Wednesday, March 23, 2022

தீபாவளியும் புதுப்புடவையும் !

இதோ அதோன்னு தீபாவளிப்பண்டிகை வந்தே வந்துருச்சு.  'நம்மவர்' சித்தாள் வேலை செஞ்சுக்கிட்டு வெளியே தோட்டத்தில் இருந்த சமயம், நானும் நம்ம கைவரிசையைக் காட்ட நினைச்சேன்.  பண்டிகைக்கு ஏதும் பலகாரம் செய்யணுமா இல்லையா ?  இப்பெல்லாம்  புதுசா ஒரு கைவலி வந்துருக்கு.  இடதுகைப் பெருவிரல் கீழே ஒரு கொழுக்கட்டை.  அந்தக் கையில் ஏதும் கனமானதைத் தூக்கவோ,  அழுத்தம் கொடுக்கும் வேலைகளைச் செய்யவோ முடியறதில்லை.  முறுக்கெல்லாம் பிழியவே முடியாது...  கெட்டதில் நல்லதுன்னா..... வலி இடது கையில்.  வலது கையில் மட்டும் வந்திருந்தால்.... ஐயோ.... நினைக்கவே முடியாது. பாகப்பிரிவினைதான்...  நான் சினிமாவைச் சொல்றேன் :-)
நம்மவரும்... 'இனி ஒன்னும் செய்ய வேணாம். எதாவது இனிப்புகளைக் கடையில் வாங்கினால் ஆச்சு'ன்றார்.  மனசு கேக்குதா ?   கைகளுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் என்னன்னு நானே சிந்திச்சு (!) பாதுஷா பண்ணிக்கலாமுன்னு நினைச்சேன்.  இது நம்மவருக்குப் பிடிக்கும் இனிப்பு வகை. ஓரளவு சுமாரா நல்லாவே வந்துருச்சு!
இதன் கூடவே கொஞ்சம் அச்சு முறுக்கும் செஞ்சால்  போதும்.  நம்ம மலேசியத்தோழி  ஒருவர் இந்த அச்சைப் பரிசாகக் கொடுத்தே ஆச்சு ஒரு இருபது  வருஷம். மாவில் அச்சை முக்கி எடுத்து சூடான எண்ணெயில் வச்சால் ஆச்சு. இல்லையோ ?  நினைப்புத்தான்... பொழைப்பைக் கெடுக்குது இல்லே....
யூ ட்யூபில் பார்த்துட்டு மாவெல்லாம் ரெடி பண்ணிட்டு எண்ணெய் சூடானதும்  அச்சை  அதிலேயே கொஞ்ச நேரம் வச்சுருந்தபின், மாவிலே முக்கி எடுத்துத் திரும்ப எண்ணெயில் வச்சாச்.  படத்துலெ காமிச்சதைப்போல அது தானாகக் கழண்டு வரவே இல்லை.....  கரிஞ்சுபோய் ஒட்டிப்பிடிச்சே கிடக்கு.  அதைச் சுத்தம் செய்ய ரொம்பவே கஷ்டப்படவேண்டியதாப் போச்சு... ப்ச்.
இப்ப கலக்கின மாவை என்ன செய்யறது ? இன்னும் கொஞ்சம்  அரிசி, உளுத்தம்மாவு, எல்லாம் கலந்து கொஞ்சம் லூஸாவேப் பிசைஞ்சு  முறுக்குப் பிழிஞ்சு எடுத்துட்டேன். கைவலியோ உயிர் போகுது. ஆள் உள்ளே வர்றதுக்குள்ளே அவசர அவசரமா வேலையை முடிச்சுறணும்.  நம்மவருக்குத் தெரிஞ்சால் அவ்ளோதான்....  சண்டை ஆரம்பிச்சுரும்.... 'உன்னை யாரு இதெல்லாம் செய்யச் சொன்னா?' ன்னு. என்னவோ இவர் சொல்றதை மட்டுமே  நான் இத்தனை வருஷமாக் கேட்டு நடந்த மாதிரி :-) 
எப்படியோ இனிப்பு முறுக்கு பண்ணிட்டேன்னு வையுங்க !  புது ஐட்டம் !





சாமி அறையைச் சுத்தம் செஞ்சு, மூலவர்களுக்கெல்லாம் புது  வஸ்திரம் போட்டுவிட்டு, நம்ம ஜன்னு க்ருஷுக்கும் புது உடுப்பு  போட்டுன்னு கொஞ்சம் வேலைகளை முடிச்ச  கையோடு, வீட்டு ஃபோயரில் கொஞ்சம்  அலங்காரமும் செஞ்சேன். துணைக்கு இருந்தது நம்ம ரஜ்ஜுதான் !




மறுநாளைக்கு  வேணுமேன்னு பட்டாஸ் பொட்டியை எடுத்துப் பார்த்தால் ஓரளவு இருக்கு. எல்லாம் இது போதும்.  காலையில் இந்தியன் கடையில் பட்டாஸ் விற்பனைன்னு தகவல் தெரிஞ்சதும் போனோம்தான். எல்லாம் பத்து யானை விலை.  சின்னதா ஒரு பெட்டி இருநூறு டாலராம்.  தண்டம் பண்ண வேணாம். வீட்டுலே போன வருஷ பாக்கி இருக்குன்னுட்டேன். ஒரு சாஸ்திரத்துக்கு ரெண்டு கொளுத்தினால் ஆகாதா ?  வழக்கமா இந்த  கைஃபாக்ஸ் சீஸனில் (நவம்பர் மூணு முதல் அஞ்சு வரை)பட்டாஸ் விற்கும் கடையில், இந்த வருஷம் கோவிட்டை  முன்னிட்டு  இறக்குமதி செய்யலை.  எல்லாம் எங்கிருந்து வருதுன்றீங்க ? கோவிட்  உற்பத்தி எங்கேயோ.... அதே இடத்தில் இருந்துதான்.  

வீட்டுக்கு வரும்வழியில்  வேறொரு  இந்தியன் கடையில் கொஞ்சம் இனிப்பு  & உப்பு  வகைகளை வாங்கி வந்தோம்.



தீபாவளியன்று காலையில்  கங்கா  ஸ்நானம் ஆனதும் , பிரஸாதம் செஞ்சேன். மாம்பழ பாதாம் கேஸரி. புதுப்புடவை, வேஷ்டி, பட்டாஸ் எல்லாமும் படைச்சாச். மஹாலக்‌ஷ்மியும் வந்து உக்கார்ந்தாள்.  ரஜ்ஜு வந்து நமஸ்காரம் பண்ணினான். செல்லம்.  அப்பதான் அந்த ஜேம்ஸும் வந்து ஃபென்ஸ் வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருந்தார். 
நாங்களும் பூஜையை முடிச்சுட்டு,  நம்ம சநாதன் ஹாலுக்குக் கிளம்பிப்போகும் வழியில் நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கும் போனோம்.  சந்நிதி திறந்திருக்குமோ இல்லையோன்னு போனால்  நல்ல தரிசனம் கிடைச்சது.  





அடுத்த இருபதாவது நிமிட், சநாதன் ஹாலுக்குப் போயாச்சு. அப்பதான் நம்ம ஆஞ்சிக்கு அபிஷேகம் முடிச்சுப் புது வஸ்த்ரம் அணிவிக்கிறார் நம்ம பண்டிட். 
புதுக்கொடி ஏத்தியதும், நாமும் கும்பிட்டுக்கிட்டு ஹாலுக்குள்ளே போனோம். தீபாவளிப் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்குது. மேடையில் பஜனை கோஷ்டி.  இன்னும்  மக்கள்ஸ் யாரும் வரலை. பக்தர்களா நாங்க ஒரு நாலைஞ்சுபேர். லேடீஸ் மூவர்.  மக்கள் அவுங்க வீட்டுப்பூஜைகளை முடிச்சுக்கிட்டு வருவாங்க.  சாயங்காலம் நல்ல கூட்டம் இருக்கும்.




நாம் போகப்போறதில்லை.  மகளும் மருமகனும் வர்றாங்க தீபாவளி விஸிட்.   விருந்து ? இருக்கு..... எல்லாம் மருமகனுக்குப் பிடிச்ச ஐட்டங்கள். தஹிபுச்கா, பேல் பூரி, எலுமிச்சை சாதம்.  எல்லாம் தயாராக்கி  வச்சுருந்தேன். தீபாவளிப்பரிசாக மகள் ஒரு க்றிஸ்டல் கேண்டிலும்,  மருமகன் ஒரு விளக்குச் சரமும் கொடுத்தாங்க.  எல்லாம் ஒளி மயம் ! 



விருந்து முடிஞ்சதும் தோட்டத்தில் போய் பட்டாஸ் கொளுத்தினோம். மாமனாரும் மருமகனும்தான் இதுலே மும்முரம்.  ரஜ்ஜுவை அறையில்  வச்சுட்டுக் கதவை சாத்திட்டுதான்.  பயந்தாங்குளி. இருட்டில் ஓடிப்போயிட்டால்  நமக்குக் கஷ்டம். இத்தனைக்கும் இங்கே வெடிக்கும் சமாச்சாரமெல்லாம்  பட்டாஸ் வகைகளில் வராது.  வெறும் ஒளி மட்டுமே. சிலது மட்டும் மேலே போகும்போது 'உய்...'.னு ஒரு சத்தம் போடும். அதுக்கே பயந்துருவான்.  இங்கத்து RSPCA  இந்தப் பட்டாசுகளைத் தடைசெய்யணுமுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.  அநேகமா  நடக்கும். அதனால்  நம்ம ஸ்டாக்கில் இருப்பதில் பாதியைக் கொளுத்திட்டு  மீதியை அடுத்த வருஷத்துக்கு வச்சுக்கணும்.  வச்சாச். 

https://www.facebook.com/1309695969/videos/433630228126674/

அப்புறம்  வீட்டுக்குள்ளே வந்து  மகள் & மருமகனுக்கு ஆரத்தி எடுத்து, தீபாவளி சீர்  கொடுத்தாச்.   
அவுங்க கிளம்பிப் போனதும்  நாமும் படுக்கைக்குப் போகலாமுன்னு  விளக்குகளை எல்லாம் அணைக்குமுன், சாமி நமஸ்காரம் பண்ணப்போனால்....  தட்டில் புடவையும் வேஷ்டியும் தேமேன்னு உக்கார்ந்துருக்கு.  வழக்கம்போல் இந்த தீபாவளிக்கும் புதுசு கட்டிக்கலை. 







8 comments:

said...

பட்சணத்தைவிட அவற்றை வைத்திருந்த இலைத்தட்டு மிக அழகாக இருக்கு.

மகள் மருமகன் தீபாவளி விஜயம் நன்று... மெனுவும் நல்லாவே இருக்கு

said...

ரஜ்ஜு நிஜமாகவே நமஸ்காரம் செய்வானா?!! எல்லவற்றையும் மேற்பார்வை செய்வது தெரிகிறது!

said...

தீபாவளி கொண்டாட்டங்களும் தகவல்களும் நன்று. படங்கள் அனைத்தையும் ரசித்தேன். எல்லா நாளும் தீபாவளிதான்!

said...

//என்னவோ இவர் சொல்றதை மட்டுமே நான் இத்தனை வருஷமாக் கேட்டு நடந்த மாதிரி // ஹாஹாஹாஹாஹா

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

இலைத்தட்டு ஒரு Placemat தான்.

said...

வாங்க ஸ்ரீராம்,

ரஜ்ஜு ஒரு ஞானி ! பக்தி ம்யாவ் !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நமக்கு எல்லா நாளும் தீபாவளியேதான் :-)

said...

வாங்க விஸ்வநாத்,

தட் இஸ் த பாய்ண்ட் :-)