அனுபவம் பகுதி 15
**********************
"இந்தியாவில் 'டாய்லெட்' இருக்கிறதா?"
"இந்தியாவில் 'டாய்லெட்' இருக்கிறதா?"
உதவியாளர் கேட்ட கேள்வி இது! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது!
"ஏன் அப்படிக் கேட்கின்றாய்?"
"ச்சும்மாதான். தெரிந்து கொள்ளுவதற்காக!"
சரி. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் என்றெண்ணி, அங்கு 'டாய்லெட்' இல்லையே என்றேன்.
இப்போது, அதிர்ச்சி அந்தப் பெண்ணுக்கு!
"உண்மையாகவா? அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?"
" எங்களுக்குப் போகவேண்டுமென்றால் இங்கே ஃபிஜிக்கு வந்துவிடுவோம்"
அதன்பின் நான் தெரிந்து கொண்ட விவரம் இது.
இங்குள்ளவர்களுக்கு ( குஜ்ஜுக்கள் நீங்கலாக) இந்தியாவைப் பற்றித் தெரிந்த விவரங்கள் எல்லாமே திரைப்படங்களின் மூலம்தான்
அதிலும் ஹிந்தி சினிமாக்கள் மட்டுமே பார்த்து அதிலுள்ளதுதான் இந்தியா என்ற முடிவுக்கு வந்திருந்தனர்!
அப்போதெல்லாம் ( அந்தக் காலக் கட்டங்களில் வந்த)சில/பல ஹிந்திப் படங்களில் ('ஜக்தீப்' என்ற தமாசு நடிகர் வரும் காட்சிகளில்)
கிராமத்து ஆட்கள் 'லோட்டா ( செம்பு) எடுத்துக் கொண்டு, வெளியே 'கடன்' கழிக்கப் போவதான காட்சிகள் நிறைய இடம்
பெற்றிருந்தன. அவைகளையெல்லாம் கவனமாகப் பார்த்து, இந்த விபரீத முடிவுக்கு வந்துவிட்டிருந்தனர் இங்குள்ள சாதாரண மக்கள்.
இவர்களுக்குத்தான் இந்தியத் தொடர்பே விட்டுப் போய்விட்டதல்லவா? இந்தக் கேள்வியை குஜராத்திகள் வீட்டில் ( அங்கும் இவர்கள் தானே
வேலைக்குப் போகிறார்கள்!) கேட்டிருக்கலாம். ஆனால் பயம்! அவர்கள் வியாபார சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பணக்காரர்கள். அங்கே
வாய் திறக்காமல் சொன்ன வேலையைச் செய்யவேண்டும் என்ற எழுதப்படாத நியதிகள்!
ஏனோ, பணக்காரர்களைப் பார்த்தால் சாதாரண நிலையில் உள்ள ஜனங்களுக்கு உள்ளூர ஒரு பயம்! முன்பு, ஒரு ஹிந்திப் படத்தில்கூட
'பணம் என்ற சுவரால் கட்டப்பட்டக் கோட்டை' என்றொரு வசனம் வந்ததாக ஞாபகம்!
நம் நாட்டிலும் சிலர், வேறு ஒருவரைக் குறிப்பிடும்போது 'அவர்க்ள் பணக்காரர்கள்' என்ற அடைமொழியோடு சேர்த்துச் சொல்வார்கள்.
பணம் என்பது ஒரு 'க்வாலிஃபிகேஷன்' என்பது போல. அவர்களிடம் உள்ள பணம் அவர்களுக்கு. நமக்கா தரப்போகின்றார்கள்?
(ஆனா என் கணவர் இப்போது சொல்வது," பணம் ஒரு 'க்வாலிஃபிகேஷன்'தான். அது இருந்தால் வேற எதுவும் தேவையில்லை"
மனுஷர் எப்படி மாறிட்டார் பாருங்க!)
அதுவேதான் இனிமேல் 'ஜாதியோ' என்றும் சிலவேளைகளில் நினைப்பேன்.
அது போகட்டும். இங்கே நம் இந்தியவம்சாவளியினர் இப்போது ஒரு ஐந்தாறு தலைமுறைகளாக வசிக்கின்றனர். அவர்களில் முதல் மூன்று
தலைமுறையினர் இங்கே பிரிட்டிஷ்காரர்களின் ஒப்பந்தத்தில் இருந்தனர். அவர்களுக்குப் பின்னே வந்தவர்கள் (பிறந்தவர்கள்) கொஞ்சம்
தலையெடுத்ததும் வேறு எங்காவது போய் வசிக்க வாய்ப்புள்ளதா என்று தேடியிருக்கின்றனர்.
இங்கிலாந்து அரசின் நேரடிப் பார்வையில் இருந்த தேசங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது. ஒரே தலைமையின் கீழ் உள்ள மற்ற நாடுகளுக்கு
'விஸா' அனுமதியில்லாமல் போய்வரக்கூடிய உரிமை இருந்த காரணத்தினால், சிலர் இங்கிலாந்து, கனடா( ப்ரிட்டிஷ்) என்று போய் அங்கேயே
நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அவர்கள் யாருமே திரும்ப இந்தியாவுக்கு வரவில்லை. அப்படி ஒரு எண்ணமே
அவர்களுக்குத் தோன்றவில்லை போலுள்ளது!
அப்போது ஆஸ்தராலியாவுக்கும் ஒரு சிலர் போயிருக்கின்றனர். நியூஸிலாந்தில் வெள்ளைக்காரர்களுக்கு 'மட்டுமே' குடியுரிமை தரப்பட்டது!
அப்படிப் போனவர்கள் தங்கள் தாய்நாடாக நினைத்தது ஃபிஜியைத்தான்!
இந்தப் பணம் காசு என்று குறிப்பிட்டேனே, இதுதான் இங்கே ராணுவ ஆட்சி வருவதற்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது!
இந்தியர்கள் வியாபாரம், விவசாயம் என்று நிறைய விஷயங்களில் ஈடுபட்டு நல்ல நிலையை வெகு சீக்கிரமே அடைந்துவிட்டனர். எல்லாம்
குறைவறக் கிடைத்தபின்னும் 'தேடல்' என்பது மனித சுபாவம் அல்லவா?
கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்கள். இந்தியர்கள் ஜனத்தொகை நாட்டின் 55% ஆயிருந்தது! நேடிவ் ஃபிஜி மக்கள்
44% இருந்தனர்! பாக்கி 1% என்ன என்று நினைக்கிறீர்களா? சீனர்கள்தான்!
இங்குள்ள 'தங்கச் சுரங்கங்களில்' வேலை செய்வதற்கு வந்தவர்களாம்! இந்தச் சுரங்கங்களை ஆஸ்தராலிய நிறுவனக்கள் மிகவும் குறைந்த
விலையில் ஒப்பந்தம் செய்து வைத்திருந்தன! இப்போதும்தான்!
அரசியல் 'பலம்' மண்ணின் மைந்தர்களுக்கும், பணத்தின் 'பலம்' இந்தியர்களுக்குமான ஒரு சூழ்நிலை உருவாகத் தொடங்கியது!
'ராத்தூ' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட 'பாரமவுண்ட் சீஃப்'கள் ஏறக்குறைய சிற்றரசர்கள் போல நடந்து கொள்ளும் முறைகளால்
மற்ற சில 'கோரோ' தலைவர்களுக்கு ஒரு அதிருப்தி உண்டாகத் தொடங்கி அது வேர் விட்டு வளர ஆரம்பித்திருந்த காலம்.
அவர்கள் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியவுடன், ஏராளமான இந்தியர்கள் அதில் பங்கேற்றார்கள். இது வரையில் ஒரே மாதிரியான
அரசாங்கமே நடந்து கொண்டிருந்தது. இப்போது மாற்றுக் கட்சி உருவானவுடன், 1987 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த மாற்றுக் கட்சி
மகத்தான வெற்றியைப் பெற்றது! புது மந்திரி சபையில் அநேக இந்தியர்கள் இடம் பெற்றனர்! நம் நண்பராகிய அடுத்த வீட்டுக்காரரும் மந்திரிப்
பதவி கிடைக்கப்பெற்றார். பிரதமர் ஒரு ஃபிஜியன் என்றாலும் அவர் 'ராத்தூ' பரம்பரையைச் சேர்ந்தவர் அல்ல!
இந்தியர்கள் எல்லாம் ஒரே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தனர்!
இன்னும் வரும்!
**************
Monday, November 08, 2004
நிழலும் நிஜமும்!!!!!!
Posted by
துளசி கோபால்
at
11/08/2004 08:50:00 PM
1 comments
Friday, November 05, 2004
தீபாவளி !!!!!!
ஃபிஜி அனுபவம் பகுதி 14
**********************
தீபாவளிக்கு அரசாங்க விடுமுறை!!!! இது ஒரு பெரிய விஷயமா? ஆமாம்! வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு, குறிப்பாக
வெள்ளைக்காரர்களின் தேசத்தில் வசிக்கும் நம்மவர்க்கு, தீபாவளி பண்டிகை என்றால் அதுவும், அது வார இறுதியில் இல்லாமல் சாதாரண
வேலை நாளாக இருந்துவிட்டால் அது வெறும் நாள்தான்!
தீபாவளிக்கு அரசாங்க விடுமுறை!!!! இது ஒரு பெரிய விஷயமா? ஆமாம்! வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு, குறிப்பாக
வெள்ளைக்காரர்களின் தேசத்தில் வசிக்கும் நம்மவர்க்கு, தீபாவளி பண்டிகை என்றால் அதுவும், அது வார இறுதியில் இல்லாமல் சாதாரண
வேலை நாளாக இருந்துவிட்டால் அது வெறும் நாள்தான்!
சரி, வருடத்தில் ஒரு நாள்தானே என்று விடுப்பும் எடுக்க மாட்டார்கள். அன்றுதான் 'தலைபோகும்'விதமான பிளானிங் மீட்டிங், அது இது
என்று ஏதாவது முக்கியமாக(!) இருந்து தொலைக்கும்! ( அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் கஷ்டம் புரியும்!)
ஆனால் ஃபிஜியில் வம்பே இல்லை. அரசாங்க விடுமுறை! இந்தத் தீபாவளியுமே இங்குள்ள எல்லோருக்கும் மிகவும் முக்கியமான பண்டிகை!
குஜராத்திகளுக்கு இது புது வருடம்! வட இந்தியர்களுக்கு ஸ்ரீ ராமன் காட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய தினம்! நமக்கோ 'நரகாசுரன் வதம்'
தென்னிந்தியர்கள் மற்றெந்தப் பண்டிகையும் இங்கே கொண்டாடுவதில்லை! வட இந்தியர்கள் மட்டுமே ஸ்ரீராம நவமியையும், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி
யையும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்! ஆனால் ஆ என்றால் ஊ என்றால் உபவாசம் இருந்துவிடுவார்கள்!
தீபாவளிப் பண்டிகைக்கு வீடுகளில் தீப அலங்காரம் பிரதானப் பங்கு வகிக்கின்றது! மண் அகல்களில் ஏற்கெனவே மெழுகு உருக்கி
ஊற்றிய விளக்குகள் தாரளமாகக் கிடைக்கின்றன! போதாததற்கு 'கிறிஸ்மஸ் லைட்' தோரணங்களும் மலிவாகக் கிடைக்கின்றன. ஒரு விஷயம்
கவனித்தீர்களா? தீபாவளி, ரம்ஜான்,கிறிஸ்மஸ் எல்லாமே அடுத்தடுத்து இந்த நவம்பர், டிசம்பர்களில் வந்துவிடுகின்றது! கூடவே ஆங்கிலப்
புத்தாண்டும்!
எல்லா வீடுகளிலும் இந்த அலங்காரங்கள் இடம்பெறுவதோடு, ஆங்கிலப் புத்தாண்டுவரை கழற்றப்படாமல் அப்படியே இருக்கவும் செய்யும்!
அதுவரை கடைகளில் தீபாவளிப் பட்டாசுகளும் விற்பனையில் இருக்கும்.
இங்கே ஒரு விஷயம் இடைச்செருகலாக வருகிறது. நான் வசிக்கும் நியூஸிலாந்தில் பட்டாசு கிடைப்பது வருடத்தில் ஒரு வாரம் மட்டுமே.
அதுவும் அக்டோபர் கடைசியில் ஆரம்பித்து நவம்பர் ஐந்தாம் தேதி, மாலை ஐந்து மணிவரை மட்டுமே விற்க முடியும். ப்ரிட்டிஷ்காரர்
களின் நரகாசுரனான 'கை ஃபாக்ஸ் டே' வாண வேடிக்கை, வெடிக்கட்டு விழா ஒவ்வொரு வருடமும் நவம்பர் 5 வது நாள்
கொண்டாடப் படுகிறது. இந்த நாளோடு பட்டாசு விற்பனையை முடித்துவிடவேண்டும். அணுகுண்டு, லக்ஷ்மி வெடி என்றெல்லாம்
' டமால், டுமீல்' வெடிகள் இல்லை. எல்லாம் 'புஸ் வாணம்' வகைகள்தான்! ஆபத்தில்லாத வாணங்கள்!
இன்னுமொரு வேடிக்கை, பட்டாசு வாங்க குறைந்த பட்ச வயது 14 ! சின்னப்புள்ளைங்களுக்குத் 'தடா!' ஆனால் அன்று கடற்கரையில்
நகராட்சி மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் வாண வேடிக்கையைக் காண ஊரே திரண்டுவரும்! ( இது இன்று தான். இரவு நாங்களும்
போவோம்!)
மேற்படி எந்தவிதமான கட்டுத்திட்டங்களும் ஃபிஜியில் கிடையாது! அது ஓர் இந்தியா அவே ஃப்ரம் இந்தியா! தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு
முன்பிருந்தே 'டப், டுப்' என்று சின்ன சின்ன சப்தங்களாக பட்டாசு சத்தம் கேட்கத் தொடங்கி, தீபாவளிக் களைகட்ட ஆரம்பித்துவிடும்!
பலகாரங்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதிலும் அனைவரும் பங்கு கொள்வார்கள். ஒவ்வொரு நாள் ஒரு வீடு என்று ஆரம்பித்து வேலை
நடக்கும்!
'லக்கடி மிட்டாய்' என்ற ஒன்றைக் கட்டாயம் செய்வார்கள். நம் நாட்டில் கிடைக்கும் சக்கரை சேவு ஞாபகம் இருக்கிறதா? அதுதான் இது!
ஆனால் மைதா மாவில் செய்து, முதிர்ந்த பாகில் போட்டுக் கலந்துவிடுவார்கள். ஆறியவுடன், வெண்மையாக பனி போர்த்தியதுபோல
இருக்கும்! 'ஸைனா' என்றொரு காரவகை. இங்கே 'டாரோ' என்னும் கிழங்குவகைகள் ஏராளம் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன்
அல்லவா? இந்த்க் கிழங்கின் இலைகள் நம் நாட்டு சேப்பங்கிழங்கின் இலைகள் போல பெரிய அளவில் இருக்கும்.
பருப்பு வகைகளை, மிளகாய், உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பதுபோல அரைத்து, இந்த இலைகளைப் பரத்தி அதன் பின்னே கனமாகத்
தடவி விடுவார்கள். ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு அல்லது மூன்று இலைகளில் இப்படித் தடவி, அவைகளை ஒன்று சேர்த்து சுருட்டுவார்கள்.
நீளமாக சிலிண்டர் போல இருக்கும் இவைகளை ஆவியில் வேகவைத்து, ஆறியவுடன் வட்ட வில்லைகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தால்
ஆச்சு இந்த 'ஸைனா!'
இன்னும் பலவிதமான பலகாரங்கள். இதை எழுதும்போதே, அவைகளையெல்லாம் 'மிஸ்' செய்த உணர்வு வருகின்றது! குஜராத்திகளால்
நடத்தப் பெறும் 'மிட்டாய்க் கடை'களிலும் பலவிதமான 'தீபாவளி ஸ்பெஷல்'கள். 'ஹரே கிருஷ்ணா இயக்கம்' நடத்தும் உணவுக்கடை
களிலும் பாலினால் செய்யப்பட்ட பலவகை இனிப்புகளை இப்போதெல்லாம் ஒரு கிலோ, அரைக் கிலோ பாக்கெட்டுகளில் வீற்பனை
செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தீபாவளிதினம் வந்தாச்சா? ஆரம்பித்துவிடும் நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று விஜயங்கள்! காலை முதல் கார்கள் ஓடிக்கொண்டேயிருக்கும்.
(அதுதான் நல்ல நாளிலேயே யாரும் நடக்க மாட்டார்களே!) பலகாரம் 'டிஸ்ட்ரிப்யூஷன்' நடந்துகொண்டே இருக்கும்! அநேகமாக ஒரே
ரெஸிபிதானே! செய்ததும் ஒரே கூட்டம் தானே! ஆனாலும், போய்வந்து போய்வந்து உடலே தளர்ந்துவிடும்!
புது உடைகள் கூட முக்கியமில்லை! பலகாரங்கள்தான் முக்கியம்! வீடு முழுக்கப் பலகாரங்கள்தான்! கெட்டதில், நல்லது என்னவென்றால்
தனித்தனியாகத் தட்டுத்தட்டாக எடுத்து வைக்கவேண்டாம்! அந்தந்த வகைகளை மட்டும் தனியாக ஒவ்வொரு பாத்திரத்தில் போட்டுவிடலாம்!
நேடிவ் ஃபிஜியர்கள் இந்த தீபாவளியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு இந்தப் பலகாரங்கள் எல்லாம் ரொம்பவே
பிடிக்கும்! நம்மைவிட நன்றாக 'அனுபவித்து, ரஸித்து' உண்பார்கள்!
மாலை ஆனவுடன், ஊரே கடைத்தெருவில்தான் இருக்கும். குஜராத்திகளுக்கு இது புதுக் கணக்கு எழுதும் புது வருட விழாவல்லவா?
அவர்களும் கடைவாசலில் இனிப்பு விநியோகித்துக் கொண்டும், பெட்டி பெட்டியாக பட்டாசு வெடித்துக்கொண்டும் இருப்பார்கள். எல்லாம்
முடிந்ததும் கார்களின் ஊர்வலம் தொடங்கிவிடும்! எல்லாப் பகுதிகளுக்கும் ஒரு 'ட்ரைவ்' போய் வீடுகளில் போடப்பட்டுள்ள தீப
அலங்காரங்களைப் பார்ப்பது ஒரு கட்டாயக் கடமை!
கிறிஸ்மஸ் முடியும்வரை, இருட்டியவுடன் இதே மாதிரி அவ்வப்போது நகர்வலங்கள் தொடரும். டிஸம்பர் 22 'நீண்ட பகல் பொழுது' உள்ள
தினமல்லவா? அன்று 'படா தின்' கொண்டாட்டங்கள். இதில் நேடிவ் ஃபிஜியர்களும் 'ஹாங்கி' என்று செய்வார்கள். பெரிய பள்ளம் தோண்டி,
அதில் அடுப்புக் கரிகள் போட்டு அதன் மேல் பெரிய வாழை இலைகளில் இறைச்சி, உருளைக் கிழங்கு, இன்னும் காய் கறிகள் எல்லாம்
பொதிந்து பொட்டலமாக செய்து அடுக்கி விட்டு, அதன்மேல் இன்னும் பல வாழை இலைகளைக் கொண்டு மூடி விடுவார்கள். இன்னும் சில
கட்டைகளையும், அடுப்புத் தணலையும் அதன் மேல் போட்டு, மண்ணால் நன்றாக மூடிவிடுவார்கள். அது ஒரு 3 மணிநேரம் புகைந்து
கொண்டே இருக்கும். அப்புறம் அந்தக் குழியைத் தோண்டி அதிலுள்ள ஆகார வகைகளை வெளியே எடுத்தால் எல்லாம் நன்றாக வெந்து
போயிருக்கும். பெரிய கூட்டமாக சுற்றி அமர்ந்து உண்பார்கள். கூடவே 'யக்கோனா'! இந்தியர்களையும் இந்த 'ஹாங்கி விருந்து'க்கு
அழைத்து மகிழ்வார்கள்.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் சரியாக டிசம்பர் 31 இரவு 12 மணி அடித்தவுடன் ஆரம்பித்துவிடும்.
எல்லா வீடுகளிலிருந்தும் ( ஒன்றுவிடாமல் எல்லா வீடுகளும்) கார்கள் புறப்படும்.
'கழுதை வாலில் பட்டாசு கட்டிவிடுவது போல' பழைய தகர டப்பாக்களைத் துளை போட்டு, காரின் பின்னே கட்டிவிடுவார்கள். அது
'டர்ர, டக டக,'வென்று நாராசமாக ஒலி எழுப்பிக் கொண்டே வரும். அந்தச் சத்தத்துடன் ஊர் முழுதும் வலம் வந்த பின் தான், தூங்கவே
போவார்கள்! கெட்ட ஆவிகளைப் பயப்படுத்தி ஓட்டுவதற்காம் இந்தச் சத்தம்!
இந்த விழாக்களில் எல்லாம் அநேக ஆடுகளுக்கு 'மோட்சம்'தான்! இந்த இடத்தில் ஒன்று குறிப்பிடவேண்டும். வீட்டு வேலை என்று வரும்போது,
இறைச்சி, மீன் வகைகள் சுத்தம் செய்து தருவது 'ஆண்கள்' வேலை. 'பார் பெக்யூ' செய்வதற்கு இறைச்சியில் மசாலா கலப்பது மட்டும்
பெண்கள். அவற்றைச் சுட்டு எடுப்பது ஆண்கள்! துணிமணிகளைத் துவைப்பதும், முக்கியமாக அவைகளை 'அயர்ன்' செய்வதும்
கட்டாயம் பெண்கள் வேலையாம்! எப்போதாவது என் கணவர் அவசரத்துக்கென்று ஒரு ஷர்ட்டை அயர்ன் செய்வதைப் பார்த்தால்கூடப்
போதும் நம் உதவியாளர் பெண்ணுக்கு பதற்றம் வந்துவிடும். ஓடிவந்து அதைக் கையிலிருந்து பிடுங்கி, தானே அயர்ன் செய்து கொடுத்தால்தான்
அந்தப் பதற்றம் நீங்கும்!
இதில் என்ன இருக்கு என்று எனக்கு இன்னமும் புரியவில்லை!
இன்னும் வரும்!
******************
Posted by
துளசி கோபால்
at
11/05/2004 01:36:00 PM
3
comments
Monday, November 01, 2004
ஆராரோ ஆரிரரோ !!!!!
ஃபிஜி அனுபவம் பகுதி 13
*********************
தத்துப் பிள்ளை வேணுமா? தடங்கல் இல்லாமக் கிடைக்கும்! தமிழ் நாட்டில் பரவலாகக் கேள்விப்படும்
விஷயம் ஒன்று உண்டல்லவா?
தத்துப் பிள்ளை வேணுமா? தடங்கல் இல்லாமக் கிடைக்கும்! தமிழ் நாட்டில் பரவலாகக் கேள்விப்படும்
விஷயம் ஒன்று உண்டல்லவா? சில இடங்களில் பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அதற்கு முடிவு
கட்டிவிடுகிறார்கள் என்று!
இங்கே அதுபோல இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. குழந்தை ஆணோ, பெண்ணோ(!) வேண்டாம் என்றால்
அரசாங்கமே அக்குழந்தைக்கு வேண்டியதைச் செய்துவிடுகிறது!
மணம் ஆகாத சில இளம்பெண்கள், தாய்மை அடைந்துவிட்டால் சமூகம் அதை மிகப்பெரிய விஷயமாகக் கருதுவதில்லை!
மகப்பேறு நடக்கும்போதே, அந்தக் குழந்தை அவர்களுக்கு வேண்டாமென்று சொல்லும் உரிமையும் அளிக்கப்படுகிறது!
அந்தக் குழந்தை பிறந்தவுடனே அதைத் தனியாகக் கொண்டுபோய் குழந்தைகள் பிரிவில் வைத்து நல்ல முறையில்
கவனிக்கின்றார்கள். அதை உடனே அரசாங்க அலுவலகத்திலும் தெரிவிக்கின்றனர்.
வெல்ஃபேர் டிபார்ட்மெண்ட் மூலம் இந்த விவரம் தத்துக்குழந்தைக்காக பதிவு செய்துள்ளவர்களுக்குப் போய்ச் சேருகிறது.
அவர்கள் ஆசுபத்திரிக்குப் போய் அந்தக் குழந்தையைப் பார்த்து, வேண்டுமா, வேண்டாமா என்றும் முடிவு செய்யலாம்!
சில தம்பதிகள், சாவகாசமாக நேரம் எடுத்துக் கொண்டு முடிவு செய்கின்றனர். சிலர் உடனே! எப்படியானாலும்
வீடுகள் கிடைக்காமல் இருப்பதில்லை. நிறையக் குழந்தைகள் உள்ளவர்கள் கூட, இதுபோல மருத்துவ மனையில்
குழந்தை இருக்கிறதென்று கேள்விப்பட்டால் தயக்கம் இன்றி தத்து எடுத்துக் கொள்கின்றனர்.
ஆஸ்தரேலியா, நியூஸிலாந்து நாடுகளுக்குக் கூட தத்துக் கொடுத்துவிடுகின்றனர். ஃபிஜி அரசாங்கத்திடம் மனு கொடுத்தால்
அவர்களே ஏற்பாடு செய்து விடுகின்றனர்.
நாலு பேர் பேசுவார்கள் என்ற சமூக நிலை இல்லாததாலும் இதை யாரும் பெரிதாகக் கருதுவது இல்லை.
பொதுவாக மிகவும் ஏழ்மை நிலையிலும், கல்வி அறிவு மிகவும் குறைந்துள்ள மக்களிடம்தான் இந்த (கல்யாணத்துக்கு
முன் கர்ப்பமாகிவிடும்) நிலை உள்ளது.
இங்கே சமூக அந்தஸ்த்து அவ்வளவாகப் பார்க்கப் படுவதில்லை. முதலில் நாங்கள் இங்கு வந்தபோது, வீட்டுவேலைகளுக்கு
உதவி செய்ய ஒரு 15 வயதுப் பெண்ணை அழைத்து வந்தார்கள், நம் பக்கத்து வீட்டு அக்கா. உள்ளே வந்தவுடன் அந்தப் பெண்
சோஃபாவில் நம் எதிரில் உட்கார்ந்து கொண்டு என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் விவரம் கேட்டுக்
கொண்டிருந்தாள்.
இந்தியாவைவிட்டு அப்போதுதான் வெளிநாட்டுக்கு வந்திருந்த எனக்குக் கொஞ்சம் விசித்திரமாக ( அதிர்ச்சியாகவா?) இருந்தது.
இந்தியாவில் வேலைக்காரர்கள், எஜமானர்கள் உறவு வேறுமுறையில் இருந்ததும், அதிலேயே பழக்கப் பட்டுவிட்டதும்தான் காரணம்!
மறுநாளிலிருந்து, அந்தப் பெண் வேலைக்கு வர ஆரம்பித்தாள். வந்தவுடன் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு ஒரு 'சாய்' போட்டுக்
கொடுக்கும்படி கேட்டாள். என்னவென்று புரியாத நிலையில் நான் 'டீ'தயாரித்துக் கொடுத்தேன். அதைக் குடித்துவிட்டுத்தான் வேலைகளை
ஆரம்பித்துச் செவ்வனே செய்து முடித்தாள். அன்று முதல், வந்தவுடன்,'பஹனி, ஏக் ச்சாய் பனாவ்' என்பது வாடிக்கையாகிவிட்டது.
நானும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருக்கவும் கற்றுக் கொண்டேன்.
சில மாதங்களுக்குப் பின் இந்தப் பெண்ணின் தோழி, இவளுக்குப் பதிலாக வேலைக்கு வர ஆரம்பித்தாள். காரணம் என்னவென்று
அறிந்ததும் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை. கர்ப்பமாக இருக்கின்றாளாம்! அப்புறம் ஒரு நாள் நம் வீட்டுக்கு வந்திருந்தாள்.
குழந்தையைப் பற்றி விசாரித்தேன். ஆண் குழந்தையாம். அரசாங்கம் மூலம் அக்குழந்தை 'தத்து' எடுத்துக்கொள்ளப்பட்டதாம். விவரம்
அறிந்தபோது, எனக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது.
நான் ரொம்பப் பெரிய மனுஷி மாதிரி, அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறினேன். 'நடந்தது பற்றிப் பேசி என்ன பயன்? இனிமேல் நீ
கவனமாக இருந்துகொள். அந்தக் குழந்தை ஒரு நல்ல இடத்தில் வளருவது மிகவும் நல்ல விஷயமல்லவா?, ஆண்களை நம்பி ஏமாந்து
விடாதே. உனக்கு இன்னும் 16 வயதுகூட நிரம்பவில்லை. நல்ல பையனாகப் பார்த்து திருமணம் செய்துகொள்...... இப்படி
என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தப் பெண்ணும் சரி சரி என்று தலையை ஆட்டிக் கொண்டிருந்தது.
சில மாதங்களுக்குப் பின் அவளை மார்க்கெட்டில் சந்திக்க நேர்ந்தபோது எட்டு மாதக் கர்ப்பிணியாக இருந்தாள். இந்தக் குழந்தையும்
'அடாப்ஷன்' போகிறதென்று தெரிவித்தாள்.
எப்படியோ இந்தக் குழந்தைகளுக்கு வளர்ப்புப் பெற்றோர் கிடைடத்து விடுகின்றனர்.
இன்னொன்று, இங்கே 'ஜாதி' என்பது ஒரு பிரச்சனை இல்லை. ஒரு குடும்பத்தில் தாயும் தந்தையும் வேறு வேறு ஜாதி.
அவர்கள் மருமகனோ, மருமகளோ வேறு வேறு ஜாதி என்பதெல்லாம் சர்வ சாதாரணம்.
பெண்குழந்தைகளோ, ஆண் குழந்தைகளோ வளர்ப்பு, திருமணச் செலவு எல்லாமே ஒரே மாதிரிதான். வரதட்சிணை என்ற
அரக்கன் இன்னும் இங்கே வரவில்லை. சீர் செனத்தி இன்ன மாதிரி செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமே இல்லை.
இந்தியாவில் வரன்களுக்கு என்றுள்ள'மார்க்கெட் ரேட்' ஒன்றும் கிடையாது!
பெண் வீட்டில்தான் திருமணம். ஆடம்பரம் வேண்டுமென்ற அவசியமும் இல்லை. மங்கல காரியங்கள் நடத்த ஒரு 'பண்டிட்'
இருந்தால் போதும். இந்தப் புரோகிதர்களும் ஒரு குறிப்பிட்ட 'ஜாதி' என்று இல்லை! புரோகிதம் செய்யக் கற்றுக் கொண்டாலே
போதும்! அவர்கள் சைவ உணவுக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது! எல்லாத் தொழிலையும் போலவே
இதையும் அங்கீகாரம் செய்திருக்கின்றனர்.
வட இந்தியர்களுடைய திருமணம் என்றால் இன்னும் விசேஷம். மணமகனின் தாய், அந்த மணவிழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
( நல்ல காரியம்! மாமியார் மருமகள் சண்டை ஒரு நாள் தள்ளிப் போடப்படும்!)
மணமகனும், அவருடைய தந்தையும் மற்ற உற்றார் உறவினர் மட்டுமே, மணமகளின் வீட்டில் நடக்கும் சடங்குகளில் கலந்து கொண்டு,
புது மணப்பெண்ணோடு, மணமகனின் வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். மாமியார் வீட்டில், மணமகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பதே
அந்த மாமியார்தான்!
சினிமாவில் காண்பிப்பது போன்ற 'தஹேஜ்' சண்டையெல்லாம் இல்லை.
மருமகள்களும் புகுந்தவீட்டில் சண்டை சச்சரவில்லாமல்தான் வாழ்கின்றனர். ஒன்று சொல்ல வேண்டும், வீட்டை நல்ல முறையில்
பராமரிப்பதில் இங்குள்ள பெண்களுக்கு இணையே இல்லை. சோம்பலின்றி உழைப்பார்கள். காலை 11 மணி அளவில் எல்லா
வேலைகளும் நறுவிசாக முடித்துவிட்டு, மற்ற வீட்டு விசேஷங்களுக்கு உதவியும் செய்வார்கள். ஒன்றும் இல்லையெனில் அழகாக
உடுத்திக் கொண்டு 'டவுனில்' உள்ள கடைகண்ணிகளுக்கோ, நண்பர்கள் வீடுகளுக்கோ விஜயம் செய்வார்கள்.
ஒருநாள் உதவியாளர் வரவில்லை என்றால் கூட எல்லா வேலைகளும் நேர்த்தியாகச் செய்யப்பட்டுவிடும்! இதற்கு நேர் மாறாக நான்.
உதவியாளர் வரவில்லை என்றால் மிகவும் அத்தியாவசியமானவைகளை மட்டுமே செய்வேன்.
பாக்கியெல்லாம் நாளைக்கு என்றுதான்!
இன்னும் வரும்
Posted by
துளசி கோபால்
at
11/01/2004 01:33:00 PM
3
comments
