Showing posts with label Dahshur Pyramids. Show all posts
Showing posts with label Dahshur Pyramids. Show all posts

Monday, March 30, 2020

மம்மி தரிசனத்துக்குப் போன மம்மி (பயணத்தொடர் 2020 பகுதி 33 )

நைல் நதிப் பாலத்தைக் கடந்து ஒரு  மணி நேரப் பயணம் போனதும்தான் .....  ப்ரமிட் கண்ணுலேயே பட்டது.  போகும் வழி ஆரம்பத்துலே நல்லாதான் இருக்கு. மெயின் ரோடை விட்டு மண்ரோடில் போகும்போது... எக்கசக்கமான   ஈச்சமரங்கள்.
ரெட்டைக்கழுதை பூட்டிய வண்டிகள்தான்,  அங்கேயும் இங்கேயுமா .... கழுதை பொதி சுமக்கும்னு ஒன்னாப்புப் புத்தகத்துலே நாம் படிச்சது ஞாபகம் இருக்கா ?
கடந்துவந்த கிராமத்து வீடுகள் எல்லாம் மண்கலரில்தான் இருக்கு. பளிச்ன்னு ஒரு பெயின்ட் அடிச்சதைப் பார்க்கவே இல்லை....  பாலைவனத்துக்கலரில்தான் எல்லாமே....   இதே கலரில் இருந்த ஒரு கட்டடத்தாண்டை வண்டி நின்னதும் ரெய்னா இறங்கிப்போய்  டிக்கெட் வாங்கி வந்து கொடுத்தாங்க.  ஆளுக்கு அறுபது   ஈஜிப்ட் பவுண்ட்.
(ஒரு பவுண்ட்.... எங்கூர்க் காசு   11 சென்ட்.  இந்தியக்காசுக்கு 4.75 ரூபாய். இப்போ எக்ஸ்சேஞ்சு ரேட் மாறி இருக்கணும் ) எங்கூர் பதினொரு சென்ட் என்றதைப் பத்து சென்ட்டுன்னு கணக்கு வச்சுக்கிட்டேன். அப்பதான் ஈஸி. பத்தாம் வாய்ப்பாடு சுலபம்:-)   எங்கே போனாலும் அது நம்மூர் காசுக்கு எவ்ளோன்னு கணக்குப் போடற புத்திமட்டும் மாறவே இல்லை. இந்தியாவை விட்டு வெளிநாடு வந்த முதல் சில வருஷங்கள்,  எத்தனை ரூபாய், எத்தனை ரூபாய்ன்னே கணக்குப் போட்ட மனசு,  அதுக்கப்புறம் மற்ற பயணங்கள் போக ஆரம்பிச்சதும் எத்தனை டாலர்னு எத்தனை டாலர்னு போட்டுக்கிட்டு இருக்கு.  இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். எதாவது வாங்கும்போது  (குறிப்பா இந்தியாவில்) அதை டாலருக்கு மாத்தித்தான் நம்மவராண்டை சொல்வேன்.  சுலபமா இருக்க அம்பதுன்னு ஒரு கணக்கு. வகுத்துருவேன் :-)  சின்ன எண்ணா வருமுல்லே!  எல்லாம் 'நம்மவரு'க்கு ஒரு மனசமாதானம் கொடுக்கத்தான்.
இன்னும் கொஞ்சதூரம் போனதும் , கொண்டை தெரிஞ்சது.  இன்னும் கொஞ்சம் தூரம் போனதும்  ஒரு இடத்தில் நிறுத்திட்டு, 'அதோ பார்'னு கை காமிச்சாங்க ரெய்னா. தூரத்தில் ப்ரமிட்!  ப்ரமிச்சு நின்னேன், முழுசா ஒன்னு கண்ணு முன்னால் !
இது ஃபோட்டோ பாய்ன்ட். அதானே.... டூர் கைடுக்கு இதெல்லாம் அத்துபடி இல்லையோ!   க்ளிக்ஸ் ஆச்சு.  கிட்டக் கொண்டாந்து பார்த்தால் பாதி உயரத்தில்  உள்ளே போகும் வாசல் இருக்கு!  மலையில் ஏறிப்போறாப்போல ஒத்தையடிப் பாதை வேற !

அங்கே நின்னு இந்தப்பக்கம் பார், அந்தப்பக்கம் பார்னு சுத்திவரக் கை காமிக்கறாங்க ரெய்னா....  சின்னதும் பெருசுமா  அங்கங்கே கூறு கட்டி வச்சாப்லெ.
ஒரு பெரிய கடற்கரையில்  பசங்க அங்கங்கே   மணல் கோட்டை கட்டி  விளையாடிட்டு அப்படியே விட்டுட்டுப் போறதைப்போலத்தான்.... கொஞ்ச நேரத்துலே நாம் திரும்பி வந்து பார்த்தால்  காத்துலே  கோட்டையெல்லாம்  கரைஞ்சு போயிருதுல்லே? இங்கே  இத்தனை வருஷம் பாலைவனத்துலே காத்தடிக்காமலா இருந்துருக்கும்? எப்படிக் கரையாம நிக்குது?  அதிசயம்தான். 
இப்போ பயணிகள் வசதிக்காகத் தார்ரோட் போட்டு வச்சுருக்காங்க. காத்தடிச்சுக் காத்தடிச்சு  அதிலும் மண் படிஞ்சுதானே இருக்கு.

இப்படி ஒன்னு கட்டணுமுன்னு 'யோசிச்சு டிஸைன் பண்ணது' யாராக இருக்கும்?  சரிவருமான்னு பார்க்க  முதலில் சின்னதாச் செஞ்சு பார்த்துருக்காங்க. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிக் கடைசியில் பிரமாண்டமாக் கட்டிட்டாங்க, இல்லே?

இல்லே....  ஒருவேளை  இதெல்லாம்  மனிதக்கைகளால் கட்டுனவை இல்லை.  மேலோகத்தில் இருந்து வந்தவர்கள் கட்டுனதுன்னு சொல்லும் 'கதை' கூட நெசம்தானோ? நாம் வேணுமுன்னா.... நம்ம முப்பத்துமுக்கோடி தேவர்கள் இறங்கி வந்து கட்டி விட்டாங்கன்னு வச்சுக்கலாம். ஆர்க்கிடெக்ட் நம்ம மயன் !

இப்போ நாம் பார்க்கும் ப்ரமிடுகள் கூட்டத்தை  Dahshur Pyramids னு சொன்னாங்க. சரியான உச்சரிப்பு என்னன்னு புரியாததால்  இப்படி வர்றதையெல்லாம் இங்லிஷில் எழுதினால் போச்சு. முழிபெயர்க்கிறேன்னு கண்டபடி உச்சரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லையாக்கும், கேட்டோ!
இதே டோடில் (! ) இன்னும் போறோம்... அஞ்சாறு நிமிசத்துலே  ஒரு நுழைவு வாயில். ஆர்மி நிக்குது. கொஞ்சம் உயரமான மேடையில் அந்தக்காலத்து ஆசாமி, சம்மணம் போட்டு உக்காந்து படிச்சுக்கிட்டு இருக்கார்.  அஞ்சாயிரம் வயசு மாதிரி தெரியலை. 
அவரைக் கடந்து இன்னும் ரொம்ப தூரம் போனதும்  இன்னொரு இடத்தில்  கல்பதிச்ச பாதை. இங்கே வண்டியை நிறுத்திக்கலாம்.  ப்ரமிட் ஃபோட்டோ ஷூட் ஆச்சு.

இதுதான் கார்பாதையில் நாம் போகும்போது கிட்டக்க இருக்கும் தூரம். இதுவே ஒரு கிமீ இருக்கும்.  இன்னும் கிட்டக்கப் போயிருவாங்களோன்னு  கல்தடை போட்டு வச்சுருக்காங்க.  இந்த மணாந்தரத்துலே ப்ரமிடுக்குக் காவல் காக்குது ஒரு செல்லம் !   



'உள்ளே மம்மி இருக்கா'ன்னு கேட்டதுக்கு இல்லைன்னு சொன்னாங்க ரெய்னா.  உள்ளே போய்ப் பார்க்க முடியுமான்னால்....   இல்லையாம். அப்போ அந்த  நடுவாசல்?  ஆராய்ச்சியாளர்களுக்கானவையாம்!  இப்போ   யாரும்  போகமுடியாது.

அப்ப இது அவ்ளோதானா ?  ஆமாம்.  அதே சாலையில் திரும்பிப்போறோம். போகும்போதும் வரும்போதும் ஆர்மி, கை அசைச்சது.  பயணிகள்/ ப்ரமிடுகள் பாதுகாப்புக்கு வேண்டி இங்கெல்லாம் ஆர்மி காவல் இருக்கு. நாட்டுக்கு பணம் சம்பாரிச்சுக் கொடுக்கும் இடங்களாச்சே!
ஒரு இடத்தில் ஒரே மாதிரிக் கட்டடங்கள் ஏழெட்டு ரொம்பத் தொலைவில்  இருப்பது கண்ணில் பட்டது.  ஆர்மி தங்கும் இடங்கள்.  குடும்பமாவா இருக்காங்க ? ஐயோ.....   ஒன்னுமே சுத்துவட்டாரத்தில் இல்லையே..... 

இந்த ஏரியா எல்லாமே சஹாரா பாலைவனம், கேட்டோ !!!  எவ்ளோ பெருசாம்?  அதிகம் ஒன்னுமில்லை.....9.2 மில்லியன்  சதுர கிமீ !!!! 1100 மைல் அகலம், 3000 மைல் நீளம்..............  ஹைய்யோ......

ஈச்சமரக் காடுகள்,  இதுக்கிடையே போகும் ரோடுகள், ரெயில்வே லைன், சின்னச் சின்ன கிராமங்கள்,  அதைவிடச் சில பெரிய ஊர்கள்னு  அரைமணி நேரப்பயணத்தில் இருக்கோம்.


எங்கே பார்த்தாலும் கார்பெட் கல்லூரிகள் !  ஓரியன்டல் கார்பெட் நெசவு செய்யக் கத்துக் கொடுக்கறாங்க.  சில இடங்களில் விற்பனையும் உண்டு. முக்கால்வாசி ஏற்றுமதிதானாம்!
ஒரு பதிமூணு கிமீதூரம் போனதும், டிக்கெட் வாங்க இறங்கிப்போனாங்க ரெய்னா.  நம்ம டூரில்  எல்லா இடங்களுக்கும்  வாங்க வேண்டிய  நுழைவுச் சீட்டுகளுக்கு நாம் தனித்தனியாப் பணம் கட்ட வேண்டியதில்லை. டூர் கம்பெனியே  எல்லாத்துக்கும் சேர்த்தே மொத்தமா நம்மாண்டை இருந்து முதலிலேயே வசூலிச்சுருது.

சரி, வாங்க என்னன்னு பார்க்கலாம்.

தொடரும்.......... :-)