Monday, June 30, 2025

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் (2025 இந்தியப்பயணம் பகுதி 39 )

தெய்வலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி, வந்து வழிபட்ட தலமாம்.  அத்னால் பட்டீஸ்வரம் என்ற பெயர் அமைஞ்சதாகச் சொல்றாங்க.  நாதன்கோவிலில் இருந்து கிளம்பின பத்தாவது நிமிட் ஏழுநிலை ராஜகோபுரம்  கோபுரம் கண்ணில் பட்டதும்  அங்கே போயிட்டோம்.
 'வாங்க'ன்னு கூப்பிட்டப் புள்ளையாரைக் கும்பிட்டுக்   கடந்ததும்  நந்திதேவருக்கு ஒரு சிறிய விமானத்துடன் கூடிய அழகான தனிச் சந்நிதி.  ரொம்பவே அழகான முகத்துடன் இருக்கார் நந்திதேவர். அவருக்கு முன்னால் பளபளக்கும் கொடிமரம்.




பெரிய வளாகமா இருக்கு.  நேரெதிரில் (கொஞ்சம் இடப்பக்கம் தள்ளி) கோவில் திருக்குளம்.  ஞானவாவின்னு பெயர். நேரெதிரா அஞ்சு நிலை கோபுரம்,  அருள்மிகு  தேனுபுரீசுவரர் திருக்கோவில். பட்டீச்சரம் என்ற பெயர்ப்பலகையுடன்.  நமக்கிடதுபக்கம் (குளத்தின் பின் சுவருக்கு முன் )இன்னொரு  அஞ்சுநிலைக் கோபுரம்.  இது அதைவிடக் கொஞ்சம் உயரம் குறைவுன்னு தோணுது.....  காட்சிப்பிழையாக இருக்கலாம்.....    நமக்கு வலதுபக்கம் குளத்தை நோக்கியபடி ஒரு பெரிய மண்டபம். 

கண்ணெதிரில் இருக்கும் கோபுரத்தை வணங்கி உள்ளே போறோம்.  கோபுர வாசலுக்கு நேரெதிரா மஹாமண்டபமும்......  அதோ தூரத்தில் கருவறையில் லிங்கவடிவில் தேனுபுரீஸ்வரரும். த்வாரபாலகர்கள், சொல்லமுடியாத அழகிலும், அளவிலும் !  அம்மாடீ..... பாடல்பெற்ற தலம் !!!! 
திருஞானசம்பந்தர் இறைவன் தரிசனத்துக்குக் கடும்  வெயிலில் நடந்து வர்றார்.  இதைக் காணப்பொறுக்காத தேனுபுரீஸ்வரர், தன் சிவகணங்களை அனுப்பி நிழல் தரும் விதமா முத்துப்பந்தலை(குடையாக )பிடிச்சுக்கிட்டு வரச் சொன்னாராம் ! இப்பவும்  முந்துப்பந்தல் விழான்னு வருஷாந்திர விழா நடக்குது,   ஆனி மாசம் முதல் தேதியில் !!!!

நம்ம  விஸ்வாமித்ர மஹரிஷிக்குப் ப்ரம்மரிஷி என்ற பட்டம்  கிடைச்சதும் இங்கேதானாம் !  காரணம்?  இவர் அருளிச்செய்த காயத்ரி மந்திரம் !!!!! 
                                      
குருக்களைக் காணோம். நமக்கு ஏகாந்த ஸேவை. கம்பிகளூடே தரிசனம். 
இந்தப்பக்கம் நவக்ரஹங்கள்.    
உட்ப்ரகாரத்தில்  சுத்திவர மேடை அமைப்பில் அருள்மிகு வேதலிங்கம்,  பைரவர், சனி, சூரியன், கீர்த்திவாசர்.......   உட்ப்ரகாரம் சுற்றிவந்து,  அம்மன் சந்நிதிக்குப் போனோம். ஞானாம்பிகை ! தனிச்சந்நிதியும் தனிக்கோவில் அமைப்புமாக ! 
சிங்கத்தூண்களுடன் மண்டபமும், பின்புறச் சுவரில் அழகான ஓவியங்களும் !  
தூணைத்தாங்கி உக்கார்ந்திருக்கும் சிங்கக்குட்டிகளைப் பார்த்ததும் எனக்கு நம்ம ஜீகே நினைவு வந்தது..... பாவம்.குழந்தை..... ப்ச்....
இந்த மண்டபத்தை நிர்மாணித்து ஓவியங்களை வரைந்த கோவிந்த தீட்சிதர் -நாகமாம்பிகா அவர்களைப்பற்றிய சிறுகுறிப்பு  மண்டபத்தில் எழுதி வச்சுருக்காங்க. வாசிச்சுக்கிட்டே வரும்போது சட்னு ஒரு இனிய அதிர்ச்சி !  முந்தாநாள் போன திருப்பாலைத்துறை நாதர் கோவில் களஞ்சியம் கூட இவர்தான் கட்டியிருக்கார் !  ஆஹா..... 182830இவுங்களுக்கு இங்கே சிலையும்  வச்சுருக்காங்க. 
அம்மன் சந்நிதியிலும் கம்பிக்கதவினூடேதான் தரிசனம். 
பதினாறு கைகளுடன் சாந்தஸ்வரூபியான துர்கையின் பழங்கால ஓவியம் ஒன்னு மஹாமண்டபச் சுவரில்.  கங்காதரன் என்ற ஓவியர்  '93 இல் வரைஞ்சுருக்கார்.  ஒரு முப்பத்தியிரண்டு வருஷம்தானே ஆகி இருக்கு! எப்படிப் பழங்கால ஓவியமுன்னு  எனக்குத் தோணுச்சு?  சரியான பராமரிப்பு இல்லாமல் வண்ணங்கள்  கொஞ்சம் வெளிறி இருப்பதாலோ ? ஙே....  

இன்னொரு ஓவியம் கும்பகோணம் 'வி கே எஸ் சிவம் 'வரைஞ்ச ஆதிபராசக்தி.  சீறும் சிங்கம் அருமை ! 
அடுத்தாப்லெ இன்னொரு மண்டபம். யாழித்தூண்கள், நம்ம சேஷராயர் மண்டபத்தை ஞாபகப்படுத்தியது உண்மை. இந்த மண்டப விதானத்தில் வட்டமான ஒரு கற்பலகை யில் ஊஞ்சல் சங்கிலி !  இந்த வட்டம் சுழலுமாம் !!!!!   அட!!!!
சோழமன்னர், சிவனை வணங்குவதாக  ஒரு சிற்பம். 
 பிரகாரம் சுற்றிவரும்போது,   காளை வாகனம் இருக்கும் குட்டியா ஒரு தேர்/ ரதம்.    உட்ப்ரகார புறப்பாட்டுக்குன்னு நினைக்கிறேன்.  நம்மவருக்குத் தேர் இழுக்கப்பிடிக்குமே ! ஓடிப்போய் இழுத்தார்.  உற்சவர் இல்லைன்னா  என்ன.... மனசில் அவரை நினைச்சுக்கலாம்தானே ! 
வெளிப்ரகாரத்தில்  வாகனங்கள் நிறுத்தி வச்சுருக்கும்   மண்டபத்தின்  ஒரு இடத்தில்  உயரமான ஒரு தனிச்சந்நிதியில்  விரிசடையுடன் காலபைரவர்.  முதலில்  சடை முகத்தைப் பார்த்து அக்னி ன்னு நினைச்சேன். அப்புறம் பார்த்தால் அவர் முன்னால் நந்தி தேவர்.  அக்னிக்கு எதுக்கு நந்தின்னு கவனமாப் பார்த்தால் நம்ம பைரவர் சுருட்டிய வட்ட வாலுடன் இருக்கார் !  

ரொம்பப்பெரிய கோவிலாகத்தான் இருக்கு.  ஒரு முறை பகல் நேரத்தில் வந்து போகணும்.  சுற்றி வரும்போது  இப்போ கோவில் நுழைவு வாசலாண்டை வந்துருக்கோம்.  கண்ணுக்கு முன்னால் தூரத்தில் ராஜகோபுரம் தெரியுது. திருக் குளத்தைப் பார்த்தபடி இருக்கும் ப்ரமண்டமான மண்டபப்படிகளில்   கொஞ்ச நேரம் உக்கார்ந்தோம். கோவிலுக்குப்போனால் ஒரு நிமிட்டாவது உக்கார்ந்துட்டு வரணுமுன்னு பெரியவங்க சொல்லிவச்சுருக்காங்கல்லே !  

கண்ணெதிரில்  திருக்குளத்துக்கு அந்தாண்டை இன்னொரு கோபுரம். அங்கே தான் துர்கை சந்நிதி இருக்கணும்.  அதென்னவோ போகணுமுன்னு அப்போ தோணவே இல்லை.  இந்தப் பதிவு எழுதும்போதுதான்.... அடடா.... கோட்டைவிட்டுட்டோமேன்னு  இருக்கு. 

 பதினாறு வருஷங்களுக்கு முன் பட்டீஸ்வரம் துர்கையை மட்டும் தரிசனம் செஞ்சுட்டுப் போயிருக்கோம்.   தகதகன்னு எலுமிச்சம்பழ மாலையோடு தரிசனம் ஆச்சு. நமக்கும் ப்ரசாதமா ரெண்டு எலுமிச்சம் பழம் கிடைச்சது.  தனி கோபுரவாசலுக்குள் நுழைஞ்சு அப்படியே திரும்பப்போயிருக்கோம்.  உள்ளேயே அடுத்த கோபுரவாசலில் போனால்  சிவன் கோவில் இருக்குமுன்னு  தெரியலை.  கார் டிரைவர் விநோத் (உள்ளூர்க்காரர்) கூடச் சொல்லலை பாருங்க. நவக்ரஹ டூர் னு கார் எடுத்துருந்ததால்...... அதை மட்டும் சொன்னால் போதுமுன்னு இருந்துட்டார் போல. திருவலஞ்சுழி வெள்ளைப்பிள்ளையாரைத் தரிசனம் செஞ்சுட்டு,  அப்போ தங்கியிருந்த  ஆனந்தம் போகும் வழியில் துர்கை தரிசனம் ஆச்சு. 

சரி. போகட்டும், யார் யார் எப்போ தன்னை தரிசிக்கணுமுன்னு கடவுளர்கள் ஒரு டைம்டேபிள் போட்டு வச்சுருப்பாங்கதானே !!!! 

இந்தக்கோவிலில் இப்படி ஒரு கூடுதல் வசதியும் இருக்கு !!!!
ராயாஸுக்குத் திரும்பியாச்சு.  எதுத்தாப்லே இருக்கும் காசி விஸ்வநாதர் கோவில் ராஜகோபுரம்  ஜொலிக்குது.   குளத்துக்கு அந்தாண்டை  ஸ்ரீஅபிமுகேஸ்வரர் கோவில் கோபுரமும் விளக்கலங்காரத்தில் !  எத்தனை முறை வந்தாலும் கும்பகோணம் கோவில்கள் முழுக்க தரிசிச்சோமுன்னு சொல்ல முடியாதபடி.......   எங்கெங்கு காணினும் கோவில்களே !
கொஞ்சம் ஓய்வுக்குப்பின் கீழே ரெஸ்ட்டாரண்டுக்குப்போய் டின்னர் ஆச்சு. எனக்குக் கல்தோசை!

தொடரும்.......... :-)

3 comments:

said...

பட்டீஸ்வரம் கோவிலுக்கு வெய்யில் நேரத்தில் போனால் கால் பழுத்து விடும்!  இந்த மாதிரி அமைப்பையுடைய சில கோவில்களுக்கு காலை வெய்யில் வரும் முன் சென்று விட வேண்டும்! 

இங்குள்ள கடைகளில்தான் அழகான ஒருவகை பூமாலைகளை முதல் முதலாகப் பார்த்தேன்.

said...

நீங்கள் சொல்வது போல கும்பகோணம் கோவில்களில் நாம் இதைப் பார்த்தோம் இதைப் பார்க்கவில்லை என்பதும் இந்தக் கோவில் இது என்பதிலும் குழப்பங்கள் வருகின்றன.

said...

// கோவிலுக்குப்போனால் ஒரு நிமிட்டாவது உக்கார்ந்துட்டு வரணுமுன்னு பெரியவங்க சொல்லிவச்சுருக்காங்கல்லே ! //

சிவன் கோவிலுக்குதான் இது பொருந்தும்.  சிவன் சொத்து குலநாசம்னு சொல்வாங்க.  சிவன் கோவிலைச் சுற்றின களைப்பைக் கூட அங்கேயே விட்டு விட்டு வரவேண்டுமாம்!

அப்புறம் பெருமாள் கோவில்களில் உள்ளே நுழையும்போதே துவஜஸ்தம்பம் அருகே சேவித்து விடவேண்டும்.  சிவன் கோவில்களில் ஸ்வாமி தரிசனம் முடிந்து வெளியே வரும்போது நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பார்கள்!