நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 2)
மத்திய கைலாஷ் கோயிலை இடிக்கப் போறாங்களாமே. வேற இடத்துலே கோயிலை மாத்திக்கறதுக்குக் கோயில் நிர்வாகம் சம்மதிச்சுட்டாங்கன்னு படிச்ச நினைவு. எதா இருந்தாலும் சம்பவம் சம்பவிக்குமுன் போய்ப் பார்த்துட்டு வந்துறலாமுன்னு வருஷக்கடைசியன்னிக்குக் கிளம்பினோம்.
அடையார் போகும் வழியில்ராஜ்பவன் எல்லாம் தாண்டிப் போனால் சி.எல்.ஆர்.ஐக்கு( இதைப் பார்த்தவுடன் நம் மா.சிவகுமார் ஞாபகம்வந்தது. ஆட்டோவில் பயணித்த ஒவ்வொரு முறையும் சிவகுமாரின் நினைவு வந்ததைத் தடுக்க முடியலை.காரணம் அப்புறம் ஒரு பதிவில் சொல்றேனே)எதிரில் கோயிலும், கோயிலைச் சுத்திப் புதுசா ஒரு ரோடும் இருக்கு. அனாவசியமா எதுக்குக் கோவிலை இடிக்கணுமுன்னு, அதைச் சுத்தி ரோடு போட்டுட்டாங்களாம். நல்லதுதான்.போற வர்ற வண்டிகளுக்கு கோயில் சுத்துன புண்ணியம் கிடைக்கும்:-)
உள்ளே நடுவில் ஒரு பிள்ளையார் சன்னிதியும், வெளியே அங்கங்கே சிவன், ஸ்ரீ ராமர், சக்தி, முருகன், ஆஞ்சநேயர், பைரவர் ன்னு தனித்தனியாக சந்நிதிகள் சுத்திவர இருக்கு. இங்கே என்ன விசேஷமுன்னா, பிள்ளையார் சதுர்த்திதினம், சூரியனுடைய கிரணங்கள் பிள்ளையார் சந்நிதியில் இருக்கும் மூலவர் மேல் விழுகிறதாம். அதுவுமில்லாமல் 'இன்னொரு சந்நிதி அத்யந்த ப்ரபு'வுக்கு இருக்கு. ஹரனும் ஹரியும் பாதிப்பாதி உருவமா இருக்கற ஹரிஹார்( கர்நாடகா) மாதிரி பிள்ளையாரும் ஹனுமானும் பாதிப்பாதி உருவமா இணைஞ்சிருக்காங்க.
உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லை. ஆனா வெளியில் இருந்து கோயிலையாவது எடுத்துருக்கலாம். என்னமோ விட்டுப்போச்சு. இந்தக் கோயிலுக்கு ஒரு வெப்சைட் கூட இருக்கு.
புதுப்புதுக் கோயில்கள் பெருகி வர்றதைப் புரிஞ்சுக்க முடியுது. மக்கள் தொகை பெருகிவரும் வேகத்தைப் பார்க்கறப்ப,அதுக்கு ஈடா, நம்பிக்கையை வளர்க்கக் கோவில்களும் எண்ணிக்கையில் வளரத்தானே வேணும். அதே சமயம் எத்தனையோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழைய கோயில்கள் கவனிப்பாரில்லாமல் எப்போ இடிஞ்சு விழுமோ என்ற நிலையில் இருக்கறதைப் பார்க்கும்போது, 'நம்ம ஜனங்கள் இதையும் கொஞ்சம் சீரமைச்சுக் கொண்டாடினால் என்ன?' ன்னு இருக்கு.
இங்கே இருந்து காந்தி நகர் பக்கம்தானே............ பத்மநாபசுவாமி கோயிலுக்குப் போகலாமுன்னு ஒரு ஆட்டோக்காரரை நிறுத்திக் கேட்டாச்சு. 'எனக்குத் தெரியும் சார். அது பெசண்ட் நகர்லே இருக்கு'ன்னு சொல்லி எங்களைக் கொண்டுபோய் விட்ட இடம் திருவான்மியூர்லே பாம்பன் சுவாமிகள் சமாதியான இடம்!
இப்படி ஒரு இடம் இருக்குன்னே தெரியாத எங்களுக்கு இன்னிக்கு இங்கே வரணுமுன்னு விதிச்சிருக்கு. உள்ளே போனோம். நல்ல பரந்த வெளி. முன் பக்கம் அழகான சின்ன தோட்டம். செயற்கைக் குளம், அதில் மிதக்கும் அல்லி ஆம்பல். இடதுகைப் பக்கம் சுவாமிகள் ஜீவ சமாதியான இடம். சின்ன மண்டபத்தில் பெரிய திருவுருவப் படம். அதுக்குமுன் செவ்வக வடிவில் தியான மண்டபம். சில குழந்தைகள் குழுவா உக்கார்ந்து என்னமோ படிக்கிறாங்க.அவருடைய உபதேசங்களா இருக்குமோ? மண்டபத் தூண்களில் உபதேசங்கள் சில எழுதி வச்சிருந்தாங்க. விதானத்துலே தாமரை அலங்காரத்தில் தமிழ் எழுத்துக்கள். என்னன்னு படிக்கணுமுன்னு தெரியலை. புதிர் போல இருக்கு!
மூணு பக்கமும் படிக்கட்டுகள் அருகில் யானைகள். கொள்ளை அழகு. இந்த சுவாமிகள் ராமேஸ்வரம் பக்கத்தில் பாம்பன் என்ற ஊரில் 1848 லே பிறந்தவராம். அப்ப அவர் பெயர் அப்பாவு. அருணகிரிநாதரை தன்னுடைய மானசீக குருவா ஏத்துக்கிட்டு முருகன்மேல் தீராத பக்தியுடன் இருந்தாராம். முப்பது வயசுலே கல்யாணம். அப்புறம் மூணு குழந்தைங்க.
சம்சாரியா இருந்து அப்புறம் சந்நியாச வாழ்க்கைக்கு மாறிட்டாராம். முருகன் மேல் 6666 பாடல்கள் எழுதி இருக்காராம்.அதுலெ ரொம்பக் குறிப்பிடத்தக்கது ஷண்முகக் கவசம். 1929ல் தன்னுடைய 81 வது வயசில் தன்னுடைய சீடர்களிடம் பொறுப்பை ஒப்படைச்சுட்டு உயிரோடு சமாதிக்குள்ளே இறங்கிட்டாராம்.
இந்த மண்டபத்துக்குப் பக்கத்தில் ஒரு முருகன் கோவில் இருக்கு. ஆறுமுகத்தோடு இருக்கார். அங்கேயும் ஒரு பெரிய ஷெட் போட்டு வச்சுருக்காங்க. விசேஷ நாட்களில் அங்கே பந்தி போட்டு அன்னதானம் நடைபெறுமாம்.நல்ல அருமையான கடற்கரை மணலும், தெங்குமா அந்த இடம் ரொம்பக் குளுமையா இருக்கு. அங்கே ஒருகட்டிடம் கட்டி அதை அலுவலகமாவும், சுவாமிகளின் உபதேசங்கள், பாடல்கள் எல்லாம் புத்தகமாவும் போட்டு விற்பனைக்கும் வச்சுருக்காங்க.
இவரைப்பத்தி ஒரு அற்புத நிகழ்ச்சியும் சொன்னாங்க. ஒரு சமயம் இவருக்குக் காலுலே அடிபட்டு, சென்னை பொது மருத்துவமனையில் சேரும்படி ஆச்சாம். அப்போ பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியாக இருந்த காலக்கட்டம். காலை வெட்டி எடுத்துறணுமுன்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்களாம். இவர் மட்டும் விடாம ஷண்முகக்கவசம் பாடிக்கிட்டே இருந்தாராம்.கடைசியில் அந்த மருத்துவர்கள் அதிசயிக்கிற மாதிரி இவர் கால் குணமாயிருச்சாம். அவர் இருந்த வார்டு சுவற்றில் முருகனுடைய உருவம் தென்பட்டதாம். அங்கெ இருந்த எல்லாருமே அதைப் பார்த்தாங்களாம். இன்னைக்கும் அந்த குறிப்பிட்ட வார்டில் அந்தக் குறிப்பிட்ட நாளில் பூஜை செய்றாங்களாம்.
வாயைத் திறக்காம எல்லாத்தையும் கேட்டுக்கிட்டோம். இன்னிக்கு பத்மநாபனைப் பார்த்தே தீரணுமுன்னு மறுபடி ஒரு ஆட்டோவைப் பிடிச்சு, 'விளக்கு விளக்குன்னு விளக்கி' அடையாறு காந்தி நகர் ரெண்டாவது மெயின் ரோடில்இருக்கும் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலை அடைக்க இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு.
வாசலுக்கு நேரா பாம்பின் மீது பள்ளி கொண்ட பதும நாபர். மனசுக்குள்ளே பிரமாண்டமாக் கற்பனை செஞ்சு வச்சுருந்தேன். கொஞ்சம் 'பொசுக்'குன்னு ஆகிருச்சு. திரு அனந்தபுரத்தில், பள்ளிகொண்டவனை மூன்று வாசலில் பார்க்கணும். தலை ஒரு வாசல், இடை ஒரு வாசல், கால் ஒரு வாசல்ன்னு. அதையே மனசுக்குள்ளே இத்தனை நாளும் போற்றிப் பாதுகாத்தது தப்பாப் போச்சு. ரெண்டு நாளைக்கு முன்னாலெகூட நம்ம திருப்பது தேவஸ்தானக் கோயிலிலே பின் வாசலிலே ஒரு பள்ளிகொண்டவனைப் பார்த்தது நினைவு வந்தது. இங்கேயாவது எதோ பரவாயில்லை என்ற சைஸ். அது (தி.நகரில்) ரொம்பக் குட்டியூண்டு. ஆறடி இருந்தாலே கூடுதல். வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷலா இருக்குமுன்னு நினைச்சேன்.
இடது பக்கம் பிள்ளையார். சிகப்பு, பச்சை, வெள்ளைன்னு கற்கள் பதிச்ச கவசத்தோடு ஒரே ஜொலிப்பு. ஓஹோ......நல்ல காசு இருக்கற கோயில்தான் போல. வலம் வரும்போது கவனிச்சது சக்கரத்தாழ்வாருக்கு வெள்ளிக் கவசம் மாட்டி விட்டுக்கிட்டு இருக்காங்க. கோவில் நிர்வாகி( அப்படித்தான் இருக்கணும்) மேற்பார்வை பார்த்துக்கிட்டு இருக்கார்.அவர்கிட்டே, இந்தக் காட்சியைப் படம் எடுக்கலாமா?'ன்னு கேட்டதுக்கு 'தாராளமா எடுத்துக்குங்கோ'ன்னு சொன்னார். கூடவே 'வைகுண்ட ஏகாதசியன்னிக்கு தங்கரதம் இழுத்தோம். பிரமாதக் கூட்டம். அன்னிக்கு வந்துருக்கலாமே'ன்னு சொன்னார். தங்கரதம் அங்கேயே ஒரு கண்ணாடி அறையில் நிக்குது. க்ளிக் க்ளிக் க்ளிக். சின்ன ரதம்தான். ஆனா தங்கமாச்சே! கருவறையின் வெளிப்புறம் மூணு பக்கச் சுவத்திலும் இருக்கும் கடவுளர் உருவங்களுக்கு வெள்ளிக் கவசங்கள் போட்டு வச்சுருக்காங்க. கொடுப்பினை.
சாமிகள் கூட நல்ல இடத்தில் இருந்தாத்தான் அலங்காரமும் அமர்க்களமும். இந்தப் பிள்ளையாரையே எடுத்துக்குங்களேன்,எவ்வளவு ஜோரா இருக்கார். எத்தனை இடத்துலே காத்துக்கும் மழைக்கும் பாதுகாப்பில்லாம, ஏன் ஒரு விளக்கு ஏத்தி வைக்க நாதி இல்லாமல்கூட இருக்கற பிள்ளையார்களைப் பார்த்திருக்கேன்...........ப்ச். 'எல்லாம் இருக்கும் இடத்தில்இருந்துவிட்டால் எல்லாம் சொர்க்கமே'ன்னு கவிஞர் கண்ணதாசன் பாட்டு மனசுலே ஒரு மூலையில் வந்து நின்னுச்சு.
பரமபத வாசல் எல்லாம் புதுசா வர்ணம் பூசி நின்னது. கருடவாகனம் கண்ணுலே பளபளப்போடு. அவ்வளவாக் கூட்டமில்லை.ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் இருக்கலாம். நின்னு நிதானமாப் பார்த்துட்டு வந்தோம். இன்னிக்கான கோயில் தரிசனம்ஆச்சு. இனி ...............
படங்கள் சிலதை இதில் போட்டுருக்கேன். இன்னும் உங்களுக்குக் காமிக்கணுமுன்னு விரும்புற படங்களை வெறும் படப்பதிவாப் போட்டுறலாமுன்னு ஒரு எண்ணம்.
தொடரும்.
Wednesday, March 07, 2007
பாம்பனும் பாம்பனும்
Posted by
துளசி கோபால்
at
3/07/2007 01:19:00 PM
27
comments
Labels: அனுபவம்/நிகழ்வுகள்
Monday, March 05, 2007
நெஞ்சாங்கூட்டில்.........நீயே நிற்கிறாய் ( பாகம் 1)
சாந்திநாதர்
எதுவுமே கிடைச்சிட்டு, அப்புறம் கிடைக்காமப் போகணும். அப்பத்தான் அதனோட அருமை பெருமை கூடுதலாய்த் தெரியும்.ஊர் ஊராய்ச் சுற்றிவளர்ந்த சிறுவயதுகளிலேயும் கோவில்கள் இல்லாத ஊரில் இருந்ததே இல்லை. இங்கே வந்தபிறகு அதுவும் சில வருஷங்களுப் பிறகுதான்( அதுவரை இங்கே செட்டில் ஆகும் பிஸியில்இருந்துட்டேன்) ரொம்பக் கஷ்டமாப்போச்சு. உள்ளூர்க் கோயில் ஒண்ணு இருந்தாலும், கோபுரம், கொடிமரம்இப்படி ஒண்ணும் இல்லாத இடத்தை கோயில்ன்னு மனசு ஒப்புக்கவே நாள் பல ஆச்சு. ச்சும்மா ஒரு வீட்டைவாங்கி அதைக் கோயிலா மாத்தி வச்சிருந்தாங்க. ஒரு பெரிய ஹால். அதில் ஒரு பகுதியில் ச்சின்ன மேடையில்ரெண்டு பளிங்குச் சிலைகள். சிலைகளைப் பார்த்தது போல் எதிர்ப்புறம் உட்கார்ந்திருக்கும் இந்த இயக்கத்தின் ஸ்தாபகர் சிலை. புரிஞ்சிருக்குமே..இது ஹரே கிருஷ்ணா இயக்கம் நடத்தும் கோயில்ன்னு!
ஆலயம் தொழுவது சாலவும் நன்றாம். சொல்லிவச்சுட்டுப் போயிட்டாங்க அந்த 'அம்மா'. இங்கேயெல்லாம் வந்து பார்க்க அவுங்களுக்கு அப்ப ச்சான்ஸ் இருந்துருக்காது. ச்சின்னவயசில் படிச்சது, குடும்பப் பழக்க வழக்கங்கள்ன்னுஎல்லாம் சேர்ந்து என்னப் பாடாய்ப் படுத்திக்கிட்டு இருந்தது ஒரு காலக் கட்டத்தில். அப்புறம் 'ஞானம்' வந்துருச்சு. கோயிலை மனசுலேயே கட்டிவச்சுக்க ஆரம்பிச்சேன். அதுலே இதுவரை( டச் வுட்) ஓரளவு வெற்றியும் கிடைச்சிருக்கு.எந்தக் கோயிலாக, ஏன்? மாதா கோயிலாக இருந்தாலும்கூட அங்கேபோய் உக்கார்ந்து என் மனசுலே இருக்கும் என் பெருமா(ளை)னைக் கும்பிட தயக்கம் எப்பவுமே வந்ததில்லை. ஆனா கோயில்ன்னு ஒரு கட்டிடம் இருக்கணும்.அதன்மேல் தீராத ஒரு காதல்.
அதனாலே ஊருக்கு எப்பப்போனாலும் கோயில் கோயில்ன்னு மனம் அலையும். இதுக்குத் தோதா அமைஞ்சதுபோல் திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்ததும்,தி.நகர் வெங்கடநாராயணா சாலையில்( சாலையின் பெயரும் நம்ம வெங்கியால் வந்ததோ?)உள்ள பெருமாள் கோயில் பக்கத்துலேயே தங்க இடம் கிடைச்சுக்கிட்டு இருந்தது. தினம் தவறாமல் காலையில் கோயிலுக்குப் போறதும், அங்கே பட்டர்களின் 'அராஜகம்' பார்த்து மனம் வெம்பி அந்தப் பெருமாளிடமே முறையிடுவதுமாத்தான் ச்சென்னைப்பயணம் இருந்துருக்கு. நம்ம வெங்கிக்கே பொறுக்கலை போலிருக்கு. 'என்னத்துக்கு இப்படி நீ அல்லாடறே? ரொம்பப் பக்கத்திலே இருந்தாத்தானே இந்த வம்பு தும்பெல்லாம் உன் கண்ணுலே படுது. கொஞ்சம் தள்ளி இடம் போட்டுத் தாரேன். கோயில், கோபுரமுன்னு அலையாதே. இங்கே பார், இன்னும் பக்கத்துலே ரெண்டே வீடு தள்ளி ஒரு கோயில் கூட உனக்காகவே வச்சுருக்கேன். கொஞ்ச காலமாவது மன நிம்மதியோடு இருந்துட்டுப்போ'ன்னு என்னை நார்த் கிரெசெண்ட் ரோடுலே வச்சுட்டார்.
இதுக்குமுன்னே ஒரு முறை போய்ப் பார்த்திருந்த கோயில்தான் இதுன்றதாலே தயக்கமே இல்லாம மறுநாள் காலையில் ஜி.என்.சாலையும், நார்த் கிரெசெண்ட் சாலையும் இணையும் இடத்தில் உள்ள கோயிலுக்குள்ளே நுழைஞ்சேன். உசரமான நுழைவாசல். ரெண்டு பக்கமும் மார்பிள் திண்ணைகள். அங்கே இருந்து கோயிலுக்குப் போகும் நடைபாதை. ரெண்டு பக்கமும் துளசிச்செடிகளும் குண்டு மல்லிச் செடிகளும். .ரெண்டு பக்கமும் பிரமாண்டமான வெள்ளையானைகள். அம்பாரி. ஒரு பக்கம் அரசன், மற்ற பக்கம் அரசி. இடது பக்கம் ஒரு எவர்சில்வர் வாளியில் தண்ணீர்.கைகால் கழுவிக்கொண்டு கோயிலுக்குள் போகலாம். பதினாறுப் படிக்கட்டுகள் ஏறினதும் முடியும் இடத்தில் ஒரு பெரிய கரும்பலகை.அதுவும் கோயிலின் வாசலை மறைச்சுக்கிட்டு! அதில் அன்று நடக்கப்போகும் விசேஷங்களின் பட்டியல்.
சாந்திநாத் மந்திர். சாந்தி நாதர். சாந்தி அளிக்கும் சாந்தி நாதர். நமக்கு வேண்டுவதும் அதுதானே?
படியேறி நுழைஞ்சவுடன் மூணு புறம் வாசல் இருக்கும் ஹால். நமக்கு இடம், வலமுன்னு ரெண்டு பக்கங்களிலும் வாசல். நேராக ஒரு மூணு பேர் நிக்கமுடியும் அளவுலே ஒரு சின்ன அறை, இல்லே சந்நிதின்னு சொல்லலாம். பளிங்குச் சுவற்றிலேயேசெதுக்கின சாந்திநாதர் சிற்பம். வாயைத் துணிகொண்டு கட்டிக்கிட்டு அங்கே நுழைஞ்சு சிலைகளுக்கு அலங்காரமோ, வழிபாடோ செய்யறாங்க.
ஹாலில் நடுவிலே சன்னதிக்கு எதிரே மூணடி உயரத்தில் ஒரு வெள்ளி பீடம். அதில் ச்சின்ன சிம்ஹாசனம். சுமார் பத்து இல்லை பனிரெண்டு செ.மீ அளவு வரும் ஒரு சிறிய வெள்ளிச்சிலை. நாராயண தீர்த்தங்கரர். எந்த நேரம்போனாலும் (கோயில் பகல் பனிரெண்டு மணிக்கு மூடிருவாங்களாம். அப்புறம் மாலை 4 மணிக்குத் திறக்குறாங்க.)சில மார்வாடி இன மங்கையர் வாயைக் கட்டிக்கொண்டு பாலபிஷேகம் செய்து கொண்டிருக்கறதைப் பார்த்தேன். ஒருச்சின்னச் சொம்பு பால்தான். கால் லிட்டர் இருந்தாவே அதிகம். அந்தப் பால் வழிந்து சிதறாமல், பீடத்துலே அமைஞ்சிருக்கும் மூக்குவழியா வெளியே வருது. அதையும் சிந்தாமல் சிதறாமல் இன்னொரு செம்பில் பிடிச்சுக்கறாங்க. அபிஷேகத்தண்ணீர்,பால்ன்னு ஊத்திக்கிட்டே இருந்தாலும் தரையில் ஒரு துளி ஈரமில்லை. விளக்குக் கொளுத்தி வச்சு தீபாராதனை.கூடவே அவர்கள் மொழியில் பாட்டு. ச்சின்ன ச்சின்ன மணைகள் ஒரு பக்கம் இருக்கு. அதுலே ஒரு கைப்பிடிஅரிசியைக் குமிச்சு எதோ ஜெபிச்சுக்கிட்டே ஸ்வஸ்திக் போல ஒரு கோலம் வரையறாங்க சிலர்.
கோயில் எல்லாருக்கும் பொதுதானாம். ஆனால் உள்ளெ கருவறையில் நுழையணுமுன்னா, அங்கே கோயிலிலேயே குளிச்சாகணும். அதுக்குண்டான வசதிகள் செஞ்சு வச்சுருக்காங்க. இடது பக்க வாசலுக்கு இடதுபுறம் சுவரிலேஒரு மாடம். அதில் ஒரு கைப்பிடி உயரச் சிலை. 'மணி மந்த்ர தேவ்'னு எழுதி வச்சிருக்கு. சந்தனம் பூசி வச்சுருக்காங்க. முகம் தெளிவா இல்லை. அருகிலே ஒரு விளக்கு எப்பவும் எரிஞ்சுக்கிட்டே இருக்கு.
ஹாலில் கொஞ்ச நேரம் தியானம் செய்யலாம்னு உக்கார்ந்தேன். நேராக் கருவறைக்குள்ளே பார்த்தால் என் பெருமா(ள்)ன்ஜொலிச்சுக்கிட்டு பூரண அலங்காரத்தோடு நிக்கறார். ஆஹா......... ஸ்ரீ நாராயணனை இங்கே (மனசில்) பிரதிஷ்டைசெஞ்சாச்சு. கண்ணைக் கசக்கிட்டு மறுபடி பார்த்தேன். சாந்திநாதர் சுவரில். பெருமாளாச்சு, பிள்ளையாரும்( நம்மமணி மந்த்ர தேவ்தான்)ஆச்சு.
கோயிலை வலம் வரலாமுன்னு இடது பக்க வாசல்வழியா வெளியே போனால்அங்கே ஒரு சிறிய மண்டபம். உள்ளெ குட்டிக் கருவறை. ஒரு காலை மடிச்சு உக்காந்திருக்கறது யாரு? பெயர் எழுதி இருக்கு.பத்மாவதி (தாயார்). சுவரில் செதுக்கிய சிலை. வடக்கத்திப் பாணியிலே புடவை கட்டி வச்சுருக்காங்க. அழகானவடிவம். கண்ணு மட்டும்.............. கொஞ்சம் 'அட! நீயான்னு முழிச்சு'ப் பார்க்கறதுபோல்! மண்டபத்தில் ஒரு அகலக் குறைவானநீள மேஜை. அதில் சாம்பிராணி தூப் புகையுது. ஒரு தட்டில் சாம்பிராணி தூப்கள் வச்சுருக்காங்க. விருப்பம் இருந்தால்கொளுத்தி வைக்கலாம்.ஒரு ஆணியில் பத்துப் பதினைஞ்சு ஜெபமாலைகள் தொங்குது. விருப்பம் இருந்தால் அதை எடுத்து ஜெபிக்கலாம். வலது பக்கம் ஒரு வெங்கல மணி தொங்குது. விருப்பம் இருந்தால்.............. எனக்கு விருப்பம். தினசரி அதை ஒருக்கா ஒலிக்க வச்சிருவேன். துள்சி ஆஜர் ஹோ........
வலமாகக் கோயிலைச் சுற்றிப் போனால் அங்கே ஒரு மேடையில் கிண்ணத்தில் சந்தனம். தொட்டு வைத்துக் கொள்ளக் 'கட்டிப்போட்ட' உலோகக்குச்சி. சுவரில் முகம் பார்க்கும் கண்ணாடி. எதிரில் ஒரு பெரிய சந்தனம் அரைக்கும் கல்.வாயைக் கட்டிக்கொண்டு காவி உடை இளைஞர் சந்தனக் கட்டையைத் தேய்ச்சு இழைக்கிறார். இப்ப ஒரு அஞ்சாறு வருஷமா தினமும் சந்தனம் நெற்றிக்கு இட்டுக்கற பழக்கம் எப்படியோ உண்டாயிருக்கு. அதுக்குத் தீம்பு வராம பெருமாள் ஏற்பாடு செஞ்சுருக்கார். பலே! பேஷ்!
சுற்றி வந்து முன்பக்கம் படிகளில் இறங்கிறலாம். ரெண்டு நிலைக்கோயில் முழுக்க முழுக்க பளிங்கும், லைம் &சோப் ஸ்டோனும் கொண்டு கட்டி வச்சுருக்காங்க. 70 அடி உயரக் கோபுரம் . படு சுத்தமா இருக்கு. தூண்களில் அலங்காரமாய் குட்டிக்குட்டியா ஏராளமான யானைகள். கோபுரத்தின் பக்கத்தில் எல்லாம் யானையோ யானை. எண்ணி மாளலை(-:
காம்பவுண்டு சுவருமே அழகா அங்கங்கே குட்டி மண்டபத்தோட இருக்கு. அந்த மண்டபத்துக்குள்ளே விளக்கு. கோயிலுக்குப் பின்புறமும், வலப்புறமும் பெரிய ஹால்கள். கல்யாணம் போன்ற விசேஷத்துக்குப் பயன்படுத்திக்கவாம். அதுக்குப் பக்கத்தில் தண்ணீர்ப் பந்தல். யாரும் வந்தமாதிரி தெரியலை. இப்ப டிசம்பர் மாசமாச்சே, கோடையில் வருவாங்களோ என்னமோ!
அங்கே இருந்த அத்தனை நாளும் தவறாமப் போன இடம் இதுவும், சரவணபவனும்தான்.
தொடரும்...........
முன்னுரை:
உங்கள் ஆதரவு வழக்கம்போல் இருக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இந்தப் பயணத்தில் தரிசித்த சில குறிப்பிட்டக் கோவில்களைப் பற்றி எழுதும் தொடர் இது. தட்டிக்குட்டுபவர்களை வரவேற்கின்றேன்.
Posted by
துளசி கோபால்
at
3/05/2007 01:10:00 PM
20
comments
Labels: அனுபவம்/நிகழ்வுகள்
Friday, March 02, 2007
தமிழில் ஒரு சந்தேகம்.
சமீபத்தில்(???) ஒரு படம் பார்த்தேன். கதாநாயகன் பெயர் 'தமிழ்'. இதுக்கு முன்னேகூட
ரெண்டொரு தமிழ்ப் படத்தில் இந்தப் பேரைப் பார்த்துருக்கேன். அப்ப வராத ஒரு சந்தேகம்
திடீர்னு மனசுலெ இப்ப வந்துருச்சு.
தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழரசன், தமிழ்....... தமிழ்........ன்னு பல பெயர்களைச் சாதாரணமாத் தமிழ் நாட்டிலே பார்க்கறொமே. இதேபோல வேற யாராவது எந்த
மொழிக்காரர்களாவது அவுங்க மொழியைப் பேரா வச்சுக்கறாங்களா?
தெரிஞ்சவுங்க சொல்லுங்கப்பா.
தெலுங்கரசி, மலையாளச்செல்வன், கன்னடச் செல்வி, மராத்தி, இந்தின்னு
எங்கேயுமே இல்லையோ?
அப்ப இது நமக்கு மட்டுமே சிறப்பான ஒண்ணா?
இங்கே நியூஸியில் ' இங்கிலிஷ்'ன்னு சர் நேம் இருக்கு.
Posted by
துளசி கோபால்
at
3/02/2007 03:51:00 PM
41
comments
Labels: பொதுவானவை
