Monday, August 05, 2019

ஜய சிரி மஹாபோதி (பயணத்தொடர், பகுதி 126 )

அடுத்த அஞ்சு நிமிஷத்துலே மஹா போதி விஹாரை வந்துட்டோம். இங்கே இருக்கும் போதி மரம்தான், அசோகரின் மகள் சங்கமித்திரை போதி கயாவில் இருந்து, BCE 288 ஆண்டு, கப்பல் பயணத்தின் மூலம்  கொண்டு வந்து நட்டது.  இங்கே  கோவிலுக்குள் போகத் தனிக் கட்டணம். ஆளுக்கு இருநூறு.

இந்தக் கோவிலுக்கு வரும்பாதையே  ரெண்டு பக்கமும்  கொடிகளால் அலங்கரிச்சு நம்மை வரவேற்கிறது !




ரொம்பவே புனிதமான இடம் என்பதால்  படு சுத்தம் !  வளாகமே ரொம்பப்பெருசு. கார்பார்க்கில் இருந்தே முகப்பு வாசலுக்கு ரொம்ப தூரம் நடக்கணும்.


உள் முற்றத்தில் மணல் பரப்பி, பச்சை விரிப்பு போட்டு வச்சுருக்காங்க.

போதி மரம் இருக்கும் மேடைக்கே ஒரு இருபது படிகள்  உயரே ஏறிப்போகணும். பக்தர்கள் கூட்டம் நிறைய !

படிகளின் ஆரம்பத்தில் ரெண்டு பக்கங்களிலும் நாகராஜன் அமுதகலசம் (!) ஏந்தி நிக்கறார் ! படியேறும்போது  சட்னு பார்த்தால் எதிரில் யானை !  ஆனால் அது யானை இல்லை. அந்தாண்டை இருக்கும் போதிமர மேடையின் கம்பித்தடுப்பு வரிசை யானைக்கோலம் காமிச்சுருச்சு !!   என் கண் என்னையே ஏமாத்தப் பார்க்குது பாருங்க :-)


இங்கே புத்தர் சிலைகள் வச்சு வழிபாடு நடத்திக்கிட்டு இருந்தாலும் போதி மரம்தான் ப்ரதானம் என்பதால்  மக்கள் கூட்டம் கூட்டமாகக் குழுக் குழுக்களாக  அங்கங்கே போதியைப் பார்த்தபடி  உக்கார்ந்துருந்தாங்க.

புத்தர் சந்நிதியிலும் தங்க புத்தர்களும், சின்னச் சின்ன புத்தர் சிலைகளும் கூடவே 'அந்த தங்க போதி மரங்களுமா'   ஏராளம் !

எனக்கொரு  தங்கமரம் வேணும் என்ற 'பேராசை'யைப் பெருக்கிவிட்டார் புத்தர் !


இந்த போதிமரம் தவிர கீழே வளாகத்தின் உள்முற்றத்தில்  அங்கங்கே சாதாரண மேடைகளில் அரசமரங்கள் நிறைய ! 

பிரார்த்தனைக்கொடிகள் கட்டி விட்டுருக்காங்க.
இந்தக் கோவிலிலும் சந்திர வட்டக் கல் இருக்கு!
அங்கங்கெ அரசமரக்கிளைகளை புதுசா நட்டு வச்சுருக்காங்க. சில வருஷங்களில் பெரிய மரம் ஆகிரும்!

இலங்கையின் புத்தர் விஹாரைகளில் இருக்கும்  போதிமரங்கள் எல்லாமே இந்த மஹாபோதியின்  மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி எள்ளுப்பேத்தின்னு நீண்டு போகும் பரம்பரைதான். ஒரு எட்டு வருஷங்களுக்கு முன்னே இங்கத்து மஹாபோதியின் ஒரு சிறுகிளை நம்ம இந்தியாவின் புத்தகயாவுக்கு இலங்கை விமானப்படை விமானத்தின் மூலம் கொண்டு போகப்பட்டுருக்கு!  தாய்வீடு விஸிட் !!!

சங்கமித்திரை கொண்டுவந்து நட்ட  போதிமரம் பல நூற்றாண்டுகளுக்குப்பின் இயற்கையாவே  மரணிச்சதுன்னும், இப்போ இருப்பது அதே மரத்தின் புதிய கிளைதான்னும் சொல்றாங்க. ரெண்டாயிரத்து முன்னூத்திப் பதினேழு வருஷம் ஜீவிச்சு இருப்பது கஷ்டம் இல்லையோ....    கோவில்களில் அகண்ட தீபம் பல நூற்றாண்டுகளா எரியுதுன்னு சொல்றதும் இப்படித்தானே.... அந்த விளக்கில் இருந்து புது விளக்குக்கு பற்ற வைச்ச ஜோதி? 

இந்தக் கோவிலில் இருக்கும் ம்யூஸியம் அண்ட் லைப்ரரிக்குள் போகவும் நாம் வாங்கின டிக்கெட்டுலே அனுமதி இருக்குன்னாலும், இப்பவே மணி அஞ்சே முக்கால் ஆகுது... இருட்டுமுன் கிளம்ப வேணாமான்னு போகலை.
வயது முதிர்ந்த பிக்ஷுவுக்கு வணக்கம் சொல்லி வந்தேன்.
அடுத்த கொஞ்ச தூரத்தில் ஜேதவன விஹார மாவத்தைனு பார்த்தோம்.  அபயகிரி விஹாரை போலவேதான் அசப்புலே இருக்கு. ஆனால் மேலே கோபுரம் பழுதாகிக்கிடக்கு.



மூணாம் நூற்றாண்டுலே மன்னர் மஹாசேனா   கட்டியது.  பின்னே மன்னர்  பராக்ரமபாஹு ஆண்ட காலத்தில் (கிபி 1153 முதல் 1186 வரை) புதுப்பிச்சு இருக்கார்.

அவருக்குப்பின் இந்த  அரசாட்சி  (ராஜரட நாகரிகம்) பதிமூணாம் நூறாண்டில்  முடிவுக்கு வந்துருக்கு. மண்மேடா அழிஞ்சு போன  இந்த சைத்யாவை, ப்ரிட்டிஷார் ஆட்சியில்  மீட்டெடுக்க முன்வந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில்  கொஞ்சம் வேலைகள்  நடந்துருக்கு.  அப்புறம்  1948 இல் சுதந்திர நாடானபிறகு தொல்லியல்துறை  இதை  1981 இல் ஏற்றெடுத்துருக்காம்.  இதை சரிப்படுத்த ஏராளமான பொருட்செலவு ஆகும் என்பதால் அதுக்குண்டான வழியைப் பார்த்துக்கிட்டு இருக்காங்களாம்.
அநேகமா முக்கியமானவைகளைப் பார்த்தாச்சு என்பதால்  பழைய அநுராதபுரத்தில் இருந்து புது அநுராதபுரம் நோக்கிப் போறோம். ரெண்டு நகரங்களுக்கும் இடையில் இருக்கும்  பகுதியில்  ஒரு உணவுக்கடை கண்ணில் பட்டது. 
ஒரு டீ குடிச்சால் தேவலைன்னு அங்கே போனோம்.

எல்லா மேஜைக்குப் பக்கத்திலும் ஒரு குப்பைக்கூடை !  பிடிக்கலைன்னா அதுக்குள்ளே போட்டுடலாமோ?

 இப்படிக் குப்பைக்கூடைகளைச் சாப்பிடும் மேஜையின் பக்கத்தில்  வைப்பது என்னமாதிரி டிஸைன்னு தெரியலை.  குப்பைத்தொட்டியாண்டை உக்கார்ந்து சாப்பிட்டால் நல்லவா இருக்கும்?

சாப்பாடு தயார் என்றாலும்  இப்போ மணி ஆறேகால்தான். இதுக்குள்ளே சாப்பிட வேணாம். ஒரு டீ மட்டும்  போதும்.
குடிச்சுட்டு ஆறரைக்கு அறைக்கு வந்து சேர்ந்தோம்.



முக்கியமான PIN குறிப்பு:  நண்பர்கள் முதல்முறையாக  அநுராதபுரம் பழைய நகரைப் பார்க்கப்போகணுமுன்னா.... கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பிப்போங்க. காலை ஏழு முதல் மாலை அஞ்சரைவரை நாம் வாங்கும் டிக்கெட் செல்லுபடி ஆகும். நின்னு நிதானமா எல்லாத்தையும்  பார்க்க எப்படியும் ஒரு அஞ்சாறு மணி நேரமாவது வேண்டி இருக்கும்.. நாம் இங்கேதான் தப்பு பண்ணிட்டோம். நாலு மணிக்குப் போய்ச் சேர்ந்ததால் ஒன்னரை மணி நேரத்தில் ஒரே ஓட்டம்தான்.....


தொடரும்............  :-)


Friday, August 02, 2019

ரெட்டை சிலையும் ரெட்டைக் குளமும்.... (பயணத்தொடர், பகுதி 125 )

ஆதிகாலத்துத் தலைநகர்அநுராதபுரத்தில் இப்போ  எஞ்சி இருப்பது கொஞ்சம்  அழிபாடுகளும், பழைய விஹாரைகளும்தான். தொல்லியல்துறையின் நிர்வாகத்தில் எல்லா இடங்களையும் ரொம்பவே சுத்தமாப் பராமரிக்கறாங்க.  டூரிஸ்ட் ஃப்ரெண்ட்லி.  உடைகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்திக்கணும்.  புனித இடங்கள் என்பதால் சில  நியாயமான கட்டுப்பாடுகள் இருக்கு.
தியான நிலையில் இருக்கும் புத்தர் சிலை ஒன்னு அருமை. சமாதி புத்தர்னு சொன்னாங்க. ஸோப் ஸ்டோன்னு சொல்லும்  கல்லில் செதுக்கி இருக்காங்க. நல்ல உயரமான மேடையில் இருக்கார். ஏழேகால் அடி உயரம்.

இன்னும் கொஞ்ச தூரத்துலே இவரைப்போலவே இதே அளவில் இன்னொரு புத்தர் சிலை.  இவரது வலது கை  உடைஞ்சுருக்கு..... இடதுகை  பாதித் தேய்ஞ்சு போன நிலை ....ப்ச்..... இந்த ரெண்டு புத்தர் சிலைகளும் ஒரே காலக்கட்டத்தில் ஒருவரே கூட செதுக்கி இருக்கலாம். அஞ்சாம் நூற்றாண்டு சமாச்சாரம். மைத்ரி போதிசத்துவர்சிலையாக இது இருக்கவேணுமுன்னு தகவல்.


இப்ப நாம் இருப்பதுதான் அபயகிரி ஸ்தூபாவைச் சேர்ந்த  பழைய அநுராதபுரத்து புத்த  மடங்கள் இருந்த இடம். இங்கே இருந்த, அழிந்து போன நகரத்தைத் தொல்லியல் துறை மீண்டும் சரிப்படுத்திச் சீரமைச்சு வச்சுருக்காங்க. அப்படியும் போன கட்டிடங்கள் போனதுதான்.....  பலவற்றின்  அடிப்பாகங்கள், அஸ்திவாரக் கட்டிடங்கள்தான் இப்போ நம்ம பார்வைக்கு.  ச்சும்மாச் சொல்லக்கூடாது,  நல்லாவே  சுத்தமாப் பராமறிக்கிறாங்க.



அதிலும் இந்த அபயகிரி விஹாரை இருக்கும் ஏரியாவில்தான் சுவாரஸியமான வகைகள் பலவும் !






நடுவிலே பெருசா ஒரு அறை (கூடம்/மண்டபம்? ), சுத்தி நாலு பக்கமும் அறைகள், கழிவறைகள்,  குளிக்க சின்னதா ஒரு குளம் இப்படி இருந்துருக்குன்னு தெரியுது.....  எல்லாக் கட்டடங்களையும் தரைக்குமேல் குறைஞ்சது ரெண்டடி உசரத்துலே கட்டி இருக்காங்க.
சுமார் ஒரு பத்து சதுர கிலோமீட்டர் இருக்கும் இந்தப் பகுதியில் எல்லாமே சைத்யாக்களும், புத்தமடங்களுமா இருக்கே...  அப்ப சாதாரண மக்கள் தங்குமிடங்கள் எல்லாம் இதுக்கு வெளியில் இருந்துருக்குமோ?  அப்படி இருப்பின்   அந்தக் குடியிருப்புகளின் அழிபாடுகள் ஒன்னும் கண்ணுலேயே படலையே....


சந்திரவட்டக்கல் னு ஒரு அரைவட்ட அமைப்பில்  சிற்பச்செதுக்கல்கள் அருமை! குதிரை, சிங்கம், காளை, யானை, அன்னம், இலை, கொடி, தாமரைன்னு ரொம்பவே அழகா வட்டவட்டமா  இருக்கு!  அந்தக் காலத்தில் கோவில்  கட்டடங்களின் முன்வாசலில் பதிச்சுருக்காங்க.
நமக்குத்தான் அதை மிதிச்சுக்கிட்டு உள்ளே போக மனசு வராது....

இந்தச் சந்திரவட்டக்கல்லின் செதுக்கல்கள் பற்றிய விவரம் ஒன்னும் (புத்த மதக் கோட்பாடுகளில்)கிடைச்சது. இலை, அன்னப்பறவை, பூங்கொடி, சிறிய கொடின்னு எனக்குத்தான் ஒன்னும் புரியலை. எல்லாம் ஏதோ குறியீடுகள் போல !  புத்தரைப் பற்றி  எனக்குத் தெரிஞ்சதெல்லாம் 'ஆசையை விட்டொழி'ன்றதுதான். அது எங்கே நடக்கப்போகுது?

 கடவுள் என்ற ஒன்று இல்லைன்னு சொல்லி இருக்காராம். ஆனால் அவரையே கடவுள் ஆக்கிட்டோமே !  எல்லாம் துறந்தவருக்கு  நகையும் நட்டுமாப் போட்டு அலங்காரம் செய்யறோமே.... 
(நான்கூட ஒரு ஏழு வருஷங்களுக்கு முன்னே க்வீன்ஸ்லேண்ட் Australia Zoo போனப்ப  அங்கே இருந்து ஒரு புத்தர் வாங்கியாந்து  அலங்கரிச்சு வச்சேனே....  கொள்ளை அழகு ! நம்ம வீட்டுலேயே ஒரு ஏழெட்டு புத்தர்கள் இருக்காங்க. மேலே படத்தில் உள்ளவர்தான் பெரிய சைஸ். )

ரெட்டைக்குளம் ஒன்னு இருக்கு. ஒரே மாதிரி....நடுவில் ஒரு தடுப்புச்சுவர் போல பிரிச்சு வச்சது.   ஆண்கள், பெண்களுக்கான தனித்தனிக்குளமோ என்னவோ?  பிக்ஷுக்கள் குளிக்க ஒன்னு, பிக்ஷுணிகள் குளிக்க ஒன்னு....?
இந்தப் பகுதியில் சில கடைகள், நினைவுப் பொருட்கள் விற்பனைக்கு இருக்கு. ரொம்பவே அழகு. ஆனால்.... ஆசையே துக்கத்துக்குக் காரணம் ( ஐ மீன் நம்மவரின் துக்கம்.... எடை, எடைப்பிரச்சனை இருக்கே....) என்பதால் ஒன்னும் வாங்கிக்கலை.  சின்னதா ஒரு சந்திரவட்டக்கல் வாங்கி இருக்கலாம்...ப்ச்....  ஹூம்....




லங்காரமாவைக் கடந்து போறோம்.  சைத்யாதான்..... வண்டியை விட்டு இறங்காமலே சுத்திப் பார்க்கும் வகையில்தான் அருமையான ரோடு போட்டு வச்சுருக்காங்க.  டூரிஸ்டுகள், நிறையப்பேர்  சைக்கிளில் சுத்திக்கிட்டு இருக்காங்க.  வாடகைக்குக் கிடைக்குதாம்.  நம்ம லேக்சைடு ஹொட்டேலில் கூட ஏகப்பட்ட சைக்கிள்களை வாசலில் நிறுத்தி வச்சுருக்காங்க.

ஒரு இடத்துலே  சைத்யாவின் வெளிப்பூச்சுகள் ஒன்னும் இல்லாம மண்மேடா இருக்கு. ஒருவேளை இப்படித்தான் சைத்யாக்கள் உருவாகுதோ?   வெளிப்புறம்  செங்கல் வச்சுக் கட்டிப் பூசினால் அழகு வந்துருமுல்லெ?  நம்ம உடலுக்கும்  சைத்யாவுக்கும் கூட ஒரு தொடர்பு இருக்கோ என்னவோ..... வெளிப்பூச்சு இல்லேன்னா...அவ்ளோதான்....

சட்னு காட்சி மாற்றம்போல....  ஒரு பெரிய  பார்க்கிங் ஏரியாவில்  க்ரிக்கெட்  விளையாடிக்கிட்டு இருந்தாங்க சில இளைஞர்கள். இவுங்களுக்கும் இதுதான் தேசிய விளையாட்டு போல.....
நாமும் அடிமைபுத்தி கூடாது, அவன் மொழியும் கூடாதுன்னு சொல்லிக்கிட்டே  அவன் கண்டுபிடிச்ச ஆட்டத்தை மட்டும் விடாமக் கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டோம்.

தொடரும்......... :-)