Friday, December 19, 2014

ஸாண்ட்டாவுக்கு புது லிமோ!!

எண்ணிப்பாருங்க... இன்னும் அஞ்சே நாள்தான் இருக்கு யேசுவின் பிறந்த நாளுக்கு! கடைவீதிகளில்தான் மொத்தக்கூட்டமும் மால்களில்தான்  எல்லாக் கொண்டாட்டமும்.  சனத்துக்கு  எங்கே பரிசுப்பொருட்கள் வாங்கமுடியாமல் போய்விடுமோ என்ற 'பயத்தில்'  முக்கிய கடைகள் எல்லாம் நடுராத்ரிவரை திறந்து வச்சுக்கிட்டு இருக்காங்க.

எல்லா மால்களிலும், ஸாண்ட்டா    தன்னுடைய  சிஷ்யப்புள்ளைகளை விட்டு வச்சுருக்கார்.  வேலை நேரம் மட்டும்  மாலை ஆறரை வரைதானாம்.   மானுக்குத் தண்ணி காட்டணுமுல்லெ! நம்மூட்டாண்டை இருக்கும் மாலில்  இப்படி.



முந்தியெல்லாம்  பெரிய அலுவலகங்களில் , அங்கே வேலை பார்க்கும் மக்கள் ஷாப்பிங் செஞ்சு முடிச்சுக்கன்னே , விடுமுறை ஆரம்பம் கிறிஸ்மஸுக்கு முதல்நாள்  என்று இருக்கும்.  நம்ம கோபாலின்  கம்பெனியிலும் இப்படித்தான் இருந்துச்சு.  ஆனால் இந்த வருசம்  25 இல் இருந்துதான் விடுமுறை ஆரம்பமாம்.

"ஏன்............? "

"அதான்  நடுராத்ரி 12வரை கடைகள் இருக்குல்லே! அப்பப்போய் வாங்கினால் ஆகாதா......

அவுங்க  கம்பெனியில்  இந்த வருசம் ஸ்பெஷலா , இன்றைக்கு  ஊழியர்களுக்கு  பார்பெக்யூ  விருந்து  மதியம் போடறாங்கள்.    அதிகாரிகள் எல்லாம் சுட்டுத் தரணும். இவரும் சுடப் போயிருக்கார்.  அவசரப்படாம நல்லா சுட்டுத்தாங்கன்னு சொல்லி இருக்கேன்.  வீட்டுலே சமையலுக்கு ஹெல்ப்(!!??)  பண்ணுவது போல அங்கேயும் ஹெல்ப் பண்ணிருவாராம்:-)))

வருசாவருசம் நடக்கும் சாண்ட்டா பரேடு இந்த வருசமும் நடந்துச்சு. 'அந்தக் காலத்தில்'  நவம்பர் மூணாவது வாரமே நடந்துக்கிட்டு இருந்தது....  மெள்ள மெள்ள நகர்ந்து இந்த வருசம் டிசம்பர்   ஏழாம்தேதி. ஞாயிறாக இருக்கவேணும் என்பது கட்டாயம்.  வேடிக்கை பார்க்கக் கூட்டம் வேணுமா இல்லையா?

சிட்டி இல்லாமல் போனதால்  இப்ப நாலு வருசமா நம்ம பேட்டையில்தான் ஊர்வலம்.  கடமை தவறாத குடிமக்களா   ஆளுக்கொரு கேமெராவுடன் நாங்க போனோம்.  (ஆமா... ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாப்பாள்!)ஸ்ரீராமர் காட்டுக்கு  வில்லும் அம்புமா கிளம்பினாராம்.  அப்ப நாம்? வெறும் அம்பறாத்தூணியோடு கிளம்பினோம்.  முதல்நாள் ஸேலில் கிடைச்சது:-)  வீட்டுவாசலில்  செடிக்கடை போட்டு வச்சுருந்தார் ஒருத்தர்.  ஹெர்ப்.  எதையெடுத்தாலும்  அம்பது செண்ட்.

பகல் ஒரு மணியில் இருந்தே  ஊர்வலம் போகும் சாலையில் போக்குவரத்தை  நிறுத்திட்டாங்க. நாங்களும் வேற வழியில் போய்  நம்ம வழக்கமான இடத்தில் வண்டியை நிறுத்திக்கிட்டோம். இனி மூணு நிமிசம் நடந்தாப்போதும். அந்த சாலையில் போய்ச்சேரும் கிளைச்சாலைகளுக்கு   ட்ராஃபிக் கோன் வச்சுக்கிட்டு இருந்தாங்க. போகும் வழியிலேயே  ஊர்வலத்தில் பங்கெடுக்க ஆர்வமாக் கிளம்பின சர்தாரைப் பார்த்து ஒரு க்ளிக்.
மக்கள்ஸ் அதுக்குள்ளே  சாலையின் ரெண்டுபக்கங்களிலும் இடம்பிடிச்சு உக்கார்ந்துருந்தாங்க.   எதோ பட்டா போட்டு வச்சது போல நமக்கான இடம் காத்திருந்துச்சு.

 காவல்துறையினர்  ச்சும்மா பேருக்கு இங்கெயும் அங்கெயுமா உலாத்தல்.  மக்களைக் கட்டுப்படுத்தும் ட்யூட்டி.  அவுங்களுக்கு வேலையில்லாமப் பண்ணும் சனம் இங்கே. என்னதான் சொல்லுங்க... எங்கூரு சனத்துக்கு  சட்டத்தைப்  புறம் தள்ள  வராது.  போரடிக்குதுன்னு போலீஸ் நின்னு கதை பேசிக்கிட்டு இருக்கு:-)  என் பக்கமொரு சின்ன வயசுப் பையன்.  பால்மணம் மாறாத முகம். இப்பதான் வேலைக்குச் சேர்ந்திருக்கணும். என் மகனா இருக்கக்கூடாதான்னு நினைப்பு வந்தது நிசம். அதோ நம்ம பையன்னு கோபாலிடம் சொன்னேன்:-)

எங்கூர் சாண்ட்டா பரேடுக்கு வயசு 68.  கொழும்புத்தெருவில் நடந்துக்கிட்டு இருந்துச்சு முந்தி.  ஊரின் மெயின் கதீட்ரல் (நகர மையம்) அங்கெதான் இருக்கு. தேவாலயம் இடிஞ்சு போன நிலையில்  சாண்ட்டா ரூட்டை மாத்திக்கிட்டார்.  அவருக்கும் வேற வழி இல்லை பாருங்க.

இருவது நிமிச பராக்கு. பாண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் சரியா ரெண்டு மணிக்கு ஆரம்பிச்சது.  பரேடில் முக்காலே மூணு வீசம் எல்லா வருசமும் வரும் அலங்கார வண்டிகள்தான்.  இந்த  27 வருசமாப் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம். அதனாலே போனவருசம்வரை  இல்லாதது என்ன புதுசா வருதுன்னு பார்க்கும் ஆர்வம் ஏராளம்.
தாய்லாந்து மக்கள்ஸ், அவுங்க பாரம்பரிய உடைகளில் ரொம்ப  ஜோரா அலங்கரிச்சுக்கிட்டு வந்தாங்க.

முதல்முறையா ஃபிஜித் தீவு!  ஃபிஜியன்ஸ்,  தாப்பா (மரவுரி . மரப்பட்டைகளால் நெய்யப்பட்ட  துணிகள்)  போட்டுக்கிட்டு கையில் ஃபிஜியன் க்ளப் ஏந்தி வந்தாங்க.  ஃபிஜி இந்தியர்கள்  ஒன்னு ரெண்டு பேர்தான்.  ஏன் வரலை? ஏராளமா இருக்காங்களே!








நம்ம வீட்டுக்கு  ஒருவீடு தள்ளி இருக்கும் பாலே ஸ்கூல்  பசங்க.



பிலிப்பைன்ஸ்   மக்கள்.



ஃபலூன் டாபா   வழக்கம் போல  பெரிய கூட்டம்.  ஒழுங்குன்னா அப்படி ஒரு ஒழுங்கு  அவுங்களிடம்!

கொரியன்ஸ்  பள்ளிக்கூடம் வச்சுருக்காங்களாமே!

பீகிள் க்ளப் பசங்க   ரொம்ப க்யூட்:-)  குடும்பத்தினரைக் கூட்டி வந்துருக்காங்க.

டாய்வான் நாட்டு மக்கள்கூட இந்த வருசம்  இடம்பிடிச்சுருக்காங்க! புதுவகை அலங்காரம் நமக்கு!

ஸால்வேஷன் ஆர்மி....  சமூக சேவை செய்வதில் முதலிடம்  இவுங்களுக்குத்தான். ஸூப் கிச்சன் இவுங்கதான் நடத்தறாங்க.

கிறைஸ்ட்சர்ச் ஏர்ப்போர்ட், ஜெட் எஞ்சின்களைக் கொண்டாந்து காமிச்சது. பயமில்லாம பறக்கலாம் வாங்க!

எங்க  ஊர்  விஸர்ட்க்கு  (Wizard of Christchurch) இப்ப வயசு 82.  டிசம்பர் 4 அவருக்குப் பொறந்தநாள்.  கொண்டாட வந்துருந்த சிஷ்யப்பிள்ளைகளுடன்  அன்னிக்கு (டிசம்பர் 7)  ஊர்வலத்தில்  வந்தார்.  இவ்ளோ கூட்டமா மந்திரவாதிகளை நான் இதுவரை பார்த்ததே இல்லை.  லார்ட் ஆஃப்  த ரிங்ஸ், எஃபெக்ட்:-)

நாங்க நியூஸி வந்த மறுவருசம் முதல் மூன்று முறை நகரத்தாயா இருந்த விக்கி பக்  (Vicki  Buck) அரசியலில் இருந்து விலகி, 14 வருசம் புள்ளைகுட்டிகளைப் படிக்க வச்சுட்டு மறுபடி  போனவருசம் அரசியலுக்கு  திரும்பி வந்து  இப்ப நகரத்தின் துணைத்தாயா இருக்காங்க.

நம்ம இந்தியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப் வரிசை அடுத்து.    போன முறை வெறும் இந்தியக்கொடியை மட்டும் தூக்கி வந்தவங்க....  என் புலம்பலைக் கேட்டு நியூஸிக் கொடியையும் பிடிச்சுக்கிட்டு வந்தது  நல்லா இருந்துச்சு.

நமக்குத்தான் வகைவகையா மாநிலங்கள் இருக்கே!  பாரம்பரிய உடைகளின் அழகு   வண்ணக்கலவையா இருந்துச்சு!


 சீனர்கள்  வழக்கம்போல்  சிங்க டான்ஸ், ட்ராகன் டான்ஸ்ன்னு அட்டகாசம்.  நேர்த்தியான உடைகளில் பிரமாண்டமான கூட்டம்!

பொலிட்டிக்கல் சயின்ஸ், கலைப்பிரிவு மாணவர்கள்  குழு ஒன்னு இந்த வருசப் புதுவரவு!

பூகம்பத்தில் அழிந்த எங்க நகரத்தை மீண்டும் எழுப்பிக்கட்ட வந்த  பிலிப்பீனோ  கட்டிடத் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பத்தினர்  ஊர்வலத்தில் பங்கேற்றது சிறப்பு.    நகர நிர்மாணம் முக்கியமல்லவா?




 நாங்கள் எல்லோரும் பலமாக் கைதட்டி அவுங்களுக்கு  ஆதரவையும் அன்பையும் தெரிவித்தோம்.  விஸில் சத்தம் வானைப் பிளந்ததுன்னு சொல்லிக்க ஆசை. எனக்கு விஸில் அடிக்க வராதுப்பா.  ப்ச் :-(


மிஸ் பிக்கி, கெர்மிட் எல்லாம் வந்தப்ப... இப்பத்துப் பிள்ளைகளுக்கு  ஒன்னுமே புரியலை.  பழைய தலைமுறைதான் விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்துச்சு!

கார்னர் ஸ்டோன் சர்ச்  என்ற  ஒரு புது சர்ச்,  எக்ஸ்ப்ளோர்  க்றிஸ்டியானிட்டின்னு சொல்லிக்கிட்டு போச்சு.

தீயணப்பு வண்டிகளின்  ஊர்வலத்தில்  தீ விபத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்க வேண்டிய  வழிமுறைகளை சின்ன புத்தகமா அச்சடிச்சு  விநியோகம் பண்ணிக்கிட்டுப் போனாங்க.  நம்ம வரிசைக்குப் பக்கம் வந்தப்ப, எல்லோரையும் விட்டுட்டு என் கையில்கொண்டு வந்து கொடுத்ததைப் பார்த்தால்  நம்ம  All because of Uthappa  எபிஸோடு  அவுங்களுக்கு நினைவில்  இருக்கோன்னு ஒரு சம்ஸயம்:-)

ஜப்பான் நாட்டு மக்கள், ட்ரம்ஸ் அதிர  முழக்கத்தோடு கடந்து போனாங்க.

1973 முதல்  எங்க சகோதரி நகரமா இருக்கும் குராஷிகி நகர மக்கள் தனி வண்டியில்!

பி எம் எக்ஸ் வீரர்களில் சிலர், ரெண்டு பேர், மூணு பேருன்னு படுக்கவச்சு தாண்டினாங்க!



ரஷ்யன் கல்ச்சர் செண்ட்டர்!



அடுத்த வருசம் அண்டர் 20  ஃபுட்பால்  உலகக் கோப்பை கேம்   நியூஸியில் நடக்கப்போகுது.

உண்மையான மல்ட்டி கல்ச்சுரல் சொஸைட்டின்னு சொன்னா தாராளமா நியூஸியைச் சொல்லலாம். இந்த் ஊரில் மட்டும்  ஒரு 165 வெவ்வேற இன மக்கள்ஸ் இருக்காங்கன்னு  ஒரு சமயம் நகரத் தந்தையோடு பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னார்.


 திடுக்குன்னு பார்த்தா  இன்னொரு இந்தியக்குழு!  நியூஸிலாந்து சீக்கியர் சங்கமாம்!  ஓ....  தனியாப் பிரிஞ்சு போயிட்டாங்களா?  இல்லை  மதத்துக்குன்னு ஒரு குழுவா?  வரும்போது பார்த்த இளைஞர்  கையை வீசி வீசி  ஆட்டுறார் நமக்கு!!   ஹாஞ்ஜி ஹாஞ்ஜி  :-))))











கிறைஸ்ட்சர்ச் ஏர்ப்போர்ட்  ஃபயர் ப்ரிகேடு  டீம்,  விமானத்துலே தீ  பிடிச்சா இப்படின்னு  தண்ணியடிச்சுக் காமிச்சாங்க.  இதுவரை பயன்படுத்தவே இல்லை என்பதால் நமக்கு டெமோ!   அப்படியே இனியும் பயன்படுத்தும் வாய்ப்பு வரவே வேணாம்....  ஆமென்!

இன்னும் சாண்ட்டா வரவே இல்லை. அதுக்குள்ளே  என் கேமெரா  மெமரி இல்லைன்னு சொல்லுது.  இந்த முறை எக்ஸ்ட்ரா பேட்டரியைக் கொண்டு வந்திருந்தேன்.  ஆனால்....  2 GB  SD  cardதான் போட்டுருந்தேன். இதுக்கு மேலேயா படமெடுத்துறப்  போறோமுன்னு.....  மெத்தனம்:(  அடுத்த வருசம் பொழைச்சுக் கிடந்தால் 32 GB  SD  cardதான் :-))))

அடுத்த அரைமணி நேரத்துக்கு  கோபால் பொறுப்பு. நான் ஜஸ்ட் டைரக்டர்!

புத்தம்புதுசா  ஒன்னும் வரலை.   போகட்டும். 'எலிப்பெண்ணை எடுங்க'ன்னேன்:-)

நம்மூர்லே ரீபில்ட் காரணம்  எக்கச் சக்கமான வேலை வாய்ப்பு. எல்லாம்  கட்டிட வேலைகள்தான்.  பணம் ரொம்பவே புழங்குது.   அதான்  நடுராத்ரி வரை கடைகள்!   இப்படி இருக்கும்போது, சாண்ட்டாவுக்குச் சொல்லணுமா?   அதான் லிமோ வாங்கி இருக்கார்:-)))

 கட்டக்கடைசியில்   வந்தார் நம்ம ஸாண்ட்டா.  மெர்ரி கிறிஸ்மஸ் என்று வாழ்த்தினார். 101  நிமிசங்களில்   ஊர்வலம் முடிஞ்சது.



துளசிதளம்,  வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும்  இனிய கிறிஸ்மஸ் விழாவுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மெர்ரி க்றிஸ்மஸ் !



Wednesday, December 17, 2014

அஷ்டாவதானியுடன் ...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 7)

கண்ணில் தொட்டு ஒத்திக்கலாம் போல அப்படி ஒரு அழகான உள் அலங்காரம்,  அந்த வீட்டம்மாவின் ரசனையைக் கோடி காமிச்சது!  பளிச் என்று இருந்த  சிட்டிங் ஏரியாவைப் பார்த்ததும்,  கோபால் என்னை பொருள் பதிந்த (!!) பார்வை  பார்த்தார்.

 'நீயும் இருக்கறயே....  வீடு முழுக்க கன்னாபின்னான்னு ஏகப்பட்ட ஜங்க் வாங்கிவச்சுக்கிட்டு!'

இதுக்கெல்லாம் மனசாட்சி உடனே சமாதானம் சொல்லிரும்.  ஆமாமா....   எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் நமக்கு,  நம்மூர் அலங்காரங்களை குறைந்த பட்சம் நம்ம வீட்டிலாவது பார்த்துக்க வேற வழி என்ன?  எனக்கு ,  வீடு  ஒரு லிட்டில் இண்டியாவா இருந்துதான் ஆகணும்:-)))

இங்கே வரும் வழியிலேயே   செல்லில்  இன்னொருக்கா வழிகேட்டுக்கிட்டோம்.  மைத்துனருக்கு இடம் தெரியும் என்பதால் பிரச்சனையே இல்லை.  அதுக்குள்ளே நம்ம  சீனிவாசன் ( சென்னை ஸ்ரீராம்  ட்ராவல்ஸ் ட்ரைவர்) வந்து சேர்ந்துட்டதாக சொன்னார்.  செல்பேசியின் உபகாரங்களில் இது ஒன்னு.  தகவல் சட்னு கிடைச்சிரும்.  நாளைக்குச் சென்னைக்குப் போயிடறோம். பெட்டிகள் அதிகம்  (!) இருப்பதால்  பெரிய வண்டியுடன் சீனிவாசனை  பெங்களூருக்கு அனுப்பி வைக்கும்படி  ஏற்கெனவே  ட்ராவல்ஸ் ஓனரிடம்  சொல்லி வச்சுருந்தோம்.

'சிட்ரஸில் சொல்லி இருக்கோம்.   நமக்கான பார்க்கிங்  அங்கே இருக்கு. சாப்டுட்டு நல்லா ஓய்வெடுத்துக்குங்க.  காலையில் பார்க்கலாமு'ன்னு  சொன்னார் கோபால்.

முதல்முதலாப் பார்க்கும் எண்ணமும், வியப்பும் ஒன்னுமே இல்லை.  தினம் தினம் பார்க்கும் சிநேகிதியை இன்றைக்கும் பார்த்துப்பேசுவது போலதான் இருந்துச்சு.

நல்ல பண்பட்ட எழுத்துக்குச் சொந்தக்காரர்.  புகைப்படக் கலைஞர்.  கவிதாயினி,  எழுத்தாளர்,  வீட்டு உள் அலங்கார நிபுணர், அருமையான பேட்டி எடுக்கும் நிருபர், குரல் எழும்பாமல் இனிமையாகப் பேசுபவர், விருந்தினரை உபசரிக்கும் பாங்கு இப்படிப் பன்முகம் கொண்ட திறமைசாலி  நம்ம ராமலக்ஷ்மி. ( இன்னும் என்னென்ன திறமைகள்  ஒளிஞ்சுருக்கோ!  அதான் எட்டுன்னு சொல்லிட்டேன்:-)

இந்த வருச கல்கி  தீபாவளி மலரில் இவுங்க எடுத்த படங்கள் வந்துருக்கு என்பது கொசுறுத் தகவல்:-)

அன்றைக்கு நடந்தது என்னன்னு அவுங்க சொற்கள் மூலமாகவே  பார்க்கலாம் நீங்க.   தன்னுடைய  இரண்டு புத்தகங்களை   ( அடைமழை,  இலைகள் பழுக்காத உலகம் ) அன்பளிப்பாக தந்தாங்க.  சென்னையில் நான் வல்லியம்மாவை சந்திக்கப்போறேன் என்பதால் அவுங்களுக்கும் இந்த இரண்டு புத்தகங்களைக்  கொடுத்தனுப்பிய  அன்பு,   என் மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்துச்சு.

இது போதாதுன்னு நினைவுப்பரிசா ஒரு அழகான வெள்ளிக்குத்துவிளக்கு எனக்கு!   நம்ம சாந்திக்கும் ஒரு நினைவுப்பரிசு.

 கோபாலும், ராமலக்ஷ்மியின் கணவரும்  என்னவோ    ஆழ்ந்து உரையாடிக்கிட்டு இருந்தாங்க.  உலகம் சுற்றும் வாலிபர்கள்!  என் கவனம் அங்கே இல்லை:-)  ஆனால்.... ஒன்னு மட்டும் என் காதில் விழுந்தது.

கோபால்:  " அவுங்க எழுதுவதற்கு நீங்கள் என்ன மாதிரி உதவி செய்யறீங்க?"

"அது எதுக்கு, இது எதுக்குன்னு  எல்லாத்துலேயும் தலையை நுழைக்காம  சுதந்திரமா செயல்பட விட்டால் போதாதா?"

சட்னு சொன்னது நாந்தான்:-)))

படங்கள் எல்லாம் குடும்பப்படங்களாகிப் போனதால்  வெளியிடவில்லை. மன்னிக்கணும்.  கண்ணைக் கட்டி இழுத்தது புத்தக அலமாரி!  ஹைய்யோ!!!!

கைநிறைய பரிசுப்பொருட்களுடனும் மனம் நிறைய மகிழ்ச்சியுடனும் அங்கிருந்து கிளம்பினோம். வாசல் கேட்வரை வந்து வழியனுப்பினார்கள்.
எங்களுக்கு தீபாவளிப் பரிசாக புதுத்துணிகள் எடுத்துத் தரணும் என்று சாந்திக்கு   ஒரு பிடிவாதம். 'அதெல்லாம் வேண்டாம். எதாவது பொம்மை வாங்கித் தாங்க. கொலுவில் வைக்கலாம்'  என்று சொன்னதும்  ஒரு  கடைத்தெருவுக்கு (எந்தப்பகுதின்னு இருட்டில் தெரியலை.  மல்லேஸ்வரமாகவும் இருக்கலாம்) கூட்டிப்போனார்கள்.

 அழகழகான  பொம்மைகள்.  அப்பதான் நினைவுக்கு வந்துச்சு எனக்கு கலசத்தில் வைக்க ஒரு முகம் வேணும் என்பது.

" பக்கத்துலேதான் நகைக்கடை இருக்கு. வெள்ளியில் வாங்கலாம்"  சாந்தி சொன்னதைக் கேட்டதும்,  கோபாலின் ரீயாக்‌ஷன் எப்படி இருக்குன்னு பார்க்கலாமேன்னா.....  வழக்கம்போல் முன்னால் ஓடிக்கிட்டு இருந்தார்:-)

'அதெல்லாம் வேணாம்.  நான் வீட்டுலே வரலக்ஷ்மி நோம்பெல்லாம் செய்யறதில்லை.  இது ஜஸ்ட் அலங்காரத்துக்கு மட்டும்தான்'  என்று சொல்லி வாய் மூடலை.....  இதைப் பாருங்கன்னு  கொண்டு வந்து கையில் கொடுத்தாங்க விற்பனையாளர். அட! ஆமாம். இதுதான் !  அவுங்க  காமிச்ச ஒரு  அட்டைப்பெட்டியில் இன்னும் ஒரு பத்துப்பனிரெண்டு முகங்கள்.  மரமுகமோன்னு இருந்த சந்தேகம் ,   வெள்ளை உலோகம் என்றதும் தீர்ந்துச்சு:-) அப்பாடா.....

கண் சரியில்லை, நகையிலே கல் விழுந்துருக்கு,  மூக்கு கொஞ்சம் கோணையா இருக்கோ?  காதுக்கம்மல் நல்லா இல்லையே இப்படி நோணாவட்டம் பார்த்தபின் சின்னதும், கொஞ்சம் பெருசுமா ரெண்டு முகங்கள் தேறுச்சு.  இப்ப.... இதுலே எதுன்னு இன்னொரு முக்கியமான  தீர்மானம் எடுக்கணும்.  நம்ம கிட்டேதான் ரெண்டு குடம்  இருக்கே. அதனால் ரெண்டாவே இருக்கட்டும்.


"ஏம்மா....  ஒன்னு சின்னது ஒன்னு பெருசா இருக்கே?"

நம்மூட்டுக் குடங்களும்  சின்னதும் பெரியதுமாத்தான் இருக்கு:-)

வெளியே கடைத்தெருவில்  கலகலன்னு தீபாவளிப் பர்ச்சேஸ் கூட்டம்.  சந்தடியைப் பொருட்படுத்தாமல்  நல்ல உறக்கத்தில் இருக்கார் சிண்ட்டு.


பழவகைகள் வண்டியில் விற்பனை. கண்ணை  இழுத்தது கொய்யா. எங்கூர்லே கிடைக்காதே.  நல்ல பெரிய பழங்களாப் பொறுக்கி வாங்கினேன்.  அதில் நல்லாக் கனிஞ்சது ஒன்னு எனக்கு!



கடை வரிசைகளுக்கு எதிரே  ஒரு பார்க்.  கடையின் பெயரை அப்பதான் பார்த்தேன்.  தேவி ப்ரஸாத் சூப்பர் பஸார்.  மல்லேஸ்வரம்தானாம்.

வீட்டில் சாப்பிடலைன்னு சாந்திக்கு ஒரே குறை.  மணி எட்டாகப்போகுது. ராத்திரி டிஃபனுக்கு இட்லி செஞ்சு தரேன்னு  இழுத்துக்கிட்டுப் போனாங்க.   மைத்துனரின் இரண்டு மக்களும் ஜெர்மனியில் மேற்படிப்பு.  அவுங்களுடன் ஸ்கைப்பில்  பேசிக்கிட்டு இருந்தோம் இட்லி  வேகும்வரை:-)

பெரியம்மா பெரியப்பாவை வீட்டில் பார்த்தது அவுங்களுக்கும் மகிழ்ச்சி. மகன் சமையல் நிபுணரா மாறிக்கிட்டு இருக்கார். பேசாம  ஜெர்மனியில் ஒரு இண்டியன் ரெஸ்ட்டரண்ட்  ஆரம்பிக்கணும். அதென்டிக் சவுத் இண்டியன் மெனு.  சுருக்கமாச் சொன்னா....  இப்ப இண்டியன் உணவகங்களில்  இருக்கும் ஐட்டங்கள் ஒன்னுமிங்கே தலை காட்டக்கூடாது,ஆமாம்:-)

மறுநாள் காலை எங்களோடு ப்ரேக்ஃபாஸ்ட்  சாப்பிடவரச் சொல்லிட்டு  அறைக்கு வந்து சேர்ந்தோம்.



"ஏங்க  கொய்யாப்பழம்   எங்கே?"

ஙே....

தொடரும்......:-)


PIN குறிப்பு:  கோபால் அடைமழையை வாசித்துவிட்டார்!  சின்னச்சின்னக் கதைகளாக தன்னைப்போன்ற பாமரனுக்கும்  புரியும்படியாக எளிமையாக இருக்காம்!!!!