Monday, August 05, 2013

டுன் சம்பந்தன் (மலேசியப் பயணம் 2)


காலையில்  கண் முழிச்சதும்,  காஃபி போட்டுத் தரேன்னு கோபால் ஆரம்பிச்சதுமே ஐயோன்னு சின்னதா அலறினேன்.  காஃபி , டீக்கு பால் என்ற பெயரில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு குட்டியா ஒரு ப்ளாஸ்டிக் குப்பியில் பால் வச்சுடறாங்க  ஹொட்டேல்களில். விமானத்தில் கொடுக்கறாங்களே அதே அளவுக் குப்பிகள்தான்.

ஒரு சாஷே காபிப்பொடிக்கு , சின்னக்குப்பி பால்விட்டாலும்  ஒன்னுதான் விடாட்டாலும் ஒன்னுதான். ரொம்பவே யக்கியா  இருக்கும். அதனால்   அரை சாஷே காபிப்பொடி மட்டும் போட்ட ஒரே ஒரு கப் காஃபிக்கு ரெண்டு குப்பி பால் விட்டு ஆளுக்கு அரைக் கப். சுமாரான சுவை. நாக்கே கெட்டுப்போச்சு:(  சாயங்காலம்  பால் பாக்கெட் ஒன்னு சூப்பர் மார்கெட்டில் இருந்து வாங்கி வச்சுக்கணும். நேத்து  சட்னு  மறந்துபோயிருந்தேன்.

வெளியே போனால் நம்மூர் சாப்பாட்டுக் கடைகள் ஏகத்துக்கும் இருக்கும்தானே?  குளிச்சு முடிச்சு ரெடியாகிக் கீழே வரவேற்புக்கு வந்தோம். மெயின் டெஸ்க் தவிர மத்த எல்லா இடத்திலும் ஏகப்பட்ட தமிழர்கள் வேலை செய்யறாங்க. வாயிலே இருக்கு வழி ன்னு விசாரிச்சால்  .
'இந்த புகிட் பின்டாங் ஏரியாவை விட லிட்டில் இண்டியா போயிட்டால் ஏகப்பட்டவை இருக்கு. சரவணபவன் கூட இருக்கு'ன்னாங்க. ஆஹா பேஷ் பேஷ்னு  வெளியே வந்தோம்.

 கதவு திறந்து விட்டு நமக்கு  வாடகைக்கார் வரவழைச்சுத்தரும் பணியாளர், 'எங்கெ ஸார் போகணுமு'ன்னு  தமிழில் கேட்டார்.  சொன்னதும், பேசாம மோனோ ரெயில்  எடுத்துருங்க , டுன் சம்பந்தனுக்குன்னார்.  கேட்டவுடன் இந்தப் பெயரின் ஒலி எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு.  டுன். டுன். டுன் சம்பந்தமுன்னு  மனசில் வந்துக்கிட்டே  இருக்கு.

அப்படின்னா என்னன்னு  யோசிச்சுக்கிட்டே ரெண்டே நிமிசத்தில் நேத்து இரவு சாப்பிடப்போன ஷாப்பிங் செண்டருக்குப்போய்  அங்கிருந்து மாடிகள் சிலகடந்து ரெயில் ஸ்டேஷன் போக  மேலும் மூணு நிமிசமாச்சு. மின் தூக்கி  இருக்கணும்தான். எங்கே இருக்குன்னு  தேடணும் இனி.

டிக்கெட் வாங்கும் இடத்தில் தான் தெரிஞ்சது டுன் சம்பந்தன் என்பது ஒரு  மோனோ ரயில் ஸ்டேஷன் பெயர்.  நம்ம புகிட் பின்டாங் என்ற  பகுதியில் இருக்கும் ஸ்டேஷன்  அந்த ஏரியாவின் பெயரிலேயே இருக்கு.  வடக்கு தெற்காக போகும்  இந்த மோனோ ரயில் பாதையில் மொத்தம் 11 நிறுத்தங்கள். நம்ம புகிட் பின்டாங்  சரியா  நட்ட நடுவில் இருக்கு.

 புகிட் என்றால் மேடு, பின்டாங் என்றால் ஸ்டார். ஸோ....மேட்டில் இருக்கும் நட்சத்திரம் என்று 'முழி' பெயர்க்கலாம்.

அப்ப டுன் சம்பந்தன்?   'கதை' கொஞ்சம் பெருசுதான். சுருக்கமாச் சொல்லப் பார்க்கிறேன்.

பிரிட்டிஷ்காரர்கள் மலேயாவுடன்  (  அப்ப இந்த நாட்டுக்குப் பேரு 'மலேயா'தான்) வியாபார உறவு வச்சுக்கிட்டு இருந்தது 1771 ஆம் வருசத்தில் ஆரம்பிச்சது.  அப்ப  அங்கே(யும்)  அரச வம்சத்து ஆட்சிதான்.  மலேயாவின் ஏழு பகுதிகளில் ஏழு  அரசர்களின் ஆட்சி.  வழக்கம்போல்  அரசர்களுக்குள்  மித்ரபேதம் செஞ்சு  நாட்டைக் கைக்குள் கொண்டு வந்தது  பிரிட்டிஷ் அரசு.  அங்கே நாடு என்பதே  ஒரே துண்டமா இந்தியா போல இல்லாமல்  பெருசும் சிறுசுமா நாலு துண்டங்கள்.  தாய்லாந்துலே இருந்து தெற்கே வந்துக்கிட்டே இருந்தால்  kangar  (National forest) என்ற இடம் தாண்டுனவுடன் மலேயா ஆரம்பிச்சுருது. அப்புறம் கிழக்கே கடல் தாண்டி இன்னொரு பெரிய தீவின் (indonesia)வடக்கு, வடமேற்கு பகுதிகளிலும் சராவாக், சபா ன்னு சிலமாநிலங்கள் மலேயாவைச் சேர்ந்ததே. இதில்லாம  இவுங்க எல்லைக்குள்ளே சிலபல தீவுகள்.

வீராசாமி  என்பவர் தமிழ்நாட்டுலே இருந்து  1896 ஆண்டு மலேயாவுக்கு ரப்பர் தோட்டத்தில்  வேலை செய்ய வர்றார்.  நல்ல  உழைப்பாளியா இருக்கணும்.  வேகமாமுன்னேறி  சொந்தமா சிலதோட்டங்களுக்கு அதிபதியானார்.  1919 வது ஆண்டு  மலேயாவில் இவருக்குப் பிறந்த ரெண்டாவது மகன் திருஞான சம்பந்தன். பள்ளிப்படிப்பை மலேயாவில்முடிச்சதும், பட்டப்படிப்புக்கு  தமிழ்நாட்டுக்கு வந்து அண்ணாமலைப் பல்கலையில்  சேர்ந்தார்.

இந்தியாவில்  சுதந்திரப்போராட்டம் தீவிரமா இருந்த காலக்கட்டம்.  காந்தி, நேரு, சுபாஷ் சந்த்ர போஸ்  கருத்துக்கள்  எல்லாம்   இவரைக் கவர்ந்தது.  இதே சமயம்  ரெண்டாம் உலகப்போர்  ஆரம்பிச்சது.  அங்கே மலேயாவில்  அப்பா வீராசாமி காலமானார்.  சட்னு ஊருக்குத் திரும்பமுடியலை:(   தகப்பன் இறந்து நாலு வருசத்துக்கு பின்னே மலேயா வந்து சேர்ந்தார். குடும்பத்தொழிலான  ரப்பர் தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு.

 அதே சமயம்  மலேயா தமிழர்களிடையே  கல்வி அறிவு போதிய அளவு இல்லையேன்னு மன வருத்தம்.  1954 இல்  மகாத்மா காந்தி தமிழ்பள்ளி என்ற பெயரிலொரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சார். அந்த சமயம் மலேயாவுக்கு விஜயம் செஞ்ச விஜயலக்ஷ்மி பண்டிட் (நேருவின் சகோ) கையால் பள்ளிக்கூடத் திறப்பு விழா நடந்துச்சு.

அரசியல்  ஆர்வம் சும்மா இருக்கவிடலை . 1946 ஆண்டு மலேயா இண்டியன் காங்ரெஸ்  என்ற தேசிய கட்சி உதயமாச்சு.  இந்தியா சுதந்திரப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு என்ற புரட்சி எல்லாம்  பார்த்ததும்  இங்கேயும் பிரிட்டிஷ் பிடியில் இருந்து வலகணும் என்ற ஆவல் அதிகமாச்சு. புது கட்சிக்கு  18 கிளைகள்  பல ஊர்களில் உருவாகி இருந்துச்சு, நம்ம சம்பந்தன் காங்ரெஸில் இணைந்த சமயம். அப்போ அவருக்கு வயசு  36.

கொஞ்சம் நாளிலேயே   காங்ரெஸின் தலைமைப் பொறுப்பு கிடைச்சது.  மலேயா சீன காங்ரெஸ்,United Malays National Organisation என்ற கட்சிகளுடன் கூட்டணி  அமைச்சார்.  அதுக்குப்பிறகு  பொதுத்தேர்தலில் போட்டியிட்டு  ஜெயித்து அமைச்சரவையில் பங்கு பெற்றார். முதலில்  கிடைத்த பதவி தொழில்துறை அமைச்சர். இனி எல்லாம் ஏறு முகமே!  18 வருசங்கள் நாடாளுமன்றத்தின் அங்கமா இருந்து தொடர்ந்து சுகாதாரம், பொதுப்பணி, தபால் தந்தி துறை, தேசிய ஒற்றுமை  இப்படியான பதவிகளை சிறப்பான அளவில் செய்துள்ளார்!

1957 இல் சுதந்திர ஒப்பந்ததில்  கையெழுத்துப் போட்ட மூன்று அரசியல்தலைவர்களில் இவரும் ஒருவர். இந்தியர்களின் பிரதிநிதி! இவர் தமிழர் என்பதில் நமக்கும் பெருமையே!  இவருடைய செயல்களையும் உழைப்பையும் பாராட்டி  1967 இல் மலேசிய அரசு 'டுன்'  Tun என்ற விருது கொடுத்து  கௌரவப்படுத்துச்சு.  இது இந்திய அரசு கொடுக்கும் 'பாரத் ரத்னா'வுக்குச் சமமானது!

உண்மையான உழைப்புக்கு  நன்றியாக மலேயா பல்கலைக்கழகம் 1971 இல் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிச்சது.
அரசியலுக்கு வந்த அஞ்சாம் வருசமே  மலைநாடு என்ற தினசரியையும்,  மலேயன் டைம்ஸ் என்ற ஆங்கில தினசரியையும்  சொந்தப்பொறுப்பில்  வெளியிட்டு  நடத்திக்கொண்டிருந்தார்.  பத்திரிகை நஷ்டத்தில்  நடந்து இவரது  பூர்வீக சொத்தையெல்லாம் கரைச்சது உண்மை:(

தமிழர்களுக்கு இவரது ஒரே வேண்டுகோள்.... ஏழையாக இருக்கலாம்.ஆனால் கோழையாக  இருக்கக்கூடாது என்பதே.
1979 இல்  அறுபது வயது பூர்த்தியாகுமுன்  இதயநோய் என்ற காரணம் காட்டிக் காலன் இவரைக் கவர்ந்தான். அரசு  மரியாதையுடன்  இடுகாட்டிற்கு போனார்.

  மோனோ ரெயில் ஸ்டேஷன்களை அமைச்சப்ப,  நாட்டுக்கு இவர் செய்த சேவைகளை நினைவில் கொண்டு தமிழர்கள் அதிகமுள்ள பகுதியில் இவர் பெயரையே வச்சாங்க. அங்குள்ள ஒரு  நீண்ட சாலைக்கும்  ஜலான் டுன் சம்பந்தன் என்றே பெயர்.   (ஜலான் = சாலை)

தொடரும்.......... :-)



 PIN  குறிப்பு:  படம் ஒன்னும் பொருத்தமா இல்லையேன்னு  ரிஷானுக்காக  ஹொட்டேல் வரவேற்பில் இருக்கும் மலர் அலங்காரம் ரெண்டு  சேர்த்திருக்கேன்.

38 comments:

said...

நம்ம தமிழர்கள் எங்க போனாலும் கலக்கல்தான் :))))

said...

ஒரு சின்ன சந்தேகம். இது போன்ற தகவல்களை அங்கிருப்பவர்களிடம் கேப்பீர்களா? இல்லை வரலாற்றுப் புத்தகங்கள் வழியே படிப்பீர்களா?

said...

//புகிட் என்றால் மேடு, பின்டாங் என்றால் ஸ்டார். ஸோ....மேட்டில் இருக்கும் நட்சத்திரம் என்று 'முழி' பெயர்க்கலாம்.//

சரி... அடுத்த ஸ்டேஷன் ‘ராஜா சுலன்’ என்பதற்கு என்ன பொருள்?

said...

'டுன் டுன்'என்ற பெயரில் அந்தக்காலத்துல ஹிந்தியில் காமெடி நடிகை இருந்துருக்காங்க. அவங்க ஞாபகம் வந்தது.

சம்பந்தன் பற்றிய தகவல்கள் பிரமிக்க வைக்குது.

said...

ஆஹா ;-)
காலையில் முதலிலேயே பூக்களைக் கொண்டு (எனக்கான) ஒரு பதிவு.. :-) நன்றி டீச்சர்.

இரண்டாவது படத்திலிருக்கும் பூ 'சூரியகாந்தி'யல்லோ? முதல் பூ என்னது? ரொம்ப அழகு. சரம் சரமாய் பூத்துக் குலுங்குது. என்ன பெயர் டீச்சர்?

said...

தொடர்கிறேன்.

said...

சம்பந்தன் அவர்களைப் பத்தி தெரியாம இருந்தது. அழகா எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.

கோலாலம்பூர் லிட்டில் இண்டியால சாப்பாடு மட்டுமல்ல நல்ல பழைய தமிழ்ப்படங்களும் பாடல்களும் கூட கிடைக்கும்.

said...

ஒரு தமிழர் இவ்வளவு உயரத்துக்குத் தன் உழைப்பால் உயர்ந்திருக்கிறார் என்பதே பெரிய பெருமையாக இருக்கிறது.
முதலில் இருக்கும் மலரை ராமலக்ஷ்மி அடையாளம் சொல்வாரோ என்னவோ!!

said...

சுவையான பயணம்.....

தகவல்கள் மகிழ்ச்சியளித்தன...

said...

டுன் சம்பந்தன் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
பயணக்கட்டுரை நல்ல அருமையான செய்திகளுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட அழகான மலர்கள் போல் மலர்ந்து இருக்கிறது.

said...

முதல் படத்தில் இருப்பது ஆர்க்கிட் வகை என எண்ணுகிறேன்.

வேற்று நாட்டைச் சேர்ந்தவர் என ஒதுக்கிடாமல் உழைப்பால் உயர்ந்தவருக்குத் தரப் பட்ட அங்கீகாரங்கள் பற்றி அறிய வருகையில் மனதுக்கு நிறைவாக உள்ளது.

said...


//அடுத்த ஸ்டேஷன் ‘ராஜா சுலன்’ என்பதற்கு என்ன பொருள்?//

ராஜ சோழன்

said...

//ஒரே ஒரு கப் காஃபிக்கு ரெண்டு குப்பி பால் விட்டு ஆளுக்கு அரைக் கப்//

Black Coffee is the Best:))

//டுன் சம்பந்தன்//

உற்சாகமூட்டும் தமிழ்க் கதை; தமிழர் வரலாறு!
இவரை, "முதல் உலகத் தமிழ் மாநாட்டுக்கு" உதவி புரிந்தவர் என்ற அளவில் தான் இது வரை தெரிந்து வைத்திருந்தேன்!

ஆனால், மலேசிய அரசுப் பின்னணியில் இருந்து கொண்டு, இத்தனை சாதித்தார் என்பதை இன்றே அறிந்தேன்;
பின்னே, நாட்டு விடுதலை ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுறாரு-ன்னா சும்மாவா?

டுன்கு அப்துல் ரகுமான் = அவர்கள் தான் மலேசியத் தந்தை!
அவரோடு சேர்ந்து, டுன் சம்பந்தன் அவர்களே, முதலாம் உலகத் தமிழ் மாநாட்டை, கோலாலம்பூரில் நடத்த உதவி புரிந்தது = Xavier தனிநாயகம் அடிகளுக்கு!

உலகத் தமிழ் மாநாட்டின் தந்தை
= Xavier தனிநாயகம் அடிகளின் நூற்றாண்டு விழா (Aug 2)
= http://madhavipanthal.blogspot.com/2013/08/thaninayagamadigal.html

said...

//தமிழர்களுக்கு இவரது ஒரே வேண்டுகோள்....
ஏழையாக இருக்கலாம்.ஆனால் கோழையாக இருக்கக்கூடாது என்பதே//

அதே!
ஆனால் இன்று கோழை போய் தன்னலம் பிடித்து ஆட்டுகிறது:((
ஏழை போய், பெரும் பணம் பிடித்து ஆட்டுகிறது

//நீண்ட சாலைக்கும் ஜலான் டுன் சம்பந்தன்//

I like this Jalan!

said...

வாங்க சசி கலா.

இவரை மலேசியாவின் காமராஜர்னு சொல்றாங்க. இதைவிட வேற பெரிய அங்கீகாரம் உண்டோ!!!!

said...

வாங்க ஜோதிஜி.

வாயிலேயும் இருக்கு வரலாறு! நமக்கு ஏகப்பட்ட மலேசிய நண்பர்கள். அதில் சிலர் சட்டம் படித்தவர்கள். அது என்னமோ.... சட்டம் படித்தவர்களுக்கு அரசியல் ஆர்வம் அதிகமாகவே இருக்கு.

இப்படி நண்பர்களிடமும், அங்கங்கே சந்திக்கும் மக்களிடமும் கேட்டுக்கறதுதான். மேலும் சரியான வருச விவரங்களுக்கு அண்ணனிடம் கேட்டுக்கலாம். வலையிலும் இருக்கு வழி இல்லையோ!

அந்தந்த நாட்டு அரசு பல சமாச்சாரங்களைப் பப்ளிக்கா போட்டு வச்சுருக்கே!

said...

வாங்க தருமி.

குண்டக்க மண்டக்கன்னு கேள்வி கேட்டே ஆகணுமா:-)))))

ராஜா சுலன் 1869-1933 காலக்கட்டத்தில் வாழ்ந்த சுல்த்தான்.Perak royal family

முழுப்பெயர் Y.A.M. Raja Sir Chulan ibni Almarhum Sultan Abdullah Muhammad Shah Habibullah, KBE. சொல்லிமுடிக்குமுன் நம்ம ஸ்டேஷனைக் கோட்டை விட்டுருவோம்.

தனித்தனியா வெவ்வேற பகுதிகளில் அரசாட்சியில் இருந்த ராஜ குடும்பங்களை ஒன்று சேர்த்து ஃபெடரேஷன் அமைப்பில் கொண்டுவந்து , இப்போ இருக்கும் மலேசியாவை உருவாக்குனதில் இவர் பங்கு அதிகம்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

எனக்கும் டுன் டுன் நினைவு வந்துச்சு அப்போ! அவுங்க திரையில் வரும்போது எலிபெண்ட் வாக் ம்யூசிக் கேட்ட நினைவு.

said...

வாங்க ரிஷான்.

ஆர்கிடாகத்தான் இருக்கணும். அங்கிருக்கும் காலநிலைக்கு பூத்துக் குலுங்குதே!

நட்சத்திர ஹொட்டேல் என்பதால் மலர் அலங்காரத்துக்கு நிறையதான் செலவு செய்யறாங்க.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

தொடர்வதற்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

குராங்கன் லாஜு பார்த்ததும் அது என்னமோ உங்க நினைவு வந்துச்சு:-)

பழைய பாடல்கள் தொகுப்பு அட்டகாசமாக் கிடைக்குது.

தமிழ் சினிமா சம்பந்தமுள்ள எல்லாமே அங்கே முக்கிய பிஸினெஸ் ஐட்டம்.

said...

வாங்க வல்லி.

ரொம்பச் சரி.

ராமலக்ஷ்மி சொல்லிட்டாங்க ஆர்கிட் என்று!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்ந்து வருவதற்கு நன்றீஸ்.

said...

வாங்க கோமதி அரசு.

வரலாறு, வாசிக்க போரடிக்குமோன்னு நினைச்சேன். நீங்க ரசிச்சுப் பாராட்டுனதும் மகிழ்ச்சியா இருக்கு.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நானும் பார்த்தவுடன் அப்படித்தான் நினைச்சேன். இலைகள் வேற மாதிரி இருப்பதைக் கவனிச்சீங்களா?

Orchid செடிகளில் இருபத்தியாறு ஆயிரத்துக்கும் மேல் வகைகள் இருக்காம்!

உலகப்பறவை இனங்களின் எண்ணிக்கையைப் போல் ரெண்டு மடங்கு! அம்மாடியோவ்!!!!!

said...

வாங்க ரெங்கா.

மேலே தருமியின் கேள்விக்கு எழுதுன பதிலைப் பாருங்க. அதுக்கு முன்னால் ஒருதடவை மூச்சை நல்லா இழுத்துட்டு ' உங்க ராஜ சோழன் ' முழுப்பெயரை வாசிச்சுப் பாருங்க:-)))

said...

வாங்க கே ஆர் எஸ்.

கருப்புக் காப்பி வயித்தைக் கலக்கிருதுப்பா:( பயணத்தில் ஆபத்தில்லையோ!

டுன் சம்பந்தம், மலேசியாவின் முதல் பிரதமர் டுன்கு அப்துல் ரெஹ்மான் அவர்களுக்கு மிக நெருக்கமானவர். வலக்கை போல!

அவர் மறைவுக்குப் பின் ரெண்டாம் பிரதமர் ஆன டுன் அப்துல் ரஸாக் அவர்களுடன் சேர்ந்தும் பணி ஆற்றியுள்ளார். அவருக்கும் இவர் நெருக்கமானவரே!

தமிழர்களின் நலனுக்காகவே உழைச்சவர்.

சில ஒலிகள் மனசுக்குச் சட்னு பிடிச்சுப் போகுதில்லை!

said...

வாயிலேயும் இருக்கு வரலாறு

வரலாறு முக்கியம் அமைச்சரே என்பதற்கு அடுத்து இந்த தலைப்பு நல்லாயிருக்கு.

said...

மலேயாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய தமிழர் திருஞானசம்பந்தன் பற்றி அறிய வியப்பு மேலிடுகிறது. போனோம், பார்த்தோம், ரசித்தோம், வந்தோம் என்றில்லாமல் பல விவரங்களையும் தெரிந்துகொண்டு, அறிந்தவற்றை எங்களோடு பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி டீச்சர்.

said...

சம்பந்தன் தகவல்களுடன் தொடர்கிறேன்.

said...

வாங்க ஜோதிஜி.

அட! ஆமாம்லெ! பேசாம தலைப்புகளைத் தொகுத்து வச்சுக்கிட்டால் அப்பப்பப் பயன்படாது???

காப்பிரைட்தான் பதிவு செஞ்சுக்கணும்:-))))

said...

வாங்க கீத மஞ்சரி.

யாம் பெற்ற இன்பம் வகையில் இவை:-)

யாருக்காவது எப்பவாவது பயனாகாதா என்ற நப்பாசை இருக்கே!

said...

வாங்க மாதேவி.

உங்கள் தொடர் வருகை மனசுக்கு மகிழ்ச்சியா இருக்குப்பா.

நன்றி.

said...

எனக்கும் திரு ஜோதிஜி போல சந்தேகம் வந்ததுண்டு. தீர்த்து வைத்ததற்கு நன்றி.
டுன் சம்பந்தன் அவர்களைப் பற்றிய செய்தி பெருமைப்பட வைத்தது.

said...

வாங்க ரஞ்ஜனி.

ஐயம் தீர்த்தமைக்கு ஆயிரம் பொற்'கிளி' உண்டா:-))))

said...

பொற்கிழி நீங்க தான் அவங்களுக்கு கொடுக்கனும். காரணம் உங்க பதிவுகளை முனைவர் பட்டம் வாங்கும் அளவுக்கு படித்துக் கொண்டு இருப்பவர்.

said...

ஏழையாக இருக்கலாம்.ஆனால் கோழையாக இருக்கக்கூடாது - வீராசாமி.

புதிய தகவல் துள்சி.

அப்போ இங்கே சொன்ன மத்த தகவல்களெல்லாம் பழசான்னு கேக்கப்படாது. அவையும் புதுசு தான்.

said...

நிம்ஸ் பேஸ்புக்கில் போட்ட லிங்கிலிருந்து இங்கே வந்தேன். நன்றி நிம்ஸ் :)