Monday, March 23, 2020

அன்பெனும் மழையிலே..... (பயணத்தொடர் 2020 பகுதி 30 )

ஸீ வியூன்னு கிடைச்ச  அறை இது. நேத்து வந்தவுடனே அவசரமாக்கிளம்பி லக்ஷ்மியை தரிசிக்கப்போனதால் வியூவைப் பார்க்க மறந்துட்டேன். காலையில் பார்த்தால்.... ரொம்ப கஷ்டப்பட்டு  அந்த ஸீயை ஸா. சூரியன் கிளம்பி வந்துட்டான்....



அக்கம்பக்கம் பார்த்தால் மாடித்தோட்டமெல்லாம் இருக்கு!  நெருங்கிய தோழியின் நினைவு வந்தது உண்மை !  ஸோலார் பேனல்ஸ் போட்டு வச்சுருக்காங்க  சில வீடுகளில். அடிக்கும் வெயிலுக்குப் பஞ்சமில்லைதானே !

குளிச்சு ரெடியானதும் முதலில் கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாமேன்னு போனோம்.  ரொம்பப் பொடிநடையில்  அஞ்சே நிமிட்.   ரொம்ப சுத்தமான அழகான கோவில் !  பெருமாள் ஸ்ரீ வரதராஜர், சொல்லமுடியாத அழகர் !   கோவிலைப்பற்றித் தனியா எழுதலை இப்போ. அப்போ எழுதுனது இங்கே.  கோவிலுக்கு வயசு எண்ணூறு !



பெருமாள் தரிசனம் அருமை. கருவறையைச் சுற்றி வரும்போது நூத்தியெட்டு திவ்யதேசப்பெருமாள்கள் தரிசனமும் அருமையே!



பிரகாரம் வலம் வர்றோம்.  வரதருக்குப் பின்னால் யோக நரசிம்ஹர் இருக்கார். தனி வாசல். அந்தாண்டை பொய்கை !
ஆண்டாள் சந்நிதியில் ' தூமணிமாடத்து' ஆனதும் வசந்தமண்டபம் பக்கம் வரும்போது மனசு திக் திக்குன்னு அடிச்சுக்கிச்சு. அந்தச் சித்திரங்கள் இருக்கோ இல்லையோன்னுதான்..... ஹப்பாடா..... இருந்ததைப் பார்த்ததும் தான் நிம்மதி ஆச்சு!
மனத்திருப்தியோடு அதிதிக்குத் திரும்பி வர்றோம்.  மணி எட்டாகப்போறது. வர்றவழியில்  ஒரு தையல்கடை.  ப்ளவுஸ்கள்  அழகாக இருக்கு. ஒரு ரெண்டுநாள் தங்கும்படியா அமைஞ்சால், மகளுக்கு ஒன்னு தைச்சு வாங்கிக்கலாம்.
ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கலாமுன்னு போறோம். பஃபேதான்.  அதுலே ஒரு பக்கம் கூழ் வச்சுருக்காங்க.  கூல் !!!!  தொட்டுக்க  வறுத்த மோர் மிளகாய்.   ஆம்லெட் போடப் பொடியா நறுக்கின வெங்காயம் வச்சுருந்தாங்க. அதுலே இருந்து ஒரு ஸ்பூன் எடுத்துக்கிட்டேன்:-)  சம்ப்ரதாயமாக் கூழ் குடிக்கணும், இல்லே!

ஒன்பது மணிக்கு 'நம்மவர்'  ஆஃபீஸ் கிளம்பிப்போயிட்டார்.  ரெண்டு மணிக்குச் செக்கவுட் செஞ்சுக்கிட்டு நான் கிளம்பணும்.  முருகனோடு போய் அவரை ஆஃபீஸ்லே இருந்து பிக்கப் செஞ்சுக்கிட்டு நேராச் சென்னைன்னு ப்ளான்.

அதுவரை?

நம்மைச் சந்திக்கத் தோழிகள் வர்றாங்க. ஆஹா.....

தினம் தினம் ஃபேஸ்புக்கில் ரெண்டு மூணு படங்களோடு பயணத்தில் எங்கே இருக்கோமுன்னு  சொல்லிக்கிட்டு இருக்கேனில்லையா.... அதுலே  நல்லதும் இருக்கு.  லக்ஷ்மியின் படத்தைப் பார்த்துட்டு, 'பாண்டிச்சேரிக்கு வந்துருக்கீங்களா? எத்தனை நாள் இருப்பீங்கன்னு நேத்து இரவே சேதி அனுப்பினாங்க, நம் அண்டைநாட்டுத் தோழி !  ஒரு இரவுதான். நாளைக்குப் பகல் கிளம்பணுமுன்னு சொன்னேன். கட்டாயம் வந்து பார்க்கிறேன்னு பதில் சொன்னாங்க.
சொன்னாப்டியே ஒரு பதினொரு மணி வாக்கில்  'வந்துட்டேன்'னு சேதி வந்ததும் கீழே போனேன். கூட ஒரு நண்பரும் வந்துருந்தார். எங்களுக்குத்தான் முதல்முறை பார்க்கும் உணர்வு வரலைன்னா நண்பர் அதுக்குமேலே....  ரெண்டுபேரும் அம்மா அம்மான்னு கூப்பிட்டதும் மனசே நிறைஞ்சு போச்சு.
தோழின்னு சொல்றேனே தவிர என் மகளைவிடச் சின்ன வயசுதான்.  இன்னொரு மகள் கிடைச்சது போலவே மகிழ்ச்சி. இவுங்க ரெண்டுபேருமே பத்திரிகை ஆளுங்க. வெவ்வேற பத்திரிகைகள். தமிழ்தான்.

நண்பர், நம்ம துளசிதளத்தைப் பார்த்ததே இல்லையாம்.....  இனி பார்க்கப்போறார்னு நினைக்கிறேன். (இல்லைன்னாலும் இந்தப் பதிவைப் பார்த்துருவார். டேக் பண்ணிடமாட்டேனா என்ன? ஹாஹா )

பேச்சுவாக்கில் எங்கெ இருக்கீங்கன்னு விசாரிச்சதும் 'ஐயோ' வாயடைஞ்சு போச்சு எனக்கு. மூணு மணி நேரம் பயணம் செஞ்சு வந்துருக்காங்க. இப்ப நினைச்சாலும் என்னால் தாங்கவே முடியலை.   இதுவே,  இவ்ளோ தூரமுன்னா..... நான் போயிருப்பேனோ?  ஊஹூம்..... இந்த அன்பு கிடைக்க என்ன தவம் செஞ்சுருப்பேன், போனபிறவிகளில்?

எதுக்கு இவ்ளோதூரம் பயணப்பட்டு வரணுமுன்னு கடிஞ்சதுக்கு.... அந்த 'அண்டை நாட்டுலே' இருந்து எங்கூருக்கு வந்து சந்திக்கறதைவிட இது ரொம்பக் கிட்டே இல்லையோன்னு சிரிக்கறாங்க ! இப்பக் கொஞ்சநாளா இந்தியவாசம் அவுங்களுக்கு.

இன்னொரு பேஸ்புக் தோழியும், இன்பாக்ஸில் விவரம் எல்லாம் கேட்டுட்டு,  சந்திக்க வர்றதாச் சொன்னாங்க.

கொஞ்ச நேரத்துலே  இன்னொரு தோழியும் கணவரும்  வந்துட்டாங்க.  உள்ளூர் ஆட்கள்தான்.  அதிதிக்குப் பக்கம்தான் அவுங்க ஆஃபீஸே இருக்குன்னதும் நிம்மதி ஆச்சு. இன்னொரு மூணு மணின்னு சொல்லி இருந்தால் எனக்கு இதயமே நின்னு போயிருக்கும்!  காப்பாத்திட்டாங்க.
ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனதும் எங்க பேச்சுக்கச்சேரிக்குக் கேக்கணுமா?

அன்பெனும் மழையிலே  நனைஞ்சோம், எல்லோரும் !  இந்த அபூர்வ கணத்தை அனுபவிக்க 'நம்மவருக்கு'க் கொடுத்துவைக்கலை.....

மகள்தோழியின் அன்பளிப்பா ஒரு குட்டி புத்தர்.  உள்ளுர்த்தோழியின் அன்பளிப்பு அழகான ரோஜா ! கூடவே  இனிப்பும் காரமுமா !

திரும்ப மூணு மணி நேரப்பயணம் இருக்குன்னு கிளம்பிட்டாங்க 'மகளும், மகனும்'!

அடுத்த காமணியில் உள்ளூர்த்தோழியும், கணவரும்!
சட்னு வெறுமை சூழ்ந்தமாதிரி இருந்துச்சு..... 
ஒன்னரைமணியானப்ப, மூட்டை முடிச்சுகளைக் கட்டி வச்சுக்கிட்டு இருந்தேனா.... 'நம்மவர்'  திரும்பிட்டார். போன வேலை ஆச்சாம்.  முக்காவாசி வீடியோ கான்ஃபரன்ஸ், ட்ரெய்னிங்னு  நியூஸியில் இருந்து  வேலை நடந்துருதே, இப்பெல்லாம்.  இணையம் வந்தபின்  கிடைச்ச பல நல்லவைகளில் இதுவும் ஒன்னு, இல்லையோ!
தொழிலதிபர் நண்பர்,  அங்கே புதுசா ஒரு க்ரிக்கெட் ஸ்டேடியம் கட்டி இருக்கார். அதையும் விஸிட் பண்ணிட்டு வந்தாராம். ஒரு காலத்துலே நானும் க்ரிக்கெட் பைத்தியமாத்தான் இருந்தேன். அதிலும் ஊழல் வந்து, பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்தமாதிரி தெளிய  வச்சுருச்சு....


 ஒன்னே முக்கால் போல செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பி நேரா அடையார் ஆனந்தபவன்தான்.  கோவில் பக்கம் போகலை. நடை சாத்தி இருக்கும் நேரம்.   எனக்குக் கொழுக்கட்டை  உப்பும் இனிப்புமா கிடைச்சது. மூணு பேருமா சாப்பிட்டு முடிச்சுட்டு ரெண்டே முக்காலுக்குப் பாண்டியை விட்டாச்சு !

தொடரும்........ :-)

Friday, March 20, 2020

கொலுசு போட்ட கால்கள் ! (பயணத்தொடர் 2020 பகுதி 29 )

கடலூரைத் தாண்டுமுன், முருகனை ஒரு சின்ன டீ ப்ரேக் எடுக்கச் சொன்னார் 'நம்மவர்'.  நல்ல வெயிலில் அப்படியே கண்ணைக் கட்டிக்கிட்டே வருதே நமக்கும். முருகன் வரும்வரை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தால் நெல்லிக்காய் கண்ணில் பட்டது.  கொஞ்சமா வாங்கினோம்.  டேஷுக்கு நல்லதுன்னு எனக்கு நினைப்பு.  கடைசியில்  ஒன்னு கூட முழுசாத் தின்னலை....  நெல்லிக்காயைவிட  எலுமிச்சம்பழம் பெஸ்ட் இல்லையோ....  கைவசம்  நேத்து மாரியம்மன் கொடுத்த ரெண்டு பழங்கள் இருந்தும்....  தோணலையே.....

டூவீலரில் மூணுபேர் எட்டுக்கால்களோடு போய்க்கிட்டு இருந்தாங்க.
இதோ பாண்டிச்சேரி எல்லைக்குள் புகுந்தாச்சு.   மாநிலத்துக்குள் போக பெர்மிட் வாங்கிக்கணும்.  ஆச்சு.  எல்லாம் சரியாக இருந்தாலும் நூறு லஞ்சம்.....
அதிதியில் செக்கின் ஆச்சு.  எப்பவும் இங்கேதான்.  ஒரே ஒருமுறை இடம் கிடைக்கலைன்னு ஷெண்பகாவில் தங்கினோம்.  இந்த ஊரில் எனக்கு லக்ஷ்மியைச் சந்திக்கணும்.  'நம்மவருக்கு'  ஒரு ஃபேக்டரி  விஸிட்.  தொழில்நுட்ப ஆலோசகரா இருக்கார்.
கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கோவிலுக்குப் போனோம்.  இன்றைக்குப் பிரதோஷமாம்.  கோவிலில் நல்ல கூட்டம்.  ஆனால் அதைப்போல டபுள் கூட்டம் லக்ஷ்மிக்கு முன்னால்.  பாவம் குழந்தை....  வாங்கிக் கொடுத்து,  ஆசிகள் வழங்கின்னு பயங்கர பிஸி. சோர்வில்லாத உழைப்பு.  பாகர், அவர்பாட்டுக்குப் பேச்சுக்கச்சேரியில் இருக்கார்.
அனிச்சையாக் கைக்குக் கை மாறி வருவதை எடுத்துக்கறார்.
அப்பாவி லக்ஷ்மி ! கூட்டத்தைப் பார்த்து அவளுக்கும் பிடிச்சிப்போச்சு போல.....    காசு கொடுத்தவங்களை ஆசிர்வதிக்கும் கையோடு அக்கம்பக்கம் இருக்கறவங்களுக்கும்  இலவச ஆசிகள் வழங்கிக்கிட்டு இருக்காள்.
அப்பப்ப சின்ன  ஸ்நாக்ஸ்.....  வாயில் போட்டுக்கறாள்.



கோவிலுக்குள் போய் ஸ்ரீமணக்குள விநாயகரை தரிசனம் செஞ்சுட்டு, அடுத்த மண்டபத்தில் கொஞ்சநேரம் உக்கார்ந்துருந்தோம்.  கேஸரி ப்ரஸாதம் ஒருத்தர் வீட்டில் இருந்து கொண்டுவந்து விளம்பினார். அங்கங்கே சனம்,  இப்படித் தனிப்பட்ட வகைகளில் சுண்டல், சக்கரைப்பொங்கல்னு  கொண்டு வந்து இங்கே விளம்பிக்கிட்டு இருக்கு. 
திரும்ப லக்ஷ்மியாண்டை வந்து சிலபல க்ளிக்ஸ் முடிச்சுட்டுக் கோவில்கடைகளை வேடிக்கை பார்த்தேன். ஒரு புள்ளையார்  நமக்காகக் காத்திருந்தார். நியூஸிக்கு வரணுமாம்.

அடுத்துப்போனது கடற்கரைக்கு. நல்ல குளிர்ந்த காற்று,  தலைசுத்தலுக்கு நல்லது! இந்த பீச் ரோடை, மாலை ஆறு முதல் மறுநாள் காலை ஏழரைவரை  போக்குவரத்து இல்லாமல்  வச்சுடறாங்க. சனம்  நிம்மதியா இஙேயும் அங்கேயுமா சாலையைக் கடந்து போய் வரலாம்.  ரொம்ப நல்ல விஷயம்.


கடற்கரைக்கு எதுத்தாப்ல ஒரு பார்க் இருக்கு.  பலமுறை அதைக் கடந்து வந்துருக்கோம், உள்ளே போனதே இல்லை....  இன்றைக்குப் போயாச்.   சின்னத்தோட்டம். நடுவிலே ஒரு சிலை வச்சுருக்காங்க. எம் என் செல்வராட்ஜ் செட்டியார் .... அந்த 'ட்' எதுக்குன்னு தெரியலையே... 

இவரைப்பற்றிய விவரம் எதாவது கிடைக்குமான்னு கூகுளிச்சால்.....  சரியா ஒன்னும் ஆப்டலை.  ஆனால் அப்போ அந்தக்காலப் பாண்டிச்சேரியில்  வெள்ளையர், தமிழர்கள்னு  தனித்தனி இடங்கள் இருந்துக்குன்னும் ( White Town, Black Town ) ரெண்டு பகுதிகளுக்கும் இடையில்  ஒரு வாய்க்கால் / கால்வாய்  ( Grand Canal )  இருந்துருந்ததுன்னும்  தெரிஞ்சது.  இப்பவும் இருக்கா என்ன?

கடற்கரையில் இருந்து ரெண்டு தெரு தள்ளித்தான் வண்டியை நிறுத்தணும் என்றதால்  நடந்து போறோம்.  வழியில் சிலபல தீனிக்கடைகள். தள்ளுவண்டியில் வெள்ளரிக்காய் பார்த்து வாங்கினோம். அதான் நம்மாண்டை 'தோல்சீவி' இருக்கே!  தள்ளுவண்டிக்காரர், முழுசாத்தர முதலில் சம்மதிக்கலை. சீவி, பத்தை போட்டுத்தரேன்னு சொன்னார். அப்படிச் செஞ்சால்  கூடுதல்  காசுக்கு விற்கலாம். நாமும் கூடுதலாத் தர்றோமுன்னு சொல்லி வாங்கினோம்.  ரெண்டு வெள்ளரிக்காய்க்கு   மார்கெட் தேடிப்போகச் சோம்பல்தான்.... 

அதிதிக்குத் திரும்பினோம். ராச்சாப்பாடு ரூம் சர்வீஸ்தான். கூடவே  நம்ம வெள்ளரிக்காய் :-)
இங்கேயும் தங்கல் ஓரிரவுதான் !

தொடரும்........... :-)