன்! அப்பவே சொல்லியாச். நான் என்ன சமைக்கிறேனோ அதேதான் உனக்கும்னு :-) சமைக்காத நாட்களில் இருக்கவே இருக்கு பழங்கள்.  தினமும் ஆப்பிள் கொடுத்தால் டாக்டரே வேணாம் :-)

ஆங்.... சொல்ல மறந்துட்டேனே.... எங்க ஊருலே நம்ம வீட்டுலே இருந்து ஒரு 50 கிமீ தூரத்தில் இருக்கும் லிட்டில் ரிவர் என்ற இடத்துக்குப் போனோம். அது ஆச்சு  25 வருசம். அங்கே கூழாங்கற்கள் நிறைஞ்ச  கல் பீச் இருக்கு.  நதி ஒரு இடத்தில் அப்படியே முடிஞ்சுரும்.  அங்கிருந்து ஒரு 400 மீட்டர் தூரத்தில் கடல். பஸிஃபிக் ஓஷன்தான்.  இங்கே இருக்கும் ஈல் மீன் வகை    அந்த ஃப்ரெஷ் வாட்டர் நதியில் முட்டையிட்டுட்டு கடலுக்குத் திரும்பிருமாம்.  அந்த முட்டைகள் எல்லாம்   குஞ்சு பொரிச்சதும், அந்தக்  குட்டிகள் ஓரளவு வளர்ந்தபின்  அதுகளும் கடலுக்குப் போயிருமாம்.  பிறகு அவை வளர்ந்து  பெரிதாகி, முட்டையிடும் பருவம் வந்ததும் கடலில் இருந்து நதிக்கு வந்து  இங்கே முட்டையிட்டதும்,  தாய் கடலுக்குத் திரும்பி விடும். அந்த 400 மீட்டர் தூரத்தை எப்படிக்கடந்து போகுதோன்னு எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான். காலா இருக்கு நடக்க? அதுவும் கல்லு மேலே நடந்து போகணுமே....   இயற்கையில் என்னென்ன அதிசயங்கள் இருக்கு பாருங்க !!!!

இந்த குறிப்பிட்ட இடம் மவொரிகளுக்கு (இங்கத்து பூர்வகுடிகள்) புனிதமான இடம் என்பதால்  அந்தப் பகுதி முழுசும் மவொரிகளில் கட்டுப்பாட்டில் இருக்கு.  எங்க அம்மு 'கல் கல்' என்றதால்தான் அங்கே போனோம். அங்கே ஒரு  சிலிண்டர் வடிவ மழமழன்னு ஒரு கல் என் கண்ணில்   ஆப்ட்டது. எடுத்துப் பார்த்தால் மூணு கோடுகள் நெடுக்குவாக்கில். ஆஹா.... மஹாவிஷ்ணுவின் திருமண். இதுதான் நமக்கு   நியூஸி சாளக்ராம் என்று கொண்டுவந்து பூஜையில் வச்சுருக்கேன் இந்த 25 வருசங்களாக. அது ஒரு விதமான க்வார்ட்ஸ் கல்.   சாமி  ஜோதி விளக்கில் பார்த்தால் ஒளி ஊடுருவி வருது!



இப்பதான் நர்மதை  நதியில் சாளக்ராம் கிடைக்குதுன்னு  விக்கறாங்களே!  இவை சிவன் அம்சமாம்!  மதுராவில் பார்த்தேன். விலை வெறும் பத்து ரூ தான் :-)

நம்ம வீட்டில் எப்படி  ஆபரணப்பெட்டியில் நாலு இருக்குன்னு கேள்வி வருமுன்....  இன்னொன்னையும் சொல்லிடறேன்.....

(அதானே.... மூணு இல்லே இருக்கணும். ஒன்னு நாமே வாங்குனது. ரெண்டண்ணம் சக்தி உபாசகரிடம் இருந்து வாங்குனது. 1 + 2 = 3 தானே.......)

இங்கிருக்கும் ஒரு தோழி, நம்ம  முக்திநாத்  பயணம் தெரிஞ்சதும் ' கண்டகி நதியில் எனக்கு ரெண்டு சாளக்ராம் பொறுக்கிண்டு வா' ன்னு சொன்னாங்க. கல் வெயிட்டா இருக்குமேன்னு  சொன்னதுக்கு கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் கிட்டக்க வச்சு  இத்துனூண்டு கோலி அளவுன்னு  காமிச்சாங்க.

கண்டகி நதியில் பொறுக்கும் அளவுக்கு ஆக்ஸெஸ் கிடையாது. நாம் தங்கிய ஹொட்டேலில் இருந்து   மூணு நாலு  கிமீ தூரத்தில் கண்டகி. முதலில் குறுக்குப் பாதைன்னு  ஒரு ஜீப்பில் அதைக் கடந்து  நேரா முக்திநாத்  கூட்டிப்போறேன்னு ட்ரைவர் சொல்றாரு. அதுலே போகலாமுன்னு  கைடு ஒரு ஜீப் ஏற்பாடு செஞ்சார்.  ஜீப் போய் சட்னு நதியில் இறங்குச்சு.  வீல் முழுசும் மூழ்கும் அளவு தண்ணீர் ஓடுது.  அதுலேயே ஓட்டிப்போய்  தண்ணீர் வரத்து ஏகத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சதும் ( வண்டிக்குள்ளே தண்ணீர் வந்துருச்சு. இடுப்பளவு இருக்கும், இறங்கி நின்னால்... அப்புறம் எங்கே பொறுக்குவது? ) கஷ்டப்பட்டு வண்டியைத் திருப்பி  ஊருக்கு வெளியே ஒரு மரப்பாலம் வரை கொண்டு வந்து விட்டுட்டார். நாங்க   மூணடி அகலப் பாலத்தில் நடந்து அந்தாண்டை போய் ஒரு சின்ன கிராமத்தைக் கடந்து  ஒரு கால்மணி நடந்து அரசு ஜீப் இருக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

இதெல்லாம் விஸ்தாரமா இந்தப் பயணப்பதிவுலேயே எழுதி இருக்கேன்.  நேபாள் பயணப்பதிவுன்னு  அப்போ தலைப்புக் கொடுத்து, அதுலே ஒரு   முப்பத்தியெட்டு பகுதிகள்  போட்டாச்.  அப்புறம் இந்தியாவில் பயணம் தொடர்ந்தோமே... அதுக்கு இந்தியப் பயணத்தொடர்னு தனித் தலைப்பு. அதுலே இது நூத்தியெட்டாவது பதிவு.  ஆக மொத்தம் நூத்தி நாப்பத்தாறு பகுதிகளா ஆகிப்போச்சே....

போகட்டும்.... என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்..... தோழிக்கு கோலிகுண்டு சைஸ்..... கேட்டாங்களே.....  அதனால் கோலி அளவு ஒன்னு கடையில் வாங்கினேன். அப்போதான் அந்த லக்ஷ்மிநாராயணனும், சின்ன எலுமிச்சை அளவு உருண்டையா ஒன்னும்  வாங்கினேன். அதுலேதான் லக்ஷ்மிநாராயணனை,  தாம்பரம்  அத்தைக்கும்  சின்ன எலுமிச்சை  நியூஸிக்குமா ஆனது. இப்பக் கணக்கு சரியா வருதோ? 3 + 1  :-)

பெட்டிக்குள் வச்சது முதல், தினசரி பூஜை சமயம் திறந்து பார்த்து, அவுங்களுக்கும் துவாதசநாமம் சொல்லுவேன்.  அடுக்கி வச்சதுலே பாருங்க,  குட்டிச்சாமி, அவருக்குத் தோதான ஒரு இடத்தில் உக்கார்ந்துட்டார்.  நாமம் சொல்லும்போது கரெக்ட்டா, வாமனா, கோவிந்தா, தாமோதரா  மூணும் குட்டிக்குன்னே அமைஞ்சு போச்சு :-)  இதுலே வாமனா ரொம்பப் பொருத்தம்!
ஆரம்பத்துலே வெறும் நாமம்தான். அப்புறம்தான்  எதோ கைவேலைக்காக வாங்குன கண்கள் இருக்கேன்னு ஞாபகம் வந்து தேடி எடுத்தேன். எல்லாம் வட்டக் கண்ணு....   நீளக்கண் கிடைக்கும் வரை இருக்கட்டுமுன்னு  கண் வச்சு, சந்தனத்தில் முகமும் வரைஞ்சு வச்சேன்.  முட்டைக் கண்ணால் பார்ப்பது கூட நல்லாத்தான் இருக்கு, பெருமாளே! என்ன ஒன்னு சந்தனம்தான் உதிர்ந்து போயிருது...  வேறெதாவது யோசிக்கணும்.

இப்படியாக, பெருமாள் சாளக்ராம ரூபத்தில் நம்ம வீட்டில் இடம் பிடிச்சுட்டார். என்னோடு ஒரு ஒப்பந்தமும் ஆச்சு.

"துள்ஸி, நீ என்ன சாப்புடறயோ அதுவே எனக்கும் போதும். மெனெக்கெடாதே"

"ஆமாமா.... நீர்  வேற எதாவது வேணுமுன்னு  கேக்க மாட்டீர்தானே? "
சாமியைப் பொறுத்தவரை  ஒரே ஒரு விஷயம்தான்....   அது ஒரு நம்பிக்கை! கல்லோ, மண்ணோ, மரமோ எதுவா இருந்தாலும்   நம்புனாத்தான் சாமி!

அப்படி நான் நம்பும் சாமி, உங்க எல்லோருக்கும் அன்பையும் ஆசிகளையும் அள்ளித்தரணுமுன்னு  வேண்டிக்கறேன்!
நம்மூர்  ஹரே க்ருஸ்னாவில்  சாளக்ராமம் வச்சுருக்காங்க.  அலங்காரம் அழகா இருக்குல்லே?  ஒண்டியா இருப்பதன் சௌகரியம் அது. நம்மூட்டுலே நாலு என்பதால்.....    பார்க்கலாம்......  அடுத்த பயணத்தில் எதாவது வாகா அமையுமான்னு :-)

முற்றும்........... :-)


பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!


9 comments:

said...

ஆஹா இத்தனை சாளக்ராம் செய்தி எல்லாம் புதுமையாக இருக்கு. இனித்தான் நேபாளப்பதிவு படிக்க வேண்டும்.

said...

மேகத்தில் உருவங்கள் தென்படுவது போல கல்லிலே கடவுள் வண்ணம் கண்டான் போலும் மனிதன்! இந்தப் பதிவு ஏற்கெனவே படித்த மாதிரி இருக்கிறதே...

said...

நன்றி டீச்சர்.
நிரம்ப நன்றி.

said...

வாங்க தனிமரம்..

போனவருஷம் ஜனவரி 13 இல் ஆரம்பிச்ச பயணப்பதிவு இது.

சுட்டி இதோ. இதிலிருந்து நூல்பிடிச்சுப் போகலாம்.

http://thulasidhalam.blogspot.co.nz/2017/01/1.html

said...

வாங்க ஸ்ரீராம்

முக்திநாத் யாத்திரை எழுதும்போது சாளக்ராம் படங்களும் அப்போது நடந்த சம்பவங்களையும் எழுதி இருந்தேனே.....

இப்போது சாளக்ராம் பற்றி எழுதும்போது அன்றைய சம்பவங்களும், சில படங்களும் இணைத்ததால்..... உங்களுக்கு ஏற்கெனவே படித்தமாதிரி இருக்குன்னு நினைக்கறேன் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர்ந்த வருகைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்!

said...

உங்கள் முக்தினாத் பயணம் நினைவுக்கு வந்துவிட்டது. RECAPமாதிரி ஆகிவிட்டது.
பயணத்தை விவரித்து எழுதியிருந்தீர்கள். பாராட்டுகள்.

said...

சாளக்ராம் கற்களைப் பற்றி புதுமையான செய்திகளை அறிந்தேன்.

said...

அருமையான பயணம்...


முடிந்த அளவு எல்லா பதிவுகளையும் வாசித்தேன்....மிக மிக மகிழ்ச்சி...


போன பிப்ரவரி யில் ஒரு நாள் ரொம்ப வயத்து வலி...டாக்டர் ட போய் வந்து மருந்து எடுத்தும் அப்போ ரொம்ப வலி ...யார்ட்டையும் சொல்ல முடியாத சூழல்..


அப்போ பெருமாளே ஏதாவது செய்யுங்க ன்னு சொல்லி...என்ன பண்ண ன்னு தெரியாம...அப்ப கையில் இருந்த phone னை நோண்டினேன்...

அப்போ தான் நீங்க நேபாள்காத்மாண்டு நீல்கந்தா கோவில் படமும் விளக்கமும் போட்டிங்க...வேற சிந்தனை ஏதும் இல்லாம அவரை மட்டும் மனதில் நினைத்தேன் ....சிறிது நேரத்திலே வலியும் வேதனையும் குறைந்தது...
அது மருந்தின் பயனால் கூட இருக்கலாம்...

ஆனால் அந்த நிமிடத்தில் எனக்கு தாங்கும் சக்தி கொடுத்து அவர் தான்...

பின் அம்மா வீட்டிக்கு போன போது அங்கும் காத்மாண்டு நீல்கந்தா பெருமான் இருந்தார்...இதுவரை நான் சரியாக பார்க்க வில்லைபோலும்..

காத்மாண்டு நீல்கந்தாவையும்...மேலும் பல இடங்களையும் தங்கள் மூலமாக நானும் கண்டு தரிசித்தேன்...


பல கதைக்களையும்....புராண செய்திகளும் மிக மிக அருமை...


அனைத்திற்கும் மிகவும் நன்றி அம்மா....

அடுத்த பயண பதிவிர்காக காத்திருக்கிறேன்...


அன்புடன்
அனுபிரேம்...