Showing posts with label Wickham Park.. Show all posts
Showing posts with label Wickham Park.. Show all posts

Wednesday, July 18, 2012

மூத்ததில் மூத்தது !!! (ப்ரிஸ்பேன் பயணம் 16)

மெய்யாலுமே ஒரு பழைய சரித்திரத்தின் முன்னால் நிற்கிறோம். இந்த நகரை அமைக்கும்போது உருவானது இது. மாவு அரைக்கற மிஷினு இதுக்குள்ளே! காற்றாலை! பக்கத்துலே ஒரு கொடிக்கம்பம் நட்டு அதில் ஆஸிக் கொடி பட்டொளி வீசிப் பறக்குது.
முதல்முதலில் 1824 ஆம் ஆண்டு உள்ளூர் தலை 'களுடன் பேசி முடிவுக்கு வந்து செட்டில் ஆகும்போது மோர்ட்டன் பே என்ற இடத்தில் ஒரு 200 ஹெக்டர் காட்டு நிலத்தை சீராக்கி அங்கே கோதுமையும் மக்காசோளமும் விதைச்சுருக்காங்க. பயிர் விளைஞ்சு பலன் கிடைச்சது. கோதுமை, மக்காச்சோளம் இவைகளை மாவாக்கினால்தானே ரொட்டி செஞ்சுக்கமுடியும். ரொட்டி இல்லேன்னா உயிர்வாழ முடியுமா?

 செட்டில்மெண்ட் உருவானதுக்கு எதிர்ப்பு காமிச்சவங்க எல்லோரும் வெள்ளையர் கணக்கில் குற்றவாளிகள்.. இதில்லாம இங்கிலாந்தில் இருந்தும் குற்றவாளிகளை நாடுகடத்தறோமுன்னு கப்பலில் கொண்டு வந்து குவிச்சுக்கிட்டு இருந்த காலக்கட்டம் அது.

 கைதிகளுக்கு ஒரு வேலை கொடுக்கணுமே. சும்மா உக்காரவச்சு ரொட்டிச் சுட்டுப் போட முடியுமா?
1827 இல் செங்கல், காறை எல்லாம் வச்சு இப்படி ஒரு கட்டிடத்தைக் கட்டுனாங்க. பெரிய கித்தான்களைப் பாயாகக்கட்டி காற்றின் விசையால் ஓடும் விதமாச் செஞ்சுருக்காங்க. அரைக்கும் கற்கள் ரெண்டுக்கும் இடையில் தானியங்கள் போட்டு அரைச்ச மாவா வெளிவரணும். நம்ம பக்கத்து திருகைக்கல் மாதிரின்னு வச்சுக்குங்க.

 மேல் பக்கக் கற்களைச் சுற்ற காற்றின் விசை. அதே சமயம் அடிக்கல்லைச் சுத்த கைதிகளின் உடல் பலம். மலைக்கள்ளன் சினிமாவில் அண்டா கா கஸம், அபுல் கா கஸம் சொன்னவுடன் குகைக்கதவு எப்படித் திறக்குதுன்னு காமிச்சது யாருக்காவது நினைவு இருக்கா? ஏறக்குறைய அதே டெக்னிக். சாட்டை வச்சுக்கிட்டு அடிச்சு வேலை வாங்கி இருப்பாங்களோ? சீச்சீ.... இருக்காது, இல்லே?

 1828 முதல் ஆலை வேலை செய்ய ஆரம்பிச்சது. காற்றின் விசை குறைஞ்சப்ப மாவு அரைச்செடுக்கக் கஷ்டமாப்போயிரும். அதுக்காக? குற்றவாளிகளை விட்டுட முடியுமா? யாராவது எதேனும் தப்புத் தண்டா செய்யாமலா இருந்துருப்பாங்க? அப்படியே செய்யலைன்னாலும்..... காரணம் எதாவது கண்டுபிடிச்சுத் தண்டிக்க முடியாதவங்களா அப்போதைய வெள்ளையர்? நின்னாக்குற்றம் உக்கார்ந்தாக் குற்றமுன்னு அப்பப்பக் கூடுதல் பனீஷ்மெண்டு கொடுத்துருவாங்க. எப்படியோ மேல் கல்லையும் அடிக்கல்லையும் சுத்த வைக்கணும், இவுங்க உடல் உழைப்பால்:(

 அடுத்த ரெண்டுவருசங்களில் (வருசம் 1830) குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சதும் தானியத் தேவைகளும் குறையலாச்சு. மாவு அரைக்க ஆளு வேணாமா? அப்புறம் ஒரு 12 வருசத்துலே (1842) இந்த செட்டில்மெண்ட் ப்ளானையே நிறுத்திவச்சுட்டாங்க. அப்படியும் 1845 வரை மற்ற கூலியாட்களை வச்சு மில்லை ஓட்டிக்கிட்டு இருந்துருக்காங்க. மூடுவிழா! ஒரு வருத்தமான விஷயமும் இதுக்கிடையில் நடந்துபோச்சு.

 அரசியலுன்னு வந்துட்டாலே சண்டை, சச்சரவு, குற்றம், கொலைன்னு எல்லாம் அரங்கேறித் தொலையுதே..... பக்கத்துலே இன்னொரு ஊரில் அரசியல் கட்சித் தகராறில் ரெண்டு பேரைக் கொன்னுட்டாங்கன்னு மூணு அபாரிஜன் ஆட்களைப் பிடிச்சு வச்சுருந்தாங்க. கேஸ் நடந்து முடியுமுன் ஒருத்தர் இறந்துட்டார். மற்ற இரண்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்ட கைதிகளைத் தூக்கில் போடணுமுன்னு தீர்ப்பு. எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கைப்பாடமா இருக்கணுமுன்னோ என்னவோ அந்த ரெண்டு பேரையும் காற்றாலைக்குக் கொண்டுவந்து உச்சாணியில் இருக்கும் ஜன்னல் மேல் இருக்கும் மர உத்திரத்தில் கயிறு கட்டி அதில் ரெண்டு பேரையும் பிணைச்சு ஜன்னல்வழியா உடல் வெளியே தெரிவதுபோல தூக்கில் போட்டுட்டாங்க:(
ஒரு பதினைஞ்சு வருசம் மூடிக்கிடந்த மில்லுக்கு மறு வாழ்வு 1861 இல் கிடைச்சது. நல்ல உயரமா இருக்கேன்னு ஒரு கால நிலை கணிக்கும் அப்ஸர்வேட்டரியாகவும் சிக்னல் ஸ்டேஷனாகவும் இதைப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. ஒரு உயரமான கம்பத்தை நட்டு அதன் உச்சியில் தகவல் சொல்லும் கொடிகளைப் பறக்கவிட்டாங்க. என்ன தகவல்? கடலில் பயணிச்சு வரும் கப்பல்கள் இந்த ப்ரிஸ்பேன் நகருக்குள் வர ப்ரிஸ்பேன் நதி முகத்துவாரம்தான் ஒரே வழி. லிட்டன் பகுதிக்குக் கப்பல் வந்துருச்சுன்னு மக்களுக்குத் தகவல் சொல்லும் கடமை கொடிகளுக்கு உண்டாச்சு. 

காற்றாலைக்கான பாய்/ கித்தான்களை எல்லாம் பிரிச்செடுத்துட்டு உள்ளே ஆலைக்குள்ளும் அரவை இயந்திரங்களையெல்லாம் அகற்றி உள்ளிருந்து மேலே போக படிக்கட்டுகள் கட்டுனதெல்லாம் அப்போதான். மேல் தளத்து மொட்டை மாடியில் கும்மாச்சியாட்டம் ஒரு கூரை போட்டு டைம் பால் ஒன்னு வச்சாங்க. நல்ல இரும்புக் குண்டு. பகல் ஒரு மணி ஆனதும் குண்டு டங்ன்னு ஒலியோடு கம்பி வழியா கீழே கூரைக்குமாச்சியில் இறங்கும். உள்ளூர் மக்கள்ஸ் எல்லோரும் கடிகாரத்தைச் சரிபார்த்துக்க இது உதவுச்சு. இதுவும் ஒரு அஞ்சு வருசத்தில் முடிவுக்கு வந்துச்சு.

(தண்டச்சோத்து ராமா.... குண்டு போட்டா வாடா ) 

 ஆனாலும் எங்கே பகல் ஒரு மணி ஆனது மக்களுக்குத் தெரியாமப் போயிருமோன்னு, காற்றாலைக்குப் பக்கத்துலே ஒரு பீரங்கியைக் கொண்டுவந்து வச்சு சரியா ஒரு மணிக்கு தினமும் குண்டு ஒன்னு வெடிக்க வச்சதும் நடந்துச்சு.

 (தண்டச்சோத்து ராமா.... குண்டு போட்டா வாடா ......  எங்க பாட்டி அப்பப்ப சொல்லும் பழமொழி இது. இப்போதான் அதுக்கு பொருளே புரியுது:-))))

 அந்த ஆலையைச் சும்மா விட்டு வைக்கவேணாமேன்னு எது செஞ்சாலும் அடுத்த ஒன்னு ரெண்டு வருசத்தில் செய்ய ஆரம்பிச்சது நின்னு போயிருது! 1880 முதல் சும்மாக்கிடக்கும் கோபுரத்தை தீயணைப்புத்துறை பயன்படுத்த ஆரம்பிச்சது. இரவு நேரங்களில் நகரில் எங்காவது தீ பிடிச்சு எரியுதான்னு இங்கிருந்து கண்காணிப்பாங்க. அப்ப பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் எல்லாம் கட்டப்படாத காலக்கட்டம்! இதுதான் இருப்பதில் உயரமான அமைப்பு. போதாக்குறைக்கு இது அமைஞ்சுருக்கும் பகுதியே நகரின் உயரமான ஸ்ப்ரிங் ஹில்ஸ் என்ற இடம்!

 1922 வருசம் ப்ரிஸ்பேன் நகர சிட்டிக் கவுன்ஸில் இதை சரித்திர சம்பவங்களின் முக்கிய சாட்சியா அறிவிச்சு இதுக்கான பொறுப்பை எடுத்துக்கிட்டது. குவீன்ஸ்லாந்து மாநிலத்துக்குத் தொலைக்காட்சி ஆரம்பிச்சப்ப இந்த டவரின் மேலே இருந்துதான் பரீட்சார்த்தமான ஒளிபரப்பு ஆரம்பிச்சது..
சிட்டிக்கவுன்ஸிலின் பொறுப்பில் வந்துட்டதால் பழுது பார்த்துப் பராமரிக்கும் வேலையை நல்லபடி நடத்தறாங்க. 1988 இல் ஒரு முறையும் 2009 இல் ஒரு முறையும் மராமத்து வேலை நடந்துருக்கு. ர்மூணு வருசத்துக்கு முன்னே 2009இல் குவீன்ஸ்லேண்ட் மாநிலத்தின் 150 வது பொறந்த நாளைக் கொண்டாடும் சமயம் சரித்திரப் பாரம்பரியம் மிக்க கட்டிடங்களையெல்லாம் கணக்கெடுத்து அவற்றைப்பற்றிய விபரங்களையெல்லாம் தொகுத்து அந்தந்த இடங்களில் கல்வெட்டாப் பதிச்சு வச்சுருக்காங்க. இதிலிருந்தே அநேக விவரங்களை நானும் தெரிஞ்சுக்கிட்டு இப்போ உங்களுக்குச் சொல்றேன். காலக்கணக்கின்படி மாநிலத்துக்கு மட்டுமில்லை, இந்த மாநிலத்தைவிட மூத்தது இந்த காற்றாலை!




முக்கிய நாளான இன்று மூத்தவர்களின் ஆசிகளை வாங்கிக்கிட்ட மகிழ்ச்சியுடன் அதைச் சுத்திப் பார்த்தோம். காற்றாலையை ஒட்டியே அருமையான பார்க் ஒன்னு தளதளன்னு நிற்கும் வாழைகளோடு இருக்கு. அங்கங்கே இருக்கைகள்,அருமையான பாதைகள் இப்படி நகருக்குள்ளே அமைதியா அமைஞ்சு இருக்கும் இது விக்ஹேம் சாலையில் இருப்பதால் விக்ஹேம் பார்க்குன்னே (Wickham Park )சொல்றாங்க. அந்தக்காலத்துலே John Clements Wickham கடற்படை அதிகாரியாக இருந்து, பணி ஓய்வு கிடைச்சபிறகு, இங்கே மோர்ட்டன் பகுதியில் குற்றவாளிகளுக்கான செட்டில்மெண்ட்க்கு மாஜிஸ்ட்ரேட்டா வந்தவர்.
நம்ம பிரிஸ்பேன் பயணத்துக்கான காரணமே இன்றையநாளைக் கொண்டாடுவதுதானாக்கும்! இன்னிக்குத்தான் எங்க திருமணநாள். 38 வது ஆண்டு முடிஞ்சு 39 தொடங்குது!

 மூணு முக்கிய நிகழ்ச்சிகள் அடங்கிய நாளா அமைஞ்சுருக்கு இன்றைய தினம்.

 தொடரும்............:-)