Friday, September 10, 2010

Copy & Paste மாதிரி.......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 9)

அடடா..... ஒரே அச்சுலே வார்த்துட்டாங்களா என்ன? ஒருவேளை இதைத்தான் இன்ஸ்பிரேஷன்னு சொல்வாங்களோ ? தேடிக் கண்டுபிடிச்சு கோவில் தோரணவாசலை நோக்கிப்போனால் உள்ளே வண்டி போகவிடாமல் தடுப்பு வச்சுட்டு ரெண்டு போலீஸ் வேற நிக்குது. இறங்கிப்போனால் அது காவல் நிலையத்துக்கும் பொதுவான வாசல். பெரிய வளாகம். புதுக்கட்டிட வேலைகள் வேற நடக்குது. நேரெதிரா கடைசியில் கடைகளுக்கு இடையில் ஒரு சந்து. அங்கேயும் ரெண்டு பக்கமும் கடைகளே. கடந்துபோனால் சீக்கிய கோவில் ஸ்டைலில் முகப்பு வாசல். நிழலுக்கு துணிப்பந்தல் போட்டுருக்கு.

நேரெதிரா இன்னொரு உசரமான கதவுகளோடு வாசல்.
வலது பக்கம் சின்னதா கண்ணாடித்தடுப்பில் சில சாமிகள் சிலை. காளி, சனி, ஹனுமன். வாசலில் நுழைஞ்சு போனோம். சுற்றிவர தண்ணீர் இருக்கும் குளத்தின் நடுவில் கோவில். அங்கே போக பாலம், மேலே நிழலுக்கு துணிப்பந்தல். என்னடா இது அங்கே இருப்பதுபோல் இருக்கேன்னு பார்த்தால்.... பாலத்தின் கடைசியில் அதே போல டிட்டோ டிட்டோன்னு தங்கத்தகடுகளுடன் பொற்கோவில்!

பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது,. குரு ஹர்ஸாய் மல் கபூர் (Guru Harsai Mal Kapoor) என்றவர் தங்கக்கோவில் மாடலிலே கட்டி இருக்கார். இங்கே கதவுகள் எல்லாம் வெள்ளி என்றதால் இதை ஸில்வர் டெம்பிள்ன்னு ஒரு காலத்துலே சொல்லிக்கிட்டு இருந்தாங்களாம். தங்கக்கோவில் வெள்ளிக்கோவில்னு நல்லாத்தான் இருக்கு. கோவிலைப் புனரமைப்பு செஞ்சப்ப சுதந்திரப்போராட்ட வீரர் பண்டிட் மதன்மோகன் மாளவியா அடிக்கல் நாட்டினாராம்.
மூணு வாசல். நிலைப்படிகளின்மேல் நரசிம்ம அவதாரம், மூணு தலை காளிங்க மர்த்தனம், ராமலக்ஷ்மணர்கள் சீதையுடன் வனவாசம் இப்படி.
நல்ல மார்பிள் கட்டிடம். இன்லே ஒர்க் எல்லாம் செஞ்சுருக்கு. அதே போல ஒரு மாடி உசரம் விட்டுட்டுப் போர்த்தி இருக்கும் தங்கத் தகட்டில் தசாவதாரம், ராதாகிருஷ்ணா, லக்ஷ்மிநாரயணன் பாற்கடலில் நிற்பது எல்லாம் அட்டகாசமா இருக்கு.

வெளியே இடது பக்கம் ஹனுமனும் வலது பக்கம் கருடனும் தனி பீடங்களில் குளத்துத் தண்ணிக்கு முதுகைக் காமிச்சபடி உக்கார்ந்து இருக்காங்க,
கோவிலுக்குள்ளே நேரெதிரே வரிசையா மூணு சந்நிதிகள் அடுத்தடுத்து. நடுவில் லக்ஷ்மியும் நாராயணனும், இந்தப் பக்கம் ராதாகிருஷ்ணா, அந்தப்பக்கம் ராமர் கூட்டம். இங்கேயும் அறுவர். ஆனா பிங்க் உடைகள்.
இடப்பக்க வாசல்வழியா வெளியேறிப் பின்பக்கமா வலம் போனால் அங்கே குளத்துத்தண்ணீரில் மேடை போட்டு உக்கார்ந்துருக்கும் சிவன். கண்ணாடி போட்ட மாடத்தில் ராமன், லக்ஷ்மணன், சீதை. அவர்கள் பாதம் பணியும் குகன்!!
அட! குகனா? கண்ணை ஒரு முறை கசக்கிக்கிட்டுப் பார்த்தேன். ஆமாம். இதுவரை குகனை எந்தக் கோவிலிலும் பார்த்ததே இல்லை. எனக்கு இந்தக் கோவில் ரொம்பப் பிடிச்சுப்போச்சு! (கண்ணாடிபோட்ட சந்நிதி என்றதால் படம் சரியா வரலை. கொஞ்சம் இருட்டாவும் இருக்கு. உள்ளே விளக்கு வைக்கலை) அங்கே கோவில் பட்டர் ஒருத்தர் தீர்த்தம் கொடுத்தார், வெள்ளையா கொஞ்சம் பெரிய மிளகு சைஸில் சக்கரை முட்டாய்கள் கொஞ்சம் வாரிக் கொடுத்தார். இந்தப் பக்கமெல்லாம் இதுதான் கோவில் பிரஸாதமா கிடைக்குது. கோவில் கதவுகள் எல்லாம் வெள்ளியால் செஞ்சுருக்காங்க போல. மகாவிஷ்ணுவின் பலவித உருவங்களையும், தசாவதாரங்களையும் கதவில் வச்சுருக்காங்க.

இன்னொரு கதவில் துர்கையின் விதவிதமான போஸ். ஆமாம்.... துர்கை கோவிலுன்னுதானே இங்கே வந்தோம். துர்கையை இதுவரை கண்ணுலே காணோமேன்னால்.... இது ஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் கோவிலாம். துர்கையானா கோவிலுக்கு லக்ஷ்மிநாராயண் கோவிலுன்னும் ஒரு பெயர் இருக்காம். என்னங்கடா..... கதையா இருக்கேன்னு புலம்புனதைக் கேட்ட கோபால் வெளியே போய் வாசலில் இருந்தவரைக் கேட்டதுக்கு அவர் நேரா 'அங்கே' ன்னு கை காமிச்சுருக்கார்.

குதிரைக்குக் கண்பட்டை போட்ட மாதிரி இங்கே அங்கே திரும்பாம நேரா வந்துருக்கேன் வழக்கமில்லாத வழக்கமாய்:-) வலது பக்கம் தலையைத் திருப்பி இருக்கக்கூடாதோ!!! 700 வயசான கோவில் துர்கையம்மனுடையது. ப்ராச்சீன்! ரொம்பச்சின்ன மூர்த்திதான். கீர்த்தி ரொம்பவே பெருசாம். பெயர் சீதள மாதா சாமுண்டியாம். பண்டிட் சொல்லிட்டு பிரசாதமா ஒரு ஸ்பூன் சக்கரை போட்ட பாலைக் கையில் ஊத்துனார். படம் தாராளமா எடுத்துக்கோன்னுட்டார். கையில் இருந்த பிசுக்கோடு கேமெரா ஃபோகஸ் செய்ய சிரமமாப் போச்சு.



இங்கேயும் பித்தளை சிங்கம். சிங்கத்துக்குப் பின்னால் குட்டியா ஒரு சந்நிதியில் சிவன். தேமேன்னு கொயட்டா உக்கார்ந்துருக்கார். வலம் வந்தால் இங்கேயும் தலவிருட்சம் இலந்தை மரம். ஊர் முழுக்க இலந்தைக்காடா இருந்துருக்குமோ! மரத்துக்குப் பக்கம் கருவறைச் சுவருக்குப் பின் ஏதோ விசேஷ பூஜைக்காக ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. வளாகச் சுவரில் கண்ணாடி மாடத்துக்குள்ளே ஸ்கந்தமாதா, காத்யாயினின்னு ரெண்டு தேவி சிலைகள்.

இன்னும் சில கோவில்கள் உள்ளே போனால் இருக்குன்னதும் போனோம். இன்னொரு ப்ராச்சீன் ஹனுமன். இவர் மரத்தின் அடிபாகத்துலே சுயம்புவா உருவாகிட்டாராம். உத்துப்பார்த்தா அனுமன் தெரியுதா இல்லையா? தெரியலைன்னா நோ ஒர்ரீஸ்... இங்கே பார்த்துக்கோன்னு அனுமன் சிலை ஒன்னையும் வச்சுருக்காங்க.
மரத்துக்கு எதிரில் கோவில் சந்நிதிகள் சில கட்டியிருக்காங்க. பின்னால் இருக்கும் பெரிய ஹாலில் ஹனுமனின் சரித்திரம் கண்ணாடிச் சட்டமிட்டப் பெரிய படங்களா சுவர் முழுசும் மாட்டி வச்சுருக்காங்க. மொத்தம் 60 படங்கள். அஞ்சனா தேவி மலையில் உலவுவதில் இருந்து ராமனுக்குத் தாசனா கூடவே இருக்கும்வரையில் இருக்கு. குழந்தைகளுக்குப் படம் காமிச்சுக் கதை சொல்லலாம்.
ஹனுமசரிதம்

தரிசனம் முடிச்சுக்கிட்டு வெளியே மறுபடி லக்ஷ்மிநாராயணன் வாசலுக்கு அந்தப்பக்கம் போனால் இன்னொரு சிவன் கோவில். ப்ராச்சீன் பைரவ்நாத் மந்திர். தனியார் மடங்களைச் சார்ந்தது. தடுக்கி விழுந்தாக் கோவிலோ கோவில்தான் இங்கே.

அங்கேயும் எல்லா கடவுளரும் இருந்தாலும் சிவன் பார்வதி புள்ளையார் நந்தி ஏதோ அம்யூஸ்மெண்ட் பார்க் ரேஞ்சில் இருக்கு. இவுங்களைப் பொறுத்தவரை சிவன்தம்பதிகளுக்கு ஒத்தைப்புள்ளை!
உச்சி வேளை. பாக்கி அப்புறமுன்னு ' ஜூத்தா கர்' போய் செருப்பு எடுத்தா.... பக்கத்துலே தாமரை விதை விக்கறார் ஒருத்தர். எவ்வளோ நாளாச்சுன்னு ரெண்டு வாங்கிக்கிட்டு அறைக்குப் போனோம். உரிச்சுத் தின்னா பச்சை மல்லாக்கொட்டைதான்.

தாமரை

தொடரும்..................:-)

10 comments:

said...

தாமரை மொட்டை பிரிக்க கஷ்டப்படுகிறவர்களுக்காகவே கொட்டையையும் தனியாக விற்கிறார்கள் போலும்!!

said...

:) நல்ல தலைப்பு துளசி..
தாமரை அழகு..

said...

ஒரே மாதிரி இரு கோவில் நன்றாக உள்ளது டீச்சர். தாமரை விதை நான் இப்பொதுதான் பார்க்கிறேன் மொட்டாக பறித்தால் இப்படி இருக்குமா டீச்சர்?

said...

வாங்க குமார்.

தட்டுலே இருக்கும் கருப்புக் கொட்டைகளையாச் சொல்றீங்க?

அது வேற எதோ கொட்டை. சாமிக்கு மாலையாப் போடுவதாம். வீட்டுலே வச்சுக்கிட்டால் 'சனி' விலகுமாம்!

said...

வாங்க கயலு.

கணினி யுகத்துலே இப்படிச் சொன்னா சட்னு புரியுமேன்னு.....;-)))

said...

வாங்க சுமதி.

இது மொட்டு இல்லைப்பா.

தாமரையின் நடுவில் மகரந்தம் உள்ள பகுதி.

பூத்து முடிஞ்சு இதழ்கள் எல்லாம் உதிர்ந்த பின்னால் இதை சேகரிச்சு விக்கறாங்க.

கருப்புப்புள்ளிகள் தெரியும் இடத்தில் உள்ளே பச்சை நிற விதை இருக்கும்.
அதை உரிச்சால் வெள்ளை நிறப் பருப்பு.

said...

தாமரை நல்லா இருக்கு. அதை ஊறுகாய் ஏதாவது போட முடியுமா. தங்கமும் வெள்ளியுமா லக்ஷ்மி நாராயணன் கோவில் நல்லாவே இருக்கு.
இந்த சுத்தத்தை எப்படித்தான் மெயிண்டெயின் செய்யறாங்களோ.

said...

அட... மினியேச்சர் பொற்கோவில்.'அங்கே' போக முடியாதவங்க இங்கே போகலாம்ன்னு ஏதாவது ஏற்பாடு இருக்கோ என்னவோ :-))))

said...

வாங்க வல்லி.

அதென்ன எதையெடுத்தாலும் ஊறுகாய் போட்டாகணுமா? ::-))))


சரியான ஊறுகாய் மன்னி!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

ரெண்டு கோவிலுக்கும் இடைவெளி அதிகம் இல்லை. நடந்துபோக ஒரு குறுக்குப்பாதை பாலத்தோடு இருக்காம்.

அதான் ரெண்டையுமே பார்த்துட்டே வரலாம்:-)