கார்த்திக் ராஜுவின் கடைசிப் பாட்டுக்குப்போய்ச் சேர்ந்துக்கிட்டோம். பாவாடை தாவணியில் க்யூட்டா இருந்த ஒரு சின்னப்பொண்ணு வயலின். ஷ்ரத்தா ரவீந்த்ரன். கீர்த்திவாசன் ம்ருதங்கம். இது என் ஆர் ஐ ஸ்பெஷல்.திவ்யகஸ்தூரி கதக் ஆடவந்தாங்க. அழகான முகம். இந்த வகை நடனத்துலே மூணு பகுதிகள் பொதுவா இருக்கும். கதையாவே சொல்லும் நடனம்தான் இது. நம்ம பரதநாட்டியத்துலே தஞ்சாவூர் பாணி,வழுவூரார் பாணி, கலாக்ஷேத்ரா பாணின்னு வெவ்வேறு சொல்றோம் இல்லையா அதுபோலவே இவுங்களுக்கும் இருக்கு. இதை க(gha)ரானா னு சொல்வாங்க. ஜெய்பூர், பனாரஸ், லக்நோன்னு வெவ்வேற ஸ்டைல். முக்கியமானது ஃபுட் ஒர்க்தான். காலில் இருக்கும் சலங்கைகள் குறைஞ்சது நூறு இருக்கும். அத்தனையையும் ஒரே சமயத்துலே ஒலிக்காமல் தனியா ஒரே ஒரு சலங்கையை மட்டும் ஆட்டி ஒலிக்கச் செய்யும் மகாவித்தைகள் கற்ற பெரிய கலைஞர்கள் கூட இருக்காங்க.
ந்ருத்யா, நாட்டியான்னு இருக்கும் பகுதிகளில் நிருத்யாவில் நம்மூர் நட்டுவாங்கம் போல ஜதி சொல்லி அதுக்கு ஆடுவாங்க. இதுக்கு போல் (bol) ன்னு சொல்றது. ஹிந்தியிலே போல் என்றாலே பேசு, சொல்லுன்னுதான் பொருள். நமக்குத் தனியா நட்டுவாங்கம் செய்ய நட்டுவனார் இருப்பாங்க. இவுங்க நடனத்தில் நடனமணிகளே அந்த ஜதிகளைச் சொல்வாங்க. அதைக் கேட்டுட்டுத் தப்லாக்காரர் அதைத் திருப்பி வாசிக்கும்போது அதுக்கேத்தமாதிரி அந்தச் சொற்கட்டுக்கு ஆடுவாங்க. இதை எதுக்கு இப்பச் சொல்றேன்னா.......
போல்
தா....தின் தின்னா.... (dha.... dhin.......dhinna.........
tirikita....tu..........
"பாவம்.... அவளே நட்டுவாங்கம் பண்ணிக்கறாள்" பக்கத்து ஸீட் மாமா அப்படியே உருகிப்போயிட்டார். கொஞ்சம் விட்டுருந்தா அழுதுருப்பார். குரலில் சின்ன அழுகை எட்டிப் பார்த்துச்சு. (அழாதீங்கோ மாமா....) இப்படி ஆடுவது பார்ட் ஆஃப் த டான்ஸ்ன்னு சொல்லித் தேற்றினேன்.அடுத்து நாட்டியாவில் ஒரு மீரா பஜன். காக்கையைப் பார்த்ததும் கண்ணனின் நினைவு வருது நாயகிக்கு. இது நாயகி பா(b)வம். கண்ணா கருமை நிறக் கண்ணா....... இதைத்தானே பாரதியும் பாடிட்டுப் போனார் காக்கைச் சிறகினிலே நந்தலாலா...... உடி ஜா..... அருமை. கண்ணனுக்காக புஷ்பங்களைத் தொடுக்கும் அபிநயத்தில்...... வடக்கத்திக்காரங்களுக்கு இந்த பூக் கட்டும் வித்தை தெரியாதே அதனால்.... ஊசியில் பூவைக் கோர்த்து மறுகையால் நூலில் தள்ளி விட்டது சூப்பர்!!!! இந்தப் பாட்டைப் பாடுன பெண்மணி பெயர் நினைவில் இல்லை. ஆனால் உறவு மனசுலே இருக்கு. வயலின் சந்திரசேகரின் மருமகள்.
கதக் நடனத்தில் மேடையில் தரையில் பொதுவா ஒரு மைக் வைப்பாங்க. அந்த பாதங்களின் ஆட்டத்தில் சலங்கைகள் அசைந்து ஒலிப்பது சபையோருக்குத் துல்லியமாக் கேக்கணும் என்றதற்காக.
இன்னிக்கு அந்த பாக்கியம் நாம் செய்யலை. ஹார்மோனியக்காரர். சதீஷ் ரகுநாதனாம். அனந்தராம தீக்ஷிதரின் சிஷ்யராம். (குரு பெயரைச் சொன்னதும் சபையோரின் ஆஹா ஊஹா எல்லாம் பிரமாதம்) வெஸ்டர்ன், ஹிந்துஸ்தானி எல்லாம் படிச்சுருக்காராம். அவர் பாட்டுக்குத் தனி ட்ராக்லே தேமேன்னு வாசிச்சுக்கிட்டே இருக்கார். ஒரே நோட். திரும்பத் திரும்பக் கேக்கும்போது தலைக்குள்ளே ட்ரில் பண்ணி இறங்குது. மைக் தேவையே இல்லை. ஆனால் பயங்கர வால்யூமிலே .....போதுண்டா சாமி. இவர் பெயரைக் கண்டிப்பா நினைவு வச்சுக்கணும். அடுத்தமுறை இவர் வாசிக்கிறாருன்னா....நாலைஞ்சு இயர் ப்ளக் கொண்டுபோகணும். (போகத்தான் வேணுமான்றது இன்னொரு குட் கொஸ்சின்?)
தப்லா வாசிச்ச ஹிரண் சத்தா நல்லா வாசிச்சார். ஆட்டக்காரரை அனுசரிச்சு வாசிச்சார்னாலும் இவருக்கும் மைக் தேவையே இல்லை. ஒரு கட்டத்தில் எழுந்துபோய் மைக் ஒயரைப் பிடுங்கி வீசலாமான்னு இருந்தது என்னவோ நிஜம். இவுங்க ரெண்டுபேரின் அட்டகாசத்தில் திவ்யகஸ்தூரியின் பாதங்கள் காட்டிய வித்தைகள் எல்லாம் கண் பார்த்தது மட்டுமே. காது? அவுட்:(-:அடுத்த நிகழ்ச்சிக்கு வந்து முதல்வரிசையில் அமர்ந்த விஐபி யைப் பார்த்து மலைத்தேன். இவுங்க ஆடி நான் பார்த்ததே இல்லை. ஆனால் பிரசித்தி பெற்றவர், ஸோனால் மான்சிங். ஒடிஸின்னதும் இவுங்க பெயர் மனசுக்குள்ளே சட்னு வர்றதென்னவோ நிஜம். இந்த வயசிலும் கண் ஒய்யாரமா அப்படியே இழுக்குது.
நந்தினி அக்காவும் ஷைலஜாவும்
உமா முரளிகிருஷ்ணாவும்(சிலப்பதிஹார மாதவி) வந்துருந்தாங்க. நந்தினி, நடன விமர்சகர். (ரெண்டு வருசமுன்பு ஸ்ரீகலா பரத், நந்தினி அக்கா அக்கான்னு சொன்னது நினைவுக்கு வருதேன்னா இங்கேயும் இவுங்க அக்காதான்:-) ப்ரொஃபஸர் ஷைலஜாவின் குச்சுபுடி நடக்கப்போகுது. 'கலைமாமணி' ஷைலஜா ஒரு டிவிடி இன்னிக்கு வெளியிடறாங்க. அதுக்குத் தலைமைதாங்கிச் சிறப்பிக்கத்தான் ஸோனால் மான்சிங் விஜயம். இன்னும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குனர் டாக்டர் மோகந்தாஸ் வந்துருந்தார். வெளியீடு நடந்து முடிஞ்சதும் இது இன்னிக்குச் சலுகை விலையிலே விற்பனை இருக்குன்னாங்க.. இதுலே கிடைக்கப்போகும் வரும்படி முழுசும் முதியோர் இல்லத்துக்கு அன்பளிப்பு. நல்ல விஷயம்தான். முதலில் இவுங்க நடனத்தைப் பார்த்துட்டு வெளியே போகும்போது டிவிடி வாங்கிக்கணும்.'நம்ம ஒவ்வொருத்தர் உடம்பிலும் ஒரு ரிதம், நடன அசைவு எல்லாம் அமைஞ்சுருக்கு. கவனிச்சுப் பார்த்தால் இது புரியும். வித்யாதனம், சர்வதனம் ப்ரதானம்'னு ரொம்ப அழகாச் சுருக்கமாப் பேசுனாங்க ஸோனால்ஜி.
மஹிஷாசுரமர்த்தினி நடனம். ஆதிசங்கரரின் அயிகிரி நந்தினி. பாலமுரளியின் சிஷ்யர் வீரராகவன் குரலில். ஹரிபாபு ம்ருதங்கம், ஆர்.வி. ரமணா, புல்லாங்குழல், ஸ்ரீலதா நட்டுவாங்கம் இப்படி.....
மர்த்தினி இருக்கவேண்டிய ஆவேசம் கொஞ்சம் குறைச்சலா இருந்தமாதிரி ஒரு தோணல். அந்த சின்னப் பொண்ணு அஷ்ரிதா கேசவ் 'சட்'னு மனசிலே வந்து போனாங்க. சரி சரி. கலைமாமணி நடனத்துக்கு, நானென்ன நாட்டாமையா குறை சொல்லித் திரிய? அதுவும் ஓசியிலே பார்த்துக்கிட்டு....... ஃபோர்மச்!
பதிவு நீண்டுவிட்டதால் மீதியை நாளைக்குச் சொல்றேன்.
Showing posts with label அனுபவம் கதக் குச்சுபுடி. Show all posts
Showing posts with label அனுபவம் கதக் குச்சுபுடி. Show all posts
Thursday, December 17, 2009
பாட்டும், கதக்கும், குச்சுப்புடியும் பின்னே ஞானும்.
Posted by
துளசி கோபால்
at
12/17/2009 06:11:00 AM
29
comments
Labels: அனுபவம் கதக் குச்சுபுடி, ஸோனால் மான்சிங்
Subscribe to:
Posts (Atom)
