Showing posts with label Guru Nanakji. Amritsar அனுபவம். Show all posts
Showing posts with label Guru Nanakji. Amritsar அனுபவம். Show all posts

Tuesday, September 07, 2010

குரு நானக் ஜி.......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 6)

இந்த சீக்கிய மதத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாமா? இந்த மதத்தை ஸ்தாபிச்சவர் குரு நானக்ஜி. நம்ம இந்தியாவில் நவம்பர் 15க்கு மத்தியஅரசு விடுமுறை கிடைப்பதால் இவர் பெயர் பலருக்கும் நினைவு இருக்கலாம்.

1469 வது ஆண்டு நவம்பர் 15 ஆம்தேதி லஹோருக்குப் பக்கத்தில் இருக்கும் ராய் போய் டி தல்வண்டி (Rāi Bhōi dī Talwandī)என்ற கிராமத்தில் பிறந்தார். அப்போ பாகிஸ்தான் என்ற நாடு இல்லை. இப்போ பிரிவினைக்குப்பிறகு இந்த ஊர், பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கு. அவுங்க ஊர்ப்பெயரை மாத்தி நன்கன சாஹிப் (Nankana Sahib) னு வச்சுட்டாங்க. போகட்டும் பெயரா நமக்கு முக்கியம்? விடுங்க.....

ஏழாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் மெள்ள மெள்ள பாரதத்தில் நுழைஞ்சு வேர்பிடிச்சு நின்னு எண்ணூறு வருசத்துக்கும் மேலான காலக்கட்டம் அது.

நானக் அவர்களுக்கு ஒரு மூத்த அக்கா இருந்தாங்க. அக்கான்னா இவருக்கு உயிர். அந்தக்கா பேர் பீபி நானகி. இவுங்களை சுல்தான்பூர் என்ற ஊரில் கட்டிக்கொடுத்தாங்க. மாப்பிள்ளை பேரு ஜெய்ராம். இவருக்கு லஹோர் 'கவர்னர் தௌலத் கான் லோதி 'அரண்மனையில் வேலை. அக்காவை விட்டுப் பிரிஞ்சு இருக்கமுடியாமல் நானக் அக்கா வீட்டுக்கே வந்துட்டார். பதினாறு வயசு ஆனதும் இவருக்கும் கவர்னர் அரண்மனையிலே ஒரு வேலையும் கிடைச்சது.

நானக் அவர்களுக்குச் சின்னவயசில் இருந்தே ஏதோ அபூர்வ சக்தி இருப்பதாக அக்கா நம்புனாங்க. பள்ளிக்கூடத்தில் ஏழுவயசில் சேர்த்தப்ப பாரசீக முதல் எழுத்தோடு கடவுளை சம்பந்தப்படுத்தி ஆசிரியரை வியக்க வைத்தாராம். ஆன்மீக நாட்டம் அப்போவே இருந்துச்சுன்னாலும் இவருக்கு 19 வயசானதும் ஊர் வழக்கப்படி கலியாணம் ஆச்சு. மனைவி பேர் சுலக்னி.

இவுங்களுக்கு ரெண்டு ஆண்மக்கள் பிறந்தாங்க. ஸ்ரீ சந்த், லக்மி சந்த் னு பெயர் சூட்டுனாங்க. நானக் அவர்களுக்கு முப்பது வயசானப்ப ஒரு நாள் வெளியே போனவர் வீடு திரும்பலை. ஆத்தங்கரையில் இவருடைய உடுப்பு மட்டும் கிடந்துருக்கு. குளிக்க ஆத்துலே இறங்குனவருக்கு என்னமோ ஆயிருச்சுன்னு தண்ணிக்கடியில் போயெல்லாம் தேடுனாங்க. உடல் கிடைக்கலை.

மூணுநாள் கழிச்சு வீட்டுக்குவந்த நானக் யாரிடமும் பேசாமல் அமைதியா இருந்தார். மறுநாள் வாயைத்திறந்து அவர் சொன்னது " இந்துக்கள் வழியையோ இல்லை முஸ்லீம்கள் வழியையோ நான் கடைப்பிடிக்கப் போவதில்லை. கடவுளுடைய வழியில் நடக்கப்போறேன். உண்மையான கடவுள் இந்துவும் இல்லை முஸ்லீமும் இல்லை.''

( அப்போ கிறிஸ்துவம் நம்ம நாட்டுக்குள்ளே வரலை. இருந்தா இதையும் சேர்த்துருக்கலாம்)

மூணுநாள் காணாமப்போயிருந்தப்போ என்னமோ நடந்துபோச்சுன்னு குழம்பிய குடும்பம், என்ன ஏதுன்னு விசாரிச்சப்ப, 'நான் கடவுள்கிட்டே போயிருந்தேன். அங்கே போனதும் எனக்கு அமிர்தம் கொடுத்தாங்க குடிக்க. கடவுள் என் கூடவே இருக்கறேன்னு சொல்லிட்டார். உங்களுக்கெல்லாம் அவரைபற்றிச் சொல்லும் குருவாக இருக்கும்படி என்னை ஆசீர்வதிச்சு அனுப்பினார். இது உண்மைன்னு நினைக்கிறவங்க என்கூட வாங்க'ன்னார். இவரை நம்பிவந்தவங்களை சீக்கியர்கள் என்று அழைச்சார். சீக்கியமதம் உருவாச்சு. வெறும் நானக்கா இருந்த இவர் அன்றுமுதல் குரு நானக் ஆனார்.

இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தப் புது மதத்துலே தங்களை இணைச்சுக்கிட்டாங்க. பாதிப்பேர் உண்மையான தேடலுடன் வந்துருக்கலாம். பாதிப்பேர் புது மதம் என்ற கவர்ச்சியால் இழுக்கப்பட்டிருக்கலாம்.

குருஜி ஆன கையோடு அகண்ட பாரதத்தின் நான்கு மூலைகளுக்கும் கிழக்கே வங்காளம், அஸ்ஸாம், வடக்கே திபெத், காஷ்மீரம், தெற்கே தமிழ்நாடு, மேற்கே பாக்தாத், மெக்கா மதீனான்னு பயணம் போய்வந்தார்.

மெக்காவில் தங்கி இருந்தப்ப முஸ்லீம்களின் புனித க்ஷேத்ரமான காபாவை நோக்கிக் காலை நீட்டியபடித் தூங்கினாராம். இதை கண்ட இஸ்லாமிய மதகுரு ஒருவர் கடுங்கோபம் கொண்டு, கடவுள் இருக்கும் திசையிலே மரியாதைக் குறைவாய் காலை நீட்டலாமான்னு கேட்டப்ப, 'மன்னிக்கணும். தெரியாமச் செஞ்சுட்டேன். கடவுள் இல்லாத திசையைக் கொஞ்சம் காட்டுங்க. அந்தப்பக்கம் காலை நீட்டிக்கிறேன்'னு சொன்னாராம். ( இதே மாதிரி நம்ம அவ்வைப்பாட்டி, கோவிலின் கருவறை நோக்கிக் காலை நீட்டிப்படுத்ததாக ஒரு கதை சொல்வாங்க) ஒருநிமிசம் திகைச்சுப்போன மதகுரு, நானக்ஜியை முழுமையா உணர்ந்துக்கிட்டாராம்.

அதானே....கடவுள் இல்லாத இடம் எது?

சதா தன் சிஷ்யப்பிள்ளைகளின் வளர்ச்சி, அவுங்களுக்கு இந்த மதத்தின் மீதுள்ள பிடிப்பு, கொள்கைகள் மீதுள்ள நம்பிக்கை என்று எல்லா விதத்திலும் கவனிச்சுப் பார்த்து தனக்குப் பிறகு மக்களை வழிநடத்த ஒரு குருவை நியமிச்சார். அவர்தான் பாபா லெனா ( Baba Lehna). குருவாக ஆக்கியபோது Angad Dev என்று புதுப் பெயரை வழங்கினார்.

மதம் நன்றாக வளர்ந்து கொண்டு இருந்தது. குருநானக்ஜி அவர்களுக்கு 69 வயதான சமயம் தன் காலம் முடியப்போவதை உணர்ந்தவராக மக்களைக் கூட்டி அவர்களுக்கு இந்த மதத்தின் முக்கியம், கொள்கை எல்லாவற்றையும் மறுபடியும் பிரசங்கித்தபடியே இருந்தார். மனிதர் தள்ள வேண்டிய ஐந்து முக்கிய குணங்களையும் ( காமம், குரோதம், லோபம், மோகம் அகங்காரம்,) நல்ல மனிதர்களுக்கு இருக்க வேண்டியவைகளை முக்கியக் கடமைகளையும் வலியுறுத்திச் சொன்னார்.

நல்லவைகளில் சிம்ரன் & சேவை முக்கியமானது! எப்போதும் இறைவனின் நாமத்தை ஜெபிச்சுக்கிட்டே இருப்பதுதான் சிம்ரன். தேவைப்பட்ட இடத்தில் கொஞ்சமும் தயங்காமல் உதவிக்கரம் நீட்டுவது இந்த தன்னலமில்லாத சேவையில் வரும்.

தங்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் செய்யவேண்டிய கடமைகளில் இருந்து ஒருபோதும் நழுவக்கூடாது.

தனக்கு இறைவன் அருளால் கிடைச்ச சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பகுதியை தானதர்மத்துக் கொடுக்கணும்.

ஒவ்வொருவரும் சத்தியம், தயை, உள்ளதில் திருப்தி, பணிவு, மனம் நிறைய அன்பு என்ற நற்குணங்களை வளர்த்துக்கணும்.

இதெல்லாம் எல்லா மதங்களிலும் சொல்லப்பட்டதுதான் என்றாலும் இங்கே.... கடவுளுக்கு முன் எல்லோரும் சமம். என்பது எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு. பணக்காரனுக்கும் அரசியல்வியாதிகளுக்கும் தனிப்பட்ட உயர்வு எல்லாம் இல்லையாக்கும்!

ஒரே கடவுள். ஒரே குலம். பெண்களுக்கு மதத்திலும் மற்ற சடங்குகளிலும் சம உரிமை. மனிதப்பிறவி மேலானது. இறைவனை அடைய நாம் இப்பிறவியைப் பயன்படுத்தணும். (அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது: மீண்டும் ஔவையார்!) அநியாயம் கண்டால் தட்டிக்கேக்கணும். பொங்கி எழணும். (பாதகம் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளல் ஆகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா...பாரதி )

இத்தனையும் இவர் வலியுறுத்திச் சொன்னப்பக் கேட்டுக்கிட்டு இருந்த கும்பல், விடியவிடிய கதைகேட்டுன்னு................... இவர் இறந்தபின் உடலை எரிப்பதா புதைப்பதான்னு சர்ச்சை செஞ்சுக்கிட்டு இருக்கு அவர் முன்னாலேயே:(

இந்துக்கள் எரிக்கும் கட்சியாவும் முஸ்லீம்கள் புதைக்கும் கட்சியாவும் வாதம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. குருஜி ஒரு வழி சொன்னார். நான் இறந்தபிறகு நீங்கள் ரெண்டு கட்சியாடறவங்க ஒவ்வொரு பூமாலையை என் உடல் பக்கத்தில் வச்சுருங்க. என் உடலையும் சேர்த்துப் போர்வையால் மூடி மூணு நாளை அது அப்படியே இருக்கட்டும். மூணாம்நாள் திறந்து
பாருங்க. எந்தப்பக்கத்துப் பூமாலை வாடாமல் அப்படியே இருக்கோ அந்தக் கட்சி சொன்னபடி செஞ்சுருங்கன்னார்.

அப்படியே செஞ்சாங்க. மூணாம் நாள் பார்த்தப்ப.... பூமாலைகள் மட்டுமே அங்கே இருக்கு. அவர் உடலைக் காணோம்! இறைவனிடம் உடலும் போயிருச்சு என்று நம்மாளுங்க உண்மையை உணர்ந்தாலும்.... அப்படியே சும்மா இருந்துருவாங்களா? அந்த மாலைகளை எடுத்துக்கிட்டுப்போய் இந்துக்கள் அதை எரிச்சும் முஸ்லீம்கள் அதைப் புதைச்சும் இறுதிக்கடன் செஞ்சுருக்காங்க.

குருஜி பூவுலகை நீத்த நாள் 22 செப்டம்பர் 1539 வது வருசம்.
நல்லவேளை....இப்பெல்லாம் இதுக்காக யாரும் சண்டை போட்டுக்கறதில்லை. எரித்தலோ புதைத்தலோ அவரவர் வசதிப்படிச் செஞ்சுக்கறாங்க. பிறந்தவர், மரணம் அடைதல் இயற்கை என்பதால் அதீத துக்கத்தை வெளிப்படுத்திக்கறதில்லை. சடங்குகள் நடக்கும்போதும் புனித நூலின் பகுதிகளை வாசிச்சுக்கிட்டே இருக்காங்க. எரித்த அஸ்தியை அருகில் இருக்கும் ஆற்றுநீரில் கரைச்சுடறாங்க. புதைத்தவர்கள், கல்லறை கட்டுவது, தலைக்கல் வைப்பது எல்லாம் இல்லவே இல்லை. உடல் வெறும் கூடு. ஆன்மாவுக்கு அழிவில்லை என்று நம்பறாங்க.

இவர் மறைவுக்குப்பின் அங்கட் தேவ், அமர்தாஸ் னு ரெண்டு குருஜிக்கள் காலத்துக்குப்பின்னே குரு ராம்தாஸ் நாலாவது சீக்கிய மதகுரு ஆனார். இவருடைய காலத்துலேதான் 1574 இல் இந்த அம்ரித்ஸர் குருத்வாரா கட்ட ஆரம்பிச்சாங்க. இதுக்கான நிலத்தை முகலாய மன்னர் அக்பர் கொடுத்துருக்கார். மதநல்லிணக்கமா இருந்த அரசர் இவர். கோவில் கட்டி முடிக்க 27 வருசம் ஆச்சு. குருஜி ராம்தாஸ் ஏழுவருசங்கள் மட்டுமே கோவில் கட்டும் வேலைகளை மேற்பார்வை பார்த்துருக்கார். அவர் 1581 இல் உலக வாழ்வை நீத்ததால் அடுத்து வந்த குருஜி அர்ஜன் தாஸ் பொறுப்பு எடுத்து 1601 இல் கோவில் வேலைகள் முடிஞ்சது.

இந்த நிலத்துலேதான் முந்தி குறிப்பிட்ட வியாதிகளை நீக்கும் குளம் இருந்துச்சு. சுற்றிலும் மரங்கள் இருந்த சின்ன வனம் இது. இந்தக் குளத்தையே பெருசா வெட்டி நடுவில் மேடையில் கோவில் கட்டுனாங்க. குளத்து நீரில் அமிர்தம் நிரம்பி இருப்பதாக ஒரு நம்பிக்கை பரவலாக இருந்ததால் அமிர்தம் நிறைஞ்ச சரோவர்( குளம்) என்ற பெயர் வந்துச்சு, அம்ரித் சரோவர் என்பதே கடைசியில் இந்த இடத்தைச் சுற்றி அமைஞ்ச ஊருக்கும் பெயராக ஆச்சு. அம்ரித்ஸர்.


தொடரும்.................:-)

(எனக்குத் தெரிஞ்சவரை விளக்கி இருக்கேன். தவறாக ஏதேனும் இருப்பின் தெரிஞ்சவுங்க சொல்லுங்க)