Showing posts with label கிறைஸ்ட்சர்ச். நியூஸிலாந்து. Show all posts
Showing posts with label கிறைஸ்ட்சர்ச். நியூஸிலாந்து. Show all posts

Wednesday, February 24, 2021

அக்கரோவாவும் அரிசி உப்புமாவும்....


இந்த ரெண்டு வருஷங்களா எங்கேயும் போக முடியலை......மனசே வெறுத்துப் போயிருந்தது..... நம்ம சம்மர் வேற இன்னும் ஒரு வாரத்துலே முடியப்போகுது என்பதால்  வெயில் இருக்கும்போதே  அக்கம்பக்கம் எங்காவது போய் வரணும்.
மகளும் மருமகனும் ஜனவரியில் அக்கரோவா என்னும் கடற்கரைப்பட்டணத்துக்குப் போய் வந்தவுங்க...... 'புதுசா இன்னொரு படகுப்பயணம் கிடைச்சது. அருமை'ன்னு வேற சொல்லி இருந்தாங்களா......  சரி ஒருநாள் அங்கே போய்வரலாமுன்னு நினைச்சோம்.

ஏற்கெனவே பலமுறைகள் போய் வந்த இடம்தான். நம்மூரில் இருந்து ஒரு 82 கிமீ தூரம். 'பேங்க் பெனின்ஸுலா'ன்னு  ஒரு மலையைக் கடந்து அந்தாண்டை இறங்கிப் போகணும். நம்ம வீட்டுக்கு வரும் முக்கிய விருந்தினரை (அவர்கள் நம்ம வீட்டில் தங்கும் பட்சத்தில் ) கூட்டிப்போய்க் காமிக்கிறதுதான் பொது வழக்கம்.

2017 இல் நம்ம அண்ணனும் அண்ணியும் மகள் கல்யாணத்துக்காக வந்திருந்த சமயமும், சிங்கை எழுத்தாளர் ஜயந்தி சங்கர் 2018 இல்  வருகை தந்த சமயமும்  போய் வந்தோம்தான். அதுக்கப்புறம் 2019 இந்தியப் பயணம் வாய்ச்சது. 2020 ஐ கோவிட்டுக்கு நேர்ந்து விட்டாச்சு :-(

இனி ரெண்டு வருஷங்களுக்கு நாட்டை விட்டுப்போக அனுமதி இல்லைன்னு வேற பயமுறுத்திக்கிட்டு இருக்கு எங்க அரசு.  ஊர் உலகமெல்லாம் கோவிட் தடுப்பு ஊசி போட்டுப் பாதுகாப்பாக இருக்கணுமாம். நடக்குமென்ற நம்பிக்கையே போச்சு... ஹூம்....

சரி. வெயில் காலம் முடியுமுன் அக்கரோவாவுக்காவது போய் வரலாமேன்னு கிளம்பினோம். நாம் அங்கே மகள் சொன்ன படகுக் கம்பெனிக்கு ஆன்லைனில் டிக்கெட் எடுத்தப்ப, திங்கக்கிழமைதான் டிஸ்கவுண்ட் ப்ரைஸில் கிடைக்குமுன்னு சொல்லி இருந்தாங்க. அன்றைக்கே ஆகட்டும்..... இப்பதான் நம்மவர் ரிட்டயர் ஆயாச்சே. நோ ஆஃபீஸ்தானே!

இவ்ளோ கலாட்டாக்களுக்கிடையில் நம்ம ஊர் நிலநடுக்கம் வந்து பாதி ஊர் அழிஞ்சநாளுக்கான திவஸம் வேற வருது.  அதே திங்கள்தான்.  முதலில் ரெண்டு மனசா இருந்தது..... பத்தாம் வருஷ  நினைவுநாள். பிரதமர் வேற வர்றாங்க. கூடவே கவர்னர் ஜெனரலும்.  நகருக்குள்ளில்தான் இருக்கும் நினைவிடத்துக்குப் போகும் பாதையில் போக்குவரத்தெல்லாம் மாற்றி வைக்கும் சேதிகளை ஒரு வாரத்துக்கு முன்னால் இருந்தே அனுப்பிக்கிட்டு இருக்கு நம்ம சிட்டிக்கவுன்ஸில்.  பார்க்கிங் வேற  இப்பெல்லாம் கஷ்டமா இருக்கு.  கட்டணத்தை உயர்த்திக்கிட்டே போய்க்கிட்டு இருக்கு சிட்டிக்கவுன்ஸில். இந்த அழகிலே சனம் சிட்டி சென்ட்டருக்கு வர்றதில்லைன்னு ஒரு பக்கம் ஒப்பாரி வேற !  முந்தியெல்லாம்  பார்க்கிங் முதல் ஒரு மணி நேரம் இலவசமே. அதுக்குப்பிறகு  இருக்கும் நேரத்துக்குத்தான் ஒன்னு எம்பதுன்னு இருந்தது. அதெல்லாம் போயே போச்.....  

அந்த எர்த் க்வேக் மெமோரியலும்  பார்க்க ஒரு அழகு அந்தஸு இல்லாம இருக்குன்னு எனக்கொரு தோணல்.  நதிக்கரையில் சாம்பல் கலர் மார்பிள் சுவரில் 'போனவங்க' பெயரைச் செதுக்கி வச்சுருக்காங்க. நின்னு வாசிக்கணுமுன்னா சிரமம்தான்.... ப்ச்..... கீழே படம்.
கிளம்பறதுக்கு முன்தினம் என்னென்ன செய்யணுமுன்னு திட்டம் தீட்டினவள், காலையில் ரெண்டு மணி நேரம் கூடுதலாத் தூங்கிட்டேன்.  கண்ணைத் திறந்து பார்க்கும்போது மணி எட்டடிக்கப்போகுது. நாலரைக்கு விழிப்பு வந்ததுதான். இன்னும் நேரம் இருக்கேன்னு மறுபடி தூங்கினால்.... இந்த கதி.....

சட்னு குளிச்சு முடிச்சு, சாமி விளக்கேத்திட்டு,  அரிசி உப்புமாவுக்கு எடுத்துவச்சதைத் தாளிதம் செய்து, பாத்திரத்தைக் குக்கரில் இறக்கினேன். அடுப்பில் வச்சுக்கிளறி எடுக்க நேரமில்லை.  போற இடத்தில் எதாவது வாங்கிக்கலாம் என்றாலும், அந்த ஊருக்கான ஸ்பெஷல் ஃபிஷ் & சிப்ஸ்தான். கடலையொட்டிய நகரம் பாருங்க ! 

மூணு விஸில் ஆனதும்  ஒரு டிஃபன் பாக்ஸில் எடுத்து வச்சுட்டுக் கிளம்பியாச்சு.  தொட்டுக்க கொத்தமல்லித் தொக்கு, குடிக்கத் தண்ணீர், ஜூஸ், இன்னும் சிலபல சிறுதீனிகள்னு  இன்னொரு பொதி ஒருபக்கம். குளிருக்கான ஜாக்கெட், வெயிலுக்கான தொப்பி, தேவைப்படுமோன்னு  வாக்கிங் ஷூஸ் , செல்ஃபோன்கள்,  பவர் பேங்க் , சார்ஜர் ஒயர் இப்படி இன்னொரு சின்னப்பொதி.  இந்த எஸ் 9 ப்ளஸ்  வாங்குனதில் இருந்து, ரெகுலர் கேமெராவைக் கொண்டு போற பழக்கம் போயே போயிந்தி.......... மறக்காமல் ரெண்டு மாஸ்க் வேற !

நம்மூரில் கோவிட் இல்லைன்னாலும்,  பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டில்  எல்லோரும் (நாடு முழுக்க ) மாஸ்க் போட்டுக்கணுமுன்னு முந்தாநாள் ஒரு அறிவிப்பு வந்துருக்கு. ப்ச்.....   படகு, ஒரு பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் இல்லையோ ? 

கிட்டத்தட்ட ஒன்பதே முக்காலுக்கு வீட்டை விட்டோம். ஒரு காமணிதான் லேட்.  இன்னொரு பேட்டையைக் கடக்கும்போது  அங்கிருக்கும் ஆஞ்சியை தரிசனம் செஞ்சுக்கிட்டுப் போகணுமுன்னு ஒரு எண்ணம் இருந்தது. போற போக்கிலேயே கும்பிடு போட்டுட்டுத் திரும்ப வரும்போது  கிட்டப்போய் தரிசிக்கலாம்தானே !
சுமார் ஒரு மணி நேரத்தில் லிட்டில் ரிவர் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிட்டோம்.  இதுக்கு ஒரு சரித்திரம் உண்டு.   1886 இல் திறந்துருக்காங்க. 1962 வரை செயல்பாட்டில் இருந்துருக்கு !  முதல் ஸ்டேஷன் மாஸ்டர் தாமஸ் க்ரேஞ் ஜூனியர். நியூஸியில் செஞ்ச ரயில் பெட்டிகளை இணைச்சு ஓடிக்கிட்டு இருந்துருக்கு !










இப்போ தண்டவாளத்தில் நிக்கும் ரெண்டு ரயில் பொட்டிகளும், ரெண்டு சரக்கு கேரியர்களும், ஒரு எஞ்சினும்தான்  சாட்சி !   ஒரு ரயில் பொட்டிக்குள்ளே சின்னதா ஒரு ம்யூஸியம் வச்சுருக்காங்க. ஸ்டேஷனில் கைவினைப் பொருட்கள், உள்ளூர் காய்கறிகள், செடிகள் னு விற்பனை. ஒரு அறையில் குட்டி ரயில்பாதையில் பொம்மை ரெயில். ஸ்டேஷன் மாஸ்டர் ரூம் இது ! கார்டு கையில் உயர்த்திக் காமிக்கும் விளக்கு இருக்கு. சின்னப்புள்ளையா இருக்கும்போது இதில் சிகப்பும் பச்சையும் மாறி வருவது மேஜிக்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்:-)


முந்தி இங்கே ஒரு PBX இருந்துச்சு.  அதெல்லாம் எங்கே போச்சோ ?  மூணே வருஷத்தில் என்னென்னவோ மாற்றங்கள்...... ஸ்டேஷன் பெயரும்கூட மாறி இருக்கு. லிட்டில் ரிவர் க்ராஃப்ட் ஸ்டேஷனாம் ! 
ஒவ்வொருமுறை போய்வரும்போதும் படங்கள் எடுத்துக்கிட்டு வர்றோமுல்லெ..... இப்ப அதையெல்லாம் பார்த்தால்  வெளியே இருக்கும் ரயில் பொட்டிகள், உள்ளே ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் இருக்கும் பொம்மை ரயில் இதுகளில் எல்லாம் 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம். ஆமாம்..... அப்பப்ப வெளியே தண்டவாளத்தில் நிக்கும் பொட்டிகளும் காணாமப் போயிருக்கு.  யார் இதை நகர்த்தி இருப்பாங்க !  எப்போ? எப்படி ?  ஜீபூம்பா வேலையா இருக்குமோ ! 

அடுத்த ஸ்டாப் நமக்கு Hilltop Tavern  வாசலில். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பத்து கிமீ. இங்கிருந்து பார்க்கும்போது கீழே கடலும் குன்றுகளுமா வ்யூ அட்டகாசம். அதனால் போறவர்ற வண்டிகள் எல்லாம் நின்னுதான் போகும்! 

இனிமே ஒரே இறக்கம்தான் அடுத்த 18 கிமீ தூரம்..... இடையில்  சின்ன ஊர்கள் ரெண்டு மூணு இருக்கு. ஒரு சீஸ் ஃபேக்டரியும் உண்டு. ஏற்கெனவே சிலமுறைகள் பார்த்திருப்பதால் இந்த முறை உள்ளே போகலை. 
பதிவில் இருக்கும் சில படங்கள் போன பயணங்களில் எடுத்தவையே !

அக்கரோவாவுக்குள் நுழைஞ்சப்ப, நாம் வீட்டில் இருந்து புறப்பட்டு ரெண்டு மணி நேரம் ஆகி இருந்தது.  மகளிடமிருந்து  ஒரு  டெக்ஸ்ட்.  படகுப்பயணத்துக்கான ஜாக்கெட்டுகள், கூலர்ஸ், டேஷ் வராமல் இருக்கும் மருந்து எல்லாம் எடுத்துக்கிட்டீங்க தானே ?  ஐயோ..... டேஷை எப்படி மறந்தேன் ?   மருந்துக்கடையைத் தேடி ஓடவேண்டியதாப் போச்சு....  பீச் ரோடில் கடை இருக்குன்னு கூகிளார் சொன்னார்.
மாத்திரை வாங்கினதும், ரெண்டு  எடுத்து வாயில் போட்டேன். நல்லவேளை, இதுக்குத் தண்ணீர் வேணாம். 


பீச் ரோடில் நிறைய நினைவுப்பொருட்கள் விற்கும் கடைகள்.  வேடிக்கை பார்த்துக்கிட்டே ஒரு கடைக்குள் நுழைஞ்சு ஒரு யோகா தவளை (மட்டும்) வாங்கினேன்.  இப்பெல்லாம் நாங்க யோகா வகுப்புக்குப் போறோம், தெரியுமோ ? முதியோர் யோகான்னு சொல்லலாம் :-) இதுக்கு ச்சேர் யோகான்னு பெயர் ! 

நமக்குப் படகு ரெண்டு மணிக்குதான். ஒன்னே முக்காலுக்குப் படகுத்துறையில் இருந்தால் போதும். அதுவரை அக்கம் பக்கம்  வேடிக்கை பார்க்கலாம். ச்சும்மா பீச் ரோடில் கடலைப் பார்த்துப் போட்டு வச்சுருக்கும் பெஞ்சுகளில் உக்கார்ந்தாலுமே நேரம் ஓடிறாதா என்ன ? 

 ஆட்கள் போய் உக்கார்ந்தவுடன், கஞ்சி வர/ருதப்பா.....ன்னு  ஸீகல் கூட்டம் வந்து நோட்டம் விடுதுங்க. திங்கத்தா..... திங்கத்தா.......   




கண்பார்வை நம்மைத் துளைச்செடுத்துருது.....  பெடல்போட், கனூஸ் இறக்கும் படிகளாண்டை ஒரு Shag உக்கார்ந்து போஸ் கொடுத்துக்கிட்டு இருக்கு. இந்தப்பக்கம் ஒரு நாரை... கடல்நாரைன்னு நினைக்கிறேன்.

படகுப்பயணம் முடிஞ்சபின் சுத்திப்பார்க்க நேரம் இருக்காதுன்னு  'வழக்கமான ரவுண்டை 'இப்பவே முடிச்சுக்கலாமுன்னு கிளம்பினோம்.
லைட் ஹவுஸ் போனோம். எல்லாம் ரெண்டு மூணு நிமிட் ட்ரைவ்தான்.  வழக்கம்போல அது மூடிக்கிடக்கு.  ரொம்ப வருஷங்களுக்கு முன்னே  அதுக்குள் போயிருக்கோம்.  அப்ப ஏது டிஜிட்டல் கேமெரா ? படங்கள் ஆல்பத்தில் இருக்கு. எந்த ஆல்பம் ? ஙே......  ஒரு இருவது ஆல்பங்கள் இருக்கே நம்மாண்டை....




சில க்ளிக்ஸ் ஆச்சு. அடுத்தது பகல் சாப்பாடு.  சாப்பிட இடம் தேடிக் கொஞ்சம் அலைய வேண்டியதாப் போச்சு.  Garden of Tane  (  Tane மரங்களுக்கான  மவொரிக் கடவுள் ) வாசலில் என்னவோ தடைகள். உள்ளே போகலாமுன்னா வண்டியை எங்கே நிறுத்த ?  ப்ச்.....  திரும்பக் கடலாண்டை வந்து ஒரு மரத்தடியில் உக்கார்ந்து சாப்பிட்டோம். 
நம்ம அரிசி உப்புமாவுக்கு பயங்கர ஃபேனா ஒருத்தர் இருந்தார்.  மற்ற யாரையும் அண்டவிடாம, தான் மட்டுமே தின்னு தீர்க்கணுமுன்னு நினைச்சால் நான் என்ன செய்ய ?  குர்..........குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு  கத்திக்கிட்டேத் தலையைச் சாய்ச்சபடி விரட்டுனதைப் பார்க்கணுமே.....  படம் எடுக்க முடியலை..... எச்சக்கை இல்லையோ.....
சரி வாங்க.....   ஒன்னு இருபதாச்சு.  பார்க்கிங்லே வண்டியைப் போட்டுட்டுப் படகுத்துறைக்குப் போகலாம்.  பீச் ரோடுலே 2 மணி நேரம்தான் லிமிட். நமக்கு சுமார் மூணுமணிநேரம் வேணும். 

பதிவின் நீளம் கருதி பாக்கி அப்புறம்.....ஓக்கே ? 

PIN குறிப்பு : போனமுறை எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு கறி :-)

தொடரும்......:-)



Saturday, March 07, 2015

அபிதாவின் அரங்கேற்றம்.

எங்கூரில் எனக்குத் தெரிஞ்சு  இது முதல் பரதநாட்டிய அரங்கேற்றம். அழைப்பிதழை நேரில் கொடுக்க வந்த  நாட்டியமணியின் பெற்றோர் , நாங்க வீட்டில் இல்லாததால் தபால் பெட்டிக்குள் வச்சுட்டுப் போயிருந்தாங்க.
மறுநாள் தொலைபேசி, சமாச்சாரம் சொன்னவங்களிடம் கட்டாயம் வர்றோமுன்னு சொன்னேன்.

நியூஸிக்கு அவுங்க வந்தநாள் முதல் நமக்குத் தெரிஞ்சவங்கதான். அது ஆச்சு பதினாறு வருசம். கோயமுத்தூர் என்பதால் தமிழ்பேசும்  கேரளத்தினர். நமக்கு ரெண்டு வகையிலும் பேசலாம்:-)

எங்க ஊரில்  சுமார் பத்து வருசமா பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கும்  பள்ளி நடந்துக்கிட்டு இருக்குன்னா நீங்கள் நம்பணும்!

 வெலிங்டன் நகரில் நாட்டியப்பள்ளி நடத்திவரும் விவேக் கின்ரா (பஞ்சாப் மாநிலம்) நம்ம  கலாக்ஷேத்ராவில் படிச்சவர். அவர் க்ளாஸ்மேட் உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்ச ஒருத்தர்தான். நடிகை அமலா.  விவேக்தான் எப்பவாவது  ரெண்டு வருசத்துக்கோ, மூணு வருசத்துக்கோ ஒருமுறை எங்க க்றைஸ்ட்சர்ச் நகருக்கு வந்து நாட்டிய நிகழ்ச்சி நடத்திட்டு போவார். மூணு நாள். நாளுக்கொன்னா மூணு ஷோ. தவறாமல் போய்ப் பார்த்துட்டு வந்துருவோம்.  அவரும் கூட நடனமாடும் ஒரு பெண்ணுமா வருவார்.

லைவ்  ம்யூஸிக் எல்லாம் கிடையாது. ஆரம்பத்தில்  பாட்டுகள் எல்லாம் டேப். அப்புறம் சி டி யாகிருச்சு.

ஒரு சமயம்  அவர் கூட ஆட வந்தவங்க நம்ம  ஃபிஜி அக்காவின் மருமகள். பெங்களூர் பொண்ணு. கையில் மூணு மாசக்குழந்தை. நம்ம வீட்டில்தான்  தங்குனாங்க. நமக்கு அந்த முறை ஓசி டிக்கெட்டும் கிடைச்சது. குழந்தையை மடியில் கிடத்திக்கிட்டு முன்வரிசை  வி ஐ பி ஸீட்டில் உக்கார்ந்துருக்கேன்.  குழந்தை அழுதா வெளியில் தூக்கிக்கிட்டுப் போயிறலாமுன்னு கோபால் சொல்லி இருந்தார். ஆனால்.... அந்தப் பிஞ்சு பாருங்களேன்....நாட்டியம் ஆரம்பிச்சது முதல்  முடியும்வரை நிம்மதியான தூக்கம்!   அம்மா ஆட்டத்தை என்னை அனுபவிக்க விட்டுச்சு, என் செல்லம்:-)

அப்புறம் இங்கேயே நடனப்பள்ளி வந்த  பிறகு விவேக்கின் வருகை குறைஞ்சுதான் போச்சு. அப்படியும்  இங்கே நடக்கும் பாடி ஃபெஸ்டிவல் என்ற திருவிழாவில்  ஒருநாள் வந்து ஆடினார். இந்தமுறை அவர்கூட ஆடியவங்களும் வெலிங்டனில் இருந்து வந்த ஒரு பெண்(குஜராத்) என்றாலும் நம்மூர் நடனப்பள்ளி ஆசிரியை அனுராதாவும்  ரெண்டு நடனங்களில் விவேக்குடன் சேர்ந்து ஆடினார்.

விவேக்கின் நடன நிகழ்ச்சிகளில் படம் எடுக்கத் தடை உண்டு. ஏமாற்றம்தான் என்றாலும் கலைஞரை மதிக்க வேணும் இல்லையா?

இதுதவிர  அனுராதா அவர்களும் அவ்வப்போது  விவேக்கின் முத்ரா டான்ஸ் ஸ்கூலுக்கு (வெலிங்டன். நியூஸியின் தலைநகர்) போய்  மேற்கொண்டு சிறப்புப் பயிற்சியும் பெற்றுகொண்டு வருவார்.  எந்தக் கலை என்றாலும் அதில்  மேம்படணும் என்றால் கற்றலை விடக் கூடாதில்லையா?

அனுராதா, இலங்கைத் தமிழர். இங்கே நியூஸிக்கு வந்த நாள் முதல் நமக்குப் பரிச்சயம் உண்டு. தொழில் வகையில்  ஒரு எஞ்சிநீயர். (University of Liecester.UK) இலங்கையில் இருந்தப்பவே தன்  ஆறாவது வயசில் நாட்டியக்கலையை கத்துக்க ஆரம்பிச்சாங்க. குருவாக அமைஞ்சவர் கலாக்ஷேத்ராவில் படிச்சவர். பலவருசப்படிப்பு வீண்போகாமல் இங்கே எங்களுக்கான நாட்டியப்பள்ளி ஆரம்பிச்சது எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியான விஷயம்.  ஆரம்பத்தில் வெறும் மூணே மூணு மாணவிகள்தான்!  சமீபகாலமா இவுங்களும் தன் பள்ளி மாணவிகளுடன் 'நாட்டியம்' என்று  ஒரு ஷோ கேஸ் ப்ரோக்ராம் வருசாவருசம் நடத்தறாங்க. இப்போ இங்கே  சில வெள்ளைக்காரக் குழந்தைகளும் பரத நாட்டியம் கத்துக்கறாங்க என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்!



சின்னச் சின்னப்பிஞ்சுகள் மேடையில் ஆடுவது  நமக்கும் பார்க்க நல்லாவே இருக்கு. தாய்தகப்பனுக்கும்  தங்கள் குழந்தைகளை மேடையில் பார்ப்பது மகிழ்ச்சிதானே! இதில் கலையின் நேர்த்தி முக்கியமில்லை. பயம் இல்லாமல்  ஆடுவதே முக்கியம்.  பொதுவா இந்த நிகழ்ச்சிகளில்  ஆடும் குழந்தையின் தாத்தாபாட்டி, அப்பா அம்மா, உடன்பிறந்தோர் என்று பெரிய கூட்டமா  இருப்பதே சபை நிறைஞ்சுருக்குமுன்னு சொல்லலாம்:-)))

இப்படியாக நடனப்பள்ளியின் வளர்ச்சியை வருசந்தோறும் பார்த்து வருகிறோம். பள்ளியின் பெயர், பரதநாட்டியம் க்ரூப் ஆஃப் கிறைஸ்ட்சர்ச்.


இந்த ஊரில் நூத்தியெழுபத்தியஞ்சு  (மனித) இனங்கள் இருக்குன்னு ஒரு சமயம் நகரத்தந்தையுடன் பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னார். எல்லா இனங்களும் சேர்ந்து கொண்டாடும் விதமா கல்ச்சர் கலோர் (Culture Galore) என்ற பெயரில் ஒரு விழா, மார்ச் மாச முன் பாதியில் எதாவது ஒரு சனிக்கிழமைகளில் கடந்த 15 வருசமா நடந்துக்கிட்டு இருக்கு. இங்கத்து கோடைகாலம் ஃபிப்ரவரியோடு முடிஞ்சுரும். மிச்சம்மீதி இருக்கும் வெயிலை எதுக்குப் பாழாக்கணும்?

திறந்த வெளியில் உள்ளூர்  பார்க் ஒன்னில்  மேடை அமைச்சுருவாங்க.  மேடைக்கென்றே ஒரு பெரிய வேன் இருக்கு. கண்டெய்னர்  போல இருக்கும் இதைக் கொண்டு வந்து நிறுத்தி பக்கவாட்டுக் கதவைத் திறந்துட்டால்.....  மேடை!

இதிலும் நம்ம அனுராதாவின் பரதநாட்டியப்பள்ளியின் பெரிய க்ரேடு  மாணவிகள்  ரெண்டு நடனம் ஆடுவதுண்டு.  இப்படிப் பள்ளியின் வயசும் அபிதாவின் நாட்டியக் கல்வியின் வயசும் ஒன்னாவே தொடர்ந்து வருது.
இந்தப் பதிவை வெளியிடும் இன்று  கல்ச்சர் கலோர் 2015 நாள். பிற்பகல் 12 முதல் 4 வரை நடக்கும்விழா. கம்யூனிட்டி ஈவண்ட்.  போயிட்டு வந்தோம்.

இப்ப நம்மூரில் இன்னும் சில நாட்டியப்பள்ளிகள் (!) ஆரம்பிச்சு நடக்குதுன்னு கேள்வி!  அதுலே ஒரு பள்ளியின் மாணவிகள் நம்ம கேரளா க்ளப் ஓணம் விழாவில் ஆடுனாங்க.

குறிப்பிட்ட நாளில் நடன அரங்கேற்றத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். பள்ளிக்கூடத்தின்  ஹால்.  ஆம்பி தியேட்டர் போன்ற அமைப்புள்ளது.   ஒரு 150 பேர் அமரும் வசதி.  ஹாலின் முகப்பிலேயே   டென்னியும் ஆன்ஸியும் வரவேற்றாங்க. சொல்ல மறந்துட்டேனே.... இது நம்ம அனுராதாவின் மாணவிகள் கூட்டத்தில் முதல் அரங்கேற்றம். அவுங்களும் பரபரப்பாத்தான் இருந்தாங்க. சகல விவரங்களோடுள்ள நிகழ்ச்சிநிரல் நமக்குக் கொடுத்தாங்க.

அபியின் பெற்றோர்


குறிச்ச நேரத்துக்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சது.  கடவுள் வாழ்த்துப் பாடிய அனுராதா, நடராஜரின் பாதங்களில் வச்சுருந்த சலங்கைகளை எடுத்து அபிதாவிடம் கொடுத்து ஆசீர்வதிச்சாங்க. மேடையில் வந்து நின்ன பெற்றோருக்கும் பாட்டிக்கும் வணக்கம் செஞ்ச நடனமணி  உள்ளே போய் சலங்கையைக் காலில் அணிஞ்சு வந்ததும்  சலங்கை ஒலி ஆரம்பமாச்சு.





கஜானனம் சொல்லி பிள்ளையாரை வணங்கி புஷ்பாஞ்சலி, அலாரிப்பு  முடிஞ்சு நாட்டியக் கடவுளுக்கு  வணக்கம்.

 உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்    
 நிலவு லாவிய நீர்மலி வேணியன்    
 அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்    
 மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.     
 

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் உள்ள காப்புச் செய்யுள்.

ரெண்டாவதா ஜதிஸ்வரம். கால்களைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன்.  பாதவேலைகள் அருமை.

மூணாவதா சப்தம். இதுக்குண்டான பாட்டு...  ராகமாலிகையில் அமைஞ்சது. காம்போதி, ஷண்முகப்ரியா, பிலஹரி, மத்யமாவதி  ராகங்கள்.

" ஆயர் சேரியர் அறிந்திடாமலும்,
அன்னை தந்தையர் அறிந்திடாமலும்
நேயர் கோபியர்  நெஞ்சம் கவர்ந்திட
மாயவன் குழல் ஊதுறான்
எங்கள் யாதவன் குழல் ஊதுறான்.

முகபாவங்கள் அருமை.   நடனத்துக்கு  கிருஷ்ணனும் ராமனும்  பொருத்தமா இருப்பது போல் வேற யாரும் இல்லைன்னு எனக்கொரு தோணல்.  அம்பாளும் சக்தியாக  இருந்து ஆடுவதும், சிவனின் தாண்டவமும் கூட  ரொம்பவே அழகுன்னாலும்  என் ஓட்டு க்ருஷ்ணனுக்கே!

வர்ணத்துக்கு ஒரு முருகன் பாட்டு. இயற்றியவர் ஆண்டவன் பிச்சை.  இந்தப்பெயரை இவருக்கு அளித்தவர் காஞ்சி மஹாபெரியவாதான்.  ஒரு சமயம் பெரியவர்  ஒரு கிராமத்துக்குப்போயிருக்கார். ஊர் மக்கள் பூரணகும்பத்தோடு காத்து நிக்கறாங்க. அப்போ ஒரு தம்பதிகளைப் பார்த்தவர்,வீட்டுள்ளே  பாத்திரம் தேய்க்கும் சிறுமியை அழைச்சு வரச்சொல்லி  இவள் ஆண்டவன் (போட்ட) பிச்சை என்றாராம்!

அதன்பிறகு  அந்தச் சிறுமி ஏராளமான பாட்டுகளை இயற்றி இருக்கார்.  முதலில் இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாத் தெரியாது. அப்புறமாத் தெரிஞ்சுக்கிட்டேன்.  நமக்கெல்லாம் ரொம்பவே தெரிஞ்ச 'உள்ளம் உருகுதையா  முருகா' என்ற பாட்டை எழுதியவர்.  அதைப் பாடிப் புகழ்பெறச் செய்தவர் நம்ம டி எம் எஸ்தான்.  1889 முதல் 1990 வரை  வாழ்ந்த இவர் ரிஷிகேஷில்   உலகவாழ்வை நீத்தார். இவர் முருகனின் பக்தை. இன்றைக்கு  அவர் எழுதிய முருகன் பாட்டுக்குத்தான் அபிநயம் பிடிச்சாங்க அபிதா.

பாட்டின் ஆரம்ப வரிகள் நினைவிலில்லை. மயில் மீதமர்ந்த அழகன் முருகனைக் கண்ணெதிரில்  கொண்டுவந்த  அபிநயத்தில் மெய்மறந்துட்டேன்னு சொல்லிக்கவா?

இன்றைக்கு (இந்தப்பதிவு எழுதிய நாள்) கல்ச்சர் கலோர் விழாவுக்குப் போயிருந்தேன்.அங்கு அனுவைப் பார்த்துப்பேசியபோது பாட்டுவிவரம் கேட்டுத்தெரிஞ்சுக்கிட்டேன்.  கொஞ்ச நேரத்தில் பாதிப்பாட்டு மனதில் நிக்கலை. அவுங்க பரதநாட்டியப்பள்ளியின்  நிகழ்ச்சி இருந்தது. மூன்று மாணவிகளுடன் சேர்ந்து ஒரு தில்லானா  ஆடுனாங்க. 

நிகழ்ச்சி முடிஞ்சதும் மறுபடி அனுவைச் சந்திச்சு பாட்டின் முதலடியைக் கேட்டு மனசுக்குள் வச்சுக்கிட்டேன். பாருங்க...ஒரு பதிவுக்கு என்ன கஷ்டமெல்லாம் படறேன்:-))))

"நீ மனமிரங்கி வந்தருள்வாய் முருகா நீலமயில் மீது........"

இடைவேளைன்னு  ஒரு  அரைமணி நேரம்.  ட்ரெஸ் மாத்திக்க அவகாசம் கொடுக்கவேணாமா?

ச்சும்மா நின்னு பேசாதீங்க. இதைச் சாப்பிட்டுக் கொண்டே பேசுங்கன்னு  ஒரு ஏற்பாடு செஞ்ச அபிதாவின் பெற்றோரைப் பாராட்டத்தான் வேணும்.  லட்டு, மசால்வடை,சமோஸாவுடன் ஆரஞ்சு ஜூஸ்!




அடுத்த பகுதியாக நடன நிகழ்ச்சியில்  நம்ம ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் 'மரகத மணிமயசேலா'. இவரைப்பற்றித் தெரியாதவர்கள்  மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருப்பாங்க. 'அலைபாயுதே கண்ணா' கேட்காதவர்கள் உண்டோ?  இதை எழுதியவர் இவரே. தமிழிலும், சமஸ்க்ருதத்திலும் மொழிப்புலமை உள்ளதால்  இந்த ரெண்டு மொழிகளிலுமே பாட்டுகள் எழுதி இருக்கார்.


'மரகதமணிமய சேலா, கோபாலா மதனா கோடி சௌந்தர்ய விஜிதா பரமானந்தா  கோவிந்தா முகுந்தா'  ன்னு பாட்டு போகும்.  ரொம்பவே அழகான பாட்டு.  இதை நம்ம யேசுதாஸ் பாடுனது யூ ட்யூபில் இருக்கு. கேட்டுப்பாருங்க.

நான் சொல்லலை....கிருஷ்ணனும் ராமனும் நாட்டியத்துக்கு ரொம்பப்பொருத்தமுன்னு! அதே போல் அடுத்த  பாட்டு ஒரு பஜனைப்பாடல். துளஸிதாஸின்

 "ஸ்ரீ ராம சந்த்ர க்ருபாளு பஜமன  ஹரண பவபய தாருணம்
நவ கஞ்ச லோசன கஞ்ச முக கர கஞ்ச பத கஞ்சாருணம்"

எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத ஒரு பஜனைப்பாடல். இதை நம்ம லதா குரலில் கேக்கணும்!  ஹைய்யோ!!!!


தேன் குடிச்ச நரியாட்டம் இருந்தேன்னு சொன்னால் அது பொய் இல்லை. (ஆமாம்....நரி தேன் குடிக்குமோ? ) கரடின்னு வச்சுக்கலாம்.  தேன் குடிச்ச கரடி:-)

ஸ்ரீராமனின் கம்பீரமும் வில் பிடிச்சுருக்கும் அழகும்  அப்பப்பா!!!!
நிகழ்ச்சியின் கடைசிப்பகுதிக்கு வந்துருந்தோம். தில்லானா.  பாட்டாக இல்லாமல்   இசைக்கருவிகளால் மட்டுமே  'நெய்த' இசை.


அரங்கேற்றத்தில் ஆடிய தில்லானாவை  இங்கே  யூ ட்யூபில் வலையேத்தி இருக்கேன்.


அடுத்து மங்களம் ஆடி முடிச்சுட்டாங்க.

உடை மாத்திக்கும் காரணம் இடைக்கிடை சில  சொற்பொழிவு, வயலின் & செல்லோ  ம்யூஸிக் என்று  சில.

மாலை ஆறுமணிக்கு ஆரம்பிச்ச நிகழ்ச்சியை கச்சிதமா எட்டரைக்கு முடிச்சுட்டாங்க. கலை ஆர்வத்துக்கு மதம் ஒரு தடையே இல்லைன்னு நிரூபிச்சுட்டாங்க  கிறிஸ்துவரான  அபிதா!

மனநிறைவோடு  அபிதாவை வாழ்த்திட்டு, நாங்களும் வீடு வந்தோம்.

மகளிர்தின சிறப்புப் பதிவாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

வணக்கம்.