Showing posts with label பாலி. Bali. Show all posts
Showing posts with label பாலி. Bali. Show all posts

Wednesday, July 31, 2013

நோ லட்சம் ருப்பையா, இனி ரிங்கெட் ஒன்லி (பாலி பயணத்தொடர் 20 )

பத்துமணிக்கு அறையைக் காலி செஞ்சுக்கிட்டு புத்ராவின் வண்டியில் ஏறினோம். குரங்குக்காட்டு சாலை  ஒருவழிப்பாதை என்பதால் வலது பக்கம் வண்டி திரும்புது.  பத்து விநாடிகளில்  கண்ணில்பட்டது நேத்து மாலை நாம் போன உபுட் அரண்மனை. அடராமா.... இவ்வளோ பக்கத்தில் இருக்குதா என்ன? ஏற்றமா இருக்குன்னு  சோம்பல் படாமல் இருந்திருந்தால்  கைவினைப்பொருட்கள் சந்தையை கோட்டை விட்டுருக்க மாட்டோமே:(

டென்பஸார் நோக்கிய பயணம். விமானநிலையம் அங்கேதான் இருக்கு.  உபுட் கிராமங்களில்  எங்கே பார்த்தாலும் குடிசைத்தொழில் போல கலை சமாச்சாரங்கள் கொட்டிக்கிடக்கு. திண்ணைகள் முழுசும்  சித்திரங்கள் விற்பனைக்கு வச்சுருக்காங்க. எல்லாம் ரொம்பவே பெரிய சைஸ்.நம்மாலே கொண்டு போகமுடியாதுன்னு   மனசை ஆறுதல் படுத்திக்கணும்.

சிற்பங்களுக்கும் சிலைகளுக்கும்   செடிகளுக்கான நர்ஸரிகளுக்கும்  குறைவே இல்லை.



முக்கிய சாலைகளில்  அங்கங்கே மனதைக் கவர்ந்து இழுக்கும் வகையில்  கலை அழகோடு கூடிய  பெரிய சிலைகளை  தீவு முழுசும்  வச்சுருக்காங்க.  கடல் தேவதை, கீதோபதேசம்.  கருடாழ்வார் கையில்  எழுந்தருளும் விஷ்ணு இப்படி. கோவில்களுக்கு உள்ளில்தான்  சாமிச் சிலைகள் இல்லை!


ஒன்னேகால் மணி நேரத்தில்  விமான நிலையம் வந்தாச்சு.  பெட்டிகளை தூக்கி வந்து  ட்ராலியில் வச்சார் புத்ரா. அட!  (ஓ....மழை இல்லையே அதான்....)

வருசத்துக்கு  முப்பது லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் வந்து போகும் விமானநிலையம் பாலி டென்பஸார்.   Departure Tax  US $ 20 வாங்கிடறாங்க. வரும்போது விஸா ஆன் அரைவல் என்று ஒரு 25$  அப்படிஒரு நபருக்கு 45 வீதம்  வருமானம். அப்ப மூணு மில்லியனுக்கு? சுற்றுலாத்துறையை சிறப்பாக நடத்துவதால்  கூட்டம் அம்முது.


இப்போதைக்குச்  சின்ன விமான நிலையம்தான். இப்போதான் அதை விரிவுபடுத்தும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.
இங்கே உள்ளூர் பண்டிகை, விழாக்கள் சமயத்தில்  பாரம்பரிய நடனம், அலங்காரங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கும் என்பதால் அந்த சமயங்களில் கூட்டம் ஏராளம்.  இந்தோனேஷிய மக்கள்  அதிகமா வந்து போவாங்களாம். இந்தோனேஷியாவில்  சின்னதும் பெருசுமாத் தீவுக் கூட்டங்கள் பதினேழாயிரம் இருக்காமே!  (அம்மாடியோவ்!)

Galungan என்ற  பண்டிகை நம்மூர் தீபாவளி மாதிரி பெரிய அளவில் கொண்டாடுறாங்க. பத்து நாள் விழாவாம். இதன் கடைசி நாள்  Kuningan விழா நடக்குமாம். இந்த பத்து நாட்களும் விடுமுறை காலம்.  இவுங்க நாள்காட்டி ,  சந்திரன்  சுற்றும் கணக்கையொட்டி இருப்பதால்  பத்து மாசம்தானாம் ஒரு வருசத்துக்கு. அதைக் கணக்கு வச்சு பண்டிகைகள் திருவிழாக்கள் எல்லாம் நடப்பதால்   வருசம் தோறும் வெவ்வேறு மாசங்களில் வருது.

சரஸ்வதி ன்னு ஒரு பண்டிகை. அஞ்சு நாள் விழா. இது எப்பவும் சனிக்கிழமைதான் வருமாம். முதல் நாள் வெள்ளியன்று வீட்டில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் எடுத்து தூசி தட்டி துடைச்சு அடுக்குவாங்க. மறுநாள்  சரஸ்வதி டே அன்று  சமுத்திர ஸ்நானம் செஞ்சு  வீட்டுலே பூஜை செய்வாங்க. பள்ளிக்கூடங்களிலும், அலுவலகங்களிலும்  கொண்டாட்டம் பூஜை எல்லாம் உண்டு. அன்னிக்கு யாரும் புத்தகங்களைப் படிப்பதோ,நோட்டுப்புத்தகங்களில் எழுதுவதோ கூடாது.  மாலை நேரம் விளக்கு வச்சதும்  எதாவது ராமாயணம், மகாபாரதம் இப்படி புராண இதிகாசங்கள் கொஞ்சம் வாசிக்கணும். கோவில்களில் வாசிக்கும்போது போய் கேட்டும் வரலாம்.  அப்புறம் ஞாயிறு, திங்கள் செவ்வாய்,புதன்னு  மொத்தம் அஞ்சு நாள் வழிபாடு நடத்துவாங்க. அறிவுக் கடவுளுக்கு அஞ்சு நாள். இந்த வருச சரஸ்வதி நாள் வரும் ஆகஸ்டு 10, 2013. சனிக்கிழமை!


புது வருசம் என்று கொண்டாடும் முக்கிய பண்டிகை  Nyepi  டே!  இந்த  நாள்  மொத்த   இந்தோனேசியாவுக்கும் விடுமுறை.  ஒரு கடை கண்ணிக்கூட  திறக்கமாட்டாங்க.   தீவு முழுக்க அமைதியா இருக்கும் நாள். தெருவில் யாரும் நடமாடக்கூடாது. அவரவர்  இருப்பிடத்தில்  இருந்து  அன்று முழுவதும்  வழிபாடும் தியானம் செய்வதும் என்று  சாமி சம்பந்தமுள்ளவைகள் மட்டும் செய்யணும்.   தீவு முழுக்கக் கம்ப்ளீட் சைலன்ஸ். ஏர்ப்போர்ட் கூட மூடிருவாங்களாம்.  அதனால் சுற்றுலாப் போகும் எண்ணம் இருக்கும் நம்மாட்கள்  அந்த சமயத்தில் பயணம் வச்சுக்க வேணாம். 2014 க்கு சைலன்ஸ் டே  மார்ச் 31.

இப்படி ஒரு நாள் இந்தியாவுக்கு  இருந்தால் எப்படி இருக்குமுன்னு  கற்பனை செஞ்சு பார்த்தேன்......  முக்கால் வாசி சனம் அவுட்!  செல்லில் பேசக்கூடாது, டி வி சேனல்கள்  இயங்கக்கூடாதுன்னால்....     இந்தியா  காலி!

செக்கின் செஞ்சுட்டு சும்மாச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம்.

அங்காச புராவில் (அட! ஏர்ப்போர்ட்டுலே தாங்க) எங்கே பார்த்தாலும் கருடவாகனத்தில் விஸ்னு!  ரெண்டு இறக்கைகளையும்   நல்லா  உயரமாத் தூக்கி விரிச்சு வச்சுருக்கார்.



நினைவுப் பொருட்களுக்கான கடைகள் பார்க்கவே அருமை.

பகல் சாப்பாட்டை அங்கேயே ஒரு ரெஸ்ட்டாரண்டில் முடிச்சுக்கிட்டோம். பாஸ்தா & ஃபிங்கர் சிப்ஸ்.  வெறும்முட்டாய்களுக்குன்னே ஒரு கடை. புளி மிட்டாய்  பார்த்தேன்.  அசல் புளியம்பழமாம்.  மகளுக்குப் பிடிக்குமேன்னு  கொஞ்சம் வாங்கிக்  கைவசம் மிஞ்சி இருந்த சில ஆயிரங்களைக் கரைத்தேன். அப்படியும்   சில ஆயிரங்கள்  மிஞ்சியன.  அடுத்த பாலிப் பயணத்துக்கு இருக்கட்டுமுன்னு எடுத்து வைக்க வேண்டியதுதான்.

சொல்ல மறந்துட்டேனே... இங்கே உபுட் நகரத்தில்  உலக எழுத்தாளர்கள் & வாசகர்கள் திருவிழா ஒன்னு செப்டம்பர் மாசத்தில் நடக்குது.  இந்த 2013 வது ஆண்டு இதுக்கு பத்து வயசு.  அதுக்கான  ஸ்பெஷலா அக்டோபர் 11முதல் 15வரை அஞ்சு நாள் விழாவாக் கொண்டாடுறாங்க.  சரஸ்வதி ஃபவுண்டேஷன்  ஏற்பாடு
!

வழக்கம்போல் ஏர் ஏசியா  தாமதமா வந்து நம்மளை ஏத்திக்கிச்சு.  நாலுநாள் லட்ச லட்சமா வாரி விட்டாச்சு. இனி  ருப்பையாவை விட்டுட்டு ரிங்கெட் கணக்கு பார்க்கலாம்.

பை பை பாலி.

PIN குறிப்பு:  வரும் இடுகையில் இருந்து தொடருக்குப் பெயர் மாற்றம் உண்டு:-))))

தொடரும்........:-)