Showing posts with label Kuala lumpur. Show all posts
Showing posts with label Kuala lumpur. Show all posts

Wednesday, August 21, 2013

கொல்லன் தெருவில் ஊசி விக்கறாங்க போல!!! (மலேசியப் பயணம் 8 )

உலகத்தின் விலை உயர்ந்த கைக்கடிகாரம் வேணுமா?  ரெண்டே முக்கால் அமெரிக்கன் டாலராமே.... அம்பது ரிங்கிட்டுக்குப் பேரம் பேசி வாங்க ஆசையா?  Rolex, Cartier எல்லாம் தண்ணிபட்ட பாடு! இல்லே,  வேற எதாவது ப்ராண்டட் பொருள் வாங்கணுமா...பேசாமக் கிளம்பி  ஜலான் பெடாலிங் வந்து சேருங்க. இங்கெதான் நம்ம மாரியம்மன் கோவிலுக்குத் தொட்டடுத்து இருக்கு இந்தத் தெரு. ஒரு நிமிச நடை.












சீனச்சாமி Guan Di கோவில் கொண்டுள்ளார். வீரத்துக்கான சாமி.  பழைய காலத்தில்  போர் வீரர் என்னும் அந்தஸ்த்து எவ்ளோ உயர்வா இருந்துருக்கு பாருங்க. இவரை வழிபட்டால்  மனசில்  தைரியம் கூடும் என்பதுதான் விசேஷம். இப்பவும் வாழ்க்கையில் வேறுவிதமாப் போராடத்தானே வேண்டி இருக்கு. நின்னு ஜெயிக்க மனோதிடம் வேண்டாமோ?  உள்ளே போய் வேண்டிக்கலாமுன்னா கோவில் மூடிட்டாங்க. வெளியெ நின்னே கொஞ்சூண்டு தைரியம் கொடுன்னு வேண்டிக்கிட்டு  அங்கிருந்து ஒரு நிமிச நடையில் புகழ்பெற்ற Jalan Petaling  தெருவுக்குள் நுழைகிறோம்.






 சின்னச்சின்னப் பூச்செண்டுகள்  சிரிச்சு வரவேற்குது. மலர்களைக்கொடுத்து மகிழ்விக்கும் ஒரு நல்ல கலாச்சாரம் சீனர்களுக்கிடையில் இருக்கு.  வெறுங்கையா,  யாரையும் பார்க்கப் போவதில்லையாக்கும் கேட்டோ!

இதுக்காக அதிகம் செலவு பண்ணனுமுன்னு அவசியம் இல்லை.வெறும் மூணு ரிங்கிட் முதல்.....


பெரிய பலாப்பழங்களை வெட்டி வச்சு, சுளை பிரிச்சு சின்ன ட்ரேயில் அடுக்கி மூடி வச்சுருக்காங்க.  சல்லீசு. ஆனால்  இப்படி ஒரு அடர்ந்த நிறமான்னு  நம்ம கோபாலுக்கு யோசனை!


லோகத்தின் எல்லா பொருட்களுக்கும் போலி  இங்கே கிடைக்குதுன்னா...  பழத்திலுமா இருக்கும்? சினிமாக்களின் டிவிடிக்கள் கொட்டிக் கிடக்கு. படம் ரிலீஸ் ஆகுமுன்னே கூட இங்கே கிடைச்சுருது !


பொதுவா சீனர்களுக்கு  வெளியே உணவு உண்ணும் கொண்டாட்ட மனநிலை அதிகமா இருக்குன்னு என் தோணல். எங்கூரிலும் பாருங்க..... சீன உணவுக்கடைகளில் சீனர்களே கூட்டம்கூட்டமா குடும்பத்தோடு வந்து சாப்பிடுறாங்க. அதே சமயம் நம்ம  இந்திய ரெஸ்டாரண்டுகளில்  வெள்ளையர்கள்தான் இங்கொன்னும் அங்கொன்னுமா இருந்து  சாப்பிடுவாங்க.  நம்மைப்போலுள்ள  மக்கள்ஸ், வீட்டுலேசெய்யும் அதே சாப்பாட்டை, அங்கே போய்க் காசைக்கொட்டிக் கொடுத்துத் திங்கணுமா என்ற நினைப்புதான்.



பொதுவா நீங்க கவனிச்சீங்கன்னா.... சீனாவைத் தவிர்த்த ஏனைய நாடுகளில் இருக்கும் பெரிய ஊர்களில் சைனாடவுன் என்ற ஒன்னு இருப்பதைப் பார்த்திருப்பீங்க.  அதிலும் வெள்ளைக்கார நாடானால்....  இந்த ஏரியாவே தனிச்சுத்  தெரியும்.  அங்கே  24 கேரட் சுத்தத் தங்க நகைக்கடை கூட இருக்குமுன்னா பாருங்க. எங்கூரில் ஒரு ஏரியா (நம்மூட்டாண்டைதான்) இப்பதான் மெள்ள மெள்ள சைனா டவுனா டெவலப் ஆகிக்கிட்டு  வருது. இன்னும் ஒரு பத்து வருசத்தில்  கூரையில் சிகப்புக் கலருடன், சிங்கச் சிலைகளும் ட்ராகன்களுமா மாறப்போவது உறுதி. பலசமயங்களில் சீனர்களின் ஒற்றுமை பார்த்தால்  வியப்பாத்தான் இருக்கு எனக்கு! நாடு முழுசும் ஒரே மொழி என்பதும் ஒரு  காரணமோ?

இங்கே கோலாலம்பூரிலும் வெள்ளீயச்சுரங்கத்தில் வேலைக்குன்னு சீனர்கள் வர ஆரம்பிச்சது, இந்த சைனா டவுனுக்கு  விதை போட்டது. 1873 ஆவது வருசம். அப்பத்தான் மாரியாத்தாளும் இங்கே இடம்பிடிச்சு உக்கார்ந்தாள். போட்டின்னா விலகிப்போறவளா :-)  சுரங்க வேலையில் சீனர்களுக்கு எப்படி இவ்ளோ ஈடுபாடுன்னு தெரியலைங்க. நம்ம நியூஸியிலும் கூட  1862 இல் தங்கம் இருக்குன்னு கண்டுபிடிச்ச கையோடு முதன்முதலில்  சீனர்கள்தான் சுரங்கவேலைக்கு தயார்னு வந்து இறங்கினாங்க. அவுங்க தலைமுறைகள் இங்கே  இப்போ வந்து குடியேறும் சீனர்களிடமிருந்து வேறுபட்டுத்தனியா பெருமிதத்தோடு நிக்குதுன்றது வேற கதை.

சிகப்பு நிறத்தில் நாலைஞ்சு பேப்பர் லேண்டர்னைக் கட்டிவிட்டதும் ஏரியாவுக்கே ஒரு களை வந்துருது பாருங்க.

Buskers என்ற பெயரில் கொல்லன் தெருவில்  ஊசி விக்கறாங்க. அன்னாடக் கைச் செலவுக்கு ஆச்சு பாருங்க.


தெருவோர உணவுக்கடைகள் ரொம்பி வழியுது இங்கே. எல்லாம் கூடியவரை சுத்தம்தான். ஆனால் நம்ம நாக்கு சங்கீதாவையில்லெ தேடுது.  அங்கே இங்கேன்னு விசாரிச்சுக்கிட்டுப்போய்ச் சேர்ந்தோம்.  இந்த ஏரியாவில் ஏழெட்டு இந்திய உணவகங்கள். பெயர்ப்பலகைகள் எல்லாம் தமிழிலும் இருக்கு, ஜோதிஜி.





முதல்  Franchise  கொடுத்த  2005 முதல் சங்கீதா  மலேசியாவில் இயங்குது . Kopatha  group (நகை வியாபாரம்)  எடுத்து நடத்துது. நம்ம சிங்காரச் சென்னையில் 1984 இல் அர்மீனியன் தெரு (சைனா பஸார்) வில்  'முதல் சங்கீதா ' ஆரம்பிச்சு இப்ப சென்னையில் ஏராளமான கிளைகளுடனும், சில வெளிநாடுகளில் Franchise கொடுத்தும் வளர்ந்துக்கிட்டே இருக்காங்க. இவுங்க க்ரூப்பில் இப்போதைக்கு 2700 பேர் வேலை செய்யறாங்களாம். இப்போ நாம் சாப்பிடப் போற இந்தக் கிளையில் 25 பேர் வேலையில். நமக்கு பரிமாற வந்தவர் மணிகண்டன். கும்மோணத்துக்காரர். இளைஞர்.  மெனு கார்டை வாங்கிப் பார்த்தேன். இளந்தோசையாம். எப்படி இருக்கும்? ஆவல்தான். ஸ்டாட்டரா  ஒரு வெங்காயப் பக்கோடா.





கோபாலுக்கு ஒரு செட்  கல்தோசை & எனக்கொரு செட் இளம் தோசை.  மெட்ராஸ் ஃபில்ட்டர் காஃபி இருக்காம். அசல் பாலா? ஆமாம்.  அஞ்சு நாளாச்சு காஃபி டவராவைக் கண்ணுலே பார்த்து.....

ஸ்வீட்ஸ் கார்னர் என்று ஒரு பக்கம் கண்ணைப் பறிக்குது. எங்க கிறைஸ்ட்சர்ச் மாநகரில் இல்லாத அரிய காட்சி. மறுநாள் கொண்டாட்டத்துக்காக கொஞ்சம் இனிப்புகள் பார்ஸல் ஆச்சு. எண்ணி ரெவ்வெண்டுதான், ரெண்டு வகையில்.

 கோபாலுக்கு 'அல்வா' கொடுக்கலாமுன்னு ரொம்பநாளா இருந்த ஆசையை....  நிறைவேற்ற நல்ல நாள் நாளைக்கு!











'பத்துமலை போயாச்சா?' ன்னார் மணிகண்டன். நாளைக்குன்னேன். அங்கே பெருமாள் இருக்கார்னு வாய்மொழிந்ததும் பரபரப்பு தொத்திக்கிச்சு. எங்கே எங்கேன்னேன். போனவுடன் தெரியும் என்ற அருள்வாக்கு:-)

நம்ம அங்கலாய்ப்பு தெரிஞ்சு, பெருமாள் எப்படியெல்லாம்  சேதி அனுப்பறான் பாருங்க!

மழை இன்னும் விட்டபாடில்லை. கொஞ்சம் காத்திருப்புக்குப்பின் ரெட் டெக்ஸி கிடைச்சு , நம்ம பார்க் ராயல் வந்திறங்கினோம். தொட்டடுத்துள்ள சூப்பர் மார்கெட் போய்  ப்ரேக் ஃபாஸ்டுக்கான சில பொருட்களை ( ம்யூஸ்லி, நறுக்கிய பழங்கள்.  ஒரு லிட்டர்  அஸ்ட்ராலியா இறக்குமதி பால், அரைக்கிலோ சக்கரை, ஒரு சின்ன நெஸ்காஃபி பாட்டில்) வாங்கிக்கிட்டோம். இன்னும் மூணு நாள் இருக்கு.  தினம் காலை  உணவுக்காக ரயில் பிடிச்சுப்போய்னு அலைய முடியாது கேட்டோ!




வரும் வழியில் இரவு லைட்  அலங்காரத்தோடு பெட்ரோனாஸ் கோபுரங்கள் ஜொலிச்சது. அழகாத்தான் இருக்கு!


தொடரும்.........:-)

PIN குறிப்பு:  நாளைய  (ஜூன் 5)கொண்டாட்டத்துக்காக கொஞ்சம் நிறைய இனிப்புகளைப் போட்டு இருக்கேன். யார் யாருக்கு எது விருப்பமோ அவைகளை தாராளமா எடுத்துக்கலாம்.