Showing posts with label பூவார் Boating. Show all posts
Showing posts with label பூவார் Boating. Show all posts

Tuesday, May 19, 2009

உலவும் தென்றல் காற்றினிலே..... ஓடமீதே..... நாம் மகிழ (..........(2009 பயணம் : பகுதி 26)

பகல் சாப்பாட்டுக்கு எங்கியாவது போகணும். காலையிலும் ரமேஷ் எங்கே, எப்போ சாப்பிட்டாருன்னு தெரியலை. திருவனந்தபுரம் டவுனுக்கே போகலாமான்னு கேட்டால்..... பக்கத்துலே தான் கோவளம். அங்கே போனா நல்ல ரெஸ்ட்டாரண்டு இருக்குமுன்னு சொல்றார். 'கோவளம் கோவளமுன்னு ஜெபிக்கிறாரே'ன்னு..... சரி. போய்த்தான் பார்க்கலாமுன்னு சொல்லிட்டோம். போகும் வழியெல்லாம் தெங்கும் கமுகுமாப் பசுமை. கேரளாவாச்சே.... கேக்கணுமா?
கல்வெட்டி எடுத்த இடங்களில் எல்லாம் குளங்கள். அங்கே போனதும் கூடவாங்கன்னு ரமேஷையும் சாப்பிடக் கூப்பிட்டால்..... அவர் எப்பவும் லேட்டாத்தான் சாப்புடுவாராம். நீங்க போங்கன்னுட்டார். பொதுவாப் பயணங்களில் ட்ரைவரைத் தனியா விட்டுட்டுப்போய் நாங்கமட்டுமே சாப்பிடும் பழக்கம் எங்களுக்கு இல்லாததால்..... கஷ்டமாப் போச்சு. அவருக்குக் கொஞ்சம் காசைக் கொடுத்துட்டு நாங்க கடற்கரை ஓரமா நடந்து போனோம்.
இடது பக்கம் விதவிதமான ஹொட்டேல்களும், வலது பக்கம் கடலுமாக் கிடக்கு. ஒரு வளைவான இடத்தில் அமைஞ்ச கடற்கரை. கொஞ்ச தூரத்தில் ஒரு சின்ன மேடான இடத்தில் கலங்கரை விளக்கம் ஒன்னு. சுற்றுலாப் பயணிகளா சில வெள்ளைத்தோல்கள் அங்கங்கே. பயணிக்களுக்கான கடைகள் சிறுசும் பெருசுமா.

கைவினைப்பொருட்களா உலர்ந்த நெற்றுத் தேங்காய் பொம்மைகள். (ரொம்ப நல்லா இருக்கு. ஆனாலும் இங்கே கொண்டுவர முடியாது) கலர்க்கலரா யானைகள் இப்படி. தண்ணீர்க்கரையை ஒட்டி நாலைஞ்சு குடைகளும் நாற்காலிகளுமா ஒரு செட்டிங். கட்டுமரங்கள் கொட்டிக்கிடக்கு. நனையாம இருக்க அதுகளுக்கு ஓலைக்கூரை போட்டுவச்சுருக்காங்க. சரியான மொட்டை வெய்யில்.
ஹொட்டேல் ஸீ ஃபேஸ், பார்க்க ஓக்கேவா இருந்துச்சுன்னு படியேறிப்போனோம். மொட்டைமாடி மாதிரி கட்டி ஓலைக்கூரை போட்ட ரெஸ்ட்டாரண்ட். காலியாக் கிடக்கு. அங்கே இருந்து பார்க்கும்போது கடல் அழகாத்தான் இருக்கு. இந்தப் பக்கம் ஸ்விம்மிங் பூலில் ரெண்டு மூணு வெள்ளையர்கள். ரெஸ்ட் ரூம் ஏரியா நல்லா சுத்தமா இருக்கு.
சப்பாத்தி, தால், வெஜிடபிள் மஞ்சூரியன், ஃப்ரைடு ரைஸ் வாங்கிக்கிட்டோம். கோபாலுக்குத் 'தண்ணி' தவிச்சுருச்சாம்! போயிட்டுப் போகுதுன்னு விட்டுட்டேன். சாப்பாடு பரவாயில்லை. ஆனால் கொஞ்சம்கூட இன்முகம் காட்டாத பணியாட்கள். நிதானமா ஓய்வெடுத்துக்கிட்டு ரெண்டு மணிநேரம் போச்சு. பீச்சுக்கான கார்பார்க்கிங் வந்தா ரமேஷ் காருக்குள்ளில் 1 செம தூக்கம். ஹவா பீச் கார்ப் பார்க்காம் இது:-)))) 1

கிளம்பி நெய்யாற்றங்கரை பாலம் கடந்து வந்துக்கிட்டு இருக்கும்போது ரோடோரமா லீலா போட் சர்வீஸ்ன்னு ஒன்னு. போட்டிங் போகலாமாம். இறங்கிப்போய்க் கேட்டோம். மணி நேரத்துக்கு எண்ணூறு ரூபாய். உப்பங்கழியாம். ஆலப்புழா காயலில் மூணுநாள் இருக்கணுமுன்னு ப்ளான் பண்ணி, நம்ம பதிவுலகத் தோழிகிட்டே விவரமெல்லாம் வாங்கி வச்சுருந்துக் கடைசியில் போதுமான நாட்கள் ஒதுக்க முடியாமல் தடைபட்டுப்போச்சு. 'கிட்டாதாயின் வெட்டென மற'ன்னு மனசைப் பழக்கி வச்சுருந்தேன். இப்ப இது தானா வந்து மடியிலே விழுது. படிகள் இறங்கி ஆற்றங்கரைப் படகுத்துறைக்குப் போனோம். சின்னதும் பெருசுமா நாலு படகுகள் ஆடி அசைஞ்சு வா வா அருகில் வான்னு கூப்புடுது.
சின்னப் படகா எடுத்தா...சந்துகளில் எல்லாம் போய் சிந்து பாடலாமுன்னு சொன்னாங்க. ' நம்ம சைஸுக்கு இடம் பத்தாது போல இருக்கே. அதுவும் துடுப்புப் போடும் படகு. வம்பே வேணாம். மாத்திக்க வேற உடைகூட கொண்டுவரலை'. எட்டு ஸீட் இருக்கும் படகே இருக்கட்டும். ஏறி இடது வலதா உக்கார்ந்தோம். பேலன்ஸ் வேணுமுல்லே.....

கிளம்பி வலப்பக்கமாக் கொஞ்ச தூரம் மெதுவாப்போய்த் திரும்பி படகுத்துறைக்கே வந்தோம். ஏதோ ரிஸார்ட் போல இருக்கு. இப்பப் படகு ஒட்டும் ஆள் சவாரியை விட்டுடக்கூடாதேன்னு நம்மைப் பிடிச்சு வச்சுருக்கார்:-) நம்ம படகுக்காரர் சாப்புடப் போயிருக்காராம். கையில் ஒரு குலை இளநீரோடு நம்ம படகுக்கு வந்து சேர்ந்துக்கிட்டார். பெயர் விஜயகுமார். ரெண்டு பக்கமும் தோப்புகளா இருக்கும் தண்ணீர்ப் பரப்பில் போய்க்கிட்டு இருக்கோம். ஹைய்யோ..... அடிக்கும் வெய்யிலுக்குச் சிலுசிலுன்னு இளங்காத்து இதமா இருக்கு.

'ஆஹா.... இன்ப நிலாவினிலே ஓ(ஹ்)ஹோ ஜெகமே ஆடிடுதே.....' சரியா இருக்குமா இல்லை 'ஆசையே அலை போலே...நாமெல்லாம் அதன் மேலே..... ஓடம் போலே ஆடிடுவோமே..... சரியா இருக்குமான்னு மனசுக்குள்ளேச் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தேன்.
ஃப்ளோட்டிங் ரெஸ்ட்டாரண்டு ஒன்னு கண்ணில் பட்டது. அதுலே இன்னும் நடமாட்டம் ஆரம்பிக்கலை. மிதக்கும் படகு வீடுகளுக்குப் பதிலா தண்ணீரில் ஒரே இடத்தில் நிற்கும் வீடுகளா ஒரு இடத்துலே இருக்கு. புதுசாவும் ஒன்னுரெண்டு கட்டிக்கிட்டு இருந்தாங்க. காங்க்ரீட் தூண்களைத் தண்ணிக்குள்ளில் நட்டு அதன் மேல் காட்டேஜ் ஸ்டைலில் ஹொட்டேல் அறைகள். பாசுரம் ரிஸார்ட்டைச் சேர்ந்ததுன்னு நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் திறந்த வாயை மூடாமல் படங்களா எடுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தோம்.
அழகான அழகு, அமைதியான அமைதி. எதைச் சொல்ல எதை விட? ஒரு கற்குவியல் உள்ள மேட்டில் சிலுவையும் அதுக்கடியில் யேசுவை மடியில் கிடத்தி வச்சுருக்கும் மக்தலேனா சிலையுமா இருந்துச்சு.
இது பூவாறும் கடலும் கலக்கும் இடம். கொஞ்ச தூரத்துலே இருந்த மணல் மேட்டின் இடையில் கடல் தண்ணியும் இந்த ஆத்துத் தண்ணியும் ஒன்னையொன்னு தொட்டுக்கிட்டு இருக்கு. அலை வரும்போதெல்லாம் கடல் உள்ளே வர்றதும் அலை திரும்பும்போது கூடவே கொஞ்சம் நல்ல தண்ணியை இழுத்துக்கிட்டுப் போறதுமா ஒரு நிமிசம் கூட சோம்பி நிக்காத ஒரு விளையாட்டு நடந்துக்கிட்டே இருக்கு.
இந்தப் பக்கம் இன்னும் சில ரிஸார்ட்டுகள். ஏதோ சினிமாவில் இந்த இடத்தைப் பார்த்த நினைவு. ஷாக்(shag) பறவைகளும், நாரைகளும் ஒரு சில எருமைகளும் ஆடுகளுமா அங்கங்கே. இடைக்கிடைத் தெங்கு ஓலைகள் முடையும் மனுசர்கள், ஆற அமர குளிக்கும் ஆட்கள்ன்னு கண்ணுலே பட்டுக்கிட்டே இருக்காங்க. எதிர்த்திசையில் வந்த ஒரு படகுப் பயணிக்களுக்குக் கையாட்டுனா...ஒரு நிமிசம் முழிச்சுட்டு அப்புறம் கையாட்டுனாங்க. எல்லாம் நம்ம இந்தியர்கள்தான்.....
விஜயகுமாருக்கு ரெண்டு பிள்ளைகளாம். ப்ளஸ் டூ வரை படிச்சுட்டு உள்ளூர்லேயே செட்டில் ஆகிட்டாராம். இது பார்ட் டைம் ஜோலிதானாம். கொஞ்சம் க்ருஷி (விவசாயம்) இருக்காம். சொந்தமா ஒரு கொச்சு வீடும் கொறச்சுப் பரம்பும் உண்டாம். மற்றபடி பெயிண்டிங் அது இதுன்னு கிடைச்ச வேலையெல்லாம் செஞ்சுக்குவாராம். கடலுக்குப் பக்கம் ஒரு இடத்துலே 'கருடர்கள்' நிறைய இருந்தாங்க. கிருஷ்ணப் பருந்து. கன்னத்துலே போட்டுக்கணும். ஒரு நாயர்கூட அங்கே ஓடிக்கிட்டு இருந்தார். இவ்வளோ தூரம் எப்படி வந்துருப்பாருன்னு தெரியலை. விஜயகுமார் படகை நிறுத்திட்டு இளநீரை வெட்டிக் கொடுத்தார். அவரோட பரம்பில் நிக்குன தெங்கிண்டே கருக்கு. வெள்ளம் நன்னாயிருந்நு:-)))

கிராமங்கள் வீடுகள் இருக்கும் பக்கமெல்லாம் போயிட்டுத் திரும்பி வந்தப்பச் சரியா நூறு நிமிசம் ஆகி இருந்துச்சு. உண்மைக்குமே ரொம்பவும் ரசிச்சோம். நாங்க வரும்பவரை 'படகுக் கம்பெனி' ஆட்களுடன் ரமேஷ் நல்ல அரட்டை. நாங்க எந்த ஊர்? அதுலேயும் 'ப்ரத்யேகிச்சு ஞான் மலையாளியாத்தான் இரிக்கணும்' என்றெல்லாம் நம்ம தலையை உருட்டிக்கிட்டு இருந்துருக்காங்க.

கோபாலுக்கு ஒரு பழக்கம் இருக்கு...... யாராவது நீங்க எந்த ஊரில் இருந்து வந்துருக்கீங்கன்னு கேட்டால் 'சட்'னு சொல்லிறமாட்டார். உள்ளூர்தான்பார். சென்னைன்னு சொல்வார். அவுங்க எல்லாம் எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்கன்னு தெரியாது...... இல்லீங்க எந்த நாட்டுலே இருந்து வந்துருக்கீங்கன்னு விடாமக் கேப்பாங்க. இங்கேதான்.... இந்தியாதான்ன்னு இவரும் சொல்லிக்கிட்டே இருப்பார். ரொம்பத் தொந்திரவானா..... டில்லி, மும்பைன்னு சொல்வார்:-))))) நம்ம ரமேஷ் கேட்டப்பவும் இப்படிச் சுத்திவளைச்சுக் கடைசியில் நியூஸின்னார். நானும் இந்த வேடிக்கையை எல்லாம் பார்த்துக்கிட்டே இருப்பேன்.

சமீபத்திய படங்களை ரெண்டு ஆல்பமாப் போட்டுருக்கேன்.

கோவளம் படங்கள்

பூவாறு படகு

தொடரும்......:-)

பின் குறிப்பு: இந்த முறை ஆல்பத்துலே கொஞ்சம் கூடுதலாப் படங்களைப் போட்டுருக்கேன். எக்கச்சக்கமான அழகில் எதை விட எதைப் போடன்னு ஒரு மயக்கம். தென்னைக்கூட்டம்தான் அதிகம். நிதானமா நேரம் கிடைக்கும்போது பாருங்க.