Monday, April 18, 2016

தூக்கிப்போகும் துணி 'டர்' ஆனா டெர்ரரா இருக்காது? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 22)

மலைப்பாதையில் கொஞ்சம் கொஞ்சமா மேலேறிப்போகுது வண்டி. அங்கங்கே நம்மாட்கள் மரக்கிளைகளிலும், பாதையிலுமா  விளையாடிக்கிட்டு இருக்காங்க.

யோகானந்தாவில் இருந்து கிளம்பி மலை ஏறும் பாதைக்கு  வரும்போதே  ஒரு  குடி இருப்பைக் கடந்தபோது, ஒரு நிமிசம் வண்டியை நிறுத்தச் சொன்னார் நம்ம கைடு. வீடு அங்கேதான். செல்ஃபோனை விட்டுட்டு வந்துட்டேன், எடுத்துக்கணுமுன்னார்.  எதோ வேலையா  ஆஃபீஸாண்டை வந்தவரைத்தான் நாம் மடக்கிட்டோமே:-)
 இறங்கி ஓடுனவர் ஒரு ரெண்டு மூணு நிமிசத்தில் ஓடி வந்துட்டார். குடும்பத்தைப் பற்றி விசாரிச்சேன்.  ரெண்டாவது குழந்தை பிறந்து இன்றைக்கு பனிரெண்டாம் நாளாம். மூத்ததுக்கு  ரெண்டு வயசு. பார்த்தால் சின்னப் பையன் மாதிரி இருக்கார், இவருக்கு ரெண்டு குழந்தைகளான்னு மனதில்  'அஹோ'  வந்தது உண்மை.  அதென்ன அஹோ?  ஹாஹா....  அஹோன்னால் ஆச்சரியம் ! அப்ப பிலம்? குகை!!!   ஆச்சரியப்படும்படியான குகை, அஹோபிலம்!!!   இப்ப  மேல் அஹோபிலம்  உக்ர நரசிம்ஹரைத் தேடித்தான் போய்க்கிட்டு இருக்கோம்.  இந்த ஒன்பது கோவில்களில்  முக்கியமானது  இது!   கார்போகும் பாதை  இந்தக் கோவில் வரைதான்.

 போற வழியில்  இன்னொரு நரசிம்ஹர் இருக்கார்.  அங்கே கூட்டம் கொஞ்சமிருந்துச்சு. எப்படியும் இதே வழியாத்தான் திரும்பணும் என்பதால் வர்றப்பப் போய்க்கலாம் என்றார் கைடு.  இன்னும்கொஞ்சம் ஏத்தம் போய்த் திரும்பினதும்  சமவெளியா  ஒரு பரந்த இடம்.  கடைகளும் கார்பார்க்குமா இருக்கு.

மேலே தெரியும் கோவிலுக்கு ஏறிப்போகணும்.  ஏகப்பட்ட வண்டிகள். கார்பார்க்கில்  இடமே இல்லை. மேலும் மேலும் சகலவிதமான  கார்களும், பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும், வேன்களுமா பரபரன்னு  வந்துக்கிட்டே இருக்கு!   எக்கச்சக்கத் தடுப்புகள் வச்சு  ஒழுங்குபடுத்தறோமுன்னு  குறுக்கும் எடுக்குமா  இது வேற!  வண்டி நிறுத்த நமக்கு இடமே இல்லை.

'வண்டியை நிறுத்துங்க. நாங்க இறங்கிக்கறோமு'ன்னார் கைடு. அப்ப நம்ம சீனிவாசன்?  எங்கியாவது நடுவிலே வழியில் வண்டியை விட்டுட்டுப் போக முடியுமா? எனக்குத்தான் இவரை விட்டுட்டுப் போறோமேன்னு இருந்துச்சு. 'கொஞ்ச நேரம்  வெயிட் பண்ணி, இடம் கிடைச்சால் விட்டுட்டு வர்றேன் மேடம்'னு சீனிவாசன்   சொன்னதும் நாங்க கைடு கூடப் போறோம்.
பெரிய கட்டடத்தின் வெளி வெராந்தா  போல ஒன்னு  கோவில் டிஸைன் தூண்களோடு இருக்கு.  அங்கே  தூணோரமா  நடக்க இயலாத மக்களைத் தூக்கிப்போகும் டோலிகளைச் சாய்ச்சு வச்சுருக்காங்க.  உலக்கை மாதிரி கொஞ்சம் தடிமனா ஜஸ்ட் ஒரே  உருண்டை மரக்கட்டை. ஆனா உலக்கையை விட நீளம் அதிகம். அதுலே  பெட்ஷீட் மாதிரி ஒரு துணியைக் கயிறால் கட்டி வச்சுருக்காங்க.  இதுக்குன்னு டோலி சுமந்து மலை ஏறும் ஆட்கள் இருக்காங்க.

பார்த்தவுடன் எனக்கு பகீர்னு இருந்துச்சு. இந்தத்துணி முதலாவது எப்படி கனம் தாங்கும்?  பிடிப்பு இல்லாத உலக்கையை எப்படித் தோள்மேலே தூக்கிப்போவாங்க? கோவில்களில் ஸ்ரீபாதம் தாங்கிகள் போலத்தான்னு சொன்னாலும்  அங்கே ரெண்டு வரிசையில் எத்தனை பேர் இருக்காங்க. இங்கே? ரெண்டு பேர் மட்டும்தானே?  போற வழியில் கனம் தாங்காம துணி ' டர்' ஆச்சுன்னா டெர்ரரா இருக்காது?

இந்தக் கட்டடம் ஒரு சத்திரம். வீர க்ஷத்ரிய சத்ரமாம்!!  யாத்ரீகர்கள்  தங்கி இருக்காங்க.   இதுக்கு எதுத்தாப்ல ஒரு குளம். நல்ல ஆழமா கீழே இறங்குது படிகள். கோவில் குளமாச்சே... வழக்கம்போல் அழுக்கும் குப்பையும் :-(  இதன்  கைப்பிடிச்சுவரை ஒட்டியே பாதை, படிகளுக்குப் போகுது. ஒரு அம்பது படிகள் ஏறிப்போகணும்.

நம்மைச் சுத்தி  எல்லாப் பக்கங்களிலும் மலைதான். மலையும் காடும்!  இங்கே உள்ள நவ நரசிம்ஹர்களும் சுயம்புன்னு சொல்றாங்க.  ஏதோ ஒரு காலத்துலே  இந்தக் காட்டுலே அங்கங்கே  தோன்றி இருக்கார் இவர்.  எப்படி இங்கே  இருக்காருன்னு  அந்தக் காலத்துலே  கண்டுபிடிச்சுருப்பாங்க?  கட்டடமா பாழா?   நினைச்சால் அஹோவா இருக்கே!

ஆனாலும்  பக்தர்களும்  மற்ற ஆன்மிகப் பெரியவர்களும்  கஷ்டப்பட்டுத்தான் போய்  தரிசனம் செஞ்சுக்கிட்டு இருந்துருக்காங்க. இவுங்கெல்லாம் நடந்து போன ஒத்தையடிப் பாதையாத்தான் இருந்துருக்கணும்  அந்தக் கால சாலைகள்! அஹோபிலமடத்தின்  45 வது  ஜீயர் ( Srivan Satakopa Sri Narayana Yathindra Mahadesikan)அவர்கள் முயற்சியால்தான்  இப்ப நாம்  நிம்மதியாக் காரில் போய் தரிசிக்கும் அளவுக்கு  சாலைகள், வண்டிப்பாதைகள்  போடப்பட்டுருக்கு. இவர்  22 வருஷம்  ( 1991 - 2013 ) மடத்தின் பொறுப்பில்  இருந்துருக்கார்.

நம்ம திருமங்கை ஆழ்வார் மட்டுமே  இங்கே வந்து  பத்துப் பாசுரங்களால்  சிங்கரைப் போற்றிப்பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.   சிங்கவேழ் குன்றம் என்று அழகான தமிழில் இந்த இடத்தைக் குறிப்பிட்டு இருக்கார் என்பதைக் குறிப்பிடத்தான் வேணும்!

அவர் வந்த காலக்கட்டத்தில்  இந்தக் காடும்  பாதையும் எப்படி இருந்துருக்கும்! இவ்ளோ வசதிகளும் பாதைகளும் போட்டபிறகும் கூட  பகல் ஒரு மணிக்குப் பிறகு   ரொம்ப உயரத்தில் இருக்கும் கோவில்களுக்குப் போக அனுமதி  இல்லை.  காட்டுமிருகங்கள் நடமாடும்  பகுதி! நாலுமணிக்குள்ளே திரும்பி வந்துறணுமாம்!

 விருப்பமும் நேரமும் இருப்பவர்களுக்காக  அந்தப் பத்துப் பாசுரங்கள் இங்கே :-)

அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன்
பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்-
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேழ்குன்றமே             (1)
 
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம்-
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப
சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேழ்குன்றமே             (2)
 
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் -
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்
தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் சிங்கவேழ்குன்றமே             (3)
 
எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன் ஏதலன் இன் உயிரை
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்-
கவ்வும் நாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே             (4)
 
மென்ற பேழ்வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்-
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய
சென்று காண்டற்கு-அரிய கோயில் சிங்கவேழ்குன்றமே             (5)
 
எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எவ் உரு என்று
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம்-
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுழை
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேழ்குன்றமே             (6)
 
முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூவுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்-
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே             (7)
 
நாத் தழும்ப நாஅன்முகனும் ஈசனும் ஆய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்-
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய்ங்கழை போய்த்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேழ்குன்றமே             (8)
 
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன் இடம்-
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய்
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேழ்குன்றமே             (9)
 
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிஙக்வேழ்குன்று உடைய
எங்கள் ஈசன் எம் பிரானை இருந் தமிழ் நூல்-புலவன்
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார்க் கலியன்
செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீது இலரே             (10)

ஆமாம்....  வேளா இல்லை வேழா!  வெவ்வேற இடத்தில் வெவ்வேறயான்னா இருக்கு!


படிகளேறி மேலே போனோம். வலக்கைப்பக்கம் கொஞ்சதூரத்தில்  உக்ர நரசிம்ஹர் குகையில் இருக்கார்.  ராஜகோபுரத்துடன் இருக்கு இந்தக் கோவில். இப்பெல்லாம் வெயிலுக்கும் மழைக்கும் பயந்து எல்லாக் கோவில்களிலும் முன்னால் ஒரு  தகரக் கொட்டகை போட்டு வச்சுடறாங்க. கோவில் கோபுரத்தின் முழு அழகையும் ரசிக்க முடியலையேன்னு இருக்கு. ஆனாலும் மக்கள் நலனும் முக்கியமாச்சே! ராஜகோபுர வாசலுக்கு நேரெதிரா மலையின் கோடியில் ஒரு அழகான பதினாறுகால்  மண்டபம். பக்கத்தில் வட்டமா ஒரு வாட்டர் டேங்க்.  கண்ணைக் கடிக்காமல்  அதுவும் ஒரு சந்நிதிபோலத் தெரியுது!
இந்த இடத்தில்  யாத்ரீகர்கள் கூட்டம் அதிகம்.  சமையல், தூக்கம்,  துவைச்ச ஈரத்துணிகளைக் காயப்போடறதுன்னு அவரவர் வேலைகளில் மூழ்கி இருக்காங்க. பிள்ளை குட்டிகள் அதுங்க பாட்டுக்கு விளையாடிக்கிட்டு இருக்குதுங்க.  இங்கேயும் நெல்லிக்காய் வித்துக்கிட்டு இருக்காங்க.  தண்ணீ தவிக்காம இருக்க வாங்கி வாயில்  போட்டு வச்சுக்கிட்டு மலை ஏறலாம்!
கோவிலுக்குப் போகும் பாதை அகலமா சிமிண்ட் போட்டு வச்சுருக்கு.  இதுவரை நம்ம கண்ணில் படாத  பிச்சைக்காரர்கள்  இங்கே வரிசையா இடம் பிடிச்சு உக்கார்ந்துருக்காங்க.

பாவநாசினி ஆறு  கீழே ஓடிக்கிட்டு இருக்கு.  மலைகளில் அங்கங்கே  பூநூல் போல  நீர்த்தாரை!   மழைகாலத்தில்  கொட்டும்போல!
கோவில் வாசலுக்கு முன்னால் கொட்டகையில் கம்பிக் கூண்டுகளுக்குள் டிக்கெட் கவுண்ட்டர் இருக்கு. எல்லாம் ஒரு பயம்தான். நம்மாட்கள் நடமாட்டம் அதிகமா இருக்கே!  ஒருத்தர் ரொம்ப போரடிச்சுக்கிட்டு  சாமந்திப்பூவைப் பிச்சுத் தின்னுக்கிட்டு இருக்கார்.
 பத்து ரூபாய், அம்பது ரூபாய்ன்னு விதவிதமான கட்டணங்களில் தரிசனம்.
ஒரு தேர் நிக்குது இங்கே!  மேலேயே சுத்தி வருவாங்க போல!


தொடரும்..........:-)



17 comments:

said...

நரசிம்ஹன் துணை நிற்கட்டும்.

said...

"அஹோ!!.. பாரும் பிள்ளாய்" என்று எங்களைக் கைப்பிடித்து ஒவ்வொரு தலமாகக் கூட்டிச்சென்று தரிசனம் செய்விக்கும் துள்சிக்கா வாழ்க நலமுடன்.

said...

துளசி டீச்சர்... அது சிங்கவேள் குன்றம்தான். வேழ் கிடையாது. சிங்கம் + வேழ் (யானை) - அர்த்தம் மாறிடுமே.

பயணத்தைத் தொடர்கிறேன். எவ்வளவு நேரம் ஆகியது, இடையில் சாப்பிடுவதற்கோ, தண்ணீருக்கோ என்ன செய்தீர்கள், எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் அறிய ஆவல்.

said...

வெரி நைஸ் துளசிங்கோவ்.. அழகா சொல்றீங்க.. நன்றி..இங்கெல்லாம் போகும் போது வெகு உபயோகமாக இருக்கும்..

said...

அகோபில மடம்னு பாத்திருக்கேன். அகோபிலம்னு ஒரு எடம் இருக்குறதும் அதுக்குத் தமிழ்ல சிங்கவேழ்குன்றம்னும் இன்னைக்குதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

ஒரு வேளை அந்தத் தொட்டில் பல்லக்கு கொழந்தைகளுக்கா இருக்குமோ? ரொம்பச் சிறுசாவும் இருக்கே.

நெல்லிக்கா வித்தியாசமா இருக்கே. இது என்ன வகைன்னு தெரியலையே.

நம்மூர் மக்கள் கோயில் கொளம்னு போய் மனசைச் சுத்தப்படுத்திக்கிறதா நெனச்சுட்டு சுத்துப்புறத்தையெல்லாம் அழுக்காக்கி வெக்கிறாங்க.

அதே மாதிரி அந்தக் காலத்துல இருந்தே மனுசன் பாவம் செஞ்சிக்கிட்டு இருக்கான். அத எங்க தொலைக்கன்னு தெரியாம பாவநாசம்னு பல எடங்களுக்குப் பேர் வெச்சுக் குளிக்கிறான். ஆறு நாசமாகுறது தெரியுது. பாவம் நாசமாகுதான்னு தெரிய மாட்டேங்குதே!!!

said...

டீச்சர், பாசுரம் அதன் பொருள், அந்தக் கோவிலின் குறிப்பு - படங்களுடன் என்று ஒரு புத்தகம் போடுங்களேன், please

said...

சுவாரஸ்யமான இடங்கள். மலையைப் பார்த்தால் நிழலே கிடைக்காது போலத் தோற்றம். பெரிய பக்தி இல்லா விட்டாலும், இது மாதிரி இடங்களைக் காணும் ஆவல் உண்டு... எங்கே...!??

said...

வாங்க வல்லி.

நன்றீஸ்.

said...

வாங்க சாந்தி.

அஹோ! அஹோ!

பயணச்செலவுக்கான பில் அனுப்பப்போறேன்... அப்போ இன்னும் ஒரு அஹோ!!!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

//அது சிங்கவேள் குன்றம்தான். வேழ் கிடையாது. சிங்கம் + வேழ் (யானை) - அர்த்தம் மாறிடுமே....//

எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. எதுக்கும் டபுள் செக் பண்ணிக்கலாமேன்னு TVU போனால் அங்கே வேழ் ! (நம்ம தளச்சின்னம்!) அதுதான் அப்படியே போட்டுருக்கேன்.


http://www.tamilvu.org/library/l4210/html/l4210in1.htm

said...

வாங்க விஸ்வநாத்.

நன்று சொன்னீர்!

வாங்க ரெடின்னு இன்னும் 999 பேர் சொன்னதும் புத்தகம் போட்டுடலாம். பதிப்பாளருக்கு நஷ்டம் வரக்கூடாதில்லையோ!!!!

said...

வாங்க ஸ்ரீராம்.

பயணமே ஒரு கல்விதான்! அதுக்காகவாவது பயணம் போகத்தான் வேணும். அதன்கூடவே கொஞ்சம் புண்ணியம் சேர்த்துக்கத்தான் தலயாத்திரைகள்!

said...

வாங்க கண்ணன் ராஜகோபாலன்.


யாருக்காவது பயன்பட்டால் நல்லதுதானே!

said...

வாங்க ஜிரா.

நெல்லிக்கா கொஞ்சம் சின்ன சைஸா இருக்கு, அவ்ளோதான். உள்ளுக்குள்ளே சாறுநிரம்பி பளபளன்னு பெருசா இருக்குமே அது இது இல்லை.

கைக்குழந்தைகளைத் தூக்கிக்கிட்டு யாரு அஹோபிலம் வர்றாங்க? போக டைம் வந்துக்கிட்டு இருக்குன்னு தெரிஞ்ச என்னை மாதிரி ஆட்கள்தான் நிறைய :-)

இந்த 108 ஐ நாம் ரொம்ப லேட்டா கையில் எடுத்திருக்கோம். ஆனால் இப்ப மத்திய வயசு மக்கள் தலயாத்திரை அதிகம் போறாங்கல்லெ!

பாவநாசினின்னு பெயர் வச்சால் இப்ப இருக்கும் பாவம் நாசம் ஆகிரும். இனி புதுப்பாவங்கள் செஞ்சுக்கலாமுன்னு சனம் நினைக்குதே :-(

சுற்றுச்சூழலை அழுக்கு செஞ்சால் அது பெரியபாவம் என்று உணர மறுக்கும் உள்ளங்கள்....

said...

சலிக்காம சுத்தறீங்க. பொறாமையா இருக்கு.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்குத்தான். வயசாகிக்கிட்டே இருக்கே. அதுக்குள்ளே முடிஞ்சவரை பயணம் செய்யத்தான் ஆசை. மனுஷன் என்ன மரமா? ஒரே இடத்துலே இருக்க?

said...

மீண்டும் இந்த இடத்தை உங்கள் வழி காண நேர்ந்தது. நிறைய மாற்றங்கள். இன்னும் மரங்கள் வெட்டப்பட்டது போல் உள்ளது. பயணமே மகிழ்வுதான்...தொடர்கின்றோம்