Monday, December 07, 2020

பீச்சுக்கு வாசல் இருக்கு ! (ரோட்டோருஆ பயணம் . பகுதி 21 )

அழகான நுழைவு வாசல் இருக்கேன்னு அதுக்குள்ளே  போனால்.....  ஒரு திடலும், அங்கே ஓர் அரங்கும் !  நம்ம சிங்காரச்சென்னையில் கூட  மெரினா பீச்சில்  ஒரு அரங்கம் இருந்தது யாருக்காவது நினைவிருக்கோ ?  நிகழ்ச்சிகள் நடக்கும்போது, ஜாலியா மணலில் உக்கார்ந்து, கடற்காற்றை அனுபவித்தபடி  ரசிச்சுப் பார்ப்பது  எவ்ளோ அருமை, இல்லே ?  என்னவோ சில காரணங்களுக்காக (அரசியல்? ) அதை இடிச்சுத் தள்ளிட்டாங்க. 




இங்கே நேப்பியரில், மணலுக்குப் பதிலாப் புல்வெளி !  பார்க்கவே ரொம்ப நீட்டா அழகா இருக்கு! 


  
அரங்கின் பக்கவாட்டுப் பகுதியில்  இருக்கும் அஞ்சாறு படிகளில் இறங்கினால் கடற்கரை. அதே கல்பீச்தான். 'பெப்பிள் பீச்'னு பாலிஷ்டா சொல்லிக்கலாம். சுமார் மூணு கிமீ நீளமா இருக்கும் கடற்கரை. கல்லை மிதிக்காமத்  தண்ணி கிட்டேப் போய்ப் பார்க்க  ஒரு மேடை போட்டு வச்சுருக்காங்க, Pier போல ! 





பின்னால் தலையில் மணிக்கூண்டோடு நிக்கும் கட்டடம்  T& G  builting. ஹாஹா.....   இது நம்மளோடதுதான் !   Tulsi & Gopal  இல்லையோ !   1900  வருஷத்தில் Temperance General Insurance கம்பெனி கட்டுனது.  அந்த 1931 நிலநடுக்கம் இதையும் விட்டுவைக்கலை.  ஒன்னுவிடாம எல்லாத்தையும் அழிச்சுட்டுத்தானே ஓய்ஞ்சது.   அதுக்கப்புறம் 1935 லே மறுபடி இப்ப நாம் பார்க்கும் ஸ்டைலில் கட்டி எழுப்பினாங்க. அப்பதான் ஆர்ட் டெகோ ஸிட்டின்னு பெயர் வந்துருச்சே....  ஸ்பானிஷ் ஸ்டைலில் தலையில் ஒரு  டோம் வச்சுட்டாங்க.   இப்ப இது 'லோன் ஸ்டார்'  என்ற பெயரில் இருக்கும் அபார்ட்மென்ட். நல்ல ரெஸ்ட்டாரண்டும், பாரும் இருக்காம்.  
டாம் பார்க்கர் என்ற உள்ளூர்  வியாபாரி, தன்னுடைய ஊரை அழகுபடுத்த பொருளுதவி செஞ்சுருக்கார்.  அவர் பெயரிலேயே ஒரு செயற்கை நீரூற்று அமைச்சுட்டது  உள்ளுர் நகரசபை. இதுவும் அந்த நிலநடுக்கத்துக்கப்புறம்  கட்டுனதுதான்.  ராத்ரி எட்டுமணிக்கு  இங்கே விளக்கலங்காரம் பார்க்கலாமாம்.  நாம் ராத்ரி ஒரு வாக் போய்ப் பார்த்திருக்கலாம்தான்.  எங்கே?   வந்த அன்னிக்குக் களைப்பு. நேத்துதான்  மழை....  கோட்டை விட்டதுக்கு என்னென்ன சாக்கு சொல்றேன் பாருங்க :-)  ஏறக்குறைய இதே போல ஒன்னு இன்னும் உயரம் அதிகமா நம்மூர்லேயே ஒன்னு இருக்கு. அங்கேயும் விளக்கலங்காரம் செஞ்சுருக்காங்க.  அதுவும்  நம்மூர் 2011 வருஷ நிலநடுக்கத்துக்கு அப்புறமே!  நம்மூரில் இதுக்குப் பெயர்  விக்டோரியா ஸ்கொயர் ஃபவுன்டெய்ன்.  

கடற்கரையில் தோட்டமும் புல்வெளியுமா வச்சு உண்மையாகவே அழகுபடுத்தி இருக்காங்க.  பார்க்கவே மனசுக்கு இதமா இருக்கு!  நகரசபை ரொம்ப நல்லாவே பரமரிச்சுக்கிட்டும்  இருக்கு. இதுக்கு 'யார் பெயரையும்' வைக்கலை :-) சொந்தக்காசுலே  செஞ்சு கொடுத்தால்தான் பெயர், ஆமா...  சுத்திப்பார்த்துக்கிட்டே போகும்போது கடற்கன்னியின் தரிசனம் ஆச்சு. 
பானியா  (Pania )என்ற பெயரில் ஒரு கடற்கன்னி இருந்தாள்.  தினமும் பகல் பொழுது முழுசும் தன்னுடைய இனத்தோடு கடலுக்குள் இருப்பாள். சாயங்காலம், சூரியன் மறைஞ்சதும்,  நிலப்பகுதிக்கு வந்து  அங்கே ஓடும் சிற்றோடையாண்டை இருக்கும் புதரில்  ராத்ரி முழுசும் தங்கி ஓய்வெடுத்துப்பாள்.  காலையில்  கடல் கூப்பிடும் ஓசை கேட்டதும் கடலுக்குள் போயிருவாள். இப்படியே பலகாலம் நடந்துகிட்டு இருக்கு.

இந்தப் பகுதியில்   அப்போ இருந்த மவொரி குழுவின் தலைவரின் மகன்  கரிடொகி(இளவரசன் Karitoki ) தற்செயலா  ஒருநாள் இந்த ஓடையில் தண்ணீர் குடிச்சுருக்கான்.  ரொம்பவே ருசியா இனிப்பான தண்ணீரா இருந்துருக்கு.  அதனாலே தினமும் இந்தக்குறிப்பிட்ட இடத்துக்கே தண்ணீர் குடிக்க வந்து போறான்.  இவனுடைய வருகையைப் புதரில் இருந்து பார்த்துக்கிட்டே இருக்கும்  பானியாவுக்கு அவன் மேல் காதல் வந்துருது. ரொம்பநாள்  கழிச்சு ஒரு சமயம், இளவரசன் அங்கே தண்ணீர் குடிக்க வந்திருக்கும் சமயம் , மனசாலே அவனுக்கு சேதி அனுப்பறாள். மனஓசையைக் காத்து சுமந்துபோய், அவன் காதில் விழவச்சது.  யாரோ கூப்புட்டாப்லெ இருக்கேன்னு சுத்தும் முத்தும் பார்க்கிறான்.  புதர்மறைவில் இருந்து பானியா வெளியே வர்றாள்.  இளவரசன் கரிடொகி, இதுவரை இப்படிப்பட்டப் பேரழகியைப் பார்த்ததே இல்லை...... அவனும் காதலில் விழுந்தான். 

( இதை எழுதும்போது  சினிமாப்பாட்டெல்லாம் நினைவுக்கு வருதே.....   இஞ்சாருங்கோ.......  நான் பார்த்ததிலே இவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்........  சினிமாவையும்   தமிழனையும் பிரிக்கவே முடியலையேப்பா.....  )
காதல் முத்திப்போய், இருவரும் காந்தர்வ மணம் செஞ்சுக்கறாங்க. இளவரசனோட  குடிலுக்குப் போனாங்க.  ராத்ரி நேரம், இருட்டு என்பதால் புதரில் இருந்த ஆந்தையைத் தவிர வேற  யாரும்  இவுங்களைப் பார்க்கலை. காலையில் பொழுது விடியுமுன், பானியா எழுந்து கடலுக்குப் போக ரெடி ஆறாள்.  இளவரசன் தடுத்து நிறுத்தறான்.  'கட்டாயம் போயே ஆகணும். கடலின் அழைப்பு வந்ததும் தண்ணீருக்குள்ளே போகலைன்னா.... என் உயிர் போயிரும்.  கவலைப்படாதே  தினமும்  சூரியன் அஸ்தமிச்சதும் வருவேன்' சொல்லிட்டுப் போயிடறாள். இப்படியே கொஞ்சகாலம் ஓடுது. 

இளவரசனுக்கோ  இளம் வயது. தன்னுடைய அழகான மனைவியை மத்தவங்களுக்குக் காமிச்சுப் பெருமையடிக்கலாமுன்னு பார்த்தால் அதுக்கு வழியே இல்லை. ஆனாலும் வாய் சும்மா இருக்குதா ?  நண்பர்கள்கிட்டே, மனைவியின் அழகைப் புகழ்ந்துபேசறான்.  எல்லோரும்  இவனை நம்பாமல்  இன்னும் கல்யாணமே  ஆகலை. அதுக்குள் மனைவி அழகாமே.... உளறிக்கிட்டு இருக்கான்.  பைத்தியம் முத்திப்போச்சு, .  ' னு சிரிக்கிறாங்க.

பானியாவோ... ஒருநாள் கூடப் பகலில் தங்கமாட்டேங்கறாள். என்ன செய்யலாமுன்னு யோசிச்சு, கிராமத்துலே இருந்த பெரியவராண்டை போய் கேக்கறான்.  அவருக்குக் கடலில் இருக்கும் கடற்கன்னிகளைப் பற்றி ஓரளவு தெரிஞ்சுருக்கு. அதுவுமில்லாம  கரிடொகியைப் பத்தி ரொம்ப நல்லாவே தெரிஞ்சுருக்கு. பையன் பொய் சொல்ல மாட்டான்னு !

அவனாண்டை கேக்கறார், 'உன் மனைவி எப்பவாவது சமையல் பண்ணிப் போட்டுருக்காளா? இல்லே உங்கூட உக்கார்ந்து சாப்ட்டுருக்காளா ? '
அப்பதான் இளவரசனுக்கு உரைக்குது..... 'இல்லையே'ங்கறான்.  அந்தக் காலத்துலே எல்லாம்  சாயங்காலம் வெளிச்சம் இருக்கும்போதே ராச்சாப்பாடு ஆகிரும். லைட்டா பாழா? 

 அதே பழக்கமோ என்னவோ.....    பொதுவா இங்கே சாயங்காலம் ஆறு, ஆறரைக்கே டின்னரை முடிச்சுக்கறாங்க.  இதுக்குப் பெயர் டீ!  நாம்தான் ராத்ரி எட்டரை, ஒன்பதுக்கு ராச்சாப்பாடுன்னு இருக்கோம்.  'டீ ஆச்சா'ன்னு கேக்கும் மக்களுக்கு  'ஆச்சே.... நாலு மணிக்கு'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன், இவுங்க 'டீ' விவரம் தெரியாம :-) நானாவது பரவாயில்லை. இங்கே அப்போ இருந்த  ஒரு தோழியும் கணவரும், கூட வேலை செய்யும் சிலரை டீ (நம்ம டீ )குடிக்கக் கூப்புட்டுருந்தாங்க, சாயங்காலம் அஞ்சு மணிக்கு.  அவுங்களும் புள்ளைகுட்டிகளோடு வந்துட்டாங்க.  தோழி வடை, பஜ்ஜி, பக்கோடான்னு செஞ்சு டீயும் (இண்டியன் சாயா, பால் சக்கரையெல்லாம் சேர்த்துக்) காய்ச்சி வச்சுருந்தாங்க. 

வந்தவங்க எல்லாத்தையும் முடிச்சுட்டு உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க.  நேரம் போகப்போக  யாரும் கிளம்பறதாத் தெரியலை. அவுங்க டீ வருமுன்னு காத்திருக்க, இவுங்க டீதான் குடிச்சாச்சேன்னு  இனி என்னன்னு இருக்க...... கடைசியிலே நண்பரிடம், ஒரு விருந்தாளி மெல்லக் கேட்டுருக்கார். இன்னும் சமையல் ஆகலையா? புள்ளைகளுக்குப் பசிக்குதுன்னு....  கடைசியில் 'டீ' விவரம் தெரிஞ்சு, நண்பர் ஓடிப்போய் டேக் அவேயில் இருந்து சாப்பாடு வாங்கியாந்து விளம்பி இருக்கார். அப்போ கிடைச்ச அறிவுரை....   வெறும் டீ  குடிக்கக் கூப்பிடணுமுன்னா.... 'ஜஸ்ட் கம் ஃபார் அ  கப்பா' ன்னு சொல்லணும். தப்பித்தவறி டீ ன்னு சொல்லிடப்டாது:-)

சரி.  கடற்கன்னி கதைக்கு வருவோம்.....    பெரியவராண்டை 'இல்லையே'ன்னதும் அவர் சொல்றார், கடல் வாழ் ஜீவிகளுக்குச் சமைச்ச சாப்பாடு ஆகாது. அதனால் சமைச்சதை அவளுக்கு நைஸா ஒரு கவளம் ஊட்டிவிட்டுரு.  அப்புறம் அவளாலே கடலுக்குப் போக முடியாது. உங்கூடயே தங்கிருவாள்'னு.

அன்றைக்கு ராத்ரி அவள் வந்ததும்  வழக்கம்போல் மகிழ்ச்சியா நேரம் போக்கிட்டுத் தூங்கிடறாங்க. நடுராத்ரியில் இவன் மெல்ல  எழுந்து ஒளிச்சுக் கொண்டு வந்தச் சமைச்ச சாப்பாட்டுலே இருந்து கொஞ்சம் எடுத்துத் தூங்கறவ வாய்க்குள்ளே திணிச்சுட்டான். ஆபத்தைக் கவனிச்ச ஆந்தை ஒன்னு குரல் கொடுக்குது. திடுக்னு முழிச்ச  பானியா,  வாயில் இருக்கறதைத் துப்பிட்டுக் கடலுக்கு ஓடறாள்.

அங்கே  கடலுக்கடியில் இருக்கும் இவளோட சனம் மேலே வந்து, இவளை இழுத்துக்கிட்டு உள்ளே போயிடறாங்க. பின்னாலேயே துரத்திக்கிட்டு வந்த கரிடொகி கடலுக்குள்ளே குதிச்சு இவளைத் தேடறான்.  கடைசிவரை இவளைக் கண்டுபிடிக்கவே முடியலை......   பெண்டாட்டியைக் காணோம்னு  நெசமாவே பைத்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டிக்கிட்டு இருந்துருப்பான், இல்லே ? 

கடலுக்குள் போன பானியா, அப்போ கர்ப்பிணியா இருந்துருக்காள்.  அவளுக்கு ஒரு பையன் பொறக்கறான்.  அவனுக்கு Moremore னு பெயர் வச்சாங்க.  பானியாவுக்குத்தான்  புருஷன் செஞ்ச செயலால் மனசு ஒடைஞ்சு போச்சு.  நம்பினவன் இப்படிச் செஞ்சுட்டானேன்னு அழுதுபுலம்பி ஓய்ஞ்சுபோய் கடற்பாறையா மாறிட்டாள்.  Pania of the Reef.  அவளுடைய மகன்தான் இந்த பகுதிக்குப் பாதுகாவலனா இருக்கான். Kaitiaki  என்ற பெயரோடு, இவனுடைய  ஆன்மா அப்பப்ப  சுறா,  திருக்கை, ஆக்டொபுஸ்னு கடல்வாழ் ஜீவன்களோட  உடலுக்குள் புகுந்து இந்தப்பகுதியைக் காவல்காத்துக்கிட்டு இருக்கான்னு  மவொரி சனம் நம்புது.  

சம்பவம் நடந்து பல நூற்றாண்டுகள் ஆனபிறகுதான் இந்த இடத்தில் நேப்பியர் என்ற இந்த ஊரே உருவாகி இருக்கு!

ஊர்சனம் பானியாவுக்கு ஒரு சிலை வைக்கணுமுன்னு  முடிவு பண்ணி, 1954 ஆம் வருஷம் ஒரு வெங்கலச்சிலை செஞ்சாங்க.  சிலைக்கு மாடலா இருக்க யார் பொருத்தமுன்னு தேடித்தேடி ஒரு இளம்பெண்ணைத் தேர்ந்தெடுத்தாங்க.  முதலில் மாடலைப்பார்த்துக் களிமண் உருவம் செஞ்சுட்டு, அதை இத்தாலிக்கு அனுப்பி அங்கே வெங்கலச்சிலையா வார்த்துருக்காங்க. எடை 60 கிலோ. அப்பத்து பிரதமர்  ஸிட்னி ஹொலண்ட், இந்த உருவச்சிலையை ஜூன் 10, 1954 இல் திறந்து வச்சுருக்கார்.

ஒன்னரை மீட்டர் சிலை, பானியாவுக்கு இப்போ வயசு 66. .  எங்கூர் கணக்கில் ஸீனியர் ஸிட்டிஸன் ஆகிட்டாள். கடலோரம்  தேமேன்னு உக்கார்ந்துக்கிட்டு இருக்கும் இவளுக்கும் சிலபல ஆபத்துகள்  வந்துருக்கு. ப்ச்.....  மனுஷப்பயலுகளில்  சில விஷமிகள் இல்லையா என்ன ? இவளுடைய 30 வயசுலே எவனோ, இவள் தலையில் சுட்டுட்டான். 

இவளுடைய 51 ஆம் வயசுலே இன்னொரு ஆபத்து .  விஷமி ஒருத்தன், இவளைத் திருடிக்கிட்டுப்போய் ஒளிச்சு வச்சுட்டான். நெசப்பைத்தியக்காரன்.... Lucky Charm னு நினைச்சானாம்.  சிலையைக் காணோமுன்னு ஊர்சனம் திகைச்சுப்போச்சு. போலீஸ் அஞ்சாறு நாளுக்குப்பிறகுத் தேடிக்கண்டு பிடிச்சுட்டாங்க.   திரும்ப இங்கே கொண்டுவந்து ப்ரதிஷ்டை ஆச்சு.  இவளுடைய 57 வயசில் எவனோ, இவள் மேலே பெயின்ட் அடிச்சுட்டுப் போயிருக்கான். ஒவ்வொரு சமயமும்  நல்ல முறையில் பழுதுபார்த்துக் காப்பாத்தி இருக்கு நகரசபை. 

ஒரு சிலையாப் பார்க்காம, உயிருள்ள ஒரு மனுஷியாத்தான் இவளைப் பார்க்கிறோம். இவளைப் பற்றிய ஆராய்ச்சி, பொறந்தகம் விட்டுப் புருஷன் வீட்டுக்கு வாழப்போகும்  பெண்ணின் மனநிலை, கட்டுனவனே த்ரோகம் செஞ்சால் அவள் கதின்னு பல கோணங்களிலும் இவளை வச்சே உளவியல் சிந்தனைகள், ஏராளமான புத்தகங்கள், முக்கியமா  குழந்தைகளுக்கானவை, டிவி டாக்குமென்டரி, இண்டர்வ்யூன்னு அதுபாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கு இன்னும்.  நேப்பியர் வரும் பயணிகளை இவளும் பார்த்துக்கிட்டே இருக்காள் ! 

சொல்ல மறந்துட்டேனே..... நமக்கெல்லாம் கடல்கன்னின்னதும் இடுப்புக்குக் கீழே மீன் உடம்புலே இருப்பாள்னு தானே தெரியும் ? ஆனால் உண்மையில் அவள் மனுஷ உடம்புக்காரிதானாம் !   

 
தொடரும்.......... :-)


5 comments:

said...

மனித உடல் கடற்கன்னி...கதை..சிறப்பு.

said...

கடற்கன்னியின் கதை சிறப்பு. ஸ்வாரஸ்யமும்!

தகவல்கள் பகிர்வு தொடரட்டும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

மீன் உடம்புலே கரையில் நடந்து போக முடியாதில்லையா :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மவொரி கதைகளில் சுவாரஸியமான பலதும் உண்டு. ஒரு புத்தகம் வாங்கி வச்சுருக்கேன். ஒவ்வொன்னா 'முழி பெயர்க்க 'ணும் :-)

said...

பீச் வாசல்,கடற்கன்னி என ரசனை.