இந்தக் கணக்கில் ரெண்டுவருசப் பொறுப்பு முடிஞ்சதுன்னா அடுத்த 14 வருசத்துக்கு மற்ற ஏழு மடாதிபதிகளும் எட்டுத்திக்கும் சென்று த்வைதம், பக்தி எல்லாத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்து தர்மங்களை வளர்க்கணும். உடுபியைப் பொறுத்தவரை இந்த கிருஷ்ணனுக்குப் பொறுப்பேத்துக்கும் விஷயம் பெரிய திருவிழா. ஊரே அப்படி திமிலோகப்படுமாம்.
ஆங்கிலவருசக்கணக்கின்படி ரெட்டைப்படை வருசம் வரும்போது ஜனவரி 17 & 18க்கு இந்த பர்யாயா விழா நடக்குது. இந்தியா முழுவதிலும் இருந்து விருந்தினர்கள் வந்துருவாங்களாம்.
நிறைய சாஸ்த்திர சம்ப்ரதாயங்கள் இந்த விழாவில் இருக்கு. சரியா 13 மாசத்துக்கு முன்னேயே தொடங்கிருது ஏற்பாடுகள். நவகிரஹங்களைப் பூஜித்துவிட்டு, அனந்தேஸ்வரன் கோவிலுக்கும் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரர் கோவிலுக்கும் போய் வழிபட்டு, துளசிச்செடிகளையும் வாழைக்கன்னுகளையும் எடுத்துக்கிட்டுப்போய், ஏற்கெனவே தெரிஞ்செடுத்த இடத்தில் 'bபேலே முஹூர்த்' என்ற வாழைக்கன்னுகளை நட்டுவளர்க்கும் விழா.
இதுக்குப்பிறகு ரெண்டு மாசத்துலே 'அக்கி முஹூர்த்'ன்னு திருவிழாவுக்கு வேண்டிய அரிசியை கிடங்கில் கொண்டு சேர்க்கும் விழா. ஒரு முறம் அரிசியை தங்கப்பல்லக்கில் வச்சுக் கடையில் இருந்து ஸ்டோர் ரூமுக்கு ஊர்வலமாக் கொண்டு போவாங்க.
இன்னும் நாலு மாசம் ஆனதும் 'கட்டிகே முஹூர்த்'ன்னு திருவிழாவுக்குச் சமையல் செய்யத் தேவையான விறகுக்கட்டைகளைச் சேகரித்து தேர்போல அவைகளை அடுக்கும் விழா. 25 அடி உயரமுள்ள கம்பத்தைத் தேருக்கு நடுவில் கட்டிவச்சு, அதில் ஒரு மனித உருவப்பொம்மையும் வச்சுட்டு அதைச்சுற்றி விறகுக்கட்டைகளை அடுக்குவாங்க.. இந்த சீஸன்லே மழை காலமாம். வேலையில்லாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தமாதிரியும் ஆச்சு.

அப்புறம் திருவிழாவுக்கு ஒரு மாசம் இருக்கும்போது bபட்டே முஹூர்த்ன்னு தேவையான நெல்மணிகளைச் சேகரித்து வைக்கும் விழா. ஒரு முறம் நெல்மணிகளைக் ஸ்ரீ க்ருஷ்ண மடத்தில் இருந்தெடுத்துத் தங்கப்பல்லக்கில் ஊர்வலமா எடுத்துக்கிட்டுப்போய் bபடகுமாளிகெ என்ற குடோன்லே வைப்பாங்க. இப்படி வகைவகையான ஏற்பாடுகள் குறிப்பிட்ட முஹூர்த்தத்தில் நடக்கும். இது எல்லாம் முறையாக நடந்தது என்று குறிப்பிடும் விதத்தில் பட்டே முஹூர்த் நாளில் கட்டைகள் அடுக்குன தேருக்கு ஒரு கிண்ணக்கூரை போல விறகுக்கட்டைகளை செங்குத்தா நிறுத்தி டோம் அமைச்சுவைப்பாங்க.
திருவிழாவுக்கான சமையல் பாத்திரங்கள் கொடிகள் கோஷங்கள் அடங்கிய பதாகைகள் எல்லாம் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாலிருந்தே ஏற்பாடாகும். மாத்வர் தெரிஞ்செடுத்த எட்டு மடங்களுக்கும் ஆராதனை மூர்த்தியா விஷ்ணு அண்ட் கண்ணனின் பல்வேறு லீலைகளைக் குறிப்பிடும் சிலைகளே இருக்கு.
பாலிமர் மடத்துக்கு ஸ்ரீ ராமர், அடமர் மடத்துக்கு காளிங்கமர்தன க்ருஷ்ணன்( சங்கு சக்கரம் தாங்கி, நடராஜர் போல வலதுகாலைத் தூக்கி, காளிங்கன்மேல் நிற்கும் போஸ்) கிருஷ்ணபுரா மடத்துக்கும் காளிங்கமர்தனம்தான். ஆனால் போஸ் வேற! சிறுவன் கண்ணன் காளிங்கன் தலைமேல் நின்று நடனம் ஆடுவது போல்! சோதே மடத்துக்கு ஸ்ரீ பூவராஹன், புட்டிகே மடத்துக்கு ஸ்ரீ விட்டலன், சிரூர் மடத்துக்கும் ஸ்ரீ விட்டலந்தான். வெவ்வேறு போஸ். ஸ்ரீ கணியூர் மடத்துக்கு நரசிம்ஹர்,. பெஜாவர் மடத்துக்கு மறுபடி ஸ்ரீ விட்டலன். இடுப்பிலே ரெண்டுகைகளையும் வச்சுக்கிட்டு ' இப்ப என்னாங்கறே?' என்னும் போஸ்:-)
புதுசா இன்சார்ஜ் எடுத்துக்கப்போகும் மடாதிபதி, திருவிழாவுக்கு ரெண்டு மாசம் இருக்கும்போது அவருடைய யாத்திரைகளுக்குக் கிளம்பிப்போய் அவைகளை முடிச்சுக்கிட்டு விழாவுக்குச் சரியா ஒரு வாரம் இருக்கும்போது திரும்பிவந்துருவார். எல்லா மடத்திலிருந்தும் பதாகைகளைக் கொண்டுபோய் அவரை வரவேற்பார்கள். அவர்களோடு ஊர்வலமாத் தேரடி வீதிக்கு வந்து .ஸ்ரீ அனதேஸ்வரரையும் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரரையும் வணங்கி அதன் பின் ஸ்ரீ க்ருஷ்ணமடத்துக்கு வந்து 'கள்வனை' தரிசனம் பண்ணி அதன் பின் அவரோட மடத்துக்குப் போவார். இந்த விசேஷத்துக்குன்னே அவரோட மடத்தை விசேஷமா அலங்காரம் பண்ணி இருப்பாங்க(ளாம்).
ஏதோ கல்யாண வீட்டு விஷயம் மாதிரிதான் இருக்கு. மண்டபங்களில் நடக்கும் கல்யாணமானாலும், கல்யாணவீடுன்னு காமிக்க வாசலில் வாழைமரம் நட்டுப் பந்தல் போட்டு அலங்கரிக்கிறோமுல்லே! பொண்ணுக்கும் பையனுக்கும் சொந்தக்காரர்கள் வீட்டுலே விருந்துக்கு கூப்புட்டுப்போறதுபோல, மற்ற மடங்களின் தலைவர்கள் எல்லாம் இவரை ஒரோரு நாளைக்கு அழைச்சு மரியாதை செய்து விருந்து கொடுப்பாங்க.
சரியா ஜனவரி 16 ( திருவிழாவுக்கு முந்தைய தினம்) புதுசாப் பொறுப்பு எடுக்கப்போறவர், பதாகைகள், அலங்காரங்களோடு மற்ற மடங்களுக்குப் போய் விழாவுக்கு வந்து நடத்திக்கொடுக்கணுமுன்னு வேண்டிக்கிட்டு அழைச்சுட்டு வருவார். அன்னிக்கு ராத்திரி ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் முக்கிய ப்ராணருக்கும் ( பயந்துறாதீங்க. நம்ம அனுமன்தான்) விசேஷ பூஜைகள் நடத்தி, மறுநாள் சமையலுக்கான காய்கறிகளை நறுக்கத் தொடங்குவாங்க. பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு விருந்து சமைக்கணுமே. இப்போ வேலை ஆரம்பிச்சால்தானே நேரத்தோடு விருந்து போட முடியும்! இந்த சேவைக்கு எட்டுமடங்களில் இருந்தும் ஆட்கள் வந்து ஒன்னாச்சேர்ந்து செய்வாங்க.
ரெண்டு நாளா நடக்கப்போகும் திருவிழாவில் முதல்நாள் அன்னிக்கு பொறுப்பு ஏத்துக்க வரும் அதிபரும், விடைபெற்றுப்போகத் தயாரா நிற்கும் அதிபரும் அவுங்கவுங்க மடத்துலே இருந்து, சீர்வரிசை போல அந்த ஒரு நாளைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பா அனுப்பி வைப்பாங்க.
பொழுது விடியும்போது 'புது இன் சார்ஜ்' தண்டதீர்த்தத்தில் நீராடி, நித்திய அனுஷ்டானங்களைச் செஞ்சு முடிச்சுட்டு ஜோடுகட்டே என்ற இடத்தில் (தாலுகா ஆஃபீஸ் பக்கம்) காத்திருப்பார். (இந்த தண்ட தீர்த்தமும் ஸ்ரீ மாத்வரால் வெட்டப்பட்ட குளமாம். உடுபியில் இருந்து ஆறெழு மைல் தூரத்தில் இருக்கு. இந்தக் குளத்தில் இருந்து தன்னுடைய குருவின் வயலுக்கு நீர் பாய்ச்ச, ஸ்ரீ மாத்வர் அவர் கையில் உள்ள உள்ள தடியால் கோடு போட்டு ஒரு வாய்க்காலை வெட்டினார். அதனால் இதுக்கு தண்ட தீர்த்தமுன்னு பெயர்) அதே சமயம் மற்ற ஆறு மடங்களின் அதிபர்களும் அவுங்கவுங்க பல்லக்கில் வந்து விடைபெறப்போகும் அதிபருக்குக் காத்திருப்பாங்க(ளாம்)
இங்கிருந்துதான் பேரணி ஆரம்பிக்கும். முதலில் தங்கப்பல்லக்கில் புது இன்சார்ஜின் ஆராதனா மூர்த்தி ஜாம்ஜாமுன்னு அலங்கரிக்கப்பட்டு எல்லாருக்கும் சேவை சாதிச்சுக்கிட்டுப் போக, கூடவே பின்னால் வருவார் புது இன்சார்ஜ்.. இவருக்குப்பின்னால் மற்ற மடாதிபதிகள் சீனியாரிட்டி வரிசைப்படி பின் தொடர்ந்து போவாங்க.
ஊர்வலத்தில் புராண, இதிகாசக் காட்சிகள் உள்ள அலங்கார வண்டிகள் ஊர்ந்து போகும். எள் போட்டால் எண்ணெயாத்தான் ஆகும் என்றமாதிரி ஜனத்திரள் அப்படியே அம்முமாம். தேரடி வீதிக்கு வந்தவுடன், பல்லக்கில் இருந்து இறங்கும் மடாதிபதிகள், தெரு முழுசும் விரிக்கப்பட்டுள்ள புதுத் துணிகளின் மேல் நடந்து நாலுவீதிகளையும் வலம்வந்து ஸ்ரீ கிருஷ்ணமடத்துக் கோபுரத்தினடியில் உள்ள கனகதாஸா ஜன்னலின் வழியாக க்ருஷ்ணனைத் தரிசனம் செய்வாங்க.
புது இன்சார்ஜ், ஸ்ரீ அனந்தேஸ்வரரையும் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரரையும் சேவிச்சு நவகிரஹ தானம்(?) செஞ்சுட்டு மற்ற மடாதிபதிகளுடன் சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணமடத்து வாசலுக்குப் போவார். அங்கே விடைபெறப்போகும் மடாதிபதி, இவர்களை எதிர்கொண்டழைச்சு, இன்சார்ஜ் எடுக்கப்போறவரைக் கைபிடிச்சு, ஸ்ரீ மாத்வஸரோவருக்குக் கூட்டிட்டுப்போவார். அங்கே கைகால் எல்லாம் கழுவி சுத்தம் செஞ்சபிறகு ஸ்ரீகிருஷ்ணமடத்துக்குள்ளே போவாங்க. கண்ணனுக்கு எதிரில் இருக்கும் நேயுடு சந்நிதியில் பூஜைகள் செஞ்சுட்டு, வலப்புறம் திண்ணைமேல் இருக்கும் ஸ்ரீ மாத்வர் அறையில் இருக்கும் ஆஸனத்தில் (மாத்வரின் சிம்மாஸனம்) கொஞ்சநேரம் அமர்ந்திருப்பார்.
இதுக்குள்ளே மற்ற மடாதிபதிகள் படகுமாளிகே ( ஸ்டோர் ரூம்)வுக்குப் போய் இவுங்களுக்காக விசேஷமா அரிசிப்பொரியால் அமைச்சுருக்கும் ஆஸனத்தில் இருப்பாங்க. சந்தனம், பன்னீர், பூமாலைகள் எல்லாம் போட்டு மரியாதைகள் நடக்கும். இதெல்லாம் ஆனதும் ராஜாங்கணம் என்னும் பெரிய ஹாலுக்கு ( இங்கேதான் ஹனுமன் ஜெயந்திக்கு விருந்து நடந்துச்சு. பதிவில் படம் போட்டிருந்தேன்) எல்லாரும் வருவாங்க. விழாவுக்கு அதிகாரபூர்வமா அழைக்கப்பட்ட முக்கிய விருந்தினர்கள் எல்லோரும் இங்கேதான் உக்காரவைக்கப்பட்டிருப்பாங்க.

எல்லோருக்கும் மாலைகள் மரியாதைகள். வரவேற்பு, பேச்சுகள் எல்லாம் ஆனபிறகு புது நிர்வாகத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் யார் யார் என்ற விவரம் எல்லாம் சொல்லி, அவுங்களை அறிமுகப்படுத்துவாங்க. 'பட்டேகாணிக்கே' புதியவருக்கு அன்பளிப்புகள் எல்லாம் (மொய்?) ஆனபிறகு, ஸ்ரீ க்ருஷ்ணனின் சந்நிதிக்குப்போய் அந்த 'நவத்வார ஜன்னல்' வழியா நமஸ்கரிச்சு, மறுபடி ஸ்ரீ மாத்வர் அறைக்குப்போய்ச் சேருவாங்க.
விடைபெறுபவர், புதிய இன் சார்ஜுக்கு க்ருஷ்ணனின் சந்நிதி ( கர்ப்ப கிரஹம்/ கர்ப்பே gகுடி) சாவியையும் அக்ஷ்யபாத்திரத்தையும்( சிம்பாலிக்கா எல்லோருக்கும் சோறு போடச் சொல்றது போல) ஒப்படைப்பார். பழையவர் வேலை இத்தோடு முடிஞ்சது. மற்ற மடாதிபதிகள் எல்லோரும் ஊர்வலமா இவரோடு , இவர் சார்ந்த மடத்துக்குப்போய் அவரை விட்டுட்டு விடை பெற்றுக்குவாங்க. (ஹ்ஹா................. மூச்சு வாங்குது எழுதும்போதே!) ஸ்ரீ வாதிராஜர்தான் இந்த முறைகளையெல்லாம் சொல்லி ஏற்பாடு செஞ்சுட்டுப் போயிருக்கார். அதை நியமம் தவறாமல் இன்றுவரை பின்பற்றி வர்றாங்க.நல்லவேளை எல்லா மடம் இங்களுந்த நாலுவீதிகளிலேயே இருப்பதால் ரொம்ப இங்கே அங்கேன்னு அலையவேணாம்!
ஸ்ரீ க்ருஷ்ணனின் சந்நிதியில் தினசரி வழக்கம்போல் இனி எல்லாம் நடக்க ஆரம்பிச்சுரும். அன்னிக்கு இரவு ஸ்ரீ மாத்வஸரோவரில் தெப்போற்சவம் நடக்கும். மறுநாளும் புதியவர் பங்கேற்கும் பல்வேறு பூஜைகள், சந்திப்புகள் எல்லாம் நடக்கும். இனி அவருடைய ஆட்சிதான் ரெண்டு வருசத்துக்கு. ரெண்டு வருசமுன்னு சொன்னாலும் 11 மாசம் முடியும்போதேதான் அடுத்த ஏற்பாடுகள் ஆரம்பமாகிருதே! கோவிலை நல்லமுறையில் நடத்தி, பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் கவனிச்சு யாருக்கும் ஒரு குறையும் வராமல் ஆட்சி செய்ய வேண்டியது இனி இவர் பொறுப்பு.
நன்றி: உடுபி ஸ்ரீ க்ருஷ்ணமடத்தில் இருந்து வாங்கிய புத்தகத்தில் (official guide)இருந்து வாசித்தவைகளை இங்கே எனக்குத் தெரிந்தவரையில், நான் புரிந்துகொண்டவகையில் மொழி பெயர்த்து இருக்கேன். எதாவது தவறான தகவல் இருப்பின் அது என்னுடைய குற்றமே.




