Monday, May 23, 2022

பண்டிகைப் பலகாரம் செய்ய வேணாமா ?

உண்மையில் சமைக்கிறதொன்னும் அவ்வளவு கஷ்டமில்லை. 
 
ஹா.... அப்ப எது கஷ்டம் ? 
 
என்ன சமைக்கணுமுன்னு யோசிக்கிறதுதான் ரொம்பவே கஷ்டம்....
இதென்ன இந்தியாவா, சிங்கப்பூரா இல்லை அமெரிகாவா....  குறைஞ்சபட்சம் ஃபிஜி ? 

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர்,  உருளைக்கிழங்கு, பீன்ஸ்ன்னு  ஒரு நாலைஞ்சு வகைகளை வச்சே.... வாரம் ஏழுநாளும் சமைக்கணுமுன்னா....  ப்ச்....  (ஏதோ சீனவன் புண்ணியத்தில் பெங்களூர் கத்தரிக்காய், பாவைக்காய், பூசணின்னு எப்பவாவது  கிடைக்குது ) 

வீட்டுத்தோட்டத்தில் சில காய்கறிகளைப் பயிர் செஞ்சுக்கறோம். அதிலும் நிறைய வகைகள் எல்லாம் இல்லையாக்கும்.....    இந்தக் குளிரில் எங்கே நல்லா விளையுது ? சுரைக்காய்ச் செடி ஒன்னு சீனக்கடையில் வாங்கி நட்டுவச்சதில் பூ விட்டுருக்கு. சின்னப்பிஞ்சுகளும்! 
வீட்டுலே என்ன இருக்குன்னு பார்த்து என்ன சமைக்கப் போறோமுன்னு முடிவு பண்ணுவது சிரமம்தான். நேத்து என்ன செஞ்சோம், அதே காய் ரிப்பீட் ஆகாம இன்னைக்கு வேறென்ன செய்யலாம், குழம்பு என்ன வைக்கலாம், கூட்டு வேணுமா.... இல்லை எதாவது பொரியல்/ கறி போதுமா ? காரம் போட்டதா.... இல்லை போடாததா..... , சோறா இல்லை சப்பாத்தியா?  அது இதுன்னு   ஏகப்பட்ட தலையிடி. 
இதுலே பாருங்க.... நேத்து சமையல் என்னன்னு ஃப்ரிட்ஜ் திறந்து பார்த்தால் ஓரளவு பிடிகிட்டும்:-)  முந்தாநாள் ? சுத்தமா மறந்து போயிருது. கல்யாணம் ஆன புதுசுலே வந்த சண்டை எல்லாம்  எல்லா டயலாகோடு நினைவு இருக்கும் போது முந்தா நேத்து சமாச்சாரம் எப்படி மறந்து போகுதுன்றது..... அதிசயத்திலும் அதிசயம் !!!!

நல்லவேளை காலையில் டிஃபன் செஞ்சு கொடுக்கும் பழக்கம் எப்படியோ நின்னு போச்சு....  இல்லைன்னா என்ன டிஃபன் செய்யறதுன்னு அதுக்கொருக்கா  மண்டையைப் பிச்சுக்கணும். மாவு அரைப்பதும், முக்கியமா அதைக் கொஞ்சமாவது புளிக்க வைப்பதும் ஒரு சாலஞ்சுதான்.

 வெயில்காலம்னு வரும்போது.... அதுவும் மறுநாள் நல்ல வெயில், 27 இல்லை 28 டிகிரி வரை போகுமுன்னு  வெதர் ரிப்போர்ட் வந்தால்தான்  இன்னைக்கு  ராத்திரி அரிசியை ஊறவைக்கணும். பொழுது விடிஞ்சாட்டு உளுந்து ஊறவச்சால் போதும். 
அபூர்வமா என்னைக்காவது நல்ல வெயில்  வந்து , மாவு அரைச்ச நாளே மாவு புளிச்சுப் பொங்கி வர்றதெல்லாம் 'அவன்' அருள் !  பொதுவா நம்ம வீட்டில் இட்லி, தோசை எல்லாம்  ராச்சாப்பாட்டுக்குத்தான். 

R & D, Planning, Work order  எல்லாம் சமையலுக்கும் வேணும் !

பலகாரம் செய்யலாமுன்னு தோணுச்சுன்னு கொஞ்சம் சக்கரைப்பொங்கல், இட்லி, வடை, மூணு சட்னி வகைகள் ( தக்காளி, தேங்காய், கொத்தமல்லி ) தூத்பேடான்னு செஞ்சு வச்சேன். அப்புறம் இன்னும் சிலவகைகளா தோசை, இடியப்பம், ஹல்வா, ஜாங்கிரி, முறுக்குன்னு மொத்தம் பனிரெண்டு வகை.  மனசுக்குத் திருப்தியா இருந்தது :-)
யோகா குழு மக்கள் பார்த்துட்டு, இதோ கிளம்பிவர்றோமுன்னு சொன்னாங்க :-)

பாலி  ஐட்டம்ஸ் விற்கும் கடையில் நமக்கு ஒரு புள்ளையார் கிடைச்சார்.  பாலியில் இருந்து அனுப்பி வைப்பவர்களும் சரி,  கடைக்காரருக்கும் சரி, விற்பனை செய்யும் மக்களுக்கும் சரி.... யாருக்கும் கவனமே போதாது. சாமி என்ற உணர்வு இருந்தால்தானே ? எதோ கைவினைப்பொருட்கள், அலங்காரபொம்மைகள் என்ற எண்ணம்தான். எதையெடுத்தாலும் அதுலே சின்னதா ஒரு பழுது இருக்கும். இப்பெல்லாம் நான் ரிப்பேர் பண்ணறதில் நிபுணத்துவம் அடைஞ்சாச் :-)  செஞ்சபலகாரங்களைப் புதுப்பிள்ளையாருக்கு நிவேதனம் செஞ்சதும் அவருக்கும் திருப்தி :-)
மகள் தானம் கொடுத்த கள்ளியில் முதல்முறை பூ வந்தது!  சின்னதா ஒரு மொட்டு வர ஆரம்பிச்சுச் சரியா ஒரு  ஒன்னரை மாசம் ஆனதும்  பெருசாப் பூக்கும் பூவின் வாழ்க்கை வெறும் ரெண்டே நாட்கள் ! ஆனால் நல்ல அழகு !   நிலையாமைக்கு  எடுத்துக்காட்டு !





இதுக்கிடையில் நம்மூர் மால்கள்தான் க்றிஸ்மஸ் அலங்காரங்களோடு ஜமாய்ச்சுக்கிட்டு இருக்குதுங்க. ஒவ்வொன்னும் ஒரு விதத்தில் அழகு !  அடுத்த பேட்டை மாலுக்குப் போயிட்டு வரும்போது நம்மூட்டு சாண்ட்டா, ஒரு சாண்ட்டா வாங்கித்தந்தார்.  நம்மூட்டுக்கு அலங்காரத்துக்குத்தான்!  



"ஸாண்ட்டா.... என்பவர் நீர்தானோ ? "

"எஸ் ரஜ்ஜூ !  ஹௌ ஆர் யூ ?"


12 comments:

said...

பன்னிரண்டு வகைகளும் பார்க்க சூப்பர். ஆமாம்..ஒண்ணே ஒண்ணுதானா? ஒருவேளை பிள்ளையார் நிஜமாக வந்து எல்லாவற்றையும் சுவாஹா செய்திருந்தால்? (அவருக்கே போதாமலிருந்திருக்கும்)

said...

படங்கள் பிரமாதம். அதுவும் கடைசி படம் ரொம்ப ரொம்ப...

said...

புதுப் பிள்ளையார் அழகாக இருக்கிறார். ஆசீர்வாதம் பெற்றோம் .

இந்த கக்ராஸ் எங்கள் வீட்டிலும் உண்டு அழகிய மலர்தான் இரு நாள் வாழ்வு.

said...

ஆஹா எல்லா ஐட்டமுமே பார்க்கவே ஸ்ஸ்ஸ்ஸ் என்று சொல்ல வைக்கிறதே.

வகை வகையா காய் கிடைக்கற இங்கயே எங்களுக்குத் தலை பிச்சிக்கிறதா இருக்கு என்ன செய்யலாம்னு ...

சான்டா சூப்பர் அதுவும் ரஜ்ஜு போலவே ஸ்பர்!!!! ரஜ்ஜு அதான் என்னடா இது நம்மைப் போல யாரு இது மாறுவேஷத்துலன்னு பாக்குறானோ!!! ரசித்தேன்

கீதா

said...

சுரைக்கா நல்லாருக்கு இங்கயும் இதே சுரைக்காயும் கிடைக்கிறது...

கீதா

said...

Where is my comment?!

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

தட்டுலே விளம்பியதையே 'அவர்' இன்னும் சாப்பிடலையாக்கும் !

said...

வாங்க ஸ்ரீராம்,

ரஜ்ஜுவுக்கும் ஸான்ட்டாவைப் பிடிச்சுப்போச்சே !

பின்னூட்டம் காக்கா ஊஷ் ஆகிருச்சோ...... ஹாஹா... மீட்டுக்கொண்டு வந்தாச்.

said...

வாங்க மாதேவி,

இதே கடையில் இன்னொரு பிள்ளையாரும் வாங்கினோம். க்ளோஸிங் டௌன் ஸேலில். அப்புறம் பார்த்தால் கடையை வேறிடத்துக்கு மாற்றிட்டாங்க. அங்கேதான் இவர் அகப்பட்டார்.

அழகான மென்மையான மலர். மலரும் முன் இருக்கும் மொட்டு, கூடுதல் அழகு !

said...

வாங்க கீதா,

படத்தில் இருக்கும் காய் ஸூக்கினி.

said...

அழகான கொண்டாட்டங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. படங்கள் வழமை போல அழகு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசித்தமைக்கு நன்றி !