Thursday, December 01, 2011

எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்!!!!

மழலையர் பள்ளிக்கூடத்தில் காய்கறிகளின் அணிவகுப்பாம். பையன் எதாவது காயாகப்போகணும். அம்மா...சுத்தும்முத்தும் பார்க்கறாங்க. ஆற அமர உக்கார்ந்து அட்டை வெட்டி வர்ணம்பூசி அழகுபடுத்த நேரம் இல்லை. ஆஹா.... ஐடியா வந்துருச்சு. ஒரு பெரிய ப்ரவுன் பேப்பரை எடுத்து பையன் உசரத்துக்கு(பையன் கொஞ்சம் சின்னவன்)வச்சுப்பார்த்தால் சரியா இருக்கு. பையனைச்சுத்தி ஒரு உருளை மாதிரி சுத்தி ஒட்டுனாங்க. முகம் வரும் இடத்தில் ஒரு வட்டம் வெட்டுனாங்க. இன்னொரு ப்ரவுன் காகிதத்தால் கோமாளித் தொப்பி ஒன்னு கூம்பு வடிவத்தில் செஞ்சு தலைக்கு வச்சாங்க. சூப்பர்! தனக்கே ஒரு 'பேஷ்பேஷ்'

"அம்மா...நான் யாரும்மா?"

" செல்லம். நீ 'அஸ்பெரகஸ்' டா'

தலையை ஆட்டினான் பையன்.

"பார்த்துடா தொப்பி விழுந்துடப்போகுது."

இது காயாம்மா? அப்ப இதைப்பத்தி நாலுவரி பேசணுமாம்.

நாலுவரி என்னடா? நாப்பது வரிகள் கூடச் சொல்லலாம்.

அம்மாவுக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு வந்து சொல்லித் தர்றேன் செல்லம்.

ம்ம்ம்ம்ம் எல்லாம் ஒரு சாக்கு. விவரத்தைத் தேடிப்படிச்சுட்டுலே புள்ளைக்குச் சொல்லித்தரணும். (அசல்)ஹோம் ஒர்க்:-))))

வசந்தகாலத்துலே முளைக்கும் பயிர். ஒரு காலத்துலே காட்டுலே காடா வளர்ந்து கிடந்ததை இப்ப நாட்டுலே பயிர் பண்ணி சூப்பர் மார்கெட்டுலே கொண்டுவந்து ரொப்பிடறாங்க. நாமும் நோகாம வாங்கியாந்து சமைச்சுடலாம்.

ஐரோப்பாவின் மேற்குக் கரையோரங்களில் நிறைய விளையுதாம். வயசு என்னன்னா.....ஒரு இருபதாயிரத்துக்கும் மேலே இருக்கும். அஸ்வான் பகுதிகளில் (எகிப்து நாட்டில்) இதை உணவுக்கும் மருந்துக்கும் பயன்படுத்தி இருப்பதா 'சரித்திரம்' சொல்லுது. ஒருவேளை நம்ம கிளியோ (பாட்ராவின் செல்லப்பெயர்)வின் கூடுதல் அழகுக்குக் காரணமா இருந்துருக்குமோ? ஹா.....அப்படின்னா விடக்கூடாது . இதை வேகவச்ச தண்ணியால் முகம் கழுவினால் சருமத்தில் திட்டுதிட்டா இருப்பவை மறைஞ்சு முகம் பொலிவாகுமாம்(அழகுக்குறிப்பு!)


விளையும் காலத்தில் சமைச்சுத் தின்னுட்டு மிச்சம் மீதியைக் குளிர்காலத்துகாக வத்தல் போட்டு வச்சுக்குவாங்களாம் க்ரேக்கர்களும் ரோமானியர்களும். பதினைஞ்சாம் நூற்றாண்டுகளில் ஃப்ரான்ஸ் நாட்டுலே, சாமியார் மடங்களில் இதைப் பயிர் செஞ்சாங்களாம். காரணம்? களைப்பைப்போக்கி உற்சாகம் தரும் குணவிசேஷம். (சாமியார்கள்தான் உ.பா. பியரைக் கண்டுபிடிச்சது தனிக்கதை. (அதைபத்தி நம்ம வகுப்பில் பிறிதொரு சமயம் எப்பவாவது பார்க்கலாம்)பதினேழாம் நூற்றாண்டில் மன்னர் பதினாலாம் லூயி(ஸ்) இதை வளர்க்கன்னே கண்ணாடிக் கன்ஸர்வேட்டரிகள்கூட வச்சுருந்தாராம்.(உற்சாகம் வேண்டித்தானே கிடக்கு!)
மூணுவகை

இந்த அஸ்பெரகஸ் மூணு வகைகளில் கிடைக்குது. ஒன்னு பச்சை. இன்னொன்னு பச்சையும் கொஞ்சம் பர்ப்பிள் நிறமும் கலந்தவை. அடுத்தது வெள்ளை. வெள்ளைன்னா பால் வெள்ளை இல்லை. மங்கலான ஒரு வெள்ளை. இதுக்கு ஒயிட் கோல்ட், ஈடிபிள் ஐவரின்னெல்லாம் பெயர்கள் வச்சுருக்காங்க. இது ராயல் வெஜிடபுள் ஆச்சே! ஆனால் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற வகையில் இப்ப நமக்கும் தின்னக் கிடைக்குது:-) இப்போ உலகின் பல பகுதிகளிலும் இதைப் பயிர் செய்யறாங்க. 'சீனூஸ்' இதிலும் முதலில் நிக்கறாங்க என்பது உபரித் தகவல்.
முளைச்சுவரும் தண்டு

முளைகளை நட்டு தண்டுகள் வளர ஆரம்பிச்சதும் முளைச்சுவரும் தண்டுகளை அப்பப்ப எடுத்துருவாங்களாம். முதல் மூணு வருசத்துக்கு இப்படிச் செஞ்சா அடியில் வேர்களும் முளைகளும் நல்லாவே பரவிரும். இனி அடுத்து வரும் பதினைஞ்சு வருசங்களில் எல்லாம் பயங்கர அறுவடையா இருக்குமாம். சட்ன்னு வளரும் இந்தத் தண்டுகள் பொருத்தமான நிலமும் காலநிலையும் இருந்தால் ஏதோ மந்திரம் போட்டாப்புலே ஒரு நாளைக்கு பத்து அங்குலம்கூட வளர்ந்துருமாம். முதிர ஆரம்பிச்சவுடன் தண்டுகளின் அடிப்பகுதி கட்டையா மரம்போல ஆகிரும். சட்னு அறுவடை செஞ்சுறணும். கைப்பிடி அளவு கொத்துக்கொத்தாய் ஒரு ரப்பர் பேண்ட் போட்டுக் கட்டி கடைக்கு விற்பனைக்கு வந்துருது.

முதல் வருசத்துத் தண்டுகள் நல்லா மெலிசா இளம்பீன்ஸ் போல இருக்கு. அடுத்து வரும் ஆண்டுகளில் உருவம் கொஞ்சம் கொஞ்சமா பெருத்துக்கிட்டே போகுது. தண்டுகளின் அளவைப்பார்த்தே செடியின் வயசைச் சொல்லிடலாமாம்! (அப்பாடா..... வயசானால் குண்டாவது எல்லாருக்கும் பொது!!)

Asparagus is a nutrient-dense food which in high in Folic Acid and is a good source of potassium, fiber, vitamin B6, vitamins A and C, and thiamin.
Asparagus has No Fat, contains No Cholesterol and is low in Sodium.

இவ்வளோ சத்துகள் நிரம்பியதை நாம் விடலாமா? வாங்கியாந்தாச்சு. வெள்ளைக்காரகளுக்கு எல்லாத்தையும் புழுங்கித் தின்னணும். அதிலும் அரியாமக்கொள்ளாம முழுசா அதே வடிவத்தில் அவிச்செடுக்கணும். இதுக்குத் தோதா ஒரு ஸ்டீமர் இங்கே கடைகளில் கிடைக்குது. கம்பிக்கூண்டுக்குள்ளில் வரிசையா நிக்கவச்சு அவிச்சு எடுக்கலாம். எவர்சில்வர் வகை. அஞ்சாறு வருசத்துக்கு முந்தி ஒரு 'ஸேல்' சமயம் ஒரு கடையில் இதுவும் போட்டுருந்தாங்க. 'உண்மை'விலை 17 டாலர். அன்னிக்குப் போனாப்போகுதுன்னு 3 டாலருக்குத் தர்றாங்களாம். நாம் அவிக்கும் ஆட்கள் இல்லை. எதுன்னாலும் கொஞ்சம் மசாலா சேர்த்துக் கறி செஞ்சால்தான் நம்ம 'பழைய வாசனை' மாறாமல் இருக்கும். அதுக்காக நமக்கெதுக்குன்னு விட முடியுதா? 'குச் காம் கோ ஆயேகா'ன்னு வாங்கியாந்தேன். கம்பிக்கூண்டை கரண்டி போட்டுக்க வச்சுக்கலாம். மூடிபோட்ட அடுக்கு சமையலுக்கு(ம்)ஆச்சு. கிட்டத்தட்ட மூணரை லிட்டர் கொள்ளுதே!சீனூஸ்களுக்கு சாமர்த்தியம் கூடுதல். எதையும் விட்டுவைக்கறதில்லைன்னு புலம்பிக்கிட்டே அட்டைப்பெட்டியைத் திருப்புனா....... ஹா.........என்ன ஒரு ஆச்சரியம்!!!!!!! மேட் இன் இண்டியா!!!!!!

எப்படி சமைக்கிறதுன்னு ரெண்டு நிமிசம் நின்னு பார்த்துட்டுப்போங்க.
தண்டுகளை நல்லா கழுவிட்டு அடிப்பகுதியில் அமுக்கிப்பார்த்தால் கட்டையாட்டம் இருக்கும் பகுதியை 'மடக்'ன்னு உடைச்சு வீசிடணும். இப்போ தலைப்பக்கம் இருக்கும் கூம்புகளை மட்டும் தனியா நறுக்கி எடுத்து ஒரு பக்கம் வச்சுருங்க. மீதி இருக்கும் பீன்ஸ் போல இருக்கும் தண்டுகளை பொடியா (ஸ்லைஸ்) அரிஞ்சுக்கலாம்.
ஒரு வாணலியில் ரெண்டு ஸ்பூன் எண்ணெய். சூடானதும் கொஞ்சம் அரைத் தேக்கரண்டி சீரகம்( பஞ்சாபி(தாளிப்பு) தடுக்கா!)போட்டு வெடிச்சதும் கருவேப்பிலை இருந்தால் சேர்த்துக்கலாம். (நேத்து வெங்காயம் பொடிசா நறுக்குனீங்களே அது இருந்தால் வீணாக்காமல் இதன் தலையில் போடுங்க.)ஒரு கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி, ஒரு தேக்கரண்டி கறிப்பவுடர், காரம் கூடுதலா வேணுமுன்னா அரைத் தேக்கரண்டி மிளகாய்த்தூள். உப்பு ஒரு அரைத் தேக்கரண்டி எல்லாம் சேர்த்து வாணலியில் இருக்கும் எண்ணெயில் போட்டு ஒரு பத்து விநாடிகளில் நறுக்கி வச்ச தண்டுகளைப்போட்டு லேசா வதக்கிட்டுக் கால்கப் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிசம் வேகவிடுங்க. அதுக்குப்பிறகு தனியா எடுத்து வச்சுருக்கும் தலைகளைப்போட்டு மூடிவச்சுட்டு கண் மூடிக் கண் திறங்க. ஒரு கிளறு கிளறி மூடிவச்சுட்டு அடுப்பை அணைச்சுடலாம்.

தலைப்பை ஒருக்கா மீண்டும் வாசிங்க. (தலைப்பு உதவி: கம்பர். நன்றி.)


அஸ்பெரகஸ் வேகறதுக்குள்ளே நடந்து முடிஞ்சுருச்சுன்னு ( "faster than cooking asparagus" )ஒரு பழமொழி இருக்குன்னா பாருங்க!

மருத்துவ குணங்கள் நிறைஞ்சது. கர்ப்பிணிகளுக்கு ரொம்பவே நல்லது. அல்ஸைமர் வந்தவங்களுக்கு கொடுத்தால் குணம் தெரியுது இப்படி ஏகப்பட்ட நல்லவைகள் இருக்கு. அப்ப கெட்டதா ஒன்னுமே இல்லையா? இருக்கே!

இதை உணவில் சேர்த்துக்கும் நாளில் ரெஸ்ட்ரூமுக்கு ஒன் பாத்ரூம் போகும்போது கையோடு கொஞ்சம் ரூம்ஸ்ப்ரே கொண்டு போங்க. அம்புட்டுதான் சொல்வேன்!


41 comments:

said...

கம்பர் வரியை வச்சிட்டு இப்படி சமையல்குறிப்பை நகைச்சுவையா அதிலும் கடைசிபாரா தூள் போங்க!!!

said...

பையனுக்குப் பரிசு நிச்சயம்:)!

பயனுள்ள பகிர்வு. நன்றி.

said...

ஜூப்பர்க்கா :-)))

said...

கடைசி பாரா கொஞ்சம் பயமுறுத்துது! :)

நல்ல பகிர்வு....

said...

அஸ்பெரகஸ்' பற்றி இதுவரை நான் அறிந்திருக்கவில்லை.தகவலுக்கு நன்றி மேடம்.

said...

:))))'

அல்சமைருக்கு நல்லதா..ம்..

said...

//வயசானால் குண்டாவது எல்லாருக்கும் பொது!!)//

ஆமாமா ...!

said...

//எப்படி சமைக்கிறதுன்னு ரெண்டு நிமிசம் நின்னு பார்த்துட்டுப்போங்க.//

அடக் கடவுளே! சும்மா பாத்துட்டு போறதுக்குத்தானா..?

said...

ஃஃஃஃதலைப்பை ஒருக்கா மீண்டும் வாசிங்க. (தலைப்பு உதவி: கம்பர். நன்றி.) ஃஃஃஃ

இதுக்கு முதல் நன்றி... அவனவன்.. பதிவை போட்டுட்டே நன்றி சொல்வதில்லை...

said...

முதல் வருகை என நினைக்கிறேன் ஆழமான பதிவொன்றை ரசித்தேன் மிக்க நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

said...

ஆஸ்பராகஸ் சூப் சாப்பிட்டால் உடம்பில் கொழுப்பு குறையும்.
ரொம்ப நாளுக்கு முன்னால எங்க வைத்தியர் (ஹோமியோபதி) சொன்னார். நீங்க சொல்கிற பக்குவம் நன்றாக இருக்கு. கடைசிப் பாராவைப் பார்த்துட்டு ஓடிட்டேன்:)

said...

நல்ல பகிர்வுங்க. புதுசா ஒரு காய் பற்றி தெரிஞ்சுகிட்டேன். இங்கெல்லாம் கிடைக்குமா?

கடைசி வரி பயமுறுத்துதே......

said...

:)))) நல்ல பகிர்வு.

said...

அந்த கடைசி பாரா ஹா ஹா சிரிச்சுட்டேன் ,சாப்பிட்டவங்களுக்கு தான் விளங்கும் .
ஜெர்மனில கோல்ட் ஸ்பார்கள் என்று சொல்வார்கள் .அந்த சீசனுக்கு ஸ்பார்கள் ஃபெஸ்டிவல் கூட நடைபெறும் அவ்ளோ பிரபலம் .உடலுக்கு ரொம்ப நல்லது .மேனகா பொரியல் ரெசிப்பி தந்தாங்க .சூப் உடலுக்கு ரொம்ப நல்லது .பகிர்வுக்கு நன்றி

said...

Bahuth achcha hai!

said...

வாங்க ஷைலூ.

கம்பர் என்னும் தூண்டில் உங்களை இழுத்துவந்துருச்சு:-)))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பையனுக்குக் கிடைக்கலை. இது ஒரு காலத்துலே வந்த டிவி ஷோவில் ஒரு எபிஸோட்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

டாங்கீஸ்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயப்படும் அளவுக்கு அவ்ளோ மோசமில்லை:-)

எனக்கு எங்க பாட்டி சொல்லும் பழமொழி நினைவுக்கு வந்துருச்சு.

தனக்கம்ப்பு தனக்கிம்ப்பு.
எதிரி கம்ப்பு ப்ராண சங்கடம்.
kanppu =நாற்றம் (தெலுங்குப்பழமொழி கேட்டோ!)

said...

வாங்க ராம்வி.

நம்ம பக்கங்களில் கிடைக்குதான்னு பாருங்க. இருந்தால் அதுக்கு அங்கே என்ன பெயரோ?

said...

வாங்க கயலு.

சமைச்சு வச்சுட்டு, சாப்பிட 'மறந்து ' போகாமல் இருந்தால் அல்ஸைமருக்கு நல்லது!

said...

வாங்க தருமி.

சிந்தனைத்தோற்றம் அற்புதம்!!!!!

லேசா குண்டடிச்சால் தப்பில்லை(யாம்)

சாப்பிட வந்தாலும் பிரச்சனை இல்லை. எங்கூரு ஸ்ப்ரிங் சீஸனில் வாங்க. செப்டம்பர் முதல் நவம்பர் வரை.

வருகை தெரிவிச்சவுடன் ரூம்ஸ்ப்ரே நிறைய வாங்கி அடுக்கிட்டால் ஆச்சு:-)

said...

வாங்க ம.தி.சுதா.

நம்ம வீட்டுக்குத்தான் நீங்க புதுசு.

ஆனால் குழுமத்தில் நீங்க அதே பழைய சகோ தான்:-))))

said...

வாங்க வல்லி.

ஆஹா.... கொழுப்பு குறையுமா!!!!!

ஒரு வேளை கொழுப்பின் 'கந்தம்' அதுவோ??????

said...

வாங்க கோவை2தில்லி.

இப்ப இந்தியாவில் கிவி பழங்கள்கூடக் கிடைக்குதே! ஒருவேளை இதுவும் கிடைக்குமோ என்னவோ? சீனூஸ் விட்டுவச்சுருப்பாங்களா?

said...

வாங்க மாதேவி.

சிரிப்பாணிக்கு நன்றி:-0

said...

வாங்க ஏஞ்சலீன்.

ஒவ்வொரு காய்க்கும் பழத்துக்கும் ஒரு கொண்டாட்டம்தான்:-)

நல்ல பொருட்கள் ஒரு tag வச்சுக்கிட்டுத்தான் வருது:-)))))

said...

வாங்க வெற்றிமகள்.

தன்யவாத்:-)

said...

அஸ்பெரகஸ் பற்றிய சரித்திர தகவல்கள் சுவையாக உள்ளது ...
நீங்கள் பிஜி தீவு பயணக்கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கும் ஊர் '' சிங்கலாந்புரம் ...ராசிபுரம் அருகில் உள்ளது ... மலை வாழ் பழங்குடியினர் வாழ்கிறார்கள் ... இதில் இருந்து ஒரு பையன் 1971 என்னுடைய ரூம் மேட்.

சிவஷன்முகம். கரூர்

said...

வரிக்கு வரி தகவல்கள் + வழக்கமான சுவாரசியம். எங்க புள்ளங்களுக்கு பிடிச்ச காய். அதான வந்துட்டேன்.

சொன்ன மாதிரி, பொரியல் (ஆலிவ் எண்ணெய் சேர்த்தோ சேர்க்காமலோ, மசாலாத் தூள், உப்பு சேர்த்து), பஜ்ஜி (பொரிச்சு தான் ஆகணும்), சூப் (யம்மி), அப்பிடியே சாலட், பல வகையிலும் சாப்பிடுவோம்.

கடைசி பத்தி: பயப்பட அவ்வளவு இல்லை; ஹிஹி, என் குழந்தைங்க கிட்ட கடைசி பத்தி பத்தி 'மூச்சு விட மாட்டேனே' :-)

said...

சத்துள்ள காய்கறி அப்டி இப்டினு சொல்லிட்டு.. அப்படியே வேக வச்சு சாப்பிடாம... அதுல எண்ணையக் கலந்து வதக்கச் சொல்றீயளே?:)

said...

அஸ்பேரகசின் ஓர்ப்படிக்கு ஒண்ணு விட்ட பெரியம்மா பிள்ளை வாழைத்தண்டு.

said...

The last sentence.... really a comedy....hehehehhe.... www.rishvan.com

said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

அஸ்பாரகஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நெதர்லாந்துல இருந்தப்போ அஸ்பாரகஸ் சூப்பாக் குடிச்சேன். இந்தியாவுல கெடைக்கலையே. நான் என்ன பண்ணுவேன். :(

இப்பிடி ஞாவகப்படுத்தி விட்டுட்டீங்களே டீச்சர். :(

said...

good teacher.

amma narukkuna photo ellam irukku..

samaitha ayitam photo illai. eenn?..

vanaliya vittu edukka mudiyavillaiya?..

said...

வாங்க சிவஷன்முகம்.

ராசிபுரம் அருகிலா இருக்கு அந்த ஊர்!!!!!

வலையில் உலகம் எவ்ளோ சுருங்கி இருக்கு பாருங்க:-)))))

said...

வாங்க கெக்கேபிக்குணி.

புள்ளைங்களுக்குப் புடிச்ச காய்ன்னா நாம் 'மூச்' விடக்கூடாது கேட்டோ:-))))))

said...

வாங்க அப்பாதுரை.

இந்தியர் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு கதைதான்.

வெறுமனே வேகவச்சு சாப்பிட நாம் வெள்ளையரான்னு கேள்வி வருதே!!!!!
அதான்....... அதன் தலையில் ( நான் காயைச் சொல்றேன்) கொஞ்சம் மசாலா போடறது:-))))

said...

வாங்க ரிஷ்வன்.

இப்பெல்லாம் 'உண்மை'யே காமெடியாப் போச்சு:-)))))

said...

வாங்க ஜிரா.

ஒருவேளை ஊட்டி, கொடைக்கனாலில் கிடைக்குமோ????

said...

வாங்க பித்தனின் வாக்கு.

சமைச்சு முடிச்சதும் 'படம்' எடுக்க மறந்துட்டேன். இப்ப சீஸந்தான் இங்கே. இன்னொரு நாள் 'ஆக்கும்'போது எடுத்தால் ஆச்சு!

அப்ப தாக்கல் விடறேன்:-)