Showing posts with label Bangalore பெங்களூரு. Viswa shanti Ashram. Show all posts
Showing posts with label Bangalore பெங்களூரு. Viswa shanti Ashram. Show all posts

Wednesday, December 24, 2014

விஸ்வரூபம் என் பார்வையில் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 9)

ஆளுக்கு மூணே ரூபாய்தான்  டிக்கெட்!   இவ்ளோ மலிவான்னு வியப்புதான். ஏற்கெனவே  கொஞ்சம்  புகழாரங்களைக் கேட்டதால்  எப்படி இத்துனூண்டு காசுக்குக் கட்டுப்படியாகுதுன்னு   யோசிச்சதும் உண்மை!

அஞ்சு டிக்கெட்  ப்ளீஸ். யாராலும் ஆசையை அடக்க முடியாது என்பதால் என் கெமெராவுக்கும், மற்றவர்களின்  செல்ஃபோன்  கெமெராவுகளுக்குமா  சேர்த்தே டிக்கெட்டுகளை  வாங்கிக்கிட்டோம்.  கெமெரா சார்ஜ் 20 ரூ  ஒரு ஆளுக்கு.  போகட்டும் , படமெடுத்துத் தள்ளமாட்டோமா என்ன!

அங்கிருந்தே வலப்பக்கம் இருக்கும் சப்தநதி மாதாக்களின் சிலைகள்  மனதைச் சுண்டி இழுத்தன. உள்ளே  இன்னும் என்னெல்லாம் இருக்கோன்னு ஆசையைத் தூண்டிவிடும் வகை!

கங்கை,  யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி என்னும் நதிப்பெண்கள்.  க்ரிஷ்ணா,  பிரம்மபுத்ரா ரெண்டு பேரும் ஆண் நதிகளா இருப்பதால் இங்கே சேர்த்துக்கலை:-) முதலில் பார்த்தபோது  அறுவர் நிற்க, ஒருவர் மட்டும் உக்கார்ந்து இருக்கும்  நிலை.  கங்கைதான் லிஸ்ட்டுலே முதலிடம் என்பதால் இருக்கை கிடைச்சிருக்குன்னு  நினைச்சேன்.  இன்னும்கொஞ்சம் கவனமாப் பார்த்தால்  முதலை வேற இருக்கு.  கங்கைக்குத்தானே  முதலை வாகனம், இல்லையோ? அப்போ அதில்  நிற்பவள்தான் கங்கா மாதா.  வரிசைப்படி பார்த்தால் இருக்கை கொடுத்திருப்பது நம்ம காவேரிக்கு!  சபாஷ்!

சின்னதா ஒரு நந்தவனம் .  சரியான பராமரிப்பு இல்லையோன்னு தோணல்.  இடது கைப்பக்கம் திரும்பினால்.... பகவத் கீதா மந்திர்.   இதைப் பின்புலமா வச்சு  ஒரு கீதோபதேச சிலை. கல்பாதையில் நடந்து போறோம்.  பராமரிப்பு  இல்லை என்பது உறுதியாச்சு. அங்கங்கே கற்பலகைகள்  உடைஞ்சு தூக்கிக்கிட்டு இருக்கு.  கவனமாப் போகலைன்னா  பாதம்  பங்ச்சர்:(

முப்பதடி உசரத் தேர்!  தசைகள் திரண்டு கம்பீரமான பார்வையுடன், பாய்ச்சல்  போஸில் கால்களை வைத்து, கண்ணன் கடிவாளம் இழுத்ததால் திமிறிக்கொண்டு மூக்கு துவாரங்கள் விடைக்க நிற்கும்  நான்கு குதிரைகள்.  கவலையோடு கன்னத்தில்  இடக்கை வைத்திருக்கும் பார்த்தன்.  தேர்த்தட்டில் உக்கார்ந்த நிலையில் உடம்பைத் திருப்பி  பார்த்தனைப் பார்த்துக் கைநீட்டி 'தா பாரு. மரியாதையா வில்லை எடுத்து அம்பு பூட்டி எதிரிகளை த்வம்ஸம் செய்யப்பார். சண்டைக்கு வந்துட்டு, என்னமோ கப்பல் கவுந்தாப்ல கன்னத்தில் கை வச்சுக்கிட்டு போஸா கொடுக்கறே'என்று மிரட்டும் பார்த்தஸாரதி!

கீதையை உபதேசிக்கிறாராம்.  அனுமனை கொடியில் தேடினேன்.  தேரின் கொடிக்கம்பத்தில் சுற்றி இருக்கும் கொடியில்  அனுமனின்  கால்கள் தெரிஞ்சது.  ஓஹோ....  ஆஞ்சியின் சித்திரம் கொடியில் எழுதப்பட்டிருக்கு!  அற்புதம்!  தேரின் பெரிய,சிறிய சக்கரங்களுக்கு மேல் பக்கத்துக்கொன்றாய் சீறும் சிங்கங்கள்.  சூப்பர்!

தேருக்குப் பின்பக்கம் பெரிய மண்டபத்துக்குள்ளே போகும் வழியில் போய் படிகள் ஏறணும். அங்கே சுவரில் சிற்பி  காசிநாத், ஷிமோகான்னு அலைபேசி எண்களுடன்  எழுதி வச்சுருக்கு.  இது என்னங்கடா  அநியாயம்? இவ்வளவு  அற்புதமா சிலை வடிச்சவருக்கு  இதுதான் மரியாதையா?  சின்னக் கல்வெட்டில் பெயர் செதுக்கி  பதிச்சு இருக்கலாமே!  ஊஹூம்.....  கலையை ஆராதிக்கத் தெரியலையே:(

விசனத்தோடு இன்னும் ரெண்டு படிகளேறிப்போனால் கல்வெட்டு ஒன்னு,  இந்த கீதோபதேசத் தேரை,  பகவத்கீதா தர்ஷன் மந்திர்க்கு  அர்ப்பணித்தவர்களின் பெயரும், திறந்து வைத்த  கர்நாடக முதல்வர்  பெயரும் கல்வெட்டில்! மார்ச்  23 1997 ஆவது ஆண்டு.

ஓ  அப்ப  இந்த ஆஷ்ரம் தொடங்கி பதினைஞ்சுவருசத்துக்கு அப்புறம்தான்  பகவத் கீதா மந்திர்  கட்டி இருக்காங்க. ஆஷ்ரம் தொடங்குன கதையைக் கொஞ்சூண்டு பார்க்கலாமா?

பத்ரகிரி என்ற ஊரில் 1934 இல் பிறந்தவர் கேஷவ்தாஸ்.  தொழில் வழக்கறிஞர்.  படிப்பு பி ஏ , எல் எல் பி. தன்னுடைய  25 வயசுவரை  பெங்களூரில் வாசம். குடும்பம் குழந்தை குட்டின்னா மனைவியும் ரெண்டு மக்களும்.
எப்படியோ  ஆன்மிக நாட்டம் வந்து, புராணங்கள். உபநிஷதுகள், வேதம்,  சாதுக்கள் வாழ்க்கை சரித்திரம், பகவத்கீதைன்னு   அங்கங்கே  சொற்பொழிவு  செய்யறார்.  ரொம்ப நல்லா சொல்வார் போல!  கூட்டம்  திரள்திரளா வந்து கேட்க்குது.  அப்படியே அந்த ஊர்களை விட்டு, மெல்லமெல்ல இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போய்  பிரசங்கம் செஞ்சுக்கிட்டே இருந்தவர், வெளிநாடுகளிலும் போய்  சத்சங்கம் நடத்திக்கிட்டே  உலகம் சுற்றிக்கிட்டு இருந்துருக்கார்.

ஸ்ரீ சத்குரு சந்த் கேஷ்வ்தாஸ்ஜின்னு மக்கள் மரியாதையுடன்  சொல்லிக்கிட்டு இருக்காங்க. நிறைய வாழ்க்கைத் தத்துவங்கள், பக்தி,  பஜனைப் பாடல்கள் இப்படிப் புத்தகங்களா ஒரு பக்கம் எழுதித் தள்ளிக்கிட்டே இருக்கார்.
ஒரு சமயம் Trinidad & Tobago நாட்டுக்குப்போய் சத்சங்கம் நடத்திக்கிட்டு இருந்தப்ப,  ப்ரேம்ராஜ் பஜ்ரங்கீ என்ற பக்தர் ஒருவருக்கு ரொம்பவே ஈடுபாடு வந்துருக்கு.  அப்போ  கேஷவ்தாஜி,  ராம்சரிதமானஸ் என்ற ஸ்ரீ ராமரின் கதையை கதாகாலக்ஷேபம்  செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார்.திடீர்னு  பக்தருக்கு   அனுமன் தரிசனம்  மனசுக்குள்ளே வந்துருக்கு.

உடனே  சத்குருவுக்கு எதாவது செய்யணுமென்ற தீவிர ஆர்வத்தில்  இந்தியாவில் குருவுக்காக ஒரு ஆசிரமம் கட்ட இடம் தேடி இருக்கார்.  பெங்களூர்  டும்கூர்  சாலையில் , அரிசினகுண்ட்டே பகுதியில் நெலமங்களா என்னும் கிராமத்தில் வாகாய் ஒரு இடம் கிடைச்சிருக்கு.  பதினைஞ்சு ஏக்கர். 1982 வது வருசம், உடனே  நிலத்தை வாங்கிப்போட்டு ஆஷ்ரம் நடத்திக்கக் கொடுத்துட்டார்.  உலக சமாதானம் பரப்பவும் , பகவத் கீதை, பக்தி யோகம்  கற்றுத்தரும் வகையாகவும் ஆஷ்ரம் தொடங்கியதுதான் ஆரம்பம்.

உலகின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துபோக இருந்து ஆஷ்ரம் நல்லாவே வளர்ச்சியடைஞ்சது.  36 அடி உசர விஜய விட்டலன்  சிலை (போன பதிவில் பார்த்தோம் பாருங்க !) பிரதிஷ்டை ஆச்சு.  அவருக்கு  முன்னால்   விட்டலனுக்கு  சந்நிதி.  முன் முற்றத்தில்  ஒரு துளசி மாடம்.  அதன் பீடத்தில் அழகழகான  தெய்வத் திருவுருவங்கள்.

விட்டலனுக்கு  ரெண்டு புறமும்  நவ்வாலு  லக்ஷ்மிகளா அஷ்டலக்ஷ்மிகளுக்கு  சந்நிதிகள்.  துர்கைக்கு ஒரு தனிக் கோவில்.  அப்புறம்  கேட்டுவாசலில் நுழைஞ்சப்பப் பார்த்தமே....  அந்த   ராமர் அண்ட் கோ, தத்தாத்ரேயா, புள்ளையார் ,  சுப்ரமண்யர்,  பாண்டுரங்கர், ராதா கிருஷ்ணா  இப்படி ஒரு பெரிய ஹாலில் மூணு புறமும்.  நவகிரகங்களுக்கும்   இங்கே ஒரு மூலை கிடைச்சது.   பக்கத்துலே தனிக் கட்டிடத்தில் போன பதிவில் பார்த்த  ஆஞ்ஜிக்குக் கோவில் இப்படி விரிவாக்கம்.


பகவத்கீதா மந்திர் ஒன்னும் கட்டஆரம்பிச்சாங்க. பெரிய கட்டிடம்!   உள்ளே  விஸ்வரூபம் காண்பிக்கும்  பெருமாள். ஆதிசேஷன் குடை பிடிக்க  ஹைய்யோ!!!!   சுற்றிவர  சுவர் முழுசும் கீதையின் வரிகள், கிரானைட் கற்பலகைகளில்.  மொத்தம் 800 கற்பலகைகள் பதிச்சுருக்காங்களாம்!    சமஸ்கிரதம், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில்! மக்கள் உட்கார்ந்து தியானம் செய்ய வசதியாகப் பெருசாகவே கட்டி விட்டுருக்காங்க. இந்த  மண்டபத்துக்குள்ளேதான் இப்ப நிக்கறோம்.

பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகான  முகம்!  கண்களில் ஒரு பார்வை இருக்கு பாருங்க.....  எனக்குச் சொல்லத் தெரியலை:(  நீங்களே பாருங்களேன்:-)




பாத தரிசனம்!


உயரம் என்னன்னு  தெரியலை. யாரிடம் விசாரிப்பது? ஆனால் கட்டாயம் ஒரு நாற்பதடி  இருக்கும். கேமெராவுக்கு ஓயாத வேலைதான்.  மனசில்லா மனசோடு வெளியே வர்றோம். அப்பப் பார்த்து  ஒரு  காவல்காரர்  , கேமெரா டிக்கெட்   வாங்கியாச்சான்னு கேக்கறார்.  கோபால் சட்டைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தார். எண்ணிப் பார்த்த மனிதர், ஒரு  டிக்கெட் குறையுதேன்றார்.  இல்லையே.... வாங்கினோமேன்னால்....  தலையை ஒரு மாதிரி அசைச்சாரா..... எனக்கு பேஜாராப் போச்சு. சட்டைப் பைகளில் தேடறார், ஆனால்  கிடைக்கலை:(

 'சரி போங்க' ன்னதும்  கீழே படி இறங்கி கீழ்தளத்துக்குப் போனோம். டிக்கெட் எங்கே போச்சுன்னு இவர் கால்சட்டைப் பைகளில் குடைஞ்சுக்கிட்டே  இருந்தார்.  அதெப்படி ஒன்னு மட்டும் மிஸ்ஸிங்? புதிரா இருக்கேன்னு   இன்னொரு முறை குடைஞ்சு கைகுட்டையை வெளியில் எடுத்தால் அதிலிருந்து விழுந்துச்சு.

எங்க பின்னாலேயே வந்துக்கிட்டு இருந்த காவல்காரரிடம்  அதைக் கொடுத்தபிறகு தான் எனக்கு மனசு சமாதானம் ஆச்சு. அதுவரை கீழ்தளத்து சாமிமேல் கவனம் போகலை. காயத்ரி மந்திராம்.  ஆரத்தி காமிச்சார் அர்ச்சகர்.  ஐந்து முகம்! இதுவும் பெரிய சிலைதான்.   முன்னால் ஒரு பீடத்தில் சின்ன சிலை ஒன்னும் அதே ஐந்து முகங்களுடன்.

கும்பிட்டுட்டுக் கிளம்பி போன  வழியிலேயே நடந்து  விட்டலா சிலைக்கு வந்தோம்.  இங்கே தனிக் கட்டிடமா துர்கைக்கு ஒரு கோவில் இருக்குன்னேன் பாருங்க. அதுக்குள்ளே நுழைஞ்சு ஒரு கும்பிடு. ஸ்ரீ  ஸ்ரீ ப்ரஸன்ன துர்காதேவி மந்திரா! இங்கே  நிலம் தானம் செஞ்ச ப்ரேம்ஜியின் படம் மாட்டி இருக்காங்க.  நன்றி மறவாமை!



அட!  ரொம்பநாளைக்கு அப்புறம் தொட்டாச் சிணிங்கி :-)

மணியைப் பார்த்தால்....  ஐயோ பதினொன்னே முக்கால்.  பனிரெண்டுக்கு  செக்கவுட் செய்யணுமே....


தொடரும்.........:-)



PIN குறிப்பு. :  இந்தப் பதிவின் கடைசிப் பகுதி  எழுதிக்கிட்டு இருக்கும்போது  நிலம் ஆட்டம். ரஜ்ஜூ சட்னு எழுந்து வெளியே ஓடினான். நாலு இருக்குமுன்னு நினைச்சேன். அதே போல நாலு  மேக்னிடூட்தான்:-)))

'என்ன  நம்மை விடாது போலிருக்கே'ன்னார் கோபால். 

 "அது ஒன்னுமில்லை, ஸாண்ட்டா  வந்து இறங்கின சத்தம்.  பொழுது விடிஞ்சா கிறிஸ்மஸ் இல்லையோ!!!"

அனைவருக்கும் இனிய  விழாக்கால வாழ்த்து(க்)கள்.