Wednesday, August 07, 2013

வேர்க்காத ரயிலும் வேகாத வடையும்! (மலேசியப் பயணம் 3)

ஆளுக்கு  ஒன்னு அறுபது கொடுத்து டிக்கெட்  வாங்கிக்கிட்டு மோனோ ரயில் ஸ்டேஷனுக்குள் நுழையறோம்.  பரவாயில்லை. சுத்தமாகத்தான் இருக்கு. எந்தப் பக்கம் போகணும் என்ற தகவல்கள் விளக்கமா இருக்கு.

எதிர்ப்பக்கம் போகும்  வண்டி  ஓசைப்படாமல் வந்து , நின்னு, புறப்பட்டது. ரெண்டு பெட்டிகள்தான். ரெண்டையும் இணைச்சுருக்காங்க. நம்ம சிங்காரச்  சென்னையிலும் இந்த ரயில் வரப்போகுது என்பதால் கவனிச்சுப் பார்த்தேன்.

இங்கே குவாலா லம்பூருக்கு  மோனோ ரயில் வந்து  இந்த  ஆகஸ்ட் மாசம் 31 தேதிக்கு சரியாப் பத்துவருசம் ஆகுது. பொதுவா முக்கியமான நிகழ்வுகள் இந்தத் தேதிக்குதான் ஆரம்பிக்கும்.  அது என்ன அதிர்ஷ்ட நாளான்னா...... அப்படித்தான் சொல்லணும். ஆகஸ்ட் 31,மலேசிய நாட்டின் சுதந்திரத் திருநாள்.



நகரின் வடக்கு, தெற்காக ரயில்பாதை.  மொத்தம் 11 ஸ்டேஷன்கள். காலை ஆறு மணிக்கு ஆரம்பிச்சால் இரவு பதினொன்னரை வரை ஓட்டம்.  பீக் அவரில்   அஞ்சு நிமிசத்துக்கு ஒன்னு.   மற்றநேரங்களில்  பனிரெண்டு நிமிசத்துக்கு ஒன்னு. 244 நபர்கள் ஒரே சமயம் பயணிக்கலாம். ஆனால் இருக்கைகள் 48 நபர்களுக்கு  மட்டுமே.  மற்றவர்கள்  எல்லாம் ஸ்டேண்டிங். வயசானவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும்  இருக்கை ஒதுக்கீடுன்னு தனியா இல்லை என்றாலும்  மக்கள்ஸ் புரிதலோடு அவுங்களுக்கு இடம் கொடுத்துடறாங்க.



மொத்தம் பத்து ரயில் வண்டிகள்   தினம் போய் வந்துக்கிட்டு இருக்கு.


இதுவரை  விபத்தே நடக்கலைன்னு நினைச்சுடக்கூடாது. மோனோ ரயில் பாதை அமைச்சு அதைப் பொதுமக்கள் பயனுக்குத் திறந்து விடுமுன் சோதனை ஓட்டங்கள்   ஒரு வருசமா  நடந்துக்கிட்டு இருந்த சமயம் அது.   ரயிலில் இருக்கும்   13.4 கிலோ எடையுள்ள  ஸேஃப்டி வீல்  கழண்டுக்கிச்சு. நேரா கீழே விழுந்தது அங்கே அகஸ்மாத்தா நடந்து போய்க்கிட்டு  இருந்த  மனிதர்  தலையில்.   இவர்   டேவிட் செல்லையா என்ற ஒரு தமிழ்காரர். (போச்சுடா..... தலையில் விழுந்தாலும் அது தமிழ்த்தலையா இருக்கணுமா!) இவர்  ஊடகவியலாளரும் கூட!  மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்,  ரயில் கம்பெனி மேலே வழக்கு தொடுத்தார்.


இப்படிப்பட்ட ஒரு விபத்து  நடக்கணுமுன்னா ஆறு வித இணைப்பு  அகற்றப்படணும். யாரோ 'விஷமிகள்' போல்ட்டை கழட்டி இருக்காங்க:( ரயிலில் இருந்த 23  பாதுகாப்பு சக்கரங்களையும் பரிசோதிக்கத் தவறிய மோனோ ரயில் கம்பெனி, தங்கள் தவறை உணர்ந்து  பாதிக்கப்பட்ட டேவிட் செல்லையாவுக்கு  ஒரு பெரும் தொகையை  நஷ்ட ஈடாக் கொடுத்து  நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை செட்டில் செஞ்சுக்கிட்டாங்க.

அடுத்த விபத்து 2005 இல்  ரப்பர் டயர்  வெடிச்சதால் ஏற்பட்டது. ரெண்டு பெண்மணிகளுக்கு கையிலும் காலிலும் அடிபட்டது.  இரவு எட்டரை மணி என்பதால் ரயிலில் கூட்டமில்லை.வெறும் முப்பது நபர்கள்தான்.

மூணாம் விபத்து போனவருசம் ஆகஸ்ட் 11, 2012லே நம்ம டுன் சம்பந்தன் ஸ்டேஷனுக்குச் சமீபம். ப்ரேக்டவுன் ஆனதும் பவர் சப்ளை நின்னு போயிருக்கு.183 பயணிகள்.  ஏஸி வேலை செய்யாமப்போய்...... மூச்சு முட்டத்துடங்கி, கடைசியில்  ரயில் ஜன்னல் கண்ணாடிகளை உடைச்சுருக்காங்க பயணிகள்.  பாவம்....ரெண்டு மணி நேரம்  பொறியில் அகப்பட்ட எலிகளா ஒரே அவஸ்த்தை:(   விபத்தை ஆராய்ஞ்சு,   பவர் சப்ளையில்  கோளாறுன்னு கண்டு பிடிச்சாங்க.


இது நடந்து ஆறே நாளில் நம்ம புகிட் பின்டாங் அருகில்  இன்னொரு ப்ரேக் டவுன்.200 பயணிகள். நல்லவேலையா ஏஸி வேலை செஞ்சது. அரைமணி நேரத்தில்  பழுதை சரி செஞ்சுட்டாங்க.

இப்ப எதுக்கு விபத்துக்களைப் பற்றிய விஸ்தரிப்பு?  நம்மூருக்கும்  மோனோ ரயில் வரப்போகுதில்லையா?  அதனால்  என்ன மாதிரி விபத்துக்கள் நடக்கலாமுன்னு  தெரிஞ்சு வச்சுக்கிட்டா நல்லதுன்னுதான். என்னதான் கவனமா இருந்தாலும் விபத்துகள் நேருவது  சகஜம்தானே? அதுவும் பவர் சப்ளை சீராக இல்லைன்னா?

நாமும் டுன் சம்பந்தன்  ஸ்டேஷனில் இறங்கி வெளியே சாலைக்கு வந்தோம்.  ரயிலுக்குள்  ஏஸி சில். வெளியே வேகாத  வெயில்!  நல்லவேளை  நடைபாதைக்கு மேற்கூரை போட்டு வச்சுருக்காங்க.  நடைபாதை நடைபாதையாகவே இருக்கு என்பது சிறப்பு.  கொஞ்ச தூரம் போனதும்  சாலைகள் சேரும் மையப்பகுதி.  இது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதை  உடனே  உறுதிப்படுத்துச்சு! சென்னை வாசனை ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு:(

நாற்சந்தி மூலையில் பூமாலைக் கடைக்காரரிடம் சரவணபவன் எங்கே இருய்க்குன்னு விசாரிச்சால்  இடதுபக்கம் கை காமிக்கிறார். கிட்டவா தூரமான்னால்..... தூரம்தானாம்:(  வேற எதாவது  நம்ம உணவுக்கடை  இருக்கான்னா.. இந்தப்பக்கம் காவேரி இருக்குன்னு கை காமிச்சார். நாம் இப்போ வந்த சாலையின் மறுபக்கத்தில் பிரியும் தெரு.  அடடா  குதிரைக் கண்பட்டை போட்டுருந்தோம்:-)



இங்கே பொதுவா ஸ்பெல்லிங் பிரச்சனையே  இல்லை.  polis,  Kedai, Teksi, Restoran, Sentral  இப்படி எல்லாம் படு சிம்பிள் , யூ ஸீ!


சாலையைக் கடந்து எதிர்வாடைக்குப்போய் காவேரியை நோக்கி நடந்தோம். 1986 ஆண்டு ஆரம்பிச்சதாம். ஆச்சே  27  வருசம்.

அட! வடை! வெப்ப விளக்கு போட்ட கண்ணாடிப்பொட்டியில்  இட்லியும்  வடையும் 'ஹை'ன்னுச்சு.  மனசின் குரல், 'ஆசையை அடக்கு'.

 ரெஸ்டோரன்னில்  வாடிக்கையாளர் யாருமே இல்லை.  மணி ஒன்பது. வர்றவுங்க வந்துட்டுப் போயிருக்கலாம். தனக்கு ஒரு இட்லியும் வடையும்  வாங்கிக்கிட்டு,  ரவா தோசைக்கு  சொன்னார் கோபால்.  நான் ஒரு சாதா ரோஸ்ட். சட்னி, சாம்பார் ஐட்டங்களுக்கான  தூக்குவாளிக்கொத்து ஒன்னு வந்து மேசையில் உக்கார்ந்தது. ஹைய்யோ! எவ்ளோ நாளாச்சு இதையெல்லாம் பார்த்து!  நம்மூரில்,  கூடுதலாக் கொஞ்சம் சாம்பார் கேட்டால் சின்ன ப்ளாஸ்டிக்  கிண்ணத்துலே இல்லே கொண்டாந்து தர்றாங்க!(எனக்கு வெறும் தோசையே போதும்.  காரமா இருக்குன்னு  சாம்பார் சட்னிக்குத் தடா.)


உனக்கு வடை பிடிக்குமே, ஒன்னு வாங்கிக்கன்னு  வற்புறுத்துனார் இவர்.  வாடிக்கையாளரைப் பார்த்த அதீத ஆர்வத்தில் சூடாப்போட்டுக் கொண்டு வரேன்னு பரிமாறும் நபர் உள்ளெ ஓடுனார்.  பார்த்தால் மொறுமொறு வடை!  ரெண்டாவது விள்ளலில் தெரிஞ்சு போச்சு,  வேகாமக் கிடக்கு:(  ரொம்பச் சூடான எண்ணெயில் போட்டால்  இப்படித்தான்  ஆகும்.

அசடு வழிஞ்ச பணியாளர், வேற ஒன்னு போட்டு எடுத்து வரேன்னார்.   நோ சொன்னேன்.  கோப்பியா தேத்தண்ணியான்னவருக்கு   ரெண்டாவதைச் சொன்னேன்.  பியர் மக் போல் உள்ள பெரிய கண்ணாடி மக்கில் ஆளுக்கு அரை லிட்டர் வந்துச்சு.  சும்மாச் சொல்லக்கூடாது..... நல்ல சுவை. அதுக்காக  500 மில்லி  அதிகமில்லையோ?  பாலுக்கு இங்கெல்லாம் பவுடர்தான்:(  ஃப்ரெஷ் பாலையெல்லாம்  சிங்கைக்கு  ஏற்றுமதி செஞ்சுடறாங்க போல!

கல்லா காதுக்கெட்டும் தூரத்தில்.  வேகாத வடைக்குக் காசு  வாங்கிக்கலை.  எங்கிருந்து வர்றீங்கன்னார் அவர்.  ஊரிலே இருந்துன்னார்  இவர்.  இந்த ஊர்  சமாச்சாரம் நமக்கு ஃபிஜியிலேயே பழக்கம்.   அங்கும் தமிழர்களுக்கு  ஊர் என்றால் அது தமிழ்நாடுதான்.

'எல்லாம் சுத்திப் பார்த்துட்டீங்களா'ன்னார் கல்லாக்காரர். 'இன்னும் இல்லை. நேத்து ராத்திரிதான் வந்தோம்.  முதலில் 'பசியாறிட்டு'ப் போகலாமுன்னு  இங்கே வந்தோம்' என்றேன். எனக்கும் ஏகப்பட்ட மலேசிய நண்பர்கள் இருக்காங்கல்லே:-)

பக்கத்துலே  ரெண்டு தெரு தள்ளிப்போனா ஒரு பெரிய கோவில் இருக்கு. நல்லா இருக்குமுன்னார்.

முருகனாம்!  ஓக்கே!

அப்பதான் ஞாபகம் வந்துச்சு.....  பூமாலைக் கடைக்காரர் இருக்காருன்னா பக்கத்தில் கோவில் இருக்கணுமே! என்ன கோவிலுன்னு விசாரிக்காம விட்டுட்டமே:(

ஆனால்  பூக்கடைக்கு  எதிரால்லே  இப்ப போய்க்கிட்டு இருக்கொம்!

தொடரும்....:-)


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


Monday, August 05, 2013

டுன் சம்பந்தன் (மலேசியப் பயணம் 2)


காலையில்  கண் முழிச்சதும்,  காஃபி போட்டுத் தரேன்னு கோபால் ஆரம்பிச்சதுமே ஐயோன்னு சின்னதா அலறினேன்.  காஃபி , டீக்கு பால் என்ற பெயரில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு குட்டியா ஒரு ப்ளாஸ்டிக் குப்பியில் பால் வச்சுடறாங்க  ஹொட்டேல்களில். விமானத்தில் கொடுக்கறாங்களே அதே அளவுக் குப்பிகள்தான்.

ஒரு சாஷே காபிப்பொடிக்கு , சின்னக்குப்பி பால்விட்டாலும்  ஒன்னுதான் விடாட்டாலும் ஒன்னுதான். ரொம்பவே யக்கியா  இருக்கும். அதனால்   அரை சாஷே காபிப்பொடி மட்டும் போட்ட ஒரே ஒரு கப் காஃபிக்கு ரெண்டு குப்பி பால் விட்டு ஆளுக்கு அரைக் கப். சுமாரான சுவை. நாக்கே கெட்டுப்போச்சு:(  சாயங்காலம்  பால் பாக்கெட் ஒன்னு சூப்பர் மார்கெட்டில் இருந்து வாங்கி வச்சுக்கணும். நேத்து  சட்னு  மறந்துபோயிருந்தேன்.

வெளியே போனால் நம்மூர் சாப்பாட்டுக் கடைகள் ஏகத்துக்கும் இருக்கும்தானே?  குளிச்சு முடிச்சு ரெடியாகிக் கீழே வரவேற்புக்கு வந்தோம். மெயின் டெஸ்க் தவிர மத்த எல்லா இடத்திலும் ஏகப்பட்ட தமிழர்கள் வேலை செய்யறாங்க. வாயிலே இருக்கு வழி ன்னு விசாரிச்சால்  .
'இந்த புகிட் பின்டாங் ஏரியாவை விட லிட்டில் இண்டியா போயிட்டால் ஏகப்பட்டவை இருக்கு. சரவணபவன் கூட இருக்கு'ன்னாங்க. ஆஹா பேஷ் பேஷ்னு  வெளியே வந்தோம்.

 கதவு திறந்து விட்டு நமக்கு  வாடகைக்கார் வரவழைச்சுத்தரும் பணியாளர், 'எங்கெ ஸார் போகணுமு'ன்னு  தமிழில் கேட்டார்.  சொன்னதும், பேசாம மோனோ ரெயில்  எடுத்துருங்க , டுன் சம்பந்தனுக்குன்னார்.  கேட்டவுடன் இந்தப் பெயரின் ஒலி எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு.  டுன். டுன். டுன் சம்பந்தமுன்னு  மனசில் வந்துக்கிட்டே  இருக்கு.

அப்படின்னா என்னன்னு  யோசிச்சுக்கிட்டே ரெண்டே நிமிசத்தில் நேத்து இரவு சாப்பிடப்போன ஷாப்பிங் செண்டருக்குப்போய்  அங்கிருந்து மாடிகள் சிலகடந்து ரெயில் ஸ்டேஷன் போக  மேலும் மூணு நிமிசமாச்சு. மின் தூக்கி  இருக்கணும்தான். எங்கே இருக்குன்னு  தேடணும் இனி.

டிக்கெட் வாங்கும் இடத்தில் தான் தெரிஞ்சது டுன் சம்பந்தன் என்பது ஒரு  மோனோ ரயில் ஸ்டேஷன் பெயர்.  நம்ம புகிட் பின்டாங் என்ற  பகுதியில் இருக்கும் ஸ்டேஷன்  அந்த ஏரியாவின் பெயரிலேயே இருக்கு.  வடக்கு தெற்காக போகும்  இந்த மோனோ ரயில் பாதையில் மொத்தம் 11 நிறுத்தங்கள். நம்ம புகிட் பின்டாங்  சரியா  நட்ட நடுவில் இருக்கு.

 புகிட் என்றால் மேடு, பின்டாங் என்றால் ஸ்டார். ஸோ....மேட்டில் இருக்கும் நட்சத்திரம் என்று 'முழி' பெயர்க்கலாம்.

அப்ப டுன் சம்பந்தன்?   'கதை' கொஞ்சம் பெருசுதான். சுருக்கமாச் சொல்லப் பார்க்கிறேன்.

பிரிட்டிஷ்காரர்கள் மலேயாவுடன்  (  அப்ப இந்த நாட்டுக்குப் பேரு 'மலேயா'தான்) வியாபார உறவு வச்சுக்கிட்டு இருந்தது 1771 ஆம் வருசத்தில் ஆரம்பிச்சது.  அப்ப  அங்கே(யும்)  அரச வம்சத்து ஆட்சிதான்.  மலேயாவின் ஏழு பகுதிகளில் ஏழு  அரசர்களின் ஆட்சி.  வழக்கம்போல்  அரசர்களுக்குள்  மித்ரபேதம் செஞ்சு  நாட்டைக் கைக்குள் கொண்டு வந்தது  பிரிட்டிஷ் அரசு.  அங்கே நாடு என்பதே  ஒரே துண்டமா இந்தியா போல இல்லாமல்  பெருசும் சிறுசுமா நாலு துண்டங்கள்.  தாய்லாந்துலே இருந்து தெற்கே வந்துக்கிட்டே இருந்தால்  kangar  (National forest) என்ற இடம் தாண்டுனவுடன் மலேயா ஆரம்பிச்சுருது. அப்புறம் கிழக்கே கடல் தாண்டி இன்னொரு பெரிய தீவின் (indonesia)வடக்கு, வடமேற்கு பகுதிகளிலும் சராவாக், சபா ன்னு சிலமாநிலங்கள் மலேயாவைச் சேர்ந்ததே. இதில்லாம  இவுங்க எல்லைக்குள்ளே சிலபல தீவுகள்.

வீராசாமி  என்பவர் தமிழ்நாட்டுலே இருந்து  1896 ஆண்டு மலேயாவுக்கு ரப்பர் தோட்டத்தில்  வேலை செய்ய வர்றார்.  நல்ல  உழைப்பாளியா இருக்கணும்.  வேகமாமுன்னேறி  சொந்தமா சிலதோட்டங்களுக்கு அதிபதியானார்.  1919 வது ஆண்டு  மலேயாவில் இவருக்குப் பிறந்த ரெண்டாவது மகன் திருஞான சம்பந்தன். பள்ளிப்படிப்பை மலேயாவில்முடிச்சதும், பட்டப்படிப்புக்கு  தமிழ்நாட்டுக்கு வந்து அண்ணாமலைப் பல்கலையில்  சேர்ந்தார்.

இந்தியாவில்  சுதந்திரப்போராட்டம் தீவிரமா இருந்த காலக்கட்டம்.  காந்தி, நேரு, சுபாஷ் சந்த்ர போஸ்  கருத்துக்கள்  எல்லாம்   இவரைக் கவர்ந்தது.  இதே சமயம்  ரெண்டாம் உலகப்போர்  ஆரம்பிச்சது.  அங்கே மலேயாவில்  அப்பா வீராசாமி காலமானார்.  சட்னு ஊருக்குத் திரும்பமுடியலை:(   தகப்பன் இறந்து நாலு வருசத்துக்கு பின்னே மலேயா வந்து சேர்ந்தார். குடும்பத்தொழிலான  ரப்பர் தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு.

 அதே சமயம்  மலேயா தமிழர்களிடையே  கல்வி அறிவு போதிய அளவு இல்லையேன்னு மன வருத்தம்.  1954 இல்  மகாத்மா காந்தி தமிழ்பள்ளி என்ற பெயரிலொரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சார். அந்த சமயம் மலேயாவுக்கு விஜயம் செஞ்ச விஜயலக்ஷ்மி பண்டிட் (நேருவின் சகோ) கையால் பள்ளிக்கூடத் திறப்பு விழா நடந்துச்சு.

அரசியல்  ஆர்வம் சும்மா இருக்கவிடலை . 1946 ஆண்டு மலேயா இண்டியன் காங்ரெஸ்  என்ற தேசிய கட்சி உதயமாச்சு.  இந்தியா சுதந்திரப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு என்ற புரட்சி எல்லாம்  பார்த்ததும்  இங்கேயும் பிரிட்டிஷ் பிடியில் இருந்து வலகணும் என்ற ஆவல் அதிகமாச்சு. புது கட்சிக்கு  18 கிளைகள்  பல ஊர்களில் உருவாகி இருந்துச்சு, நம்ம சம்பந்தன் காங்ரெஸில் இணைந்த சமயம். அப்போ அவருக்கு வயசு  36.

கொஞ்சம் நாளிலேயே   காங்ரெஸின் தலைமைப் பொறுப்பு கிடைச்சது.  மலேயா சீன காங்ரெஸ்,United Malays National Organisation என்ற கட்சிகளுடன் கூட்டணி  அமைச்சார்.  அதுக்குப்பிறகு  பொதுத்தேர்தலில் போட்டியிட்டு  ஜெயித்து அமைச்சரவையில் பங்கு பெற்றார். முதலில்  கிடைத்த பதவி தொழில்துறை அமைச்சர். இனி எல்லாம் ஏறு முகமே!  18 வருசங்கள் நாடாளுமன்றத்தின் அங்கமா இருந்து தொடர்ந்து சுகாதாரம், பொதுப்பணி, தபால் தந்தி துறை, தேசிய ஒற்றுமை  இப்படியான பதவிகளை சிறப்பான அளவில் செய்துள்ளார்!

1957 இல் சுதந்திர ஒப்பந்ததில்  கையெழுத்துப் போட்ட மூன்று அரசியல்தலைவர்களில் இவரும் ஒருவர். இந்தியர்களின் பிரதிநிதி! இவர் தமிழர் என்பதில் நமக்கும் பெருமையே!  இவருடைய செயல்களையும் உழைப்பையும் பாராட்டி  1967 இல் மலேசிய அரசு 'டுன்'  Tun என்ற விருது கொடுத்து  கௌரவப்படுத்துச்சு.  இது இந்திய அரசு கொடுக்கும் 'பாரத் ரத்னா'வுக்குச் சமமானது!

உண்மையான உழைப்புக்கு  நன்றியாக மலேயா பல்கலைக்கழகம் 1971 இல் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிச்சது.
அரசியலுக்கு வந்த அஞ்சாம் வருசமே  மலைநாடு என்ற தினசரியையும்,  மலேயன் டைம்ஸ் என்ற ஆங்கில தினசரியையும்  சொந்தப்பொறுப்பில்  வெளியிட்டு  நடத்திக்கொண்டிருந்தார்.  பத்திரிகை நஷ்டத்தில்  நடந்து இவரது  பூர்வீக சொத்தையெல்லாம் கரைச்சது உண்மை:(

தமிழர்களுக்கு இவரது ஒரே வேண்டுகோள்.... ஏழையாக இருக்கலாம்.ஆனால் கோழையாக  இருக்கக்கூடாது என்பதே.
1979 இல்  அறுபது வயது பூர்த்தியாகுமுன்  இதயநோய் என்ற காரணம் காட்டிக் காலன் இவரைக் கவர்ந்தான். அரசு  மரியாதையுடன்  இடுகாட்டிற்கு போனார்.

  மோனோ ரெயில் ஸ்டேஷன்களை அமைச்சப்ப,  நாட்டுக்கு இவர் செய்த சேவைகளை நினைவில் கொண்டு தமிழர்கள் அதிகமுள்ள பகுதியில் இவர் பெயரையே வச்சாங்க. அங்குள்ள ஒரு  நீண்ட சாலைக்கும்  ஜலான் டுன் சம்பந்தன் என்றே பெயர்.   (ஜலான் = சாலை)

தொடரும்.......... :-)



 PIN  குறிப்பு:  படம் ஒன்னும் பொருத்தமா இல்லையேன்னு  ரிஷானுக்காக  ஹொட்டேல் வரவேற்பில் இருக்கும் மலர் அலங்காரம் ரெண்டு  சேர்த்திருக்கேன்.

Friday, August 02, 2013

கோலாகலமான ஊர் (மலேசியப் பயணம் 1)

ரொம்பவே அழகான  பன்னாட்டு விமானநிலையம் என்று கேள்விப்பட்டதால் ஆவலோடு காத்திருந்தேன்.  ஏர் ஏசியா போய் இறங்குன இடத்தைப் பார்த்தால்  அழகுக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத இடம். என்ன ஆச்சுன்னு கண்ணை ஓட்டுனா... LCCT (Low cost carrier terminal)

புது விமான நிலையம் கட்டுனதும் பழைய டெர்மினலை இப்படி மலிவு விலை சமாச்சாரமா ஆக்கிட்டாங்க.  ஏணியை வச்சு ஆட்களை இறக்கி  நடந்து போங்கன்னு விரட்டாத குறை.  கூரை போட்ட பெரிய  நடைபாதையில்  நடக்க ஆரம்பிச்சோம். ஒரு ரெண்டு கிலோமீட்டர் தூரம் இருக்குமுன்னு நினைச்சேன். நல்லவேளை தலைக்கு மேல் கூரையாவது கிடக்கு. இல்லேன்னா அடிக்கிற வெயிலுக்கு  'பாலி கனாங் சாரி'யில் வைக்கும் ஒரு பொருளாக மாறிவிடலாம்.

எந்தவிதமான படிவமும் நிரப்பத்தேவை இல்லை என்பது ஒரே ஆறுதல்.  பாஸ்போர்ட் பார்த்து ஸ்டாம்ப்  பண்ணிடறாங்க. அம்புட்டுதான்!!!!  ரயில் இருக்காமே அதுலேயே போகலாமுன்னு விசாரிச்சால்.... அதுக்கு அந்த அழகான இன்ட்டர்நேஷனல் டெர்மினலுக்குப் போகணுமாம்.  இங்கிருந்து  ரொம்ப தூரமில்லை. ஜஸ்ட் 20 கிலோ மீட்டர்.  அங்கிருந்து 63 கிமீ  பயணம் கோலாலம்பூர் நகரத்துக்குள் நுழைய.

பேசாம இங்கிருந்தே  போகலாமுன்னா  68 கிமீ.  டாக்ஸியில் போகலாம். ஆனால்..... சீப் ஏர்லைன்ஸில் வந்துட்டு இதுக்கெல்லாம் அனாவசியமா செலவழிக்கலாமான்னு யோசனை:-) வாயில் இருக்கு வழின்னு  தமிழில் விசாரிச்சால் பஸ் இருக்கு.  அதுக்கு ஆளுக்கு  ஒன்பது ரிங்கெட்தானாம்.  இப்போ டாக்ஸியில் போய் என்ன வெட்டி முறிக்கப் போறோம்?  கொஞ்ச நேரத்துலே இருட்டப்போகுது. பேசாம பஸ்ஸில் போகலாம் என்று முடிவு செஞ்சேன்.

கோபாலைப் பொறுத்தவரை  கே எல் அனுபவம் உள்ள ஒரே ஆள் நம்ம குடும்பத்தில் நான் மட்டுமே!  அப்போ... (காலம்:  ப.மு )எப்போ?  சரியாப் பத்து வருசத்துக்கு முன் ஒருமுறை  சிங்கையில் இருந்து கே எல்லுக்கு  நியூஸித் தோழியுடன் பஸ்ஸில் வந்திருந்தேன். தோழி  வீட்டில் மூன்றுநாள் தங்கி  இன்னொரு பஸ்ஸில் சிங்கை திரும்பினதோடு மலேசியப்பயணம் முடிஞ்சிருந்தது. அந்த மூன்று நாட்களும் தோழியின்  உறவினர்களையும் நண்பிகளையும்  சந்திச்சதோடு சரி.  ஏர்ப்போர்ட் பக்கம் தலை வச்சுக்கூடப் படுக்கலை. ஆனால் கோபாலுக்கு என்னமோ நான் மலேசியாவை அதிலும் கே எல்லை இண்டு இடுக்கு விடாமல் சுத்திப் பார்த்துட்டேன்னு ஓர் எண்ணம்.  பாவம்,வெள்ளந்தி!!
!
இது என்னோட ரெண்டாவது வருகை மலேசியாவுக்கு.  ஒரு முறை சிங்கையில் இருந்து  மகளுடன் ஜோஹூர் பாரு வரை போய், அடுத்த  ஒரு மணி நேரத்தில் அலறியடிச்சுக்கிட்டு சிங்கை திரும்பின  சரித்திர சம்பவத்தை  விருப்பமுள்ளவர்கள் இங்கே வாசிக்கலாம்:-)



பஸ் டிக்கெட்டை வாங்கிக்கிட்டு  பஸ் ஸ்டாண்டைத் தேடி பத்து நிமிசம் அலைஞ்சு  கண்டுபிடிச்சோம்.  விமானநிலயத்தின் உள்ளும் புறமும் ஏகப்பட்ட கூட்டம்! கொஞ்ச நேரத்தில் ரெட் பஸ் ஒன்னு வந்துச்சு. அதுதானான்னா அது தான்:-) ஏறி வசதியான இருக்கை   பார்த்து உட்கார்ந்தோம்.  நகரத்துக்கு வரும் சாலை அருமையா இருக்கு.  ரெண்டு பக்கமும் ஒருவித பனை மரங்கள்  பெரிய அளவில் நட்டுவச்சுருக்காங்க. இதிலிருந்து வரும் கொட்டையில் இருந்துதான் பாமாயில் எடுக்கறாங்க.  ஏற்றுமதிக்கான பொருள் என்பதால் எக்கச்சக்கமா ஜேஜேன்னு இருக்கு. விமானம் கீழே  இறங்க ஆரம்பிச்சதுமே இதுதான்  தெரியுது!


கே எல் செண்ட்ரல் வர ஒன்னேகால் மணி நேரமாச்சு. இங்கிருந்து  நாம் புகிட்  பின்டாங் என்ற  பேட்டைக்குப் போகணும்.  நம்ம மலேசியத்தோழி  'சென்ட்ரலில்  இருந்து  புகிட் பின்டாங் போக பதினைஞ்சு ரிங்கெட்க்கு மேலே கொடுக்காதீங்க'ன் னு  சொல்லி இருந்தாங்க. டாக்ஸிக்காரங்க  ரெண்டு மூணு பேர் சொல்லிவச்சமாதிரி  முப்பது வெள்ளின்னதால் வேறவழி இல்லாம  ஒரு டாக்ஸி பிடிச்சோம்.  டிரைவர் கதிர். அவரிடம் பேச்சுக் கொடுத்தப்ப...  முதலில் கழுத்துலே இருக்கும் சங்கிலியைக் கழட்டி வச்சுருங்கன்னார்.  திருடர்கள் அதிகமாம்.  சரின்னு தலையாட்டிட்டு,  தோழி இப்படி பதினைஞ்சுக்கு மேலே கொடுக்க வேணாமுன்னு சொன்னதைச் சொன்னால்....  'அப்படின்னா அவுங்களே வந்து உங்களைக் கூட்டிட்டு போகலாமுல்லே'ன்னார்!  நல்ல பதில். நல்ல ஐடியா. ஆனால் இதுக்காக அவுங்க நியூஸியில் இருந்து  வரணுமா, இல்லையா!

பார்க் ராயலில் செக்கின் செஞ்சப்ப  சிட்டி வியூ வேணுமுன்னால்.....  ஸ்விம்மிங் பூல் வியூதான் இப்போதைக்கு இருக்குன்னுட்டாங்க.  வேற  அறை காலியானால் நாளைக்கு மாற்றிக்கலாமாம். நமக்கு  19 வது மாடி என்பதால்   பிரச்சனை இருக்காதுன்னு  இருந்துட்டேன். (மொத்தம் 21 மாடி இருக்கு) இந்த ஏரியா ஷாப்பிங் பிரசித்தமாம். எல்லாமே 'காலெட்டும்' தூரத்தில்!  ரெண்டு நிமிச நடையில் ஒரு பெரிய ஷாப்பிங் ஆர்கேட். அதன் மாடியில்  மோனோ ரயில் ஸ்டேஷன்.

நம்ம அறையில்  இருந்து பார்த்தால்  ரயில் நிலையம் கண்ணுக்குத் தெரியுது.  ஹொட்டேல் வாசலையொட்டியே  ரயில்கள் போறதும் வாரதுமா  ஓசைப்படாம ஓடுவது  பார்க்கவே ஒரு அழகு.


கொஞ்சம்  தலையை கீழ்நோக்கிச் சாய்ச்சால்  நீச்சல்குளம்!  பார்வையை நேரா செலுத்தினால்  கே எல் டவர்.
ப்ரெஷப் செஞ்சுக்கிட்டு  சாப்பாட்டைத் தேடி வெளியே போனோம்.  நம்மூர் சாப்பாடு ஏகத்துக்கும் இருக்கும் ஊரில்  பார்க் ராயலின் வெள்ளைக்கார மெனு யாருக்கு வேணும்?

பக்கத்து ஷாப்பிங் ஆர்கேட்  ஃபுட்கோர்ட்டில்  ஏகப்பட்ட உணவுக்கடைகள். ஆனால் மருந்துக்கும் இந்திய உணவு இல்லை. கால்வலிக்கும்வரைத் தேடிப்பார்த்துட்டு  தாய் உணவை வாங்கி உள்ளே தள்ளிட்டு  அங்கே இருந்த சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைஞ்சோம். ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக்கிட்டுச்  சும்மா ஒரு ரவுண்டு வந்தால்  பழங்கள் பகுதியில் மாம்பழம்!  பெருசா இருக்கு.  ஒன்னு வாங்கிக்கலாமுன்னா நறுக்கித் தின்ன கத்தி இல்லை.   நறுக்கித் தரமுடியுமான்னு  கேட்டதும் நோ ஒர்ரீஸ்ன்னு அழகா நறுக்கி  பேக் பண்ணிக் கொடுத்தாங்க.

ஆஹா ஆஹா....சர்வீஸ் என்றால் இது!

இரவில் கே எல் எப்படி இருக்குன்னு  அறையிலிருந்தே பார்த்து மகிழ்ந்தோம்.  தொலைக்காட்சியில்  எதோ தமிழ் நிகழ்ச்சி  போய்க்கிட்டு இருந்தது.  நாளைக்குக் கதை நாளைன்னு  படுக்கையில் விழுந்தோம்.

குவாலா லம்பூர்   Kuala Lumpur  என்பதை செல்லமா கே எல் என்று சுருக்கிட்டாங்க.  தமிழிலும்  கோலாகலமா இருக்கட்டுமேன்னு  கோலாலம்பூர் ஆகி இருக்கு போல!

கோலாலம்பூர் என்பதன் பொருள் என்னவாம்?   It means "Muddy confluence" (of two rivers, the Klang and the Gombak) விக்கியண்ணன் சொல்றார்.

வெள்ளீயச் சுரங்கம் (Tin mining )  காரணமா  1857 ஆண்டு உருவான சின்ன ஊர் இப்போ  மலேசிய நாட்டின் மிகப்பெரிய நகரமாவும், தலைநகராவும் வளர்ந்துருக்கு.  ஜனத்தொகை  நகரில் மட்டும்  ஏறக்குறைய 1.7  மில்லியன்.  பெரிய ஊரா இருந்து  நகரம் என்ற அந்தஸ்து கிடைச்சது  1972 இல்தான்.

நாட்டில் மன்னராட்சி  இருந்தாலும்  ஜப்பானியர்கள்  பிடியில் ஒரு மூணு வருசம் எட்டுமாசம் இருந்துருக்கு! (1942 -1945)

அதுக்குப்பிறகு  நாட்டில் தேர்தல் நடத்தி  நிர்வாகப்பொறுப்பை ஏற்று நடத்த மந்திரிசபை  உருவாக்குனாங்க. ஆனாலும் மன்னர்தான் தலை!  (சுருக்கமாச் சொன்னா ப்ரிட்டிஷ் அரசு இயங்குவதைப்போல)  1957  ஆகஸ்ட் 31க்கு சுதந்திரநாடாகப்  பிரகடனம் ஆச்சு.

நாட்டின்  எல்லா  சாலைகளின் விரிவமைப்பு வேலைகளுக்கும்,  ரப்பர்  தோட்டங்கள், சுரங்க வேலைகள் இப்படி  உருவான பொருளாதாரத்துக்கும்  இங்கேவந்து உழைச்ச   இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் பங்கு  மகத்தானது.

 கொஞ்சம் கொஞ்சமா   நமக்குக் கிடைச்ச  விவரங்களைப்  போகப்போகச் சொல்லலாம் என்ற எண்ணம் இப்போதைக்கு.

தொடரும்..........:-)