உடுப்பிக் கோவிலில் இருந்து ஒரு மூணு மூணரைக்கிலோமீட்டர் மேற்காலே போனால் அண்ணனும் தங்கையுமா ஒரே அட்டகாசம். அம்பாள் பாடின்னு இருக்கணும். இப்போ அம்பலப்பாடின்னு இருக்கு. அம்பலப்பாடி ஸ்ரீ ஜனார்தனன் க்ஷேத்ரம். பகல் சாப்பாடு ஆனதும் கிளம்பிவந்தோம். முதலில் கண்ணுலே படறது கோவில் திருக்குளம். ஜனார்தன புஷ்கரணி. அடுக்கடுக்கான படிகளோடு அழகா அம்சமா இருக்கு. மழை காலத்தில் குளம் நிறைஞ்சு இருக்கும்போது பார்க்கணும்! கோவில், அடுக்கிவச்ச ஏழு கூரை முகப்போடு இருக்கும் பழங்காலக் கட்டிடம். முழுக்க முழுக்க மரவேலைப்பாடுகள், காலத்தால் மூத்துக்கிடக்கு.பங்களா வீடு போல கமான் வச்ச வாசலுக்கு வெளியே ரெண்டு பக்கமும் நீளமாத் திண்ணைகள். (இந்தப் பக்கங்களில் எல்லாம் கோவில் வாசல் அறிவிப்புகளில் செல்ஃபோனுக்குத் தடா. அப்பாடா.... சல்லியம் ஒழிஞ்சது. இதைப் பார்க்கும்போதே எனக்கான அபாய அறிவிப்பு இருக்கான்னு நோட்டம் விட்டுக்குவேன். இன்னொரு அப்பாடா...) உள்ளே நுழைஞ்சால் கொடி மரம். அதைத்தாண்டினால் ரெண்டு பக்கமும் திண்ணைவச்ச இன்னொரு கட்டிடம். கதவு மட்டும் ஒருக்களிச்சு வச்சுருக்கு. தள்ளித் திறந்து உள்ளெ போனால் கேரளபாணியில் நாலுபுறமும் திண்ணைகள் ஓடும் உள் பிரகாரம். நடுவில் கருவறையில் கிழக்கு பார்த்து, சங்கு சக்கரம் தாங்கி நிற்கிறான் ஜனார்தனன். ஏகாந்த சேவையா எனக்கு!! பேஷ் பேஷ். (கிழக்குன்னு ஏன் தனியாச் சொல்றேன்? மத்தைப் பிடிச்சுக்கிட்டு அங்கே மேற்கேல்ல பார்த்தான் அந்த மத்தாயி. இந்தக் கதையை அப்புறம் சொல்றேன். இப்ப அங்கே போய் நின்னா......)

கோவிலை ஒட்டி இன்னொரு வாசலில் போனால் அங்கே மேற்கே பார்த்தமாதிரி மகாகாளி சந்நிதி. ஒரு கூட்டம் வெள்ளையும் சள்ளையுமா நிக்குது. முக்கிய நபர்கள்ன்னு பார்த்தாலே தெரியுது. அவுங்க வீட்டுப் பெண்கள் எல்லாம் அட்டகாசமான அலங்காரத்தில்! அரசியல்வியாதிகளோ? ரொம்ப பவ்யம் காமிச்சுக்கிட்டு, உடம்பை ஏறக்கொறைய ரெண்டா மடிச்சுக்கிட்ட மாதிரி அவுங்களைச் சுற்றிக் கூடவே (ஓ... இந்த அல்லகைகள்???!!!!) இருந்த ஆட்களைக் கவனிச்சால்.... அப்படித்தான் போல! இருந்துட்டுப் போகட்டுமுன்னு சந்நிதியை எட்டிப் பார்த்தவள் பிரமிச்சுட்டேன். நாக்கை நீட்டிக்கிட்டு ஆக்ரோஷமா ஆறடி உசரத்துக்கு நிக்கறாள். சங்கு சக்கரம், வாள், ஒரு பாத்திரம் (டிபன் பாக்ஸ் மாதிரி) நாலு கரங்களில். மரத்தில் செய்த உருவமாம். . பூஜைக்கு ரெடியாகிக்கிட்டு இருக்கார் பூசாரி. இந்தக் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் குறி சொல்வாங்களாம். சாமிக்கும் ஆசாமிக்கும் 'மீடியமா' ஒருத்தர் மேல் 'சாமி வந்து' சகல விஷயத்துக்கும் தீர்வு சொல்லுமாம்.. சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சால் ராத்திரி ஒம்போது வரை நீண்டு போகும் செஷனில் தீர்ப்பு வழங்கப்படும். இப்ப இருக்கும் கோவில் ட்ரஸ்டி அண்ணாஜி பல்லால் அவர்கள் கடந்த நாப்பது வருசமா மீடியமா இருக்காராம். இந்த மீடியத்துக்கு ஒரு ஸ்பெஷல் பெயர் கூட இருக்கு. pபத்ரி. இன்னிக்குப் புதனாப் போயிருச்சே:(
சந்நிதிக்கு அடுத்து இருந்த ஒரு பெரிய அறைதான் யாகசாலை. பெரிய பெரிய குண்டங்கள். ஒரேதா புகையும் தீயுமா யாகம் நடக்குது. அங்கேயும் ஒரு கூட்டம் இருக்கு. இன்னிக்கு ஸ்பெஷல் டே வாம்! கொண்டாடுங்கன்னுட்டு வந்தவழியாவே திரும்பி உடுபி கோவிலுக்குப் போகும் சாலையைத்தாண்டி அஞ்சு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் உத்யவாராவை நோக்கிப்போனோம். எட்டாம் நூற்றாண்டு கோயில் ஒன்னு பாறையைக் குடைஞ்சு உள்ளே பத்துத் தூண்களோடு இருக்காம். ஒரு சின்னக்குன்றின் மேல் கோவில் ஒன்னு தெரியுது. குன்று முழுக்கப் பாறைதான். நல்லவேளையா கார் போகும் பாதை ஒன்னு இருக்கு!மேலே போனால் அங்கே ரெண்டு கோவில்கள். முதல் கோவில் சின்னதா சாதாரணமான கட்டிடம். அதுவும் மூடிக்கிடக்கு. அதுக்கு முன்னால் ஒரு சின்ன மண்டபத்துலே கருங்கல் நந்தி ஒன்னு 'கிண்' ன்னு உக்கார்ந்துருக்கு. நல்ல அழகு. காலம் செய்த கோலத்தால் வயசானவரா இருக்கார்!
அடுத்து இருந்த ஒரு கோவிலின் முகப்பில் தாழ்வாகக் கொட்டாய் போட்டு அங்கே யாகம் நடந்த அறிகுறியாய் கடைசிப் புகை. கோவில் வாசலில் எட்டிப்பார்த்தால் உள்ளே திண்ணைகள் மூன்றிலும் பந்தியில் சாப்பாடு நடக்குது. உள்ளே போய்ப் பார்க்கலாமுன்னா எனக்குத் 'தடா' போட்டுட்டார் கோபால். 'சாப்பிடும்போது தொந்திரவு செய்யதே'.
எட்டாம் நூற்றாண்டு மாதிரி தெரியலையே. வேற இடத்தில் விசாரிக்கலாமுன்னு கீழே வந்தோம். அக்கம்பக்கத்து ஆட்களிடம் இருந்து ஒன்னும் கறக்க முடியலை. ஆனால்....திரும்பி நேராப்போனால் அங்கே ஒரு பழைய காலக்கோவில் இருக்குன்னாங்க. ச்சலோ......
டூரிஸம் கொடுத்த வரைபடத்தில் சில கோவில்களுக்கான விவரம் தொலைபேசி எண்களோடு இருக்கு. ஆனால் நம்ம அதிர்ஷ்டம், இதுக்கு இல்லை. எட்டாம் நூற்றாண்டு பைரவா.........ன்னு ஒரு வரி கண்ணுலே பட்டது.கோவில் நுழைவு வாசல் பெரிய திண்ணைகளோடு திறந்தே இருக்கு. உள்ளே போனால் சந்நிதி (கள்) பூட்டி இருக்காங்க. பைரவர் கோவிலான்னதுக்கு ஆமாம்ன்னார் அங்கிருந்தவர். கோவிலைத் திறந்து காமிக்கிறேன்னதும் போனோம். கருவறை மாதிரி இருந்த ஒர் அறை. நேரெதிரா அறை அகலம் முழுசுக்குமா சரஸ்வதி, துர்கை, லக்ஷ்மின்னு மூணு சிலைகள். பெரிய சைஸ். உக்கார்ந்த நிலையிலேயே அஞ்சடி உசரம் இருக்கும். அவுங்களுக்கு இடப்பக்கம் வலப்பக்கம் இருக்கும் சுவர்களில் ரெண்டு சந்நிதிகள். ஒன்னு பைரவருக்கு. இன்னொன்னு புள்ளையாருக்கு.
வெளியே வளாகத்தில் வலப்புறமா ஒரு தனிச்சந்நிதி. இது மகா விஷ்ணுவுக்கு. இந்தப்பக்கம்வேற திசை நோக்கி இன்னொண்ணு. இது பத்ரகாளிக்கு. கோபாவேசமா இருக்காள். தரைக்கல்லில் ஒரு பெரிய குழி. பலி கொடுக்கும் இடமாம். ரத்தம் அந்தக் குழியில் நிரம்பணுமாம். எனக்கு உடம்பே நடுங்கிப்போச்சு. அடப்பாவிகளான்னு சொன்னேன். கோவில் வாகனங்கள் ஒரு பக்கம். புலி, வராகம் ரெண்டும்..... பக்கா கிராம ஸ்டைல்!
ஆனா நாம் தேடிவந்தது இது இல்லை. கிளம்பி மறுபடி உடுபிவந்து நேஷனல் ஹைவே 17 இல் கலந்தோம். ராத்தங்கல் முருதேஷ்வர்னு முடிவு செஞ்சு ஹொட்டேலும் புக் பண்ணியாச்சு. லேப்டாப் கூடவே இருப்பது நல்ல வசதிதான். 103 கிலோமீட்டர் போகணும். போகும் வழியில் நாலைஞ்சு இடமும் ஒரு பார்வை பார்த்துக்கிட்டே ஓடணும்.
பாஜக ( ஸ்ரீமாத்வர் பிறந்த ஸ்தலம்)போகலாமுன்னு வேற ஒரு ஊரில் மஹாகணபதிக்கு ஹலோ சொல்லவேண்டியதாப் போச்சு. இருவது கிலோமீட்டர் முன்னாலே வந்துருக்கோமாம். திரும்பிப்போக நேரம் இல்லை. 'பொதுவா எல்லோரும் போற வழியில் போகாம இந்த இடும்பி என்னை வதைக்கிறாளே'ன்னு ப்ரஷாந்துக்கு இருந்துருக்கும். இதுலே மத்தியானம் கிளம்புனதுலே இருந்து 'தேரே மேரே பீச் மே கைஸாஹே யே பந்தன்' விடாமப் பாடிக்கிட்டு இருக்கு. ஸிடியாம். மெ(ய்)னே நஹி(ன்) ஜானா....தூ னே நஹி(ன்) ஜானா...... இது என்னடா தலைவலின்னு ஒரு பக்கம் நினைச்சாலும் சின்னப்பையன். என்ன விவகாரமோ? நாலுநாள் ஊரைவிட்டுக் கிளப்பி இருக்கோம். .... பிரிவோ என்னவோன்னு........ ஒரு பக்கம், பாட்டை நிறுத்தச் சொல்லி, ட்ரைவ் பண்ணும்போது தூங்கிட்டா.....? பகல் சாப்பாட்டுக்குப் பிறகு அப்படியே கொக்கி போட்டு்ல்லே இழுக்குது இங்கே இந்தியாவில்! பாடித் தொலையட்டும்ன்னு விட்டுவச்சேன்.
பாஜக இல்லைன்னா, இப்போ போகும் வழியிலேயே வரும் சாலிக்ராமா போகலாம். அங்கே ஒரு நரசிம்மர் கோவில் இருக்காம். போறோம் போறோம் போய்க்கிட்டே இருக்கோம். அலங்கரிச்ச தேர் ஒன்னைப் பார்த்ததும் இறங்கிப்போய் விசாரிச்சால் இது அம்பாள் கோவிலாம். நாம் ஏழு கிலோமீட்டர் முன்னாலே வந்துட்டோமாம்.! அஞ்சு மணிக்குப் புறப்படும் தேரை மூணு மணிக்கே அலங்கரிச்சு வெய்யிலில் நிறுத்தி வச்சு..... பாவம் அம்பாள்! பூவெல்லாம் அடிக்கிற வெயிலில் வாட ஆரம்பிச்சுருக்கு. குட்டி குருக்கள் ப்ரஸாதம் கொடுத்தார்.மெ(ய்)னே நஹி(ன்) ஜானா....தூ னே நஹி(ன்) ஜானா...... சரியாப் போச்சு!
விடறதைல்லை. ஏழுதானே.... ' திரும்பிப் போ' ன்னேன்.
Showing posts with label Ambalapady. Show all posts
Showing posts with label Ambalapady. Show all posts
Thursday, April 15, 2010
மெ(ய்)னே நஹி(ன்) ஜானா....தூ னே நஹி(ன்) ஜானா......
Posted by
துளசி கோபால்
at
4/15/2010 03:10:00 AM
23
comments
Labels: Ambalapady, அனுபவம்
Subscribe to:
Posts (Atom)
