Friday, February 21, 2014

விளக்கொளி என்னும் தீபப்ரகாசர், தூப்புல், திருதண்கா


இப்ப நாம் தரிசனத்துக்காகப் போய்க் கொண்டிருக்கும் கோவிலும் அந்த நூற்று எட்டில்வருவதுதான். கொஞ்சநாட்களா எப்படியாவது ,முடிஞ்சவரை பாடல்பெற்ற தலங்களா இருக்கும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களை தரிசிக்கணும் என்ற பேராசை வந்திருக்கு. நூற்றியெட்டுன்னு சொல்லிக்கிட்டு இருக்கோமே தவிர, பூலோகத்தில் இருப்பவை நூற்றியாறுதான். மேலோகத்தில் பாக்கி ரெண்டும் இருக்காம்!

எனக்குத் தெரிஞ்சவரை நம்ம பதிவர்களில் இந்த நூற்றியாறையும் தரிசித்தவர் நம்ம  லதானந்த் அவர்கள்தான்.  என்ன ஒரு புண்ணியாத்மா !  அடுத்து நினைவுக்கு வர்றவர் நம்ம கோபி ராமமூர்த்தி. அவரும்  தொன்னூத்தியொன்பது  போய் வந்துட்டார்!  இன்னொருத்தர் சொல்லவே வேணாம். நம்ம ஸ்ரீ. 'இணையநண்பர்களுக்காக' ன்னு பதிவு வச்சுருக்கார்.  கோவில்களின் படங்களைப் போடுவதில் இவரை அடிச்சுக்கவே முடியாது! அருமையான தெளிவான படங்கள். அடடா....நாம் இன்னும் போகலையே என்ற குறை தீர்க்கும் வகை.  நாம் போய் வந்த கோவில்களா இருந்தால்.... அடடா!  இந்த இடத்தைப் பார்க்க விட்டுப் போச்சேன்னு லேசாப் புலம்ப வைப்பவர்:-)

நாங்க  முக்கித்தக்கி  இதுவரை  ஒரு நாப்பத்தியஞ்சு ஸேவிச்சிருக்கோம்.  இன்னும் அறுபத்தியொன்னு இருக்கே! இந்தியப்பயணம் வரும்போது  நாலைஞ்சு கிடைச்சால்  போதும் என்ற நினைப்புதான்.  கிடைக்கும் அதிகப்பட்சமான  மூணு வாரத்தில்  இவ்ளோதான் முடியும்.

திவ்யதேசங்களை ஒருமுறை  நாடுவாரியாப் பிரிச்சுப்போட்டுருந்த  பட்டியலைப் பார்த்தபோது, தொண்டை நாட்டுலே அதுவும் காஞ்சிபுரத்துலேயே பதினைஞ்சு  திவ்ய தேசங்கள் இருக்குன்னு தெரிஞ்சது.  இதுலே 14 தேசங்கள் ஏகதேசம் மூணுகிமீ சுத்தளவுக்குள்ளேயே! ஒன்னே ஒன்னுதான்  நகரிலிருந்து அஞ்சு கிமீ தள்ளி.



சொன்னவண்ணம் செய்தவர் கோவிலில் இருந்து  ஜஸ்ட்  ஒரு கிலோமீட்டர் தூரம்தான் தீபப்பிரகாஸர் கோவிலுக்கு. முதலில் பார்த்த அஷ்டபுயங்கரருக்கு ரொம்பக்கிட்டே!  வெறும் அரைக் கிலோ மீட்டர். சரியான விவரம்  பார்த்துக்காம  இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமா  டி.கே. நம்பித் தெருவை பலமுறை கடந்தோம்.

கோவில் உள்ள தலம் திருத்தண்கா.  நல்ல குளிர்ந்த இடம் என்று பொருள்.  தூப்புல்  என்றும் ஒரு பெயரிருக்கு. யாகம் செய்யத் தேவையான  தூயபுல் அதாங்க தர்ப்பைப்புல்  இங்கே ஏராளமாக் கிடைச்சுக்கிட்டு இருந்த  காலமும் இப்பப் போயிந்தே:(

போனபதிவில் சரஸ்வதியின் அட்டகாசங்கள் பார்த்தோமே.... அதன் தொடர்ச்சிதான் இங்கே. ப்ரம்மாவின் யாகத்தை நடத்த விடாமல் சூரிய சந்திரர்களை அசுரர்கள் உதவியோடு கிட்நாப் செஞ்சாங்க  சரஸ்வதி.  எங்கும் இருளானதும் மஹாவிஷ்ணுவிடம் காப்பாற்றச் சொல்லி ப்ரம்மா வேண்ட, அவரே ஒளிபொருந்திய மேனியுடன் யாகசாலைக்கு எழுந்தருள்கிறார். அப்படி ஒருவெளிச்சம், கண்ணைக்கூசுதுன்னு  கொஞ்சம் காண்ட்ராஸ்ட் ஆக இருக்கலாமேன்னு  மஹாலஷ்மி தாயார் ,  பராசக்தியின் அம்சமாகப்  பச்சை வண்ண மேனியுடன்  இங்கே மரகதவல்லி என்னும் பெயரோடு  இருக்காங்க.

இன்னொரு வர்ஷன்  கிடைச்சது. கோபத்திலிருக்கும் சரஸ்வதி,  மாயநலன் என்ற  அரக்கனை ஒரு நெருப்புக்கோளமாக்கி யாகசாலையை  அழிக்க அனுப்பும்போது,  பெருமாள் அந்த  தீக்கோளத்தைக் கையில் பிடித்து  சாந்தமாக்கி, அதையே   விளக்காகக் கையில் ஏந்தி நின்றார். விளக்கொளி என்ற பெயருக்கு  இதுவே பொருத்தமாத்தான் இருக்கு. நின்ற திருக்கோலம்.  பின்னே.... விளக்கைக் கையில் ஏந்திக்கிட்டுப் படுக்கவா முடியும்:-)

திருத்தண்கா என்ற பெயருக்கு ஏத்தபடி நல்ல மரங்கள் அடர்ந்த பிரகாரங்கள். கோவில் நந்தவனத்தில் வாழையும்  மற்ற பூச்செடிகளும் இருக்கு. பசுமடத்தில் நல்ல ஆரோக்கியமான பசுக்களும் கன்றுகளும். உள்ளூர் பக்தர்கள்  கணவரும் மனைவியுமா கோவிலை வலம்வந்துட்டு, கையோடு கொண்டு வந்திருந்த பழங்களை மாடுகளுக்கு ஊட்டிக்கிட்டு இருந்தாங்க.






மரகதவல்லித் தாயார் சந்நிதி.

மூலவர் சந்நிதி. இருட்டா இருக்கு:(

மார்கழி மாசம் புண்ணிய மாசம், மாதங்களில் நான்  மார்கழின்னு  பெருமாள் சொல்லிக்கிட்டு இருந்தாலும்.... மார்கழியில்  பெருமாள் கோவிலுக்குப் போகக்கூடாதுன்ற எண்ணம் எனக்கு இப்போ வந்துக்கிட்டு இருக்கு. அவர் பாட்டுக்கு தைல எண்ணெய் தேய்ச்சுக்கிட்டுத் திரை மறைவில் இருக்கார்.  ஏறக்கொறைய முக்கால்வாசி கோவில்களில் உற்சவர் தரிசனம்தான். சரி, நாம்தான் பார்க்கலை அவர் நம்மைப் பார்த்திருப்பார்தானேன்னு  நம்மை ஆற்றுப்படுத்திக்கத்தான் வேணும்.

ஒரு வேடிக்கை பாருங்களேன்......   வருசத்துலே பதினோரு மாசம் இருட்டுலே  இருக்கும் ஆண்டாளுக்கு  மார்கழி முழுசும்  உபசாரம் அமர்க்களமுன்னா,  பதினோரு மாசம் பளிச்ன்னு  தரிசனம் கொடுக்கும் பெருமாளுக்கு  மார்கழி ஆனால் எண்ணெய் தேய்ச்சுக்கிட்டுத் திரை போட்டுக்கணுமாம். ஒன்றிருக்க ஒன்றில்லை:(

கோவில் குளம், சரஸ்வதி தீர்த்தம். சொட்டுத்தண்ணி இல்லை:( கோபத்தில் ஓடி ஒளிஞ்சது உண்மைதான் போல!

கொடிமரம் எந்த கவசமும் இல்லாமல் மரமாகவே இருக்கே!

 கோவில் திறந்திருக்கும் நேரம் ரொம்பவே கொஞ்சமா இருக்கு.  காலை ஏழரை முதல் பத்து, மாலை ஐந்து  முதல் ஏழு என்று  ஒருநாளைக்கு  நாலரைமணி நேரம் மட்டுமே!

முழுக் கோவிலையும் புனருத்தாரணம்  செய்ய உதவி செஞ்சவர்கள் பற்றிய (நவீனகால)கல்வெட்டு ஒன்னு இருக்கு.

ஸ்ரீ உத்தர அஹோபில மடாதிபதி , ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வாமி பால முகுந்தாச்சார்யா அவர்களின் கட்டளைப்படி ஜோத்பூர்   ஸேட் மக்னிராம் ராம்குமார் பங்காட் ஆஃப் டிட்வானா,விக்ரம ஆண்டு!


வேதாந்த தேசிகர்  அவதாரத் தலம் (பிறந்த ஊரும் ) இது என்பது இன்னுமொரு விசேஷம்.

தொடரும்...........:-)







Wednesday, February 19, 2014

சொன்ன பேச்சைக் கேட்டவன்!

அஷ்டபுயங்கரத்தானில் இருந்து கிளம்பின  மூணாவது நிமிசம் கோவில் கோபுரம் கண்ணில் பட்டது.  அட! இவ்ளோகிட்டவா இருக்குன்னு வியப்புதான்!  சரியாச் சொன்னால் வெறும் 650 மீட்டர் தூரமே!



பெரிய திருக்குளம் கண்ணில் பட்டது.  பொய்கை!  இதில்  ஒரு பொற்றாமரையில்தான் அவதரித்தார் பொய்கை ஆழ்வார்.  பனிரெண்டு ஆழ்வார்களில் முதல்வர்  இவரே!


திருவெஃகா என்பது  இத்தலத்தின் பெயர்.  இதை திருவெக்கா, திரு வேகான்னு  கூடச் சொல்றாங்க.  இங்கத்துப் பெருமாளுக்கு வேகா, ஸேதுன்னும்  பெயர்கள் உண்டு.

பிரம்ம லோகத்தில் சரஸ்வதி வீணை வாசிக்க,  ப்ரம்மா தாமரைப்பூவில் அமர்ந்து அதைக் கேட்டுக்கிட்டேஇருக்கார். மற்ற தேவர்களும் முனிவர்களுமா சபை நிறைஞ்சு இருக்கு. எல்லோரும் மகிழ்ச்சியா இருந்தால் கூட சில பெரியவர்களுக்குப் பொறுக்காது போல!

 மஹாலக்ஷ்மி, சரஸ்வதி இவர்களில் யார் சிறந்தவர்ன்னு ப்ரம்மாவிடம் விநயமாகக் கேட்டார்  ஒருவர்.  (கொளுத்திப்போட்டுட்டார்யா.... கொளுத்திப்போட்டுட்டார்...... )   ப்ரம்மா  ஒருவிநாடி கூட யோசிக்காமல் மஹாலக்ஷ்மின்னார் . எப்படின்னு  விவரம் சொல்லுங்கன்னதும்,  மஹாவிஷ்ணுவின் மார்பில் உறைவது  மஹாலக்ஷ்மி இல்லையோன்னார்.

கணவர் தன்னை  ஒசத்தியாச் சொல்லலைன்னு  கலைவாணிக்கு  லேசா ஒரு கோபம் முளைக்குது.

கொளுத்துனவர்,சும்மா இருக்காமல் பூலோகத்தில்  கங்கை நதி, சரஸ்வதி நதி இதில் எது சிறந்தது?  என்றுகேட்க,  ப்ரம்மா உடனே  'கங்கைதான். அதுதானே  பெருமாள் காலைத் தொட்டு, அதான்பின் பூமிக்கு வருது' ன்னதும்  சரஸ்வதியின் கோபம்  சரசரன்னு அதிகரிச்சு ப்ரம்மலோகத்தை விட்டு நீங்கி, பூலோகத்தில் சரஸ்வதி நதிக்கரையில் வந்து  தவம் செய்ய  உக்கார்ந்துட்டாங்க.

காஞ்சியில்  ஒரு யாகம் செய்ய ப்ரம்மா உத்தேசிச்சு இருந்த சமயம் அது. யாகத்துக்கு   மனைவியுடன்  மணையில் இருக்கணும் என்பது சாஸ்த்திர விதி. வசிஷ்ட்ட முனிவரிடம் சேதி சொல்லி சரஸ்வதியைக்கூட்டி வரணுமுன்னு கேட்டுக்கிட்டார். முனிவர் போய் காரியத்தைச் சொன்னாலும், பிடிவாதமா இருந்த சரஸ்வதி,வரமாட்டேன்னுபோய்ச் சொல்லுங்கன்னு முனிவரைத் திருப்பி அனுப்பிட்டாங்க.

சரி போகட்டுமுன்னு விட்டுட்டு ப்ரம்மா தன்னுடைய இன்னொரு மனைவி சாவித்திரியுடன் யாகம் செய்ய ஆரம்பிச்சுட்டார்.  இந்த யாகத்தைக் கலைக்கணுமுன்னு வந்த அசுரர்கள், சமாச்சாரம் தெரிஞ்சதும் நேரா சரஸ்வதிகிட்டே போய்   பிரம்மாவை பற்றிக் கோள்மூட்டி, 'அங்கே உம்முடைய  வீட்டுக்காரனின் ஸ்மால் ஹௌஸ் மணையில் இருக்கா'ன்னதும் சரஸ்வதிக்குக் கோபம் தலைக்கேறி,வேகவதி நதியாக  உருவெடுத்து சீறிப்பாய்ஞ்சு யாகசாலையை அழிக்க வர்றாங்க. மஹாவிஷ்ணு உடனே    சேஷனுடன் வந்து அந்த ஆற்றின் குறுக்கே படுக்கையைப்போட்டு வெள்ளத்தைத் தடுத்து நிறுத்திட்டார். அந்த இடமே வேகா என்றுபெயர் பெற்று காலப்போக்கில் வெஃகான்னு ஆகி இருக்காம்.



கோபுரவாசல் கடந்து  உள்ளே போனதும்  பலிபீடமும் கொடிமரமும்.   மூலவர் சந்நிதிக்குப்போகுமுன்  கோவிலை வலம் வந்தோம். பெரிய முற்றத்தில் அங்கங்கே சந்நிதிகள்.  கோவிலின் அம்சம் இல்லாமல் சாதாரணக் கட்டிடமும் அறைகளுமாத்தான் இருக்கு! கருவறை விமானங்கள் மட்டும் கட்டிடத்துக்குள்ளே இருந்து  எட்டிப்பார்க்கின்றன.







 கோபுரவாசலில் இருந்து இடது பக்கம் திரும்பினால் ஆண்டாள் சந்நிதி.  பூமாலை அலங்காரத்துடன் ஆளுயரஆண்டாள். அருகில் ஒரு பட்டர் திருப்பாவை சொல்லிண்டு இருந்தார். மார்கழிமாசம் இல்லையோ! அதான் கவனிப்பு.





பொய்கை ஆழ்வார் அவதார மண்டபம், பவித்ரோத்ஸவ மண்டபம் எல்லாம் சமீபத்திய  காங்க்ரீட்  சமாச்சாரம்.


 பழைய மண்டபங்கள் ஒன்னுரெண்டு இருந்தாலும் பராமரிப்பு என்னும் பெயரில்  வெள்ளையடிச்சு வச்சுருக்காங்க.கற்றூண்களில் இருக்கும் சிற்பங்கள் எல்லாம்  மூக்குமுழி தெரியாமல்  வெள்ளையோ வெள்ளை:(

இங்கே தாயார்  கோமளவல்லி  என்ற பெயரில் தனிச் சந்நிதியில். ரொம்பவே சாதாரணக் கட்டிடம்:(

மூலவர் யதோக்தகாரி தரிசனம்  நல்லாவே கிடைச்சது.  பெருமாள்   புஜங்க சயனமா மேற்கு  நோக்கிக் கிடக்கார். அநந்த சயனம் என்றால் பொதுவா கிழக்கு  நோக்கிக் கிடப்பதுதான் வழக்கம். ஏன் திசை மாறிக்கிடக்கார்ன்னா அதுக்கும்  'கதை' ஒன்னு இருக்கு.

 நடந்தது என்ன?  நம்ம  திருமழிசை   ஆழ்வாருக்கு ஒரு சிஷ்யப்பிள்ளை இருந்தார். பெயர், கணி கண்ணன்.  ஆசானும் சீடருமா காஞ்சியில் இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  அப்ப இவுங்க சேவையில் பங்கெடுத்து உதவி செய்த ஒரு  மூதாட்டியை, ஆழ்வார்  தன்னுடைய   சக்தியைப் பயன்படுத்தி   பேரழகுள்ள இள மங்கையா மாத்திடுவார்.

விவரம் தெரியாத  அவ்வூர் மன்னன் பேரழகியைக் கல்யாணம் பண்ணிக்குவார். கொஞ்ச நாள் கழிச்சு பேச்சு வாக்கிலே   மனைவி இந்த அதிசயத்தை  மன்னரிடம் சொல்லப்போக, அவரும் திருமழிசையைப் பார்த்து என்னையும் இளைஞனா மாத்தியே ஆகணுமுன்னு கேட்டுக்கறார்.  முடியாத காரியம்னு திருமழிசை மறுக்க,அப்படீன்னா இந்நாட்டை விட்டு  வெளியேறுன்னு கடுமையா ஆணை போட்டார்.

குரு கிளம்புனதும் சிஷ்யனும் கூடவே கிளம்பறார்.  இவுங்க போயிட்டா நமக்கு யாரு  ஸேவை செய்யப்போறாருன்னு பெருமாள் முழிக்க,

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும்
உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்'

'இதா பாரு...  கணிக்கண்ணன்  (என்னோடு) கிளம்பிட்டான். நீ என்னத்துக்கு இன்னும் இங்கே படுக்கைப் போட்டபடி கிடக்கே? உன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கிட்டுக் கிளம்பு'ன்னு  சொன்னதும்  மறு பேச்சுப்பேசாம  பாயைச் சுருட்டிக்கிட்டுக் கிளம்பிட்டான் எம் பெருமாள். பெருமாள் கிளம்புனதும் கூடவே மஹாலக்ஷ்மியும்  கிளம்பிட்டாள்.  மச்சான் போறதைப் பார்த்துக்கிட்டுச் சும்மா நிக்க முடியுமா? சிவன் & ஃபேமிலியும்  மூட்டையைக் கட்டிருச்சு. மற்ற தேவர்கள் எல்லாம் படை போல் பூமி அதிரக்   கூடவே கிளம்பிட்டாங்க.

எல்லாம் கிளம்பி வரிசையாப் போறாங்க. ஸ்ரீதேவி  போனதும் நாட்டின் செல்வம், அழகு எல்லாம்  சட்னு மறைஞ்சுருது.  தரித்திர தேவதையான அக்கா மூதேவி  இடம்பிடிக்க ஓடி வர்றாள்.  எல்லாத்தையும் பார்த்த மன்னனுக்கு  திகிர்னு கிலி பிடிச்சது. 'ஐயோ வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இல்லாமல்  நானே அழிவைத்  தேடிக்கிட்டேனே'ன்னு பதறி, ஓடிப்போய்  திருமழிசை காலில் விழுந்து 'என்னை மன்னிச்சுடுங்கோ.அறியாமையால்  இப்படி அசட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்'னு அழறார்.

போயிட்டுப்போறது போன்னு மன்னிச்சுட்டு,  சிஷ்யப்பிள்ளையைப்பார்த்து  'வா, நாம் இந்த ஊருலேயே  இருக்கலா'முன்னு சொல்லித் திரும்பி வர்றார். கூடவே போன பெருமாளும்,பாயும், பட்டாளமும்  கூடவே திரும்பி வர்றாங்க.

  கக்கத்துலே சுருட்டிவச்ச பாயுடன் பெருமாள்  இப்ப என்ன செய்யணும்னு தெரியாம திருதிருன்னு முழிக்கிறார்.  சுருட்டச் சொன்னவர் விரிக்கச் சொல்லலையே?  இப்படியே நிக்கணுமான்னு யோசனை. இந்தப் பாம்பு என்னா கனம் கனக்குதுன்னு  பாரேன்னு மனசுக்குள்ளே புலம்பறார். ஆயிரம் தலையுடைய சேஷன் இல்லையோ!  ஆழ்வார் பார்த்தார். அடடா....

(உண்மையிலேயே பாம்பு  பயங்கர கனம்தான். ஜஸ்ட்  உடம்பைக் கொஞ்சம் தூக்கிப் பார்த்ததே  போதுமுன்னு ஆச்சு. இதுலே ஐஸ் கட்டியைத் தொட்டது போல சில் வேற.  முன்பொருக்கில்  சிங்கை ஜூவில்  மகளுக்கு மலைப்பாம்பைத் தோளில் போட்டுப் படமெடுத்துக்கணுமுன்னு  ஒரே ஆசை. சரின்னு  தலை ஆட்டி வச்சேன்.  இவள் கொஞ்சம் கூடப் பயமே இல்லாமல்  கழுத்துலே போட்ட பாம்பை வருடிக்கொடுக்கிறாள். இதுலே  நீயும் வந்து  தொட்டுப்பாருன்னு    என்னையும் பலமுறை கூப்பிட்டதும்  சரின்னு போய்ப் பக்கத்தில் உக்கார்ந்து   வாலைத் தொட்டுத் தூக்கிப் பார்த்தேன்.)

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்

ஓக்கேன்னுட்டு பாயை விரிச்சுட்டு அப்பாடான்னு  கிடந்தான். அவசரமாப் பாயைப்போட்டதில் இடப்பக்கம் இருக்க வேண்டிய தலையணையும் அரவக்குடையும்   வலது பக்கம்  வந்துருச்சு. அப்படியே ஓடிப்போய் படுக்கையில் விழுந்தவன் இன்னிக்கும்  அப்படியே  கிடக்கிறான்.  இதேபோலத்தான் திருவெட்டாறு ஆதிகேசவனும் மேற்கே பார்த்துப் புஜங்க சயனத்தில் கிடக்கான். அவனுக்கு அங்கே கதை வேற போல!:)

சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று அழகுத் தமிழில் பெயர் இருந்தாலும்  யதோக்தகாரி (இதையுமே யதோத்காரி என்றுதான் ) பெருமாள் கோவில் என்றே  மக்கள்ஸ் சொல்றாங்க.

பெருமாளே சொன்னதைக் கேக்கறான்.   வெறும் ஆளோ? ஹூம்............

தொடரும்......:-)





Monday, February 17, 2014

நம்ம யானையைக் காப்பாத்தின எட்டுக்கைகாரன் !


 ஒருநாள் பயணமாக் காஞ்சீபுரத்துக்குப் பலமுறை போய் வந்துருக்கேன். பொதுவா எப்போ போனாலும் காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில்பார்த்து முடிக்கும்போதே உச்சிகால பூஜைமுடிஞ்சு கோவில் அடைக்கும் நேரம் வந்துரும்.  இனி கோவில்கள் எல்லாம் சாயங்காலம் நாலு மணிக்குமேல்தான். அதுவரைநேரம் போக்க? இருக்கவே இருக்குப்புடவைக்கடைகள். இத்தனை தூரம் பட்டுப்புடவை நகரத்துக்குள் வந்துட்டுப் புடவை வாங்காமப்போனால் சாமிக் குத்தமாகிறாதா?

நாலுமணிக்கு நம்ம வரதனைக் கும்பிட்டுக்கிட்டு, பல்லிகளையும் தொட்டுப் பார்த்துட்டு வெளிவரும்போதே நல்லாவே இருட்ட ஆரம்பிச்சுரும்.  காலிலே வெந்நீரைக் கொட்டின கதைதான் அதுக்குப்பிறகு. சட்னு கிளம்பினால்தான்   வீட்டுக்கு ராத்திரி ஒன்பதுக்குள்போய்ச் சேரலாம்.  சென்னைக்குள் நுழைஞ்சவுடன் இருக்கும் போக்குவரத்தில் மாட்டிக்கிட்டு ஊர்ந்துவர எப்போதும் பத்துமணி ஆகிரும் என்பது இன்னொரு சோகம்.

முந்தி ஒரு காலத்தில் எல்லாம் சாப்பாடு வேற கட்டிக்கிட்டுத்தான் போவோம். பயணத்தில் ரெஸ்ட் ரூம் பிரச்சனைன்னு ஒரு சமயம்  ஒரு ஹொட்டேலில் ரூம்  கூட  அரைநாளுக்கு  எடுக்கும்படியாச்சு. நல்லவேளையா இப்போ சரவணபவன் வந்தாச்சு.   ஓரளவு சமாளிக்கமுடியுது!

இப்போ ரோடு கொஞ்சம் நல்லா இருப்பதால் மூணு மணிநேரம் என்பது ரெண்டு மணியாக் குறைஞ்சுருக்கு.  போரூர் ஜங்ஷன் வழியாப்போறோம். ஒரு இடத்தில் டோல் கட்டணும். அதைக் கடந்து ஒரு 15 நிமிசமானதும்........  கொஞ்ச தொலைவில் ஏதோ கோவில் கட்டுமானப்பணி  நடப்பது தெரிஞ்சது.  வட இந்திய ஸ்டைலில் கோபுரம்.  எனெக்கென்னவோ  ....  குஜராத்  சோம்நாத் கோவில் நினைவு மனசில் வந்து போச்சு.

நமக்கெல்லாம் அலைச்சல் வேணாமுன்னு   வடக்கர்கள்  அவுங்க ஸ்டைல் கோவில்களை இங்கே கொண்டுவந்துக்கிட்டு இருக்காங்க சிலபல வருசங்களாக!  அதுலே இதுவும் ஒன்னா  இருக்குமுன்னு நினைக்கும்போதே  இன்னும் கொஞ்சதூரத்தில்  பெரிய நந்தியும்  எதிரில்  பெரிய தக்ஷிணாமூர்த்தி  சிலையுமா  இன்னுமொரு  கோவில்  உருவாகிக்கிட்டு  இருக்கு!  பெரிய பெரிய சுதைச்சிற்பங்கள் வைப்பதுகூட  வடக்கத்து ஸ்டைல்தான், இல்லையோ?


அங்கிருந்து ஒரு இருவது நிமிசப்பயணத்தில்  ஊருக்குள் நுழைன்சோம். நகரேஷூ காஞ்சி என்ற புகழ்பெற்ற கோவில் நகரம்! கண்முன்னே தெரிஞ்சது சங்கரமடத்தின்  மாடக்கோபுரம். இடதுபக்கச் சாலையில் திரும்பினால் கொஞ்ச தூரத்தில் இன்னொரு பெரிய கோபுரம். ஸ்ரீ கச்சபேஸ்வரர்!

காந்தி ரோடில் போறோம்.  இந்தமுறை  ஒரு ரெண்டு நாளாவது தங்கணும் என்னும் ப்ளான், நம்ம ராஜேஷ் வைத்யாவால்  ஒருநாளாகக் குறைஞ்சிருந்தது. அதில்  எனக்கொண்ணும் குறையில்லை:-)ஏற்கெனவே அங்கே ஜி ஆர் டி ஹொட்டேல் இருக்குன்னு  வலையில் பார்த்து  அறை புக் பண்ணிக்கலாமுன்னு ஃபோன் செஞ்சால்........  நாம் சொல்லும் தேதிக்கு அறை காலி  இல்லைன்னு சொன்னாங்க. வேற நல்ல இடம் ஒன்னு சொல்லுங்கன்னு அவுங்ககிட்டே கேட்டதுக்கு  எம் எம் ஹொட்டேல் நல்ல வசதியோடு இருக்குன்னாங்க.  தொட்டடுத்து சரவணபவன் இருக்காம்.

நேரே அங்கேதான்   அந்த எம் எம்முக்குப் போனோம்.   சென்னையிலிருந்து  ஃபோன் செஞ்சு  அறை இருக்கான்னா.... இருக்குன்னாங்க.  நாம் போன சமயம்  (காலை  பத்து மணிதான்)  அறைகளைச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருக்கோமுன்னு ரிஸப்ஷனில் சொன்னாங்க. அறையைப் பார்க்கலாமான்னதுக்கு  மாடிக்குக் கூட்டிப்போய் காமிச்சாங்க. ஐயோ:(  ஒரே மக்கல் நாத்தம்! கோபாலின்  முகம் போனபோக்கைப் பார்க்கணுமே:-)  படி ஏறி வரும் வழி இருட்டா இருக்கு.

ஒரே ஆறுதல்.மாடிப்படி ஆரம்பிக்குமிடத்தில்  வலது பக்கம் ரெண்டு எட்டு வச்சு அங்கிருக்கும் கதவைத் திறந்தால் சரவணபவன். அங்கேயும் காலை வைக்க முடியாத அளவு கூட்டம் நெரியுது! ஒரு காஃபி குடிக்கலாமான்னு கேட்ட கோபாலை முறைச்சேன்.

அப்பதான் வந்து நின்ன ஒரு தனியார் பஸ்ஸிலிருந்து பச்சை  உடை அணிஞ்ச கூட்டம் திமுதிமுன்னு  உள்ளே போறாங்க. விசாரிச்சதும்  அவுங்க முருகபக்தர்கள் என்றார்கள். சாமிகளுக்கெல்லாம் இப்போ கலர்கோட் (code)வந்துருச்சு போல.  சிகப்பு  மேல்மருவத்தூர், கருப்பு ஐயப்பன், பச்சை முருகன், இன்னும் பெருமாளுக்கு என்னன்னு  தெரியலை. நான் ஒரு வெளிறிய  காவி நிறம் உடுத்தி இருந்ததால் அது பெருமாள்கலர்ன்னு வச்சுக்க வேண்டியதுதான்.

அந்த ஜி ஆர் டி யில் இன்னொரு முறை கேட்டுப் பார்க்கலாமுன்னா இவர்  ஃபோன் நம்பரை எழுதி வச்சுக்கலைன்றார். இங்கேதானே இருக்கு நேரில்போய்க் கேக்கலாமேன்னு  போனோம். காந்தி ரோடு.  கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்குக் கட்டிடம்.  நேரில் போனதும் இடம் கிடைச்சது. இங்கேயும்  ஜஸ்ட் ஒரு 100 மீட்டர் தள்ளி சரவணபவன்   ஒன்னு இருக்கு.  போனமுறை நாம் சாப்பிடப் போனது இங்கேதான். இதுவும் மெயின் ரோடிலிருந்து கொஞ்சம் உள்ளே தள்ளிதான் இருக்குன்னாலும், ஜிஆர் டி கட்டிடத்துக்கு ரொம்பப்பக்கம்.  அங்கே பின்வாசல் இருந்தால் அதைத் திறந்து இங்கே  கால் வைக்கலாம்.

அறை வசதியாகத்தான் இருக்கு.  விலைமதிப்புள்ள பொருட்களை வைக்க எலெக்ட்ரானிக் லாக்கர் வசதி இருக்குதான். அதுக்காக  அதை நம்ம தலைமாட்டுலே வச்சுக்கிட்டால் நல்லாவா இருக்கும்?

சின்னப்  பெட்டியைப் போட்டுட்டு கோவில் தரிசனங்களுக்குக் கிளம்பினோம்.  வழக்கம்போல் நம்ம சீனுவாசன்தான் ட்ரைவர். வழக்கமாகப்போகும் கோவில்களுக்கு இந்த முறை பின்னுரிமை. பார்க்காத கோவில்களுக்குத்தான் இந்தமுறை போறோம். எல்லாம் 108  வரும் திவ்ய தேசங்கள்..  கடைசியில் நேரம் இருந்தால்  மற்றவர்களைப்  பார்க்கலாம் என்றேன்.

ஊர் நிறையக் கோவில்களே என்றாலும்  நான் சொன்ன கோவில்கள் பெயரைக்கேட்டதும் 'ஙே' ன்னு முழிச்சார்  நம்ம சீனு.  வாயிலே இருக்கு வழின்னேன்:-)

ஏற்கெனவே கொஞ்சம் ஹோம் ஒர்க் செஞ்சு எடுத்துவச்ச லிஸ்ட் கையில்.  தொண்டைமண்டலத் திவ்யதேசங்கள் . பட்டியலில் முதலில் இருக்கார் வரதர்.  நாளைக்குப்பார்க்கலாம். இப்போ அஷ்டபுஜப் பெருமாள்.  ஹட்ஸன் பேட்டை தேரடிக்கு சமீபத்தில் கோவில் இருக்கு. நம்ம வரதருக்கு மேற்குத் திசையில்  ஜஸ்ட் ஒரு கிமீ தூரமே!)

ரொம்பவே பழைய கோவில்தான். கேட்டால் ரெண்டாயிரம் என்று  சொல்கிறார்கள்.  ( இது ஒரு ஆகி வந்த எண்ணிக்கையோன்னு நினைப்பேன்.  பழைய கோவில்களாத் தோற்றமளிக்கும் எந்தக் கோவிலைப் பற்றிக் கேட்டாலும் அர்ச்சகர்களுக்கும் பட்டர்களுக்கும்  டக் னு வாய்ச்சொல்லா வருவது  இந்தரெண்டாயிரமே! ( சரியானபடி  பராமரிப்பு செய்யாத சமீபத்திய கோவில்களும் பார்க்கப் பழசாத்தான்  இருக்குன்னாலும் 'அந்தப்பழசு' வேற கேட்டோ!

கோபுரவாசலில் நிக்கறோம்.நமக்கு வலப்பக்கம்  கோவில் குளம். கஜேந்த்ரப் புஷ்கரிணி.  ஒருகாலத்தில் பிரமாண்டமான குளமா இருந்துருக்கணும்.   தாமரைப் பூக்கும் தடாகம். கஜேந்த்ரன் என்ற  யானை தினமும் தாமரைப்பூ போட்டுப் பெருமாளைக் கும்பிட்ட தலம். ஒர்  நாள் குளத்தில் இருந்த முதலை, யானையின் காலைக் கவ்வி இழுக்க, பலகாலம் போராடிப் பார்த்த யானை கடைசி நிமிசத்தில் 'ஆதிமூலமே'ன்னு குரல் கொடுக்கச் சட்னு  கருடவாகனத்தில்  பறந்துவந்து  முதலையைக் கொன்னு, கஜேந்திரனைக் காப்பாற்றிய இடம் இது(வே)தான்.

இப்பப் படிக்கட்டுகள் எல்லாம் அமைச்சுக் குளம் சின்னதாக் கிடக்கு.  யானையால் இந்தப் படிகளில் இறங்க முடியுமுன்னு எனக்குத் தோணலை. அப்படியே இறங்கினாலும்  வெறும் பாண்டி விளையாடத்தான் முடியும்.  புல்லும் மணலுமான வெறுந்தரை. தண்ணீர் மிஸ்ஸிங்:(

கோபுரவாசலைக் கடந்து உள்ளே போனால் இடது கைப்பக்கம் பெரிய  மண்டபம். இங்கேதான் விசேஷ நாட்களில் வந்து ஸேவை சாதிப்பார் போல.  மண்டபத்தின் கோடியில்  மணிமண்டபம் ஒன்னும் இருக்கே.

 கோபுரவாசலுக்கு நேரா  அலங்காரம் அதிகமில்லாத வைகுண்டவாசல்!


கோவில் பிரகாரத்தில் வலம்வந்தால்  பெரிய முற்றத்தில் அங்கங்கே சந்நிதிகள்.  முதலில் கண்ணில் படுவது கொடிமரம்.  அருகே பெரிய திருவடிக்கான குட்டிச் சந்நிதி.  அவருக்கு எதிரே மூலவர்.  இவருக்கு ஆதி கேசவன் என்றே பெயர்.  மேற்கு  பார்த்தபடி   நின்ற கோலம்.  சந்நிதிக்குள் நுழைஞ்சு  அவர்முன் நிற்கிறோம். எட்டுக்கைகள் கொண்ட அஷ்டபுஜம்.  சங்கு சக்கரம், வில் அம்பு, கத்தி கேடயம்,  Gகதை இப்படி ஏழு கைகளில் ஆயுதம் ஏந்தியவர்  எட்டாவது கையில் மட்டும்  மலர் ஏந்தி இருக்கார்.  அதுதான்  நம்ம கஜா கொடுத்த தாமரையா இருக்கணும்.

பெருமாளின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் எட்டுக் கைகளோடு காட்சி தருவது  இங்கே மட்டும்தான் என்பது தனிச்சிறப்பு. தாயாரின் பெயர் அலர்மேல் மங்கை.  நம்ம  அம்மு!  இவருக்கும் தனிப்பாடல் ஒன்று பாடி மங்களாசாசனம் செஞ்சுருக்கார் ஆழ்வார். இதுவும் சிறப்பே! கோவில் அறிவிப்பில்  புஷ்பவல்லித்தாயார்  னு போட்டுருக்காங்க.  தமிழ்ப்படுத்தினால்  சரியாத்தான் வருது, இல்லையோ! அலர்மேல்மங்கை!





வழக்கம்போல் இருட்டில்  ஆண்டாள்:(


கோவில் திறந்திருக்கும் நேரங்கள் காலை 7 முதல்  பகல் 12. மாலை 5 முதல் இரவு எட்டு வரை.   தினமும்  இரவு எட்டுக்கு ஏகாந்த சேவையும்  அதன்பின் பிரசாத விநியோகமும் இருப்பதால் கோவில் அடைக்க  ஒன்பது மணியாகிருமுன்னு நினைக்கிறேன்.

நித்யப்படி நிகழ்ச்சிகளையும் பிரசாத வகைகளையும் எழுதிப் போட்டுருக்காங்க. காலையில் எட்டே முக்காலுக்குச் சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல், தயிர்சாதம்.

மாலை அஞ்சு மணிக்கு ஊஞ்சல் ஸேவை. பஞ்ச பருவ புறப்பாடு சில நாட்களில் .(மாசப்பிறப்பு, ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி, ஹஸ்த நட்சத்திரம் நாட்களில் பெருமாளின் வீதி உலா உண்டு) அன்று மட்டும் புளியோதரை!  மற்றநாட்களில்  மாலை,  திருவிளக்கு மாவு, சுண்டல்.
இரவு  நடை அடைக்குமுன் தச்சு மம்மு.

சிம்பிள் அண்ட் சூப்பர் மெனு! இதைப்போன்ற முக்கிய தகவல்களை மற்ற கோவில்களிலும் எழுதி வைக்கப்டாதோ?  இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த் என்ற  செந்தில் வசனம் போல Dடாடா பேஸ் வச்சுக்க எல்லோர்க்கும் பயனாகுமே!

வைகுண்ட வாசப்படியில் அமர்ந்திருந்த பெரியவரிடம், பக்கத்தில் இருக்கும் பெருமாள்கோவில் வேறென்னன்னு கேட்டப்ப  அவர் சொன்னது நம்ம லிஸ்ட்டில் அடுத்து இருப்பதேதான். வழியைக் கேட்டுக்கிட்டு  கல்கி ஸ்வரூபி ஸ்ரீ அஷ்டபுயங்கரத்தானை ,மனதில் நிறுத்தி, அங்கிருந்து கிளம்பினோம்.


தொடரும்.......:-)