Showing posts with label அனுபவம் சண்டிகர். chandigarh. Show all posts
Showing posts with label அனுபவம் சண்டிகர். chandigarh. Show all posts

Friday, January 14, 2011

போகியும் பொங்கலும் தமிழருக்கு மட்டுமா?

இன்னிக்கு வட மாநிலங்களில் குறிப்பா பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் ப்ரதேசம் ஆகிய மாநிலங்களில்(இது மூணுக்கும் நடுவில் சண்டிகர் மாநிலம் இருக்கு) லோ(ஹ்)ரி பண்டிகை. குளிர்கால விழாவாம். மூணுநாளா வீட்டுவாசலில் வந்து டும் அடிச்சுச் சில்லறைக் காசு ( இப்பெல்லாம் சில்லறை என்பது 10 ரூ) வாங்கிப்போற கூட்டம் வந்துக்கிட்டே இருக்கு.

குளிர்கால பயிரா அக்டோபர் மாசத்துலே விதைச்ச கோதுமை இப்போதான் கண் முழிச்சுப்பார்த்துத் தளதளன்னு வயலில் நிற்கும் காலம். அதன் அமைப்பைப் பார்த்தே இந்த வருசத்து மகசூல் எப்படி இருக்கும்முன்னு இப்போப் புரிஞ்சு போகும். விளையும் பயிர் முளையிலே!!!!!! மார்ச் கடைசிமுதல் அறுவடை தொடங்கிருமாம்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடைவெளி அதிகமா இருக்கும் நாள் தான் லோ(ஹ்)ரி பண்டிகை தினம். நடுக்கும் குளிரை விரட்ட (இன்னிக்கு மட்டும்)வீடுகளிலும் வயல்களிலும் வாசலில் தீ மூட்டுவாங்க. (நம்ம வீட்டுக்காரம்மா கொளுத்துவதை ராத்திரிக்குப் பார்க்கணும்) வேலைக்குப்போகும் தொழிலாளிகள் இந்த குளிர்காலம் முழுசுமே தெருவில் அங்கங்கே தீமூட்டி வச்சுருப்பதில் குளிர் காய்ஞ்சுக்கிட்டுப் போறதைப் பார்க்கலாம். கையைப் பரபரன்னு தேய்ச்சு தீயில் காட்டுறாங்க. பண்டிகை நாளில் கொளுத்தும் (சின்ன) சொக்கப்பனையில் பொரி, மக்காச்சோளம், இன்னும் இந்த விசேஷத்துக்கேன்னு செஞ்சுவச்ச எள்ளு முட்டாய், கடலைமுட்டாய் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் அந்த எரியும் தீயில் போட்டு (அக்னி பகவானுக்கு ஸ்வாஹா!!) தீயை வலம் வந்து மிச்சம் இருக்கும் தின்பண்டங்களைத் தின்னு கொண்டாடுறாங்க. வலம் வரும்போது 'ஆதர் ஆயே திலாதர் ஜாயே' ன்னு கூவுவதும் உண்டு. வளமை வரட்டும் ஏழ்மை தொலையட்டும் என்ற வாழ்த்துதான் இது. ராத்திரிக்கான சம்பிரதாயமான உணவு மக்கை ரோட்டியும் சர்ஸோன் கா சாக்'கும். பயந்துறாதீங்க...இது சோள ரொட்டியும் கடுகு இலை மசியலும்தான்.

ஆட்டம்பாட்டம் எல்லாம் உண்டுன்னாலும் நகர்ப்புறங்களில் கோலாகலம் கொஞ்சம் மட்டுதான். அசல் கிராமங்களில் காதல் சொல்லவும் லோஹ்ரி நாள் பயன்படுது. திருவேங்கடம் ஹரி ஆனது இப்படித்தான் பகுதி 3 இல் இருந்து கொஞ்சம் இங்கே.

நாளை இரவு இங்கே 'லோரி' பண்டிகை கொண்டாடுவார்கள். நாமெல்லாரும் போகலாம் என்று ஹரி சொன்னதுமுதல் ஒரே எதிர்பார்ப்பு. இவர்கள் கிளம்பிப்போனபோது, கிராமத்தின் பொதுத் திடலில் சின்ன சொக்கப்பனைபோல எரியும் தீ. குளிருக்கு ரொம்ப இதம். ஊரே அங்கே திரண்டு வந்துவிட்டிருந்தது. ஒரே பாட்டும் கூத்தும் கேலியுமாக நேரம் போனதே தெரியவில்லை.


'இன்று ஜனவரி மாதம் 13 அல்லவா. நம்மூரில் போகிப் பண்டிகை. அதற்காகவென்றே சேமித்து வைத்த பழைய முறம், பாய், துடைப்பம் போன்றவைகளை அதிகாலையில் தீமூட்டி எரிப்போமே...அதையே இவர்கள் இரவு நேரத்தில் செய்கிறார்கள் போல!'.....லலிதாவின் மனம் பாட்டி வீட்டுக்குப் பறந்தது.

'பட பட பட பட் பட் பட பட..........' தெரித்து விழுந்தது மக்காச் சோளப்பூக்கள்.
எரிந்து கொண்டிருக்கும் தீயைச்சுற்றி வலம்வந்த இளைஞன் ஒருவன் கையிலிருந்த மக்காச் சோளத்தைத் தீயில் தூவிக்கொண்டே 'சோனா' என்று கூவினான். பெண்கள் கூட்டத்தில் ஒரே சிரிப்பும் கலகலப்பும். ஒரு இளமங்கைத் தன்கைகளால் முகத்தை மூடிகொண்டு அங்கிருந்து ஓட முயன்றாள். பெண்கள் கூட்டம் ஒன்று அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடவிடாமல் செய்துகொண்டிருந்தது. கடைசியில் அந்தப்பெண் சோனா நாணிக்கோணிக்கொண்டேத் தீயினருகில் வந்து கொஞ்சம் மக்காச் சோளத்தை அதில் தூவினாள். அதைத்தொடர்ந்து இளைஞர்கள் பகுதியில் ஒரே ஆரவாரம்.


அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அவள் மன நிலை எப்படியோ என்று தெரிந்து கொள்ளத்தான் அவள் பெயரைச்சொல்லி சோளம் தூவினான். அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தால் பதிலுக்குச் சோளம் தூவினால் போதும். அவன் காதலை ஏற்றுக்கொண்டாள் என்று பொருள். இப்படியாக அவர்களுடைய காதலை ஊருக்குத் தெரிவித்தாகிவிட்டது. இனி உறவினர்களும், பெற்றோரும் சேர்ந்து அவர்கள் திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.

மா ஜியின் விளக்கத்தைக் கேட்டு அதிசயித்தாள் கஸ்தூரி.

ஒருவேளை அந்தப் பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றால்? இது பிஜ்யாவின் சந்தேகம்.


பிடிக்கவில்லை என்றால் அந்தப் பெண் பதில் சோளம் தூவமாட்டாள். அவனுக்கும் அவள் உள்மனம் தெரிந்துவிடும். தீர்ந்தது கதை. என்று சொல்லிச் சிரித்தார் மா ஜி.

வீட்டில் புதுமணமக்கள் இருந்தாலோ இல்லை புதுசாக் குழந்தை பொறந்துருந்தாலோ இந்த லோ(ஹ்)ரி பண்டிகையை இன்னும் விசேஷமாக் கொண்டாடுவாங்க. பாங்க்ரா டான்ஸ் என்ன, ஸ்பெஷலா வரவழைக்கப்பட்டு டும் அடிக்கும் ம்யூஸிக் பார்ட்டி என்ன, விருந்துச் சமையல் என்னன்னு ஒரே கோலாகலம்தான்.


இன்னிக்கு லோ(ஹ்)ரி முடிஞ்சதும் நாளை முதல் மக மாசம் ஆரம்பிக்குது . உத்தராயணம் ஆரம்பம். குளிரும் மெல்ல மெல்லக் குறைஞ்சுரும் புண்ணிய நதிகளில் நீராடுவது முக்கியம். இதுக்காகவே தீர்த்த யாத்திரை போறவங்களும் இருக்காங்க, பொதுவா வீடுகளில் இனிப்புவகையில் கீர் (பாயசம்) செஞ்சு சாப்பிடுவாங்க. இந்த கீர் சமைக்க கரும்புச்சாறு பயன்படுத்துவாங்க என்பது விசேஷக்குறிப்பு. ஆகக்கூடி கரும்பு, அரிசி சேர்த்த பால்பாயஸம் எல்லாம் எனக்கு நம்ம பக்கம் இருக்கும் சக்கரைப் பொங்கலையும் கடிச்சுத் துப்பும் கரும்பையுமே ஞாபகப்படுத்துது.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா இன்னும் சில பல மாநிலங்களிலும் மகரசங்கராந்தின்னு திருநாள் கொண்டாடப்படுது. நமக்கு அது பொங்கல். காரணம் வெவ்வேறா இருந்தாலும் காரியம் ஒன்னுதானே!

அனைவருக்கும் இனிய போகி, பொங்கல், லோ(ஹ்)ரி, மகர சங்கராந்திக்கான இனிய வாழ்த்துகளை நம் துளசிதளத்தின் மூலம் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்றும் அன்புடன்,
துளசி