க(g)ல் கல் கல் ச(ch)ல் சல் சல்ன்னு தொண்டையில் சலங்கை கட்டிக்கிட்டு ஒரே ஆட்டம்தான் நம்ம வீட்டுலே போங்க!
'அடக்கி' வாசிச்சுக்கிட்டே அப்படியும் முத்ராவுக்குப் போனோம். எம் எல் வி. பற்றி ஒரு டாக்குமெண்டரி போடறாங்களாம். திருப்பாவைன்னதும் அவுங்கதான் தானாவந்து மனசுலே உக்கார்ந்துக்கிறாங்க. புதுசுப் புதுசா எத்தனையோபேர் வந்து டிவியிலே பாடிக்கிட்டு இருந்தாலும்....ஒன்னும் மனசுக்கு............ சரி. விடுங்க வேணாம். (இதைப் பற்றித் 'தனி'யில் சொல்றேன்)
ஸ்ரீவித்யா ஒரு சமயம் குறிப்பிட்டதுபோல் எம் எல் விக்குப் போதுமான முக்கியத்துவம் கிடைக்கலை என்பதே மனசின் மூலையில் ஒரு சோகம்தான். அதே மரியாதைதான் அவுங்க மகளுக்கும் கிடைச்சது. என்னமோ போங்க. சிலசமயம் கூடுதல் தகுதியோடு இருப்பதே ஒரு தகுதி இல்லா(ய்)மையாப் போயிருது(-: அதுவுமில்லாம...... அவுங்களுக்கு அமைஞ்சதும்....... வேணாம்... விடுங்க. இப்ப அதையெல்லாம் யோசிச்சு என்ன ஆகப்போகுது?தூர்தர்ஷனில் வந்த ஒரு சில நிகழ்ச்சிகளையும் போட்டோக்களையும் வச்ச ஒரு விவரணமா இருந்துச்சு நாங்க பார்த்தது. சின்ன வயசுலே ரொம்ப அழகா இருந்துருக்காங்க (நம் எல்லாரையும் போலவே)
இப்போதைய நட்சத்திரங்கள் மினுங்குதா?
இங்கே பாருங்களேன் , யாரெல்லாம் இருக்காங்கன்னு!
எம் எல் விக்கு அப்புறம் சூர்யபிரகாஷ்ன்னு ஒரு இளைஞர் பாடினார்.(கலைஞர்களில் எத்தனை வயசுவரை இளைஞர்ன்னு சொல்லணும்?) முந்தியே ஒருமுறை நாரதகானசபா மினியில் கொஞ்சம் கேட்டுருக்கோம். நல்ல வளமான குரல் & ஞானம். கேமெராவும் கையுமா நான் ஃபோகஸ் பண்ணப்ப, தலையை உயர்த்தி கம்பீரமா போஸ் கொடுத்தார் அப்போ. பாகவதர் கிராப். 'தலைமுடி இன்னும் நீளமா இருக்கே'ன்னு சொன்ன கோபாலுக்கு, 'மூணுமாசம் ஆச்சே. வளர்ந்துருக்காதா? 'ன்னேன்.ஏதோ வந்தோம் பாடுனோமுன்னு இல்லாம இப்பல்லாம் 'தீம்' ஒன்னு போட்டுக்கறாங்க. இன்னிக்கு அமுதும் தேனும். அமுதுன்னா சாஸ்த்ரீயமான கர்நாடக சங்கீதம். தேனும்? ராகங்களின் அடிப்படையில் அமைஞ்ச சினிமாப் பாட்டுகள். அதுவும் இன்னிக்கு ரெண்டு மணி நேரம் அமுதும், ஒரு மணி நேரம் தேனுமாத் தருவாராம். நாற்பதுகளின் பாடல்களாம்! ஏற்கெனவே 'விஷயம்' தெரிஞ்சுவந்த 'ரசிகர்கள்' கூட்டம்! சபையை ஒரு பார்வையில் நான் சுலபமாக் கணிச்சிருக்க முடியும், கவனிச்சு இருந்தால்.
எல்லோரும் தேனுக்காகக் காத்திருந்தார்கள்!
மார்கழிக் குளிருக்கு இதமா சூடா காஃபியில் 'அன்னையும் தந்தையும் தானே...அண்டசராசரம் கண்கண்ட தெய்வம்' எம்கேடி பக்தர்கள் ஏராளம் கூட்டத்தில்!
விருத்தம்னு எஸ் ஜி கிட்டப்பாவின் 'கோடையிலே இளைப்பாறி' மக்கள் சிலரின் வெறும் தலையாட்டம்.
மனமே தினமும் மறவாதே ஜகதீசன் மலர்ப்பதமே..... எம் எஸ் இல்லையோ இது? லேடீஸ் சாய்ஸா?
க்ருஷ்ணா..............முகுந்தா..........முராரே..... சபை கலகலத்தது!
சட் சட்ன்னு முடிஞ்சுரும் சின்னச்சின்னப் பாடல்கள்.
கொஞ்சம் விஸ்தாரமா 'பாற்கடல் அலைமேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரங்கநாதா' ராகமாலிகா. எம்ஜியார் படம் இது. ராஜா தேசிங்கு.
பாரதி பாட்டு வேணுமுன்னு கூட்டத்தில் இருந்து ஒரு குரல். ஒருவிநாடி யோசனைக்குப் பிறகு..... செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து....... பி யூ சின்னப்பா பாடியது.
மனமே நீ ஈசன் நாமத்தை......வாழ்த்துவாய்..... எம் கே டி. சபை முழுக்க மறுபடி ஆரவாரம். பிடிகிட்டிப்போச்சுப் பாடகருக்கு, எதுக்கு மவுசுன்னு.
'நல்ல குண்டா, கருப்பா, நீண்ட கால்களோடு உயரமா' வந்து உக்கார்ந்தது ஒரு கொசு. மெலிசான தோலின் உள்ளே மினிமினுக்கும் ரத்தம். தாங்காதுன்னு எழுந்தோம். க்ளோஸ் அப் ஒன்னு எடுக்கலாமுன்னு கொஞ்சம் மேடை அருகே போனால்.... கணீருன்னு 'தீனக் கருணாகரனே நடராஜா' அடடா.... எனக்குப் பிடிச்ச பாட்டு! இதுக்கு மட்டும் இருந்துட்டுப் போகலாமான்னு தீனமா ஒரு பார்வையை கோபால் இருக்கும் திசையில் அனுப்புனால்..... அங்கே ஆள் காலி. நடையை கட்டிட்டார்! வெளியிலும் கேக்குதாமே!ஏதோ சலசலப்புச் சத்தம் கேக்குதேன்னு எட்டிப் பார்த்தால் சுநாமியின் அஞ்சாம் ஆண்டுக்கான அமைதி ஊர்வலம். போனவங்களை நினைச்சால் மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சு.
என்னவோ ஒரு வைரஸ் ஊர் முழுக்கக்கிடக்காம்..... லேசா ஆரம்பிச்ச ஜுரம். மாலைவரை வீட்டுலே அடைஞ்சுருந்தோமே.... சாயங்காலம் கோவிலுக்குப் போயிட்டுப் புத்துணர்வு பெற அங்கே கோவில் மண்டபத்துலே ஆட்டம் பார்த்துட்டு வரணும். சொர்ணமால்யா ஒன்னு சுகப்படலை. எனக்கு எரிச்சலா வந்தது அந்த கலர்ஸ் கோஆர்டிநேஷன். நிகழ்ச்சி தருமுன்பு கலைஞர்கள் இதையெல்லாம் கவனிக்க வேணாமா? இதென்ன கிராமத்துத் திருவிழா போல கொட்டாய் போட்டு அன்னிக்குக் கிடைப்பதைவச்சா மேடை அலங்காரம் ஆகுது? ஏற்கெனவே நாலஞ்சு நாளா இங்கே ஹாலில் இசைவிழா நடந்துக்கிட்டுத்தானே இருக்கு. நாட்டியமணி, இல்லே அவுங்க உதவியாளர் யாருமே கவனிக்கலையா? சிவப்புக்குச் சிவப்பு ச்சீன்னு போச்சு. ஹாலில் முக்காவாசி மாமாக்கள். (தேசிகன் கல்யாணியின் பாதிப்பு!)போகட்டும் மாமாத்தாத்தாக்கள்ன்னு வச்சுக்கலாம்! ரசிப்புக் கூடிப்போச்சு! பத்து நிமிசத்துக்குமேலே தாக்கிப்பிடிக்கமுடியலை எனக்கு. கிளம்பி வந்துட்டேன்.
அடுத்த இன்னொரு நாள் இன்னொரு தீம்.. பொற்காலத்தின் சொற்கோலங்கள். எம்.எஸ்,விஸ்வநாதன் & குழுவினரின் நிகழ்ச்சி.
டிக்கெட் கிடைச்சால் பார்க்கலாமுன்னு போயி, கவுண்டரில் கேட்டால்.... உங்களுக்காகவே முற்றிலும் இலவசம்னு பால் வார்த்தாங்க.ரொம்பப் பழைய அரங்கு. ஒரு நாப்பது வருசமுன்பு ஒரு நாடகம் பார்த்துருக்கேன் இங்கே. மாற்றங்கள் ஒன்னுமே இல்லாம அப்படிக்கப்படியே இருக்கு இப்பவும். தமிழிசை மன்றம். முன்முற்றத்தில் அரசர் கம்பீரமா நிற்கிறார். அரங்கின் உள்ப்புறம் நீஈஈஈஈஈளக்கம்பிகளில் தொங்கும் 35 மின்சாரவிசிறிகளும், பழைய தமிழ் எழுத்துக்களில் இருக்கும் ணா, லை எல்லாமே கடந்தகாலத்தை மறைமுகமா உணர்த்தும்.
போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக்கிட்டாராம் இசைப்பேரறிஞர். அறிவிப்புகள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்தது. வெறும் 25 நிமிஷத் தாமதத்தில் நிகழ்ச்சி ஆரம்பிச்சது. மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்ற (திருஞானசம்பந்தர் தேவாரம்) கடவுள் வாழ்த்து.
முக்கியப் பாடகர்களாக நாலு பேர். 2 x 2 என்ற கணக்கில். ஆனால் அப்பப்ப எம்எஸ்வியும் சேர்ந்துக்கறார். ஆரம்பமே அவர்தான் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே....' கடைசியில் 'எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களே'ன்னு முடிச்சார்.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
தேடினேன் வந்தது.....
உலகம் எங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி
மதுராநகரில் தமிழ்ச்சங்கம்
பாடகர்கள் பெயர் எனக்குத் தெரியலை. ஆனால் சென்னைவாசிகளுக்குத் தெரிந்திருக்கலாம். ஆரஞ்சு ஷர்ட் போட்டுருந்தவர் டிஎம்எஸ் குரலுக்குப் பொருத்தமா இருந்தார் (ஒருவேளை அவரேதானோ?)
அவளுக்கென்ன அழகிய முகம்.........
சபையினரில் இளவட்டங்களின் கூவல். நமக்கு முன்னே வரிசைகட்டி இருந்த இளவட்டிகளின் முகத்தில் நாணம் கலந்த புன்னகை.
அனுபவம் புதுமை..........அவரிடம் கண்டேன்...அந்நாளில் இல்லாத பொல்லாத....... பயங்கர ஆரவாரம் பின்வரிசையில் இருந்து!
மற்ற இசை அமைப்பாளரின் பாடல்களையும் பாடப்போவது எம் எஸ். வியின் பெருந்தன்மை என்று மேடையில் புகழ்ந்தபின்......
ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு ......இளையராசா.
இளசுகள்கூட பாட்டுக்குக் கைதட்டித் தாளம்போட்டு ரசித்தாங்க. இந்தப் படம் வந்தப்ப அவுங்க பொறந்துகூட இருப்பாங்களான்னு சந்தேகம்.
ரீமிக்ஸ் செய்யறதுபோல அதே சந்தத்தில் வரும் பாட்டுன்னு 'சிங்காரப்புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கமா'
அட! ஆமாம். கண்டுபிடிக்கவே முடியலை பாருங்க!
கூட்டத்தைக் கலகலப்பாக்க......'வெத்தலை போட்டப் பத்தினிப் பொண்ணு சுத்துது முன்னாலே' கிறுகிறுன்னு ஏறுது மக்களுக்கு!
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா?
சூப்பர் ஸ்டார் இருபத்தியேழே படம்தான் பண்ணி இருக்கார். ஆனாலும் அவரை அப்போ மிஞ்ச ஆளில்லை.... உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ? வடிவழகிலும்.....குணமதிலும்... எம் கே டி..
எழுதியதும் இசை அமைச்சதும் பாபநாசம் சிவன்.
உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு.....
பார் மகளே பார்.... நீயில்லாத மாளிகையை......அட்டகாசம்.
ஏஆர் ரெஹ்மானின் சின்னச் சின்ன ஆசை..... அதே ராகத்தில்
வீடுவரை உறவு,
பேசுவது கிளியா?
மாம்பழத்து வண்டு....வாசமலர்ச் செண்டுன்னு நாலு பாடல்கள் ஒரே சந்தம்!
அவர் சொல்லைன்னா தெரிஞ்சே இருக்காது. நீங்களே பாடிப் பாருங்க...
இதே போல.... வான் மீதிலே இன்பத்தேன் மாரி பெய்யுதே... & வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே.... இது ரெண்டும் ஒரே மாதிரி.
அடுத்துப் பாடுனதுதான் நம்பவே முடியலை. Love is fine darling will you mind அப்படியே ரகுபதி ராகவ ராஜாராம்!!!!
ரெஹ்மான், ராஜா, வித்யாசாகர் எல்லோரும் ஒன்னா இருந்த காலக்கட்டத்தை நினைவுகூர்ந்து பேசினார் 'மூத்த' கலைஞர் எம் எஸ் வி.
கோபாலுக்குத் தலைவலியாம். இடிக்க ஆரம்பிச்சதும் உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யார் அறிவார்?...... முடிக்கக் காத்திருந்து எழுந்தோம். மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்... இங்கே மெதுவாப் போறவுங்க யாருமில்லேன்னதும் ஆமான்னு விறுவிறுன்னு வெளியில் வந்தாச்சு.
தீவுத் திடல்வழி வரும்போது செங்கோட்டையில் தமிழக இப்போதைய முதல்வரின் படம் ஒளிர முகப்பு அலங்காரம். அச்சுஅசலான கோட்டை அமைப்பு. எல்லாம் சினிமாவால் வந்த ஜாலங்கள். சுற்றுலாக் கண்காட்சியாம். போலாமா ஒரு நாள் ? நீங்க ரெடின்னா நான் ரெடி:-)
Showing posts with label தமிழ் இசைச் சங்கம். Show all posts
Showing posts with label தமிழ் இசைச் சங்கம். Show all posts
Monday, December 28, 2009
இப்போ எல்லாமே தீம் தீம் காலம்
Posted by
துளசி கோபால்
at
12/28/2009 05:05:00 AM
33
comments
Labels: MSV, Tsunami, அனுபவம் MLV, தமிழ் இசைச் சங்கம்
Subscribe to:
Posts (Atom)
