ஓசைப்படாமல் ஒரு வலைஞர் சந்திப்பு இந்த வெள்ளிக்கிழமை இனிதாக நடந்து முடிஞ்சது.
நியூசியில் நடக்கும் மூன்றாவது மாநாடு என்ற வகையில் அமர்க்களமாக அட்டகாசமாக நடந்துச்சு.( நாலுபேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க.) 6 பேர் இருந்தோம்:-)
புதன்கிழமைப் பத்து மணியளவில் ச்சின்ன அம்மிணி & கோ, நம்ம மாநகரத்துக்கு வருகை தருவதாகச் சேதி வந்தது முதல் கையும் ஓடலை, காலும் ஓடலை. இங்கே 3 நாட்கள் தங்கல். அதன்பிறகு தென்கோடிக்குச் சுற்றுலா. வடக்குத் தீவில் இருப்பவர்கள் இவர்கள். தொலைபேசி எண்களைத் தெரிவித்துவிட்டு, வந்து சேர்ந்ததும் கூப்பிடச் சொன்னேன்.
புதன்கிழமைக் காலை பத்து மணி முதல் ஜிக்குஜூவை இடுப்பில் இருந்து இறக்கிவிட்டுட்டு, அந்த இடத்தில் கைத்தொலைப்பேசியைத் தூக்கி வச்சுக்கிட்டேன். மணி ஓடிக்கிட்டு இருக்கே தவிர பேச்சு மூச்சில்லை.
மறுநாள் பொழுதுவிடிஞ்சதும், இவுங்க தங்கி இருக்கும் இடத்துக்கு ஒரு ஃபோன் அடிச்சேன். வரவேற்பில் இருந்த சீனப்பெண்ணிடம்( அதெல்லாம் கண்டுபுடிச்சுருவம்லெ) இந்திய ஜோடி ஒண்ணு வந்துக்கே, அந்த ரூமுக்குத் தொடர்பு கொடும்மான்னதும் மறு பக்கம் ஒலித்த ஆண்குரலிடம், சின்ன அம்மிணியைக் கூப்பிடுங்கன்னா, அவர் திருதிருன்னு முழிக்கிறார். அட! அந்தப் பதிவரைக் கூப்புடுங்கன்னதும் இன்னொரு முழி. ஆமாம்...நீங்க வெலிங்டனில் இருந்துதானே வந்துருக்கீங்க?ன்னா...... 'இல்லையே. நான் இந்தோனேஷியாவுலே இருந்து வந்துருக்கேன்'றார். ச்சீன அம்மிணி இப்படிச் செஞ்சுருச்சேன்னு புலம்பிட்டு, மறுபடியும் 'ச்சீன அம்மிணி, ச்சீன அம்மிணி,
கொஞ்சம் சின்ன அம்மிணிக்குத் தொடர்பு கொடு'ன்னு கேட்டு அம்மிணியைப் புடிச்சேன்.
எனக்கு ஃபோன் செய்யணும் இன்னிக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்தாங்களாம்! அட!!! இன்னிக்கும் நல்லா ஊர் சுத்திப் பாருங்க. நாளைக்கு (வெள்ளி) இரவுச்சாப்பாடு எங்ககூட வச்சுக்கறீங்களான்னு கேட்டேன். சரின்னாங்க. சமையலில் எதாவது வேண்டாததுன்னு இருக்கான்னேன். (எங்க வீட்டுலே இஞ்சி,
பூண்டு எல்லாம் கொஞ்சம் தாராளமாவே சேர்த்துக்குவோம்) அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையாம். மரக்கறி உணவு மட்டுமாம். நோ ப்ராப்ளம்.
நீங்க தங்கும் இடத்துக்குப் பக்கத்துலே ஒரு ரெண்டு நிமிஷ நடையில் நம்ம கோயில் இருக்குன்னேன். ஆமாமாம். நேத்து அங்கதான் சாப்பிட்டோமுன்னாங்களா...... ஆஹா...... எப்படி 'டக்'னு இதைத் தெரிஞ்சுக்கிட்டாங்கன்னு இருந்துச்சு.
அவுங்க செல் நம்பரை வாங்கிக்கிட்டு, மறுநாள் மாலை 7 மணிக்கு வந்து கூப்புட்டுட்டுப் போறோமுன்னு சொன்னேன். கோபாலும் மெல்பேர்ன் போனவர் அதுக்குள்ளே வந்துருவார்.
ரொம்ப எளிமையான உணவு செஞ்சுவச்சுட்டேன். இட்லி, சாம்பார்(வெள்ளைப்பூசணி) டேஸ்ட்டிச் சட்டினி, சேமியா கேசரி. சாதம் & தயிர்
ஏழடிக்க அஞ்சு நிமிஷம். வந்துக்கிட்டே இருக்கோமுன்னு செல்லிலே கூப்புட்டுச் சொன்னதாலே தயாரா இருந்தாங்க. ச்சின்ன அம்மிணியின் கையில் ஒரு அலங்காரப் பூங்கொத்து. 'எதுக்குங்க இதெல்லாம்? நானா இருந்தா இதையெல்லாம் வாங்கவே மாட்டேன்'னு சொல்லிக்கிட்டே அதை வாங்கிக்கிட்டேன்:-))))
கோயிலைத் தாண்டும்போது, 'இதுதான் கோயில். இங்கேதானே நேத்துச் சாப்புட்டீங்க.?'ன்னா முழிக்கிறாங்க. இங்கே இல்லையாம்....நகரச் சதுக்கத்தில் சின்மயானந்தா மிஷன் கேஃபேயில் (காசு கொடுத்து) சாப்புட்டுருக்காங்க.
வரும்வழியில் நம்ம யூனிவழியா ஒரு சுத்து. 'கார்டன் சிட்டி ஆஃப் நியூஸி' என்ற பேருக்கேத்தமாதிரி ஊரே பூந்தோட்டமா இருக்குன்னு சொன்னாங்க. இருக்காதா பின்னே? எங்க வீட்டுத் தோட்டத்தையும் பார்த்துட்டுச் சொல்லுங்கன்னேன்:-)))
வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் 'எங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்..... ஆம்பல் வாய்கூம்பி' இருந்ததைக் காமிச்சேன். ஐலா வீடு எதுன்னு ஆர்வமாக் கேட்டாங்க. இன்னும் பலதையும் கேட்டு, துளசிதளம் வகுப்புலேக் கவனமா சிரத்தையுடன் படிக்கிறதைச் சொல்லாமச் சொன்னாங்க:-)))
'வீட்டுக்குக் கெஸ்ட் வராங்க. யூ ஷுட் பீ இன் யுவர் பெஸ்ட் பிஹேவியர்'ன்னு சொல்லிவச்சதைப் பசங்க புரிஞ்சுக்கிச்சு போல. ஜிக்குஜூ ஓசைப்படாம ஹால்டேபிளில் ஏறி உக்கார்ந்துருந்தான். அவனைத் தேடுன அம்மிணி, அவன் 'பிறப்பின் ரகசியத்தை'த் தெரிஞ்சுக்கிட்டுத் திறந்த வாயை(இன்னும்) மூடலை:-))))
வீட்டின் உள்புற வேலைப்பாடுகளைப் பார்த்துட்டு, இதையெல்லாம் 'வீடுகட்டுன பதிவில்' நான் படிச்சுருக்கேன்னு சொல்லி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அம்மிணியின் 'அவர்'. அட!! அப்ப இது பதிவர்கள் & வாசகர்கள் சந்திப்பா? பேஷ் பேஷ். ரொம்ப நன்னா இருக்கு:-)
யானைகளை எண்ணலாமுன்னு பார்த்தா நடக்காத காரியமா இருக்கேன்னு சொல்லி, மலைச்சுப்போன அம்மிணிக்கு நாம் சமீபத்தில்(!!! உண்மைங்க. ரெண்டு மாசம்தான் இருக்கும்) வாங்குன நாலு யானைகளைக் காமிச்சேன்.
நம்ம வீட்டு 'ஃபோட்டோ பாய்ண்டில்' இருந்து படம் எல்லாம் புடிச்சுக்கிட்டோம்.
அம்மிணிக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சாம் இது. இருக்காதா பின்னே? ஆடிக்கிட்டே இருக்கலாமே......ஊஞ்சலில்.
பதிவுலக மக்களைப் பற்றியெல்லாம் பேசிக்கிட்டே இருந்தோம். அப்பத்தான் புரியுது இந்த மக்கள்ஸ் எப்படி நம்ம நினைவுகளில் கலந்துபோய் நிக்கறாங்கன்னு.
சட்டினி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அப்படீன்னாச் செய்முறையைப் பதிவாக்கினாப் போச்சு. நம்ம தாளிக்கும் ஓசை சொன்னபடிச் செஞ்சு பார்த்த நெல்லிக்காய் தொக்கு, தயிர் சாதத்துக்கு அட்டகாசமா இருக்காம். சாப்பிட்டு முடிக்கும்போதுதான் சாப்பிடும் ஸீன் ஷூட் பண்ணலைன்னு நினைவுக்கு வந்தது. நாளைக்கு ஒண்ணுமே சாப்புடலைன்னு சொல்லிட்டாங்கன்னா? நாலைஞ்சு படங்கள் ஆச்சு.
அளவா, அழகா அருமையாச் செஞ்சக் கேசரியை எடுத்துப் பரிமாறும்போது அம்பியின் நினைவு. அவர் பேரைச் சொல்லி ரெண்டாவது துண்டம் எடுத்துக்கிட்டோம். பாயஸம் செஞ்சுருந்தேன்னா........ இந்நேரம் 'ஐயா குடி,அம்மா குடி'ன்னு ஆகி இருக்கும்.... எல்லாரும் தப்பிச்சாங்க:-))))
நேரமாகுது, நாளைக்குக் காலையில் 6 மணிக்கு இவுங்க தெற்குத்தீவுச் சுற்றுலாவுக்குக் கிளம்பணும். ஒரு வாரம் சுத்தப்போறாங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமுன்னு அவுங்களை விட்டுட்டு வரப்போனோம். வாசக்கதவைத் திறந்தால் அங்கிருக்கும் பெஞ்சில் நம்ம ஜிகே சிங்கம் போல உக்கார்ந்துருக்கார். கீழே தரையில் முள்ளி (நம்மவீட்டு ஹெட்ஜ் ஹாக். பெயர் உபயம் வல்லி) மூக்கை நீட்டிக்கிட்டுச் சாப்பாட்டுத் தட்டைத் தேடுது. 'சாரிடா...கொஞ்சம் லேட்டாகிருச்சு) தல வரலாறில் முள்ளியின் வாழ்க்கையை விவரிச்சாச்சு.
அடுத்த சனிக்கிழமைக் காலை அம்மிணியை மீண்டும் சந்திக்கிறதாச் சொல்லிட்டு வந்தோம். மறுநாள் ச்சின்ன அம்மிணி & கோ வை வரவேற்க
அவுங்க போன இடத்தில் நில அதிர்வுன்னு நியூஸ் வந்துச்சு. நேற்றும் இரண்டுமுறை அதிர்வாம். ச்சின்ன அம்மிணி ச்சும்மா இருக்கறதில்லை போல:-)
இனி அவுங்க பதிவில் சுற்றுலா விவரங்கள் வரும் என் எதிர்பார்க்கலாம்.
பதிவர் விரும்பியதால் அவர்கள் படங்கள் பதிவில் இடம் பெறவில்லை.
அது இருக்கட்டும். இப்ப அடுக்களைக் குறிப்பு இதோ.
டேஸ்ட்டிச் சட்டினி.( இது என் மகள் வச்ச பெயர்)
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு கால் கப்
உளுத்தம் பருப்பு கால் கப்
பச்சை மிளகாய் 4 அல்லது 5
இஞ்சி ரெண்டு இஞ்சு நீளம்.
பூண்டு 4 பல்
தேங்காய் துருவியது முக்கால் கப்
பெருங்காயத்தூள் கால்தேக்கரண்டி
புளி ஒரு 'கம்மர்கட்' அளவு ((எத்தனை நாளைக்குத்தான் எலுமிச்சங்காய்ன்னு சொல்லிக்கிட்டே இருப்பது? ஒரு ச்சேஞ்ச் வேணாம்?)
கொத்துமல்லித் தழை ஒரு கட்டு
(வேரை நறுக்கி வீசிட்டு, ஆ(ரா)ய்ஞ்சு, நீரில் அலசி
வடியவிட்டு வச்சுக்குங்க)
உப்பு 1 தேக்கரண்டி.
எண்ணெய் 1 தேக்கரண்டி
தாளிக்க:
ரெண்டு தேக்கரண்டி எண்ணெய்
கடுகு அரைத்தேக்கரண்டி
கருவேப்பிலை ஒரு இணுக்கு
செய்முறை:
ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊத்தி, கொஞ்சம் சூடானதும் க.பருப்பைப்போட்டு வறுக்கணும். பாதி வறுபட்டதும் உ. பருப்பையும் அதன்கூடவேச் சேர்த்து வறுத்து பொன்நிறமானதும் ( அப்ப ஒரு நல்ல வாசனை வரும்) ப.மியை ரெண்டா உடைச்சுச் சேர்த்து ஒரு வதக்கல். (எதுக்கு ரெண்டா உடைக்கணும்? இல்லேன்னா அது வெடிச்சு திறந்துக்கும்)கூடவே இஞ்சி & பூண்டு சேர்த்து வதக்கிட்டு பெருங்காயம், துருவிய தேங்காய் உப்பு எல்லாம் சேர்த்து ஒரு ரெண்டு நிமிசம் வறுத்து/வதக்கி எடுத்து ஆறவிடுங்க.
நல்லா ஆறுனதும் மிக்ஸியில் சட்னி ஜாரில் போட்டு கொட்டையில்லாத புளியையும் சேர்த்து அரைச்சுக்கணும். உங்களுக்குத் தேவையான சட்னிப் பதத்துக்கு அரைபட்டதும்( நம்ம வீட்டுலேக் கொஞ்சம் கொரகொரன்னு இருந்தாத்தான் பிடிக்கும்) கொத்துமல்லி இலைகளைச்சேர்த்து இலைகள் நன்றாக மசியும்வரை அரைச்செடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கணும்.
அதே வாணலியில் ரெண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊத்திச் சூடாக்கி, கடுகுபோட்டு வெடிச்சதும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி அந்த எண்ணெயை அப்படியே சட்டினியில் ஊத்திக் கிளறிவிடுங்க. டேஸ்ட்டிச் சட்டினி தயார்.
கட்டியா அரைச்சு வச்சதுன்னா பாதியை எடுத்து ஒரு ச்சின்னக் கண்டெயினரில் போட்டு ஃப்ரீஸ் செஞ்சுக்கலாம். மீதியில் உங்க விருப்பத்துக்குத் தண்ணீர் சேர்த்துத் தளர்த்தி கரண்டியில் எடுத்தும் ஊற்றும் பதத்தில் கலக்கிக்கலாம்.
நான் எப்பவும் டெஸிகேட்டட் கோக்கநட் சேர்ப்பதால் நாலைஞ்சு நாளைக்குக் கெடாது.
அழகா நிரவி விடாமல் எடுத்த படம்...( என்ன அவசரமோ?)
