Saturday, March 19, 2022

இப்பத் தங்க ஜல்லடை வேணுமே......

இந்த ஹாலோவீன் விழாவுக்கிடையில்  வந்த இன்னொரு முக்கியமான  சமாச்சாரத்தைச் சொல்ல மறந்துட்டேன் பாருங்க.....

வடக்கர்களுக்கான  சாவித்ரி விரதம். நம்ம காரடையான் நோம்புதான். ஆனால் கதை வேற !



























பண்டிகைக்கான முக்கிய ஐட்டமா இருப்பது பூஜைத்தட்டும், விளக்கும்,  தீர்த்தம் வச்சுக்கும் சின்னச் சொம்பும் கூடவே ஒரு ஜல்லடையும் !
இந்தக் கொரோனா காரணம்  நாட்டின் எல்லைகளை மூடிட்டதால்   ஊருக்குப்போய், பூஜை சாமான்களையெல்லாம் வாங்கிவர முடியலை. போனவருஷத்துப் பொருட்கள் இல்லையான்னு கேட்கப்டாது.... புதுக்கல்யாணம் முடிச்சவங்ககிட்டே இருக்காதில்லையா ?

இப்பக் கொஞ்சநாளா,  வடக்கர் பெண்கள் சிறுதொழில் அதிபர்களா மாறிக்கிட்டு இருக்காங்க இங்கே!  வீட்டில் இருந்துக்கிட்டே சின்ன வியாபாரங்கள். சாப்பாடு செஞ்சு தர்றோமுன்னு  ஆரம்பிச்சவங்கதான் பலரும். வீட்டுக்குச் சப்பாத்தி  செய்யும்போதே கூடக் கொஞ்சம் சேர்த்துச் செஞ்சால் ஆச்சுன்னு....

நாலு சப்பாத்தியும் ரஜ்மா கறியோ, இல்லை  பனீர் சேர்த்த எதாவது குருமா வகைகளோ,  இல்லை தாலோ ஏதோ ஒன்னு பத்து டாலர்னு  ஃபேஸ்புக்கில் நியூஸி  இண்டியன் க்ரூப்லே விளம்பரம் போட்டுக்கிட்டே இருக்காங்க.  இதெல்லாம் நம்மவர்தான் பார்த்துச் சொல்வார். நான் இந்த க்ரூப்கள் எதிலும் இல்லை....

சமைக்கக் கஷ்டப்படாதே... பத்து டாலருக்கு வாங்கிக்கலாம்னு சொல்வார் :-)  இருக்கட்டும். நான் பெருமாளாண்டை  போனதுக்கப்புறம்  ஜமாய்ங்கன்னுருவேன்.  சாப்பாடு இல்லாமல் டிஃபன் ஐட்டங்களும் உண்டு.  சமோஸா... சமோஸா.  கொஞ்சநாளுக்கு முன்னே ஒருத்தர் 30  இட்லி இருக்குன்னு விளம்பரம் போட்டார். வீட்டுக்குச் செய்யும்போது அதிகமாச் செஞ்சுட்டாராம். இட்லி மட்டுமே. சட்னி சாம்பார் எல்லாம் கிடையாதாம்.  இன்னும் இட்லி உப்புமா அவருக்குத் தெரியலை போல. இல்லைன்னா இட்லி மஞ்சூரியன் ? 

இப்ப சாப்பாடு மட்டுமில்லாம துணிமணி வகை, நகைநட்டு(! )  இன்னும் சிலபல சிறுவியாபாரிகள் பெருகி இருக்காங்க.  அவுங்கெல்லாம் ஒன்னு சேர்ந்து  கர்வாச்சவுத் மேளான்னு ஒருநாள்  உள்ளூர் சர்ச் ஹாலில் நடத்துனாங்க. வழக்கம்போல் எனக்கு விசேஷ அழைப்பு வேற !

அன்றைக்குச் சனிக்கிழமையா இருந்துச்சுன்னு  நாம் வழக்கமாப் போகும் கோவில் விஸிட்டை  முடிச்சுக்கிட்டு  கொஞ்சம் லேட்டாத்தான் சர்ச் ஹாலுக்குப் போனோம்.  ஓரளவு நல்ல கூட்டம்தான்.  மெஹந்தி போட்டுவிடறது  முக்கியமா இருந்தது. வளையல்கள், கைப்பைகள், நகைநட்டுகள், பூஜை சாமான்கள், (ஜல்லடையும் இருந்தது)அலங்காரச் செருப்புகள், தீனி வகைகள்னு  பலதும்..... 
கலை நிகழ்ச்சிகளா பெண்கள் தூள் கிளப்பிக்கிட்டு இருந்தாங்க.  மீனா பஸார்னு சொல்லலாம் :-)

உள்ளூர் கவுன்சிலர் (நம்ம தோஸ்துதான்) கம்யூனிட்டி ரேடியோ  நடத்தும்  நபர்கள் (ஹைய்யோ... இவுங்களும் நம்ம தோஸ்துகளே ) மற்ற அனைவரும் தெரிஞ்சவுங்களும் நண்பர்களுமாவே இருந்தாங்க. 

அடுக்களையில் சுடச்சுட சமோஸா, சூப், சிப்ஸ்ன்னு தீனி வேற செஞ்சு அந்த விற்பனை வேற பயங்கரமா நடந்துக்கிட்டு இருக்கு !

நானும் தங்க ஜல்லடை இருக்கான்னு தேடிட்டு,  க்ளட்ச் பேக்னு ஒரு  பை மட்டும் வாங்கினேன்.

போனாப்போகட்டும்.... நாமும் விரதம் இருக்கலாம்னு நினைச்சாலும் தங்க ஜல்லடை கிடைக்காததால் இதுவரை விரதம் இருக்கலை. ப்ச்.... நம்மவருக்குக் கொடுத்துவைக்கலை....  நான் விரதம் முடிச்சதும்  தங்க ஜல்லடை மூலம் காட்சி கொடுக்க .....

மறுநாள்தான்  விரதநாள். நம்மூர் ஹரே க்ருஷ்ணா கோவிலில்தான்  கதை சொல்லி பூஜையை நடத்துவாங்க தோழிகள். 

கதை கதைன்றேனே   என்னவாம் ?

இதோ..... இதுதான்.  2005 ஆம் வருஷம் எழுதுனது.....  அதே கதைன்றதால் இன்னொருக்க எழுதணுமா என்ன ? 

 ஹிந்தி சினிமாக்களிலே 'நல்ல குடும்பப் படமு'ன்னா கட்டாயமா ஒரு 'ஸீன்' இருக்கும் இப்படி. நல்ல ஆடைஅலங்காரத்தோட
ஒரு தட்டுலே பூஜைசாமான்கள் குறிப்பா ஒரு அகல்விளக்கு எரிஞ்சுக்கிட்டு இருக்கும், அதைவச்சுக்கிட்டு ஆடிப்பாடி
ஒரு சல்லடையாலே நிலாவைப் பாப்பாங்க. அதுக்கப்புறம் அந்தச் சல்லடையை அப்படியே திருப்பி அவுங்கவுங்க
கணவனைப் பாக்கறமாதிரி 'சீன்' வருமுல்லே.

அது ஒரு விரதம். அதுக்குப் பேர் 'கர்வா ச்சவுத்'ன்றவரைக்கும்தான் எனக்குத் தெரியும். நாலுநாளைக்கு முந்தி,வட இந்தியத்தோழி
ஒருத்தர், 'இங்கே நம்ம ஊர்லே முதல்முறையா இந்த விரதத்துக்குள்ள பூஜையை நம்ம ஹரே கிருஷ்ணா கோயிலிலே
செய்யப்போறோம். நீங்க கட்டாயம் வரணுமு'ன்னு சொன்னாங்க. 'எங்களுக்கு இந்த விரதம் இல்லையே'ன்னு சொன்னேன்.
'ஆனா இதைப் பத்தித் தெரியும்தானே?'ன்னு கேட்டப்ப 'ஆங்... சினிமாவுலே பார்த்திருக்கேன்'னும் சொன்னேன். இப்ப
நேரிலே பார்க்க ஒரு ச்சான்ஸ். விடமுடியுமா? ச்சலோன்னுட்டு நேத்துச் சாயங்காலம் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அங்கே சுமார் ஒரு நாப்பதுபேர் வட்டமா உக்காந்திருந்தாங்க. எல்லார் முன்னாலேயும் ஒரு தட்டு. அதுலே ஒரு
விளக்கு எரியுது. பழம், வளையல், சில்க் கைகுட்டை இப்படி என்னவோ இருக்கு.கூடவே தட்டு பக்கத்துலே
ஒரு ச்சின்னச் சொம்பு( லோட்டா). வட்டத்துக்கு நடுவிலே கொஞ்சம் பழக்குவியல்.

கூட்டத்துலே இருந்த வயதுலே மூத்தவங்களான ஒருத்தர், பூஜைய ஆரம்பிக்கலாமுன்னு சொல்லி, கதையச்
சொன்னாங்க. ( கதை பின்னாலே வருது, பொறுங்க)

சொல்லிக்கிட்டு இருக்கப்பவே அப்பப்ப நிறுத்தி ஒரு பாட்டுப் பாடுனாங்க.அப்ப அவுங்கவுங்க முன்னாலே இருந்த தட்டை உயர்த்திக்
கும்பிட்டுட்டு அதை வலப்பக்கமா அடுத்தவங்களுக்குக் கொடுத்தாங்க. இப்படி எல்லாத்தட்டும் வலம் வருது. அவுங்கவுங்க தட்டு
அவுங்கவுங்களுக்கு வந்து சேர்றவரை அந்தப் பாட்டு ரிப்பீட்டு. ஒரு சுத்து முடிஞ்சதும் கதையைத்
தொடர்ந்து சொன்னாங்க. அப்புறம் தட்டுவலம் + பாட்டு. இப்படியே ஏழுமுறை ஆச்சு. சிலர் பாதியிலே வந்து சேர்ந்துக்கிட்டாங்க.
எல்லாருக்கும் ஏழு முடிஞ்சப்ப இவுங்களுக்கு ரெண்டு மூணுமட்டும் முடிஞ்சிருந்ததாலே அவுங்க தட்டைமட்டும் பாடிக்கிட்டே
வலம்வரச்செய்து அவுங்களுக்கும் ஏழு முடிச்சாங்க.

நமக்குத்தான் தட்டு இல்லையே. அதனாலே என்னைக்கடந்துபோற தட்டுங்களை ஒவ்வொண்ணாக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன்.
ஒவ்வொன்னும் ஒரு வகை. மண்அகல்விளக்கு, மாவுலே செஞ்ச விளக்கு, பித்தளை விளக்கு, சிலது ஆயில் பர்னருக்கு வைக்கிற
டீ லைட் கேண்டில் இப்படி.
பழமும் வாழை, ஆப்பிள், ஆரஞ்சு இப்படி ரகம்ரகம்.
சிலதட்டுலே என்ன இருக்குன்னே தெரியாம துணியாலே மூடி இருந்துச்சு.
ரெண்டு மூணு தட்டுலே ச்சின்னதா பூரி ஒண்ணு.

லேடீஸ் எல்லாம் நல்ல அலங்காரமா வந்திருந்தாங்க, நகையும் நட்டுமா! சிலருக்கு மூக்குத்தி வேற( எல்லாம் ஒட்டு மூக்குத்திதான்!).
ஆனா எல்லாருக்கும் கலர்கலரா கைநிறைய வளையல்கள்.

பூஜை ஆறுமணிக்கு முடிஞ்சது. இப்ப இங்கெ 'டே லைட் சேவிங்' இருப்பதாலே உண்மையான நேரம் அப்ப அஞ்சு
மணிதான். இவுங்கல்லாம் காலையிலே சூரியன் வரமுந்தியே குளிச்சுச் சாப்பிடணுமாம். அதுக்கப்புறம் தண்ணிக்கூடக்
குடிக்காம விரதம் இருந்து சாயங்காலமா நிலா வந்தபிறகுதான் அதைப் பார்த்துட்டுச் சாப்புடணுமாம். சிலர் சல்லடையாலே
பார்ப்பாங்களாம். சிலர் தட்டுலே தண்ணீர் நிறைச்சு அதுலே பிரதிபலிக்கிற சந்திரனைப் பார்ப்பாங்களாம்.

நம்ம நவராத்திரி பண்டிகை முடிஞ்சு பவுர்ணமி வருதுல்லே. அது கழிஞ்ச தேய்பிறை நாலாம்நாள் சதுர்த்திதான்
இந்த விரதம். கர்வான்னா ஒரு (மண்) சொம்பு. ச்சவுத் நாலாம்நாள்.


இதோ கதை.



ஏழு அண்ணன்மாருக்கு ஒரே ஒரு தங்கச்சி இருந்தாங்களாம். தங்கச்சியைக் கல்யாணம் செஞ்சு கொடுத்தப்பிறகு, ஒரு விரதநாள் வந்துச்சாம். இது கல்யாணமான பொண்ணுங்க கடைப்பிடிக்கவேண்டிய விரதமாம்.
இந்த விரதம் எடுக்கறதுக்காக தங்கச்சி, தாய் வூட்டுக்கு வந்திருக்கு.

காலையிலிருந்து ஒண்ணும் சாப்புடாம தங்கை விரதம் இருக்காங்களாம். ராத்திரிக்கு நிலா வந்தபிறகு அதைப் பார்த்துட்டுத்தான் விரதம் முடிக்கணுமாம். அருமைத்தங்கச்சி இப்படிப் பட்டினி கிடக்கறதைப் பார்த்துப் பொறுக்கமுடியாமப் போச்சாம் இந்த அண்ணனுங்களுக்கு. என்னடா செய்யலாமுன்னு யோசிச்சுப் பார்த்துட்டு, பக்கத்துலே இருந்த மலை உச்சியிலே போய் கொஞ்சம் தீ கொளுத்துனாங்களாம். அந்த வெளிச்சம் தெரிஞ்சப்ப, தங்கச்சிக்கிட்டே நிலா வந்துருச்சு பாரு, அந்த வெளிச்சம்தான் தூரத்துலே தெரியுதுன்னு காமிச்சாங்களாம்.

தங்கச்சியும் சரி, இது நிலாவெளிச்சமுன்னு நம்பி, விரதத்தை முடிச்சுக்கிட்டுச் சாப்பாடு சாப்புட்டுட்டாங்களாம்.

அங்கே ஊர்லே தங்கச்சி புருஷனுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம செத்துடறார். காரணம்?விரதத்தைச் சரியா முடிக்காம பாதியிலே விட்டது.
இந்த விவரம் தெரியாத தங்கச்சி புருஷனுடைய ஊருக்குஓடறாங்க. அப்ப வழியிலே நம்ம பார்வதி பரமேஸ்வரனைப்
பாக்கறாங்க. அழுதுகிட்டே இந்த நிலைவந்ததுக்குக் காரணம் கேட்டப்ப, பார்வதி சொல்லிட்டாங்க, நீ இந்த விரதத்தைச் சரியாச் செய்யலேன்னு. அப்பத்தான் தங்கச்சிக்கு விளங்குது இந்த அண்ணன்மாருங்க செஞ்ச சதி.

பார்வதி & பரமேஸ்வரங்கிட்டே மன்றாடுறாங்க, இது அவுங்க( தங்கச்சி) செஞ்ச பிழையில்லேன்னு. மனம் இரங்குன சாமிங்க, 'உன்புருஷனுக்கு திரும்ப உயிர் தரோம். ஆனா சீக்காளியா இருப்பான்'னு சொல்லிட்டாங்க.

ஆமாம், தங்கச்சி தங்கச்சின்னே சொல்லிக்கிட்டு வரேன்லெ. பொண்ணு பேரு வீராவதி. அதோட புருஷந்தான் பக்கத்தூரு ராஜா. வீராவதி அங்கே போய்ச் சேர்ந்தப்ப, ராஜா மயக்கமா கிடக்குறாரு. உடம்பெல்லாம் ஒவ்வொரு
மயிர்க்காலிலும் முள்ளுமாதிரி ஒண்ணு குத்தியிருக்கு. வீராவதி அழுதுக்கிட்டே ஒவ்வொருமுள்ளா எடுத்துப் போட்டுக்கிட்டுப் பக்கத்துலேயே
உக்காந்திருக்காங்க. நாளு ஒண்ணொண்ணாக் கடந்துபோகுது. அப்ப அடுத்த வருசம் விரதம் இருக்கற நாளு வந்துருது. இந்தவருசம் கட்டாயம்
நியமப்படி விரதம் இருந்து புருஷன் நல்ல சுகமாவறதுக்காக சாமி கும்புடணுமுன்னு தீர்மானிச்ச வீராவதி, தாதியைக் கூப்பிட்டுப் புருஷனைப்
பார்த்துக்கச் சொல்லிட்டு பூசைக்கு வேண்டிய 'கரவா'ன்னு சொல்ற மண்சொம்பு வாங்கக் கடைக்குப் போனாங்க.

ராஜா உடம்புலே அப்பப்ப எடுத்த எல்லா முள்ளும் போக ஒரே ஒரு முள் பாக்கி இருக்கு. தாதி அதைப் பிடுங்கிப் போட்டுருது. ராஜா மயக்கத்துலே இருந்து கண் முழிச்சுடறார். பக்கத்துலே இருந்த தாதியைத் தன் மனைவின்னு(!) நினைச்சுகிடறார். இந்தத் தாதியும் ஒண்ணும் சொல்லாம நைஸா இருந்துருது. வீராவதி விரதம் முடிச்சுட்டு வந்து பார்த்தா, ராஜாவும் தாதியும் சந்தோஷமா இருக்காங்க. வீராவதிக்குத் துக்கம் தாங்கலை. அந்த வீட்டுலே இது இப்பத் தாதியா இருக்கு.

இப்படியே ரொம்பநாளாயிருச்சு. ஒருசமயம் ராஜா, ஊருக்குப் போறார். எதாவது வேணுமான்னு மனைவியை( பழைய தாதி) கேக்கறாரு. அந்தம்மா பெரிய லிஸ்ட்டா கொடுக்குது. சரி, இந்த வேலைக்காரம்மாவுக்கு( ஒரிஜனல் மனைவி,வீராவதி) எதாவது வேணுமுன்னா வாங்கியாரலாம்னு பெரிய மனசுபண்ணி அந்தம்மாகிட்டே கேக்கறார்.ஒரேமாதிரி ரெண்டு பொம்மை வாங்கித்தாங்கனு சொன்னாங்க. அதெமாதிரி வாங்கியாந்தார்.

அந்தப் பொம்மைங்களைவச்சுக்கிட்டு 'ரோலி கி கோலி ஹோகயி,கோலி கி ரோலி ஹோகயி'ன்னு பாடிக்கிட்டே இருக்கு அந்த வீராவதி. ராஜா இதைக் கவனிச்சுக்கிட்டே இருக்கார். ஒருநாள் வீராவதிகிட்டே கேக்கறார், என்ன பாட்டு அதுன்னு. 'ராணியா இருந்தவ வேலைக்காரி ஆயிட்டா, வேலைக்காரியா இருந்தவ ராணியா ஆயிட்டா'னு பாடறேன்னு சொன்னாங்க.
' அதுக்கு என்னா அர்த்தமு'ன்னு சொல்லுன்றார் ராஜா. வீராவதி இதுவரை நடந்ததையெல்லாம் சொன்னவுடனே ராஜாவுக்கு உண்மை என்னன்னு புரிஞ்சுடுது(!)

ராணியா இதுவரை இருந்த தாதியை விலக்கிட்டு, வீராவதியை ராணி ஸ்தானத்துலே வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்றார்.

இந்த விரதத்தை முறைப்படிச் செய்யாட்டா இப்படிப்பட்ட கஷ்டமெல்லாம் வரும். அதனாலே எல்லாரும் கவனமா
முறைப்படி இந்த விரதம் அனுஷ்டிக்கணுமுன்னு அர்த்தம்.

பின் குறிப்பு:

வீட்டுக்குத் திரும்பி வர்றப்ப எங்க இவர்கிட்டே இந்தக் கதையைச் சொன்னேன். 'நீ விரதம் இருந்திருக்கியா?'ன்னு
கேட்டார். 'என்னாலே விரதமெல்லாம் இருக்கவே முடியாது. அன்னிக்குப் பார்த்துதான் அகோரப் பசி எடுக்குமு'ன்னு
சொன்னேன்.
'நான் இருந்திருக்கேன்'னு சொன்னார்.
'அதான் உங்களுக்கு நல்ல பொண்டாட்டி கிடைச்சிருக்கேன்'னு சொன்னேன்:-)


வீட்டுக்கு வந்து 'நெட்டுலே' இதைப் பத்திக் கொஞ்சம் தேடி இன்னும் சிலவிஷயம் படிச்சேன். அதைப் பத்தி இன்னொருநாள்
சொல்றேன். சத்தியவான் சாவித்திரி, ஃப்ரெண்ட்ஷிப் டே ன்னு கொஞ்சம் போட்டிருக்கு.

(சொந்த மனைவிக்கும் வேலைக்காரிக்கும் வித்தியாசம் தெரியாத புருஷனுக்காக விரதம் வேறயா? இந்த ஊருலேதான் வேலைக்கு உதவியாளரும் இல்லையே)

அட தேவுடா!!!!!

POSTED BY துளசி கோபால் AT 10/21/2005 05:37:00 PM




5 comments:

said...

கொண்டாட்டம் செமையா இருக்கு.

கதை ஓகே ஆனால் அதெப்படி அந்த ராஜாவுக்கு அந்த தாதி தன் மனைவி இல்லைனு தெரியலை!!! அதுவும் அத்தனை நாளும்...ஆச்சரியம். ஒரிஜனலும் சொல்லாம வெளிப்படுத்தாம இருக்குதே.

கீதா

said...

தகவல்களும் படங்களும் நன்று.

தொடரட்டும் கொண்டாட்டங்கள்.

said...

வாங்க கீதா,

அதான் ஆம்பளை குணமோ என்னவோ ? ஆனாலும் மனைவியைக் கண் முன்னாலே பார்த்தும்கூட ஞாபகம் வரலை பாருங்க...... கடைசி முள்ளில்தான் எல்லா பவரும் இருந்தது போல...

அந்தக் கால மனைவி வாயைத் திறந்து ஒன்னும் சொல்லமாட்டாள். நளாயினி கதை தெரியும்தானே ? அந்த இடத்தில் நானா இருந்துருந்தால் கதையே மாறிப்போயிருக்கும்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,


தொடர் வருகைக்கு நன்றிகள் !

said...

கொண்டாட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. ராஜா கதைதான் உதைக்கிறது.