வெய்யில் இந்தப் போடு போடுதேன்னு ஒரு கடையில் நாங்க மூணுபேரும் இளநீரைக் குடிச்சுட்டு, அங்கே வண்டியில் படுத்துக்கிட்டு இருந்த ஆட்டோக்காரரிடம், 'சூரியன் கோவில் எங்கே இருக்கு'ன்னா, ஒரு வினாடி நம்மை ஏற இறங்கப் பார்த்துட்டுத் 'தெரியாது' ன்னு சொன்னார். தூக்கத்துலே எழுப்பிட்டோமோ:( அப்ப அங்கே ஆட்டோ பிடிக்கவந்தவர் சாலைக்கு எதிர்ப்பக்கம் இருந்த தெருவைக் காமிச்சு அரைக்கிலோமீட்டர் போனா, வரும்னு சொன்னார். (வாயிலே இருந்துச்சு வழி)
குஜராத்தில் பார்த்த சூரியன் கோவில் அழகு அப்படியே மனசுலே நிக்குதே! இங்கே எப்படி இருக்குமுன்னு ஒரே ஆவல். பளிச்சுன்னு ரொம்ப அழகான கோவில் முகப்புலேபோய் இறங்குனோம். பத்துப் பதினைஞ்சு அடி ஆழமான ஒரு ஸரோவரின் நடுவில் அட்டகாசமா ஜொலிக்குது. அங்கே போக ஒரு பாலமும் சேர்த்தேக் கட்டி இருக்காங்க. ஆனா அது ஹரிஹரனுக்கான கோவிலாம். ரொம்ப அழகான கட்டிடம்.சுத்திவர ஜன்னல்கள் வச்ச ஒரு சதுர ஹாலின் நடுவில் கருவறை மட்டுமே இருக்கு. ஹரி ஒரு பக்கமும் சிவனொரு பக்கமுமா இருக்காங்க. இந்த ஹரிக்குப் பெயர் சென்னகேசவன். பளபளன்னு ஜொலிக்கும் அபூர்வக் கல்லினால் செஞ்ச சிலை. கருவறையைச் சுற்றிவந்தால் ஒரு சின்னக் கிணறு இருக்கு. எக்காலத்திலும் வற்றாத கங்கைதான் இங்கே இருக்காளாம். கௌதம மகாமுனியின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவன் அருளிய கங்கை. இந்தத் தண்ணீர்தான் இங்கே கொடுக்கு தீர்த்தமும் கூட.
(ஒரு கமண்டலம் கங்கை ப்ளீஸ்!)
தீர்த்தம் கொடுத்துக்கிட்டு இருந்த அர்ச்சகர்கூட நான் கன்னடிகா இல்லை'' என்ற உண்மையைக் கண்டு பிடிச்சுட்டார்!
"எந்த ஊரு?"
" தமிழ்நாடு."
'அதானே பார்த்தேன். சட்னு தெரிஞ்சு போச்சு நீங்க வேற எதோ ஸ்டேட்டு! தமிழ்நாடா' ன்னு. சொல்லிக்கிட்டே இன்னும் ரெண்டு உத்தரணித் தண்ணீர் கூடுதலாக் கொடுத்தார். பரிகாரமா இருக்கலாம்:-))))அற்புதமான குளத்து நீர் நாலுபுறமும் சூழ்ந்திருக்க கோடை வெயிலுக்கு அங்கே குளுகுளுன்னு ..... நியூஸிக்குப் போயிட்டமாதிரி ஒர் ஃபீலிங்ஸ். இந்த ஊருக்கு இன்னுமொரு விசேஷம் இருக்கு. ஸ்ரீ வாதிராஜர் அவதாரஸ்தலம் இது. ஸ்ரீ மாத்வர்க்கு அடுத்த ஸ்தானத்தில் இவர் இருக்கார். இவர் பெயரைக் கேட்டதும் மனசுக்குள்ளே கடலை, வந்துருக்குமே!
இவர் மாத்வர் சிஷ்யர்களின் அஷ்ட மடத்துலே ஒன்னான சோதே மடத்துக்குத் தலைவரா ஆனபிறகு, மடத்துக்குப் பக்கத்துலே இருந்த பண்ணையிலே கடலை விதைச்சுருக்கார் பண்ணையின் உடமஸ்த்தர். கடலையும் செழிப்பா வளர்ந்து அறுவடைக்குத் தயாரா இருக்கு. அப்பப்பார்த்து யாரோ விஷமிகள் ஒரு பக்கம் கடலையைத் தோண்டி எடுத்துத் தின்னதுக்கு அடையாளமா அங்கே எல்லாம் செடிகள் பிடுங்கப்பட்டு நசுங்கி நாசமா இருந்ததைப் பார்த்துக் கள்ளனைக் கண்டுபிடிக்கணுமுன்னு 'ஓனர்' ராத்திரி நேரத்துலே நிலத்துக்குப்போய் ஒளிஞ்சுருந்து பார்க்கறார்.
மடத்துக்குள்ளே இருந்து வெள்ளைக் குதிரை ஒன்னு வந்து இந்த அட்டகாசம் செஞ்சுட்டுப்போகுது. உடனே போய்த் துரத்தலாமுன்னா....அந்தக் குதிரை, ஒரே ஜொலிப்பா, கம்பீரமா வருது. ஜோதியின் வெளிச்சம் கண்ணைக் கூசவைக்குதாம். ஓனருக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. வாயடைச்சு கிடக்கார்.
பொழுது விடிஞ்சதும், மடத்துக்குப்போய் ஸ்ரீ வாதிராஜர்கிட்டே விஷயத்தைச் சொல்லி, உங்க மடத்துக் குதிரைதான் இப்படி எல்லாத்தையும் பாழாக்கிருச்சு. என் நஷ்டத்துக்கு நீங்கதான் ஜவாப்தாரி. காசை எண்ணி வையுங்கன்னார். வாதிராஜருக்கோ ஒரே குழப்பம். மடத்துலே குதிரையே இல்லை. அப்ப எப்படி இப்படியெல்லாம்? சரி. வாங்க, க்ளூ எதாச்சும் கிடைக்குதான்னு குதிரை கடலை தின்ன இடத்தைப் போய்ப் பார்க்கலாம்னு ஓனரோட அந்த நிலத்துக்குப் போறார். அங்கே பார்த்தால்................ அந்த இடத்துலே தங்கக் கடலைகளாச் சிதறிக்கிடக்கு!
வந்த குதிரை லேசுப்பட்டதில்லை!!!! ஹயக்ரீவர் என்ற குதிரை முகம் கொண்ட பெருமாளே வந்து போயிருக்கார்!!! பெருமாளுக்கு ஏன் குதிரை மூஞ்சு வந்துச்சு? இதுக்கே ரெண்டு கதைகள் இருக்கு. யப்பா.... கதைக்குக் கதை, கதைக்குள்ளே கதைன்னு உள்ளே இறங்குனா அப்படியே போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானாக்கும்,ஆமா.......
சுருக்கமாச் சொன்னால்..... கதை 1:
குதிரைத்தலை உள்ள அசுரன் ஹயக்ரீவன், துர்கையை வழிபட்டு, தனக்கு மரணம் இன்னொரு குதிரைத் தலையாலேதான் வரணுமுன்னு கேட்டுக்கிட்டான். வரம் ஸாங்ஷண்ட். வரம் கிடைச்சபிறகு தனக்கு மிஞ்சி யாரு இருக்கான்ற கர்வத்துலே அட்டகாசம் ஆரம்பிக்குது. தேவர்கள் அவதிக்குள்ளாறாங்க. மஹாவிஷ்ணுகிட்டே போய் முறையிடறாங்க. அவரும் 'இதோ காத்தேன்'னு கிளம்பிப்போறார். கிடைச்ச வரம் பவர்ஃபுல்லா இருந்ததால் அவனை ஒன்னும் செய்ய முடியலை. களைச்சுப்போய்த் திரும்பிவந்தவர் தியானம் செய்ய உக்கார்ந்துட்டார். கழுத்துக்கு சப்போர்ட் வேணுமுன்னு (சுளுக்குப் பிடிச்சுறாதா? பயணங்களில் தியானம் செஞ்சுக்கிட்டே (???? தூங்கி விழும்போது??? ) சட்னு கண் திறந்தால் கழுத்து ஒரு பக்கமா என்னா வலி வலிக்குது! அனுபவப்பட்டவ சொன்னா நம்புவிங்கதானே?) ஒரு வில்லில் நாண் ஏற்றி அந்த நாணில் தலை வச்சுருக்கார்.
தேவர்கள் வந்து குய்யோ முறையோன்னு கத்துவது செவியில் விழவே இல்லை. அப்படி ஒரு ஆழ்ந்த த்யானம். எழுப்பலாமுன்னா எறும்பைக் காதுலே விட்டுருக்கலாம். அதைச் செய்யாம, அங்கே போய்க்கிட்டு இருந்த கரையான்களுக்கு 'அந்த வில்லின் நாண்கயித்தைக் கடிச்சு அரிச்சுருங்க'ன்னு உத்தரவு போட்டாங்க!. கழுத்து சப்போர்ட் இல்லைன்னா சட்னு முழிச்சுக்குவார்னு அற்புத ஐடியா யாருக்கோ தோணி இருக்கு பாருங்க. பாவம் கரையான்கள். சொன்ன பேச்சைக் கேட்டுச்சுங்க. நாண் அப்படியே தெரிச்சு விழுந்த வேகத்துலே தலையையே அறுத்துக்கிட்டுப் போயிருச்சு:(
தேவர்கள் மறுபடியும் குய்யோ முறையோன்னு அலறி அடிச்சுக்கிட்டு துர்கையம்மன்கிட்டே ஓடறாங்க. பயப்படாதீங்க. எல்லாம் ஒரு காரணத்தோடுதான் இப்படி ஒரு காரியம் நடந்துருக்கு. சீக்கிரமாப்போய் ஒரு குதிரைத் தலையைக் கொண்டுவந்து விஷ்ணுவின் உடம்போடு சேர்த்து வச்சுங்க. டாக்டர் ப்ரம்மா மத்த வேலையைப் பார்த்துக்குவாருன்னு சொல்லிட்டாங்க. தேவர்கள் திரும்பிப் போன வேகத்துலே ஒரு வெள்ளைக்குதிரையைப் பார்த்து அதன் தலையை வெட்டிக் கொண்டுவந்து ப்ரம்மாக்கிட்டே கொடுக்க , அவர் அதை விஷ்ணுவின் கழுத்தோடு சேர்த்து வச்சு உயிர்கொடுத்துட்டார். ஹை!!! இன்னொரு ஹய வதனன்!! ' எழுந்து போனார், வில்லனைக் கொன்னார். திரும்பி வந்தார்.' அதே ரூபத்தில் பக்தர்களுக்கு அருள் புரிய ஆரம்பிச்சார்.
இப்படியாக இனி எல்லாம் நலமேன்னு கதை நம்பர் ஒன்னு முடிஞ்சது.
கதை நம்பர் 2: உண்மையான சுருக் இங்கே. எல்லாப் புகழும் கீதாவுக்கே!
பதிவின் நீளம் கருதி மீதி நாளை:-)
Showing posts with label harihara hayagreeva. Show all posts
Showing posts with label harihara hayagreeva. Show all posts
Monday, April 19, 2010
குதிரை தின்ன கடலை!
Posted by
துளசி கோபால்
at
4/19/2010 10:32:00 PM
25
comments
Labels: harihara hayagreeva, அனுபவம்
Subscribe to:
Posts (Atom)
