Tuesday, December 09, 2008

அவந்திகாவின் அழைப்பை ஏற்று......

உண்மையைச் சொன்னாக் கண்டதையும் போனதையும் எழுதிக்கிட்டு இருக்கும் நான் மும்பைச் சம்பவம் பற்றியும் சொல்லி(?) இருக்கணும்தான். ஆனா.... தொலைக் காட்சியில் பார்த்து திக்கிச்சுப்போய் இருந்தேனே.....


சாதாரண மக்களுக்கு இருக்கும் போக்குவரத்துகளில் ரொம்பவே முக்கியமானது ரயில்வண்டிகள்தான். (ரெயில்வே சம்பந்தம் இன்னும் கொஞ்சம் என் ரத்தத்தில் ஒட்டியிருக்கு) அங்கேயும் தீவிரவாதமுன்னா.....

அதான் மீடியா பண்ண அட்டகாசத்தில் பார்த்துருப்பீங்களே..... என்ன? இல்லையா? ஆமாம். நீங்க சொல்றது ரொம்பச் சரி. தாஜ் ஹோட்டல் அமர்க்களத்தைக் காமிக்கத்தான் டைம் இருந்துச்சு. ரெயில்வே ஸ்டேசனையும், ஏழைபாழைகளையும் கவனிக்க யாருக்கு நேரம் இருக்கு?

சம்பவம் நடந்த மறுநாளும் அதுக்கு அடுத்த நாளும் நான் ஆஸ்தராலியாவில் இருந்தேன். அங்கே தொலைக்காட்சியில் 'தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகளால் ரெண்டு ஆஸ்தராலியர்கள்' கொல்லப்பட்டதைத் திரும்பத்திரும்பக் காட்டிச் சொல்லிக்கிட்டே இருந்தாங்களா....... கேட்டுக்கேட்டு ஒரு கட்டத்தில் அது என்னவோ 'நேற்று மழை பெய்தது' ன்னு சொல்றது போல ஒரு காதுக்குள்ளே புகுந்து மறு காது வழியா வெளியே போச்சு.

முதலில் கேட்ட,அதிர்ச்சியான நிகழ்வுகளை போகப்போக மனம் எப்படிச் சர்வசாதாரணமா எடுத்துக்குதுன்னு பார்த்தப்ப.....

உண்மை முகத்தில் வந்து அறைவது போல்,

இதுதான் தீவிரவாதிகளின் தாக்குதல் முதல்முறையா நடக்குதா? காலங்காலமாய்ப் பட்டுமா புத்தி வரலை? எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் அமெரிக்காவைப் பாருன்னு சொல்றதை இங்கேயும்சொல்லியாச்சு அங்கத்து 9/11 மாதிரி இங்கே நடந்துருக்குன்னு.

உலகத்துக்கே ஒரே ஒரு 9/11 போதாதா? அதுலே இருந்து,மத்த நாடுகள் ஒன்னுமே படிக்கலையா? இதென்ன திருவிழாவா? எங்க நாட்டுலேயும் கொண்டாடுறோமுன்னு பெருமையடிச்சுக்க........


நாட்டின் பாதுகாப்பைப் பலமாக்கி இருக்கவேணாமா ? இதுக்குன்னு வருசாவருசம் ஒதுக்கும் மக்கள் வரிப்பணம் எங்கே போகுது? தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுன நம்ம பாதுகாப்பு வீரர்கள் ரெண்டு பேர் ஒரு துப்பாக்கியை மாத்திமாத்திப் பங்குவச்சுக்கிட்டு எதிரியைச் சுட்டுத் தள்ளுனாங்களாம்- எங்கூர் டிவி நியூஸ். விடிஞ்சது போங்க.

'என் கண்ணுக்குத் தீவிரவாதி தெரியறான். கொஞ்சம் துப்பாக்கியைத் தரயா? சுட்டுட்டுத் திருப்பிக் கொடுத்துடறேன்'

இப்போ... அண்டைநாடுதான் காரணம். அதோடு போர் நடத்தப்போறோம்...

வேணாம். நிறுத்து.ஆணிவேரையே பிடுங்க முடியுமா உன்னாலே? பேசாம உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்து. போருக்குச் செலவு செய்யும் தொகையைக் கொண்டு கூடுதல் பலம் செஞ்சுக்கோ. அதே 9/11க்கு பிறகு அதே அமெரிக்காவின் பாதுகாப்பு முறைகளைப் பார்க்கலையா?


மனித உசுருங்க மலிஞ்சு போன நாடு, பணம் பதவி அதிகாரம் இவற்றை மட்டுமே வாழ்க்கையின் உன்னத நோக்கங்களாக் கடைப்பிடிக்கும் அரசியல்வாதிகளைக் கொண்ட அதிர்ஷ்டம் கெட்ட நாடு....


அதெப்படிங்க...தேனை எடுத்தவன் கையை நக்காமல் விடுவானா? நக்கிக்கோ. ஆனால் கொஞ்சூண்டு நக்கிக்கோ. முழுசையும் நக்கிட்டு, வெறும் பாத்திரத்தைக் காமிச்சா எப்படி?

நாட்டு மக்கள் எல்லாம் செத்து நாடே சுடுகாடு ஆனபிறகு என்ன பண்ணப்போறே? எல்லாத்துலேயும் ஊழல் செஞ்சு அமுக்குனதைச் செலவு செய்யவாவது நாடு வேணாமா?

பெருச்சாளிகளை ஒன்னும் செய்ய முடியாதுன்னா.....

மதத்தின் பெயரால் அக்கிரமம் செய்யும் தீவிரவாதிகளும் எல்லாரையும் கொன்னுட்டு அப்புறம் மதத்தை எங்கே போய் பரப்புவாங்க?

நினைச்சுப் பார்க்கப்பார்க்க மனசுதான் சரியில்லாமப்போகுது(-:

ஆனா நம்பிக்கையே இல்லைன்னா நாம் வாழறதுக்கு ஒரு அர்த்தமே இல்லாமப் போயிருமே. இப்போதைய நம்பிக்கை இளைய சமுதாயம்தான்.
இவுங்க தன்னம்பிக்கையோடு, செயல்பட்டா ஊழல் இல்லாத ஒரு சமூகத்தை, நாட்டை உருவாக்க முடியும். ஊழல் தொலைஞ்சாவே பாதி பலம் வந்த மாதிரி. மீதி பலத்தைப் பாதுகாப்பு கொடுக்கும்.

புலம்ப ஒரு சான்ஸ் கொடுத்த அவந்திக்கு நன்றி.அவுங்களுக்கு இருக்கும் நாட்டுப்பற்று, போற்றிப் பாராட்டவேண்டியதொன்று.


தொடர்பதிவுக்கான அழைப்பு உங்கள் எல்லாருக்கும்தான். எழுதுங்க.

Monday, December 08, 2008

அக்கா ( பகுதி 8 )

டிசம்பர் லீவுக்கு நான் மறுபடி அக்கா வீட்டுக்குப்போனேன். அக்காவுக்கு உடம்பு சரியில்லை. உதவிக்கு என்னைவிட்டா வேற யார் இருக்கா? அக்காவுக்கு ஒரு கருச்சிதைவு நடந்து இருந்த சமயம். வீடு அப்படியே இருந்தாலும் புதுசா ஒரு அட்ராக்ஷன் என்னைக் கவர்ந்தது. ஹைய்யான்னு கூத்தாடுனேன். நம்ம வீட்டில் கிணறு வந்துருச்சு. அதை ஒட்டி ஒரு குளியல் அறை. ஆமாம்......ஒரு கதவு வச்சுருக்கக்கூடாது? முந்தி ஓலை முடைஞ்ச தட்டிவச்ச 'பாத்ரூம்' இருந்த இடத்தில் கொத்துக்கொத்தாக் காய்களோடு நாலைஞ்சு பப்பாளி மரங்கள். கிணறுக்குப் பக்கத்தில் துணி துவைக்கும் கல்.

வீட்டுக்குள்ளே தண்ணீர் பிடிச்சுவைக்கும் தவலைகள் எல்லாம் மூலையில் கவுத்திக்கிடக்கு. ரெண்டே குடம் மட்டும் முன்பக்கம் இருக்கும் சமையல் அடுப்பையொட்டி. பக்கத்து வீட்டு கணேஷ் சாருக்குக் கலியாணம் ஆகி இருந்துச்சு. அவுங்க மனைவி பாலா, நம்ம அக்காவுக்கு ரொம்ப தோஸ்த்தாப் போயிட்டாங்க. இங்கேயேதான் நாள் முச்சூடும் இருக்காங்க.
பாலா அக்கா நல்ல கலகலப்பானவங்க.. கணேஷ் சார் நல்லா கலரா இருப்பார். பாலா அக்கா நேரெதிரா இருப்பாங்க. முகத்துலே வேற நிறைய பரு இருக்கும். அதனால் என்னமோ ஒரு சோப் போட்டு முகத்தைக் கழுவிக்கிட்டே இருப்பாங்க. அவுங்க வீட்டுக் கிணத்தடியிலேயே அந்த சோப்பு டப்பா கிடக்கும். அவுங்க வீட்டுப் பக்கம் வேலி இன்னும் நல்லா அகலமாப் பிரிச்சுவிட்டுக் கிடக்கு. நடமாட்டம் கூடிப்போச்சுல்லே!

மதீனா அக்காவுக்கு இப்போ மூணாவது, வயித்துலே. முதல் பையனுக்கு இன்னும் சோறும் குழம்பும் நம்ம வீட்டுதுதான் வேணுமாம். வழக்கம்போல் மதியானத்துக்கு, வாத்தியார் வூட்டம்மா''ன்னு கூப்புட்டுக்கிட்டே வந்து கொஞ்சம் குழம்பு வாங்கிக்கிட்டுப் போறாங்க.

ரேணு நல்லாவே வளர்ந்துருக்கு. வயிறு சரியாப்போச்சு போல. கிண்டியில் பால் குடிக்கிறாள். 'பால் குடிச்சு முடிச்சதும் கிண்டியைப் பிடுங்கி வச்சுரு'ன்னு அக்கா சொன்னது முதலில் எனக்குப் புரியலை. குடிச்சு முடிச்சதும் தத்தக்கா பித்தக்கான்னு நடை போட்டுக்கிட்டே நேராக் கிணத்துக்குள்ளே வீசி எறிஞ்சது கிண்டியை!!! கையில் எது கிடைச்சாலும் இப்பெல்லாம் கிணத்துக்குத்தானாம். பேச்சு சரியா வரலை. அவளுக்குச் சொல்லவரும் ஒரே சொல் 'நானு'

ஆஹா.....

வசதியாப் போச்சு வீட்டுலே இருக்கறவங்களுக்கெல்லாம். யார் எதை உடைச்சாலும் அந்தப் பழி ரேணுவுக்கு! மாமா கத்தறார்,

"புது ஃப்ளாஸ்க், யார் உடைச்சா? "

"ரேணு ப்பா"

கோரஸ் ஒலிக்குது.

ரேணு.....யார் உடைச்சா?. சொல்லு"

"நானு"

ஐயோ....................பொரியல் தீஞ்சதுக்குப் பழியை ரேணு மேலே போடலாமான்னு எனக்கும் ஒரு யோசனை :-)))))

மெட்ராஸ்லே பெரிய டாக்டர்கிட்டே காட்டலாமான்னு கேட்டதுக்கு, 'என்னத்து அதெல்லாம்? தானே சரியாயிரும். நீகூடத்தான் திக்கு வாயா இருந்தே'ன்னு குண்டைத் தூக்கிப் போட்டுச்சு அக்கா. நானா? எப்போ?

ரெண்டு வயசுலேயே கொள்ளுகொள்ளூன்னு பேசிக்கிட்டு இருந்தேனாம். அப்புறம் திடீர்னு பேச்சு திக்க ஆரம்பிச்சதாம். பேச ஆரம்பிக்கும் முதல் சொல்தான் கஷ்டமாம். நான், பெ பெ பெ பெ பென்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, 'ம் சொல்லு பெரியக்கா' நா நா நா நா........ நானு
இப்படியே எடுத்துக் கொடுப்பாங்களாம் சின்னக்காவும் அண்ணனும். முதல் சொல்லைச் சொல்ல நேரமெடுத்தாலும் ரெண்டாவது சொல்லில் இருந்து திக்காமப் பேசுவேனாம். ஆனா மொதச் சொல்லைச் சொல்லவிடாம செஞ்சா எப்படி? அக்காதான் 'அவ சொல்லட்டும். நீங்க போங்க இங்கெ இருந்து'ன்னு அவுங்களை விரட்டுமாம். தொண்டை நரம்புலே எதோ கோளாறுன்னு அம்மா மருந்து மாத்திரை கொடுத்தாங்களாம். அக்கா சொல்லச் சொல்ல 'ஆஆஆஆ' ன்னு கேட்டுக்கிட்டு இருந்தேன்.

தினம் தினம் காலையில் மொக்கன் என்ற ஆள் வந்து கிணத்துக்குள்ளே இறங்கி, தட்டு, கிண்டி, கரண்டி ன்னு ஏழெட்டு சாமானை வாரிக் கொண்டுவந்து கிணத்துலே தொங்கும் வாளியில் வைக்கறதும், நாங்க வாளியை வெளியே இழுத்துப் பாத்திரங்களையெல்லாம் தேய்ச்சு வைக்கிறதுமா இருக்கு. மொக்கனுக்குப் பலகாரச்செலவு நாலணா கொடுத்துறணும். நாங்கள் ரெகுலர் கஸ்டமர்கள்:-))))

இப்பெல்லாம் வீட்டுலே எதுவும் காணோமுன்னா தேடல்லாம் மாட்டொம். கிணத்துக்குள்ளே கிடக்கும். நாளைக்கு மொக்கன் வரட்டும்.

வீட்டுக்குள்ளே பழைய அடுப்பங்கரை இருட்டுமூலையில் ரெண்டு கயித்துக்கட்டிலைத் தடுப்பாட்டம் சரிச்சு நிக்கவச்சு ஒரு ரூம்! அதுக்குள்ளே என்னென்னவோ பாத்திரங்கள். ரேணுவின் கைக்கு எட்டாமல் இருக்கணுமுன்னு வச்ச தடுப்புகளாம். நம்மூட்டுது மாதிரி இல்லையேன்னு பார்த்தப்ப...... வாசலில் யாரோ அக்காவோட பேசற சத்தம் கேட்டு வெளியில் வந்தா..... அடுத்த தெருக்காரம்மா ஒரு சருவச்சட்டியையும் செப்புத் தோண்டியையும் வச்சுக்கிட்டு நிக்குது. தண்ணி எடுத்துட்டுப்போக வந்துருப்பாங்கன்னு நினைச்சா...........அக்கா இடுப்புலே இருந்து ஒரு சுருக்குப்பையை ( அட! இது எப்போலே இருந்து?) எடுத்து அஞ்சு ரூபாயைக் கொடுத்துச்சு. அந்தம்மா பாத்திரத்தை ஓரமா வச்சுட்டுப் போனாங்க.

"ஈரமா இருக்கா பார்"

"இல்லேக்கா"

"சொட்டைகிட்டை இருக்கா"

"இல்லியேக்கா"

" கொண்டுபோய் கட்டிலுக்கு அந்தப் பக்கம் மூலையில் வச்சுட்டுவா. பார்த்து, சரிஞ்சுபோகாமக் கவுத்து வை.அங்கெயே ஒரு உறி இருக்கு பாரு. அதுலே இருக்கும் பானையில் ஒரு சின்ன நோட்டு இருக்கும் கொண்டா"

அக்கா இப்போ வியாபாரம் பண்ணுதா என்ன? சித்தி, காசு கொடுத்துவச்சுருக்காங்களாம்.எல்லாம் அவுங்க ஏற்பாடுதானாம். அக்கம்பக்கத்து பொம்பளைங்க, ஆத்திர அவசரத்துக்கு எதாவது பாத்திரபண்டம் கொண்டுவந்து ஈடுவச்சுட்டுக் காசு வாங்கிட்டுபோறாங்களாம். அப்புறமா வந்து மூட்டுக்கிட்டுப் போயிருவாங்களாம்.

வட்டிக்கடையா வச்சுருக்கு? சரியான பிஸினெஸ் உமன் தான். வட்டின்னு ஒன்னும் பெருசா இல்லையாம். அஞ்சு ரூபாய்க்கு அம்பது காசாம். பாத்திரங்களை நாம ஆண்டுக்கலாம். முந்திமாதிரி இருந்தா அக்கா அதுலேகூட தண்ணீ ஊத்தி வச்சுக்கும். இப்பக் கிணறு வந்துட்டதாலே வேணுங்கறப்ப சேந்திக்கறதுதான்.

அக்கா திண்ணையைவிட்டு மெதுவா எழுந்துவந்து உள்ளே கூட்டிக்கிட்டுப் போச்சு. பொட்டியைத் திறந்து ஒரு பழைய பாரீஸ் மிட்டாய் டப்பாவை எடுத்து என் கையில் கொடுத்து, 'திறந்து பாரு'ன்னுச்சு. அம்மாடியோவ்.....
நகைங்க! இதுவரை நான் பார்க்காத டிஸைன். கறுப்புக் கயறுலே அங்கங்கே தங்கத்துலே மல்லி மொட்டு கோர்த்து வச்சுருக்கு. சிலதுலே காப்பவுன் காசு,
சிலது கறுப்பு பாசி மணிக்கிடையில் வட்டவட்ட பில்லையா இருக்கு. அந்த பில்லையில் நிலா, நட்சத்திரமுன்னு டிஸைன். பெரிய பெரிய கம்மலுங்க, பட்டை பட்டையா மாட்டலு இப்படி. ஒரு பதக்கம் வச்ச அட்டியல் கூட இருந்துச்சு. அடகுக்குவந்த நகைகளாம். எதாவது பிடிச்சிருந்தாப் போட்டுக்கோன்னு சொல்லுச்சு. சங்கிலியா ஒன்னும் இல்லை. மோதிரம் ரெண்டு மூணு இருக்கு. அளவு பெருசா இருக்கே.

அப்புறம் ஒரு நாள் அக்காவோட பனாரஸ் புடவையைக் கட்டிக்கிட்டு, அந்த அட்டியலைப் போட்டுக்கிட்டேன். மாமா வந்து பார்த்துட்டு, ஆச்சரியப்பட்டுப் போனார். புடவையைக் கழட்டி வைக்காம இங்கே அங்கேன்னு நொரைநாட்டியம் பண்ணிக்கிட்டு இருந்தேனா..... அடுப்புலே நீட்டிக்கிட்டுக் கிடந்த விறகுக் கட்டை முள்ளில் புடவை மாட்டிக்கிட்டு அடிப்பக்கம் கரையிலே கிழிஞ்சுருச்சு. அப்பெல்லாம் புடவைக்கு ஃபால்ஸ் வச்சுத் தைக்கும் வழக்கம் வரலையே(-:


தொடரும்................

Sunday, December 07, 2008

PIT ம் BITS ம்


போட்டோ போட்டிக்கு


மகள் வீட்டு மரம்:-)



ஏ குருவி.... சிட்டுக்குருவி


இன்றலர்ந்த லில்லி



ஆரஞ்சுபருத்திப்பூ?



பட்டு வண்ண ரோசாவாம்.... பார்த்த கண்ணு மூடாதாம்



முள்ளுக்கு ஒரு மலர்க்கிரீடம்







காஸ்மாஸ் ( தமிழில் மாங்காய்நாரி)

ரோசாப்பூ சின்ன ரோசப்பூ



செம்பருத்திப்பூவு...சித்திரத்தைப் போல....



காத்திருப்பான் கமலக் கண்ணன்:-)



பறிக்கவா உன்னை?




என் ரசிகர்களே...... ....என்னை தெரியுமா?