Friday, May 12, 2023

அன்பானவர்கள் நிறைந்த உலகம் . கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 47

மழை இல்லேன்னா  நிதானமா நடந்தே வந்துருவேன் லோட்டஸுக்கு.  ரோடெல்லாம் அழுக்கும் புழுக்குமா இருந்தால்  நடக்க அருவருப்பா இருக்குல்லே.....   வழக்கம்போல் வந்து குளிச்சு, ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு, நம்மவருக்குக்கான  மாத்து உடைகளை எடுத்துக்கிட்டேன். அப்படியே குடிதண்ணீர் பாட்டில்களையும்.  இங்கே லோட்டஸில் தினமும் எட்டு அரை லிட்டர் பாட்டில்கள் நம்ம அறையில் கொண்டுவந்து வச்சுருவாங்க. அங்கே  ஹாஸ்பிடலில் என்னன்னா......  எல்லாமே நாம் கொண்டு போகணும். அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் அட்மிட் ஆகும்போது அறையில் குறைஞ்சபட்சம் ஒரு தண்ணீர் பாட்டில் வைக்கலாம். வைக்கணும்.  திடுதிப்புன்னு அட்மிட் ஆகும்போது நாம் முன்னேற்பாடா வர்றதுக்குச் சான்ஸ் இல்லைதானே ? 
 திரும்பி ஹாஸ்பிடல் போகும்போது, தண்ணீர் பாட்டில்கள்,   மற்ற பைகள் எல்லாம்  நம்ம லோட்டஸ் மதியழகன் (வாட்ச்மேன்)  தூக்கிப்போய், வாசலில்  ஆட்டோ பிடிச்சுத் தந்துருவார். உதவிக்கரங்கள் கிடைச்சுக்கிட்டே  இருந்தன! நம்ம கார்த்திக், ரெண்டு பாட்டில்களில் ஜூஸ் தயாரிச்சுக் கொண்டு வந்துருந்தார். தாகம் தீர்த்துக்கப் பேருதவியாக இருந்தது.

நம்ம  ஜஸ்டின் (மச்சினரின் மருமகன்) கிட்டே  இவருக்காக லுங்கி வாங்கிவரச் சொன்னேன். ஹாஸ்பிடல் கவுனை விடக் கொஞ்சம் சௌகரியமா இருக்குமேன்னு.  அவரும்  ஒரு நாலு வாங்கியாந்து கொடுத்தார். நல்ல தரமானது, விலையும் மலிவானது ! திருவான்மியூரில்   காட்டன் ஹௌஸ்னு  கடைக்குப்பெயர். 
இந்த  கலாட்டாவில் என் காதுக்காக டாக்டர் சுதாகர் க்ருஷ்ணா கொடுத்த மாத்திரைகள்   எடுத்துக்காமல் அப்படியே இருக்கு.   எதெதை, எப்பப்ப எடுத்துக்கணும் என்பதை க்ளினிக்கில் இருக்கும் பார்மஸிஸ்ட் இவராண்டைதான்  சொன்னாங்க. எனக்குத்தான் காது கேக்காதே !  இவரோ  மயக்கம்போட்டு விழுந்து  ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிக் கிடக்கார். இதுக்கிடையில்  அக்குபஞ்சரிஸ்ட் சித்ரா கொடுத்த மிளகும், ஒட்டிவிட்ட பட்டியும் கூட அப்படியேதான்  கிடக்கு. என்னவோ போங்க...... ப்ச்....


நான் லோட்டஸில் இருந்து திரும்பி வந்து,  இவருக்கான ப்ரேக்ஃபாஸ்டைக் கொடுத்துட்டு,  உடலைச் சுத்தம் செய்ய  ஆள் இருக்கான்னு கேட்டதும்,  ஒருத்தரை அனுப்பறேன்னாங்க.  கொஞ்ச நேரத்துலே டாக்டர் வந்து பார்த்துட்டு,  BP நார்மலுக்கு வந்துக்கிட்டே இருக்கு. இனி பயமில்லை. மானீட்டர் தேவைப்படாது. எடுத்துடலாமுன்னு சொன்னார். (ராத்ரி நடந்த கலாட்டா இவராண்டை சொல்லியிருப்பாங்கதானே ? ) 

தலைசுத்தல் இன்னும் இருக்கு. கால்கள் பேலன்ஸ் இன்னும் வரலை. காரணம் கண்டு பிடிச்சுருவோம். நீங்க பயப்பட வேணாம்முன்னு  என்னாண்டை சைகையோடு விளக்கிட்டுப்போனார்.  நம்ம காது சமாச்சாரம்  எல்லோருக்கும் தெரிஞ்சுருக்கு. 
பக்கெட் சுடுதண்ணீரோடு  வந்த  பணியாளர்,  நல்லா துடைச்சு விட்டு, தலையை சுத்தம் செஞ்சு உடைகளை மாத்தினார்.  இன்னும் ரெண்டுபேர் வந்து படுக்கையைச் சுத்தம் செஞ்சு விரிப்பெல்லாம் மாத்திட்டுப்போனாங்க.  இப்பதான் முகம் கொஞ்சம் தெளிவடைஞ்சு இருக்கு. 
கண்கள் எதையோ தேடுச்சேன்னு சட்னு டிவி ரிமோட்டை எடுத்துக் கையில் கொடுத்தேன். முகமெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சி :-)
நெருங்கிய தோழி 'ஒலிக்கும் கணங்கள்' நிர்மலா, பகல் சாப்பாட்டுடன் விஸிட்.  அவுங்க ரங்க்ஸும் வந்துருந்தார். குடும்ப நண்பர்கள்தான்.  எந்த நேரம் சாப்பாடு என்றாலும் பிரச்சனையே இல்லை.  நம்ம வீட்டில் இருந்து இங்கே கொண்டு வந்து டெலிவரி செய்ய நபர்கள் இருக்காங்க.  ராத்ரிக்கான இட்லியை அனுப்பறேன்னு சொன்னாங்க. வீடுகளில் இருந்து எந்தப்பொருட்களையாவது யாருக்காவது கொடுத்தனுப்பணுமுன்னா  இப்பெல்லாம் எளிதாகிப்போச்சாம். அட! ன்னு இருந்தது.
பேசிக்கிட்டு இருக்கும்போது.... இவரிடம்  மயக்கம் பற்றிக் கேட்டப்ப.... 'மருந்து கவுன்ட்டரில் வந்து நின்னது மட்டும்தான் நினைவிருக்கு. அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை'ன்னார்.  என்னுடைய தியரி (!) என்னன்னா....   BP அதிகமாக இருக்குன்னு அதைக்குறைக்க  படுக்க வச்சு  ஊசியும் போட்டுட்டு, அப்படியே இருக்கச் சொல்லிட்டு போயிருக்கும்போது.....  எழுதிக்கொடுத்த மருந்தை நான் போய் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டுத்தான் நான்  போயிருக்கேன்.  அதுக்குள்ளே என்னைத்தேடி வரவேண்டிய அவசியம் & அவசரம்  என்ன?  மருந்து ஏத்தினதும்,  சட்னு குறைஞ்ச BP காரணம், மயக்கம் வந்துருக்கு!   இதெல்லாம் தேவையில்லாம நாமே வருத்திக்கிட்டதுதான்னு இப்பவும் என் மனசு சொல்லிக்கிட்டுத்தான் இருக்கு. எதுக்காக  அப்படி ஓடி வரணும் ? இதுதான் விதின்னு சொல்ற சமாச்சாரம் !

விழுந்த காரணத்தால்  ஏற்பட்ட பாதிப்புதான் இப்ப !  அதுக்கான சிகிச்சைதான் நடந்துக்கிட்டு இருக்கு.  வெளிக்காயம் ஒன்னும் இல்லைன்னாலும்....   அடியற்ற மரம் போல் விழுந்த அதிர்வில்  உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
 
நிம்மி   எனக்கொரு பரிசும் கொண்டுவந்து , உங்களுக்கு ரொம்பப்பிடிக்கு முன்னுச் சொல்லித் தந்தாங்க.  அப்போ இருந்த நிலையில் அதை நான் பிரிக்கலை.  மறுநாள் பிரிச்சுப் பார்த்தா.......

வர்றோம் வர்றோமுன்ன  தோழிகளுக்கும் உறவுகளுக்கும் , இன்று பரவாயில்லை. இந்த மழையில் வர வேணாமுன்னு சேதி அனுப்பினேன்.
கொஞ்சம் கேஷ் எடுத்துக்க எனக்கு பேங்க் வரை போகணும்.  திரும்பத்திரும்ப நல்லா சொல்லிட்டுக் கிளம்பினேன்.... பின்னாலேயே ஓடிவராமல் இருக்கணும்.... பெருமாளே.... 

இந்த ஹாஸ்பிடலுக்கு நேர் எதிரில்  ஒரு இஸ்லாமிக் சென்ட்டர் இருக்கு.  அலங்கார வாசலுக்குள்ளே  பெரிய தோட்டம் போல் இருக்கும் பெரிய வளாகம்.  உள்ளே பெண்களுக்கான  பாடசாலையும் மசூதியும்   இருக்குன்னு பின்னால் தெரிஞ்சுக்கிட்டேன்.
  
மேலே படம்: வலையில் இருந்து.  ஏறக்கொறைய வாசல் இப்படித்தான் இருந்தது. 

வாசலுக்கு நான் வந்ததும்,  நேரெதில் இருந்த  வளாகத்தில் இருந்து ஆட்டோ ஒன்னு வரவும் சரியாக இருந்தது.  ஆட்டோக்காரர் வண்டியை நிறுத்தினதும்  ஜி என் செட்டி ரோடு போகணுமுன்னு சொன்னதுக்கு, நான்  சென்னைக்குப் புதுசும்மா, நீங்க  வழி சொன்னால்  போகலாமுன்னார்.  எவ்வளவு சார்ஜ்னு கேட்டதுக்கும், நீங்க வழக்கமா எவ்வளவு கொடுப்பீங்களோ அவ்வளவு கொடுத்தால் போதுமுன்னார்.  இந்தக் காலத்துலே இப்படியும்!!!!
நாகப்பட்டணத்தில்  இருந்து வந்துருக்காராம்.  இங்கே வேலையும் கிடைச்சுருக்கு.  பார்ட் டைமா உறவினரின் ஆட்டோவை ஓட்டறாராம்.   ரொம்ப நல்லது.  தினப்படி செலவுக்கும்  காசு வேண்டி இருக்குதானே ?

நான் ஹாஸ்பிடல் உள்ளே இருந்து வந்ததைப் பார்த்தாராம். 'யாருக்குமா உடம்பு சரியில்லை'ன்னு கேட்டார். கணவருக்குதான்.  மயக்கம் போட்டு விழுந்துட்டார்னு  ஒரு வரியில் சுருக்கமாச் சொன்னேன்.  வெளியூராம்மான்னதுக்கு ஒரு ஆமாம்.  'சீக்கிரம் நல்லாயிருவார்மா.  நான் தொழுகை செய்யும்போதெல்லாம்    அவருக்காக துவா செய்வேன். உங்க பிள்ளையாச் சொல்றேன் மா. கவலைப்படாதீங்க. ஒன்னும் ஆகாது' ன்னார். சட்னு எனக்குக்  கண்ணீர் வந்துருச்சு.   ஆட்டோ சார்ஜ் கொடுத்தப்ப வேணாம்மான்னார்.   நீங்க துவா செய்யறதே போதுங்க. சார்ஜ் கட்டாயம் வாங்கிக்கணுமுன்னு  வலுக்கட்டாயமாக் காசைக் கொடுத்தேன்.  அவர் பெயரைக் கேட்டப்ப 'முஹம்மது'ன்னு சொன்னார் !     நல்லவர்கள் நிறைஞ்ச உலகம்தான். என்ன ஒன்னு....  நம்ம கண்ணில் லேசில் படறதில்லை !
நான் பல நேரங்களில்   துரியோதனனாகவும்  சில சமயங்களில் மட்டுமே தருமராகவும் இருக்கேன், போல !


டாக்டர் வந்து பார்த்துட்டுப் போனாராம்.  கன்னடத்தில் பேசினாராம். நெசமாவா ?  உங்களுக்குத்தான் கன்னடம் தெரியுமே ... பதில் பேசறதுதானே ? இந்த  நாலு  நாட்களில் நல்ல மாற்றம்  தெரியுதாம்.  நம்மவருக்கு  ஊசியை நிறுத்திட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுக்க ஆரம்பிச்சாங்க.   கீழே இல்லாத சில மருந்துகளை வெளியில் இருந்து  வரவழைச்சதா ட்யூட்டி நர்ஸ் சொன்னாங்க.  நல்லது !

சாயங்காலம்   ENT டாக்டர் வந்து பார்த்துட்டுப் போனாங்க. 

படுத்துக்கிட்டே இருக்க வேணாம். கொஞ்ச நேரம் உக்கார்ந்து பாருங்கன்னு சொல்லிக் கையில் செல்ஃபோனைக் கொடுத்தேன். :-)  நேரம் போனது தெரியலை.... ஹாஹா....
ராத்ரி  சாப்பாடாகத் தோழி இட்லியும் சட்னியும்  அந்த டெலிவரி பாய்ஸ் மூலம் கொடுத்து அனுப்பினாங்க.  ( அந்த சர்வீஸ் பெயரைத்தான் மறந்துட்டேன்....)

இன்றைக்காவது கொஞ்சம் நல்லாத் தூங்கணும்னு நினைச்சுக்கிட்டு  அந்த ஸ்ட்ரெச்சரில் படுத்தேன். 

தொடரும்........... :-)



8 comments:

said...

நல்லதே நினைப்பவர்க்கு நல்லதே நடக்கும்.
நன்றி

said...

அந்த சர்விஸ் பெயர் டங்க்ஜோவா?  ஸ்விக்கியிலும் ஜோமோட்டோவிலும் கூட இந்த வசதி உண்டு.  கொரோனா சமயங்களில் நிறைய உதவியாயிருந்தார்கள்.  டங்க்ஜோ பேனாவை மறந்து வைத்து விட்டு போனால் கூட கொண்டு வந்து தருவார்கள்!

said...

ஒரு ஆஸ்பத்திரியில் அவ்வளவு பணம் கட்டி சிகிச்சைக்கு சேரும்போது தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாதவர்களை பற்றி என்ன மதிப்பீடு செய்ய!

said...

வாங்க விஸ்வநாத்,

அப்படி ரொம்ப நல்லமனசுன்னு சொல்லமுடியாது! ஆனாலும் பெருமாள் கருணை காமிக்கிறான் !

said...

வாங்க ஸ்ரீராம்,

டன்ஸோ பாய்ஸ்னு சொன்னாங்க.

தண்ணி வேணுமுன்னா ஆஸ்பத்ரி உதவியாளர்கள் வாங்கி வந்து தருவாங்கதான் ! நான் சொல்வது அட்மிஷன் போடும்போது ஒரு தண்ணீர் பாட்டிலை அறையில் வைக்கலாமே என்பதே !

said...

எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும். ஆஸ்பத்திரி அனுபவங்கள் கடினம் தான்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இந்த அனுபவங்கள் எல்லாம் தவிர்க்க முடியாதவைகளாப் போயிருதே !!! :-(

said...

சற்று உடல் தேறியது ஆசுவாசமாக இருந்திருக்கும்.