Showing posts with label சமையல் குறிப்பு. குருமா. Show all posts
Showing posts with label சமையல் குறிப்பு. குருமா. Show all posts

Thursday, June 12, 2008

நூல்கோலா இல்லை நூக்கலா?

சமையல் குறிப்பு:-)))) turnip



எங்கெங்கியோ சுத்தி என்னென்னவோ தின்னாலும் வீட்டுக்கு வந்து அக்கடான்னு ஒரு ரசம் வச்சுச் சோறுத் தின்னாதான் ஒடம்பு ஒரு நிலைக்கு வருது...இல்லீங்களா?

அதுக்காக ரசத்தின் செய்முறை வேணுமுன்னு கேக்கப்போறீங்களா? ஆங்.......?இல்லைதானே?


இன்னிக்குக் கடைத்தெருப்பக்கம் ஒரு மலேசியக் கடைக்குப் போனப்ப இது கிடைச்சது. சீனக்கடைகள் போல இல்லாம இந்தக் கடை ரொம்ப நல்லா சுத்தமா இருக்கும். இதே இடத்தில் இதுக்கு முந்தி ஒரு சீனர் கடை வச்சுருந்தாங்க. அப்ப, அதுக்கும் முன்னே?



Fresh for less என்ற பெயரில் வெள்ளைக்காரர் ஒருத்தர் காய்கறிக் கடை வச்சுருந்தார். ரொம்ப வயசானவர். அவர்கிட்டே இருந்து தான் யாவாரம் சீனருக்குக் கைமாறுச்சு. கொஞ்ச நாளிலேயே அந்தப் பகுதி முழுசும் ஒரே துர்நாற்றம் ஆகிப்போச்சு. காய்கறி & பழங்கள் விற்கும் கடையில் மீன், இறைச்சி எல்லாம் வச்சா? அதுக்குண்டான குளிர் சாதன வசதி எல்லாம் வேணுமுல்லே?


அதுவுமில்லாம இந்தப் பகுதியில் முதியோர்கள் நிறைய இருக்காங்க. தனியா இருக்கறதாலேக் கொஞ்சமா ஒரு ஆளுக்கு வேணுங்கற காய்கறிகளை மட்டும் வாங்கிக்குவாங்க. சீனர் கடையில் என்ன செஞ்சாங்கன்னா..... கெட்டுப்போன காய்களில் கெட்ட பகுதியை மட்டும் வெட்டித் தூரப்போட்டுட்டு, நல்ல பகுதிகளை அழகா நறுக்கி ஒரு சின்ன ட்ரே பாக்கெட் செஞ்சு 'ரெடி டு பாட்'ன்னு வித்துருவாங்க. விசயம் தெரியாம இதை வாங்கித் தின்னவங்களுக்குச் சொகமில்லாமப் போச்சு.



அக்கம்பக்கம் எல்லாம் குற்றஞ்சாட்டுனதுலே அவுங்க கடையைக் காலி செஞ்சுட்டாங்க. இதை இப்ப நடத்துறது இந்த மலேசியத் தம்பதிகள். படு நீட்டா இருக்கு. ஒரே ஒருமுறை ஆஸ்தராலியன் மாம்பழம் கூட வந்துச்சு. விலை என்னவோ கொஞ்சம் தீ பிடிச்சாப்புலேதான். ஆறு வெள்ளி. ஆனால் ஆசைக்கு அணை போட முடியுதா?
அந்தப் பக்கம் போகும்போதுக் கட்டாயம் கண்டுக்க வேண்டிய கடை இது. அங்கேதான் இந்த நூக்கலைப் பார்த்தேன். இது பேர் இதுதானா? அதே ஒரு சந்தேகமாத்தான் கிடக்கு.


அதை வச்சு இன்னிக்கு ஒரு குருமா செய்யப்போறோம்.

தேவையான பொருட்கள்:


ஒரு நூக்கல் (450 கிராம் எடை இருந்துச்சு)

உருளைக்கிழங்கு பெருசா 2 ( 150 கிராம் இருக்கலாம்)


ஒரு குடைமிளகாய் - உங்களுக்கு எந்த நிறம் கிடைக்குதோ அது.
(நான் சிகப்பு நிறம்)


வெங்காயம் பெருசு 1 ( தோலுரிச்சு நறுக்குனது. பொடியா அரியணுமுன்னு அவசியமில்லை)

பச்சை மிளகாய் 4

பூண்டு 6 பல்

இஞ்சி ஒன்னரை இஞ்சு நீளம்( தோல் சீவிக்குங்க)

தக்காளிப்பழம் 3
எண்ணெய் 1 தேக்கரண்டி ( மொத்தம் 3 தேக்கரண்டி எண்ணெய் தேவைப்படும்)

பாதாம் பருப்பு 7 அல்லது 8

குருமா மசாலா 1 மேசைக்கரண்டி ( நான் பிரியா குருமா மசாலா சேர்த்தேன்)

மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி

உப்பு ஒரு தேக்கரண்டி

கொத்துமல்லித்தழை


தாளிக்க:

கருவேப்பிலை
ஒரு அரைத் தேக்கரண்டி சோம்பு

ரெண்டு தேக்கரண்டி எண்ணெய்.

நூக்கலைத் தோல் சீவிட்டு பெரிய துண்டுகளா நறுக்கி வச்சுக்குங்க.இதே சைஸில் கழுவிய உருளைக்கிழங்கையும் துண்டு போட்டுக்கணும்.


குடமிளகாயை நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளைக் கடாசிட்டு அதையும் பெரிய துண்டா நறுக்கி வச்சுக்கணும்.



ஒரு வாணலியை அடுப்பில் வச்சு ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊத்தி நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் இஞ்சி பூண்டு, தக்காளி எல்லாம் போட்டு நல்லா வதக்கிக்கணும். அடுப்பு மிதமா எரியட்டும். கரிச்சு வச்சுறாதீங்க. நல்லா வதங்கணும். எடுத்து ஒரு தட்டுலே வச்சு ஆற விடுங்க.



அதே வாணலியில் மஞ்சள் பொடி & குருமா மசாலா சேர்த்து லேசா சூடானதும்( வாணலியில் வெங்காயம் வதக்குன எண்ணெய் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கும் அதுவே போதும்)கொஞ்சம் தண்ணீர் (ஒரு கப்) சேர்த்து உருளைக்கிழங்கு & நூக்கலைப் போட்டு வேகவிடுங்க. அதுபாட்டுக்கு வேகட்டும். அதுக்குள்ளே ஆறவச்ச வதக்குன சாமான்களை சட்னி ஜாரில் போட்டு மைய்யா அரைச்சுக்கணும்.



காய்கள் வெந்துருச்சான்னு பாருங்க. இப்ப இந்த அரைச்ச கலவையை அதில் சேர்த்துக் கொதிக்க விடுங்க. ரொம்பத் திக்காக் கட்டியா இருந்தா இந்த ஜாரில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஒரு சுத்துச் சுத்தி அதையும் காய்களில் சேர்க்கணும். இப்ப அந்தக் குடமிளகாய்த் துண்டங்களையும் வாணலியில் சேர்த்துக்கலாம். சட்னு வெந்துரும். ஆச்சா....




பாதாம் பருப்புக்களை அதே சட்னி ஜாரில் போட்டுக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மைய்யா அரைச்சுக்குங்க. ஊற வச்சு அரைச்சால் நல்லது. நான் கடைசி நிமிசத்துல்லேத் 'தேங்காய்க்கு பதில் பாதாம்'னு முடிவு செஞ்சேன்:-)
எதுக்கு? நம்ம கொத்ஸ்க்குத் தேங்காயைக் கண்ணுலேயே காட்டக்கூடாதாம். அவரோட தங்கமணியின் கண்டிப்பு. ரெஸிபியில் தேங்காய்னனு படிச்சாலே லபோதிபோன்னு கூச்சலா ஆயிருது அங்கேன்னு நினைக்கிறேன்:-))))


குழம்பு நல்லா திக்கா வந்துக்கிட்டு இருக்குதானே? மைய அரைச்ச பாதாமை காய்களில் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடுங்க. கொத்தமல்லித் தழையைக் கிள்ளி மேலாகப போட்டுவையுங்க.


இன்னொரு வால் கரண்டி எடுத்து அதை சூடாக்கி தாளிக்க எடுத்துவச்ச ரெண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊத்தி அது காய்ஞ்சதும் சோம்பு போட்டு வெடிச்சதும் கருவேப்பிலை போட்டு படபடன்னு ஓசை அடங்குனதும் வாணலியில் இருக்கும் காய்களில் சேர்த்துருங்க.

குருமா தயார்.


சப்பாத்தி, சாதம், தோசை, இட்லின்னு எல்லாத்துக்கும் பொருத்தமோ பொருத்தம்.


எண்ணெய் கொஞ்சமா சேர்த்துருக்கு. பயப்படாமச் சாப்பிடுங்க.