Friday, July 03, 2020

என்னென்ன புது அனுபவங்கள் பாருங்க, இந்தக் கொரோனா காலத்துலே! (மினித்தொடர் பாகம் 2 )

எப்பவும் வீட்டுலேயே இருக்கோமா....  பைத்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டத்தான் போறோமோன்னு இருக்கு.  மனுசன் சமூகத்தொடர்பில் இருக்க விரும்பும் குணாதிசயங்கள் இருப்பவன் இல்லையோ ?  நல்ல வேளையா வலை மூலமாவே  கூட்டம் கூட்டவும் கத்துக்கிட்டான்.  Zoom meeting  என்றும்,  வீடுகளில் நடக்கும் விழாக்களையும் 'லைவ்'வாக் காமிச்சால் ஆச்சு.  அதான் எல்லோர் கையிலும்  மொபைல் ஃபோனும், இணைய வசதியும் தாராளமா இருக்கே!   இந்தக் கலிகாலத்தில் செல் இல்லாதவன் புல் இல்லையோ ?
ஒன்பதுநாள் ராமநவ்மி கொண்டாட்டங்களை, அவரவர் பதிவு செஞ்சும், நேரடி ஒளிபரப்பாகவும் அனுப்பிக்கிட்டு இருந்தாங்க. நானும் 'போன வருசம் இப்படி எல்லாம் கொண்டாடினோமே'ன்னு அப்போ எடுத்த வீடியோ க்ளிப்புகளைப் பகிர்ந்துக்கிட்டேன்.

நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கப் பூஜைகளையும்  Zoom meeting   மூலமாகப் பார்த்து கொஞ்சம் மனசமாதானம் ஆச்சு. நம்ம பண்டிட் , வெலிங்டன் நகரத்துலே இருக்கார். அவர் வீட்டில் சம்ப்ரதாயமாப் பூஜை நடத்த, நாம் க்றைஸ்ட்சர்ச் நகரத்திலே அவரவர் வீடுகளில் பார்த்துப் பூஜையில் கலந்துக்கிட்டோம்.
நாம்  பங்கேற்கும் யோகா குழுவுடனும், வாரம் ஒருமுறை  Zoom meeting  மூலமாகவே  ஒரு ஒன்றுகூடல் நடத்தினோம். குறைஞ்சபட்சம்  ஒவ்வொருவர் முகத்தைப் பார்த்துக்கலாம் இல்லையா ?  இந்த மீட்டிங்கில் யோகா செய்வது கஷ்டம் என்றபடியால்,  பொது அறிவுக்கேள்வி பதில்,  சினிமாப் பாட்டு க்விஸ்,  அந்தாக்ஷரி என்ற பாட்டு விளையாட்டுன்னு அது ஒரு பக்கம். நாலு வாரத்தைத் தள்ளணுமே.....

குழுவில் இன்னொரு ஐடியாவும் கொடுத்தாங்க. தினம் மாலை அஞ்சு மணிக்கு தியானம் செய்யலாம். ஒரு இருபது நிமிட்தான். அதுக்கென்ன செஞ்சால் ஆச்சுன்னு நாங்க ஆரம்பிச்சோம். அதுபாருங்க.... ஒரு வழக்கமாகவே மாறிப்போய், இன்றுவரை செஞ்சுக்கிட்டுதான் இருக்கோம்.  21 நாட்கள்  தொடர்ந்து  எந்த விஷயத்தைச் செஞ்சாலும் அது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிடுமாமே !   இதுலே ஒரு ப்யூட்டி என்னன்னா... நம்ம ரஜ்ஜுவும்  தியானத்துலே கலந்துக்கறதுதான் :-)  சில சமயம் அப்பாவுக்கு முன்னால், சிலநாட்கள் அம்மாவின் பக்கத்தில் வந்து உக்கார்ந்துக்குவான். இது நமக்குத் தெரியாது. ஓசைப்படாமல் 'பூனை மாதிரி' ஏறி உக்கார்ந்துருவானே!  டைமர் செட் பண்ணி அலார்ம் அடிச்சதும்  நாம் கண்ணைத் திறந்து பார்த்தால் செல்லம் இருக்கும். பட்டுச் செல்லம்! சிலசமயம் மணி அடிச்சதும் எழுப்பும் :-)

லாக்டௌன் ஆரம்பிச்சு முதல் ரெண்டு வாரம் கடந்து போன சமயம், நம்ம புதுவருசம் பொறக்கும் நாளும் வந்துச்சு. தமிழ்ப்புத்தாண்டு & விஷூ ரெண்டுமே சேர்ந்தேதான் வரும், இல்லையோ ? பழவகைகளுக்கு எங்கே போக ?  வீட்டில் உள்ளவைகளை வச்சே விஷுக் கணியும் கண்டு.  கூடவே ஒரு சக்கப்ரதமனும் ! பெருமாளே.... இந்தக் கொரோனா சீக்கிரம் உலகத்தை விட்டு ஓட  வழி செய் என்பது மட்டுமே வேண்டுகோள்.

இதுக்கிடையில் இந்தியாவுலே கொரோனா  வேகமாப் பரவ ஆரம்பிச்சதுன்னு வரும் சேதிகள் மனக்கவலையைக் கூட்டிருச்சு...  சிலபல சமூக விரோதிகள்,  அரசு ஒன்னும் செய்யலைன்னு புரளி கிளப்பிவிட்டுக்கிட்டு இருந்தாங்க. 

அரசு என்ன செஞ்சாலும் அதுக்கு எதிராக் கூவறதுதான் எதிர்க்கட்சியின் முக்கிய வேலையாக இருக்கு. நாட்டுக்கு நல்லது எதாவது செய்ய அரசு திட்டமிடும்போதும், செயல் படுத்தும்போதும், அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுக்கணுமா இல்லையா? 

இங்கே எங்க நியூஸியில் நாட்டுக்கு ஒரு நல்லது செய்யும்போது, கட்சிப்பாகுபாடு, காழ்ப்புணர்வு இல்லாமல்  எல்லா பார்லிமெண்டு அங்கங்களும்  ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும். நாடு நல்லா இருக்கணும் என்பதற்குத்தானே இவுங்களை சனம் தேர்தல் மூலம் தெரிஞ்செடுத்துருக்கு ! கொரோனா சம்பந்தமான எல்லா திட்டங்களுக்கும்  எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளும் அரசுக்கு உதவியாகத்தான் செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க.

  இங்கே நாங்க இணைஞ்சுருக்கும் ஹிந்து ஸ்வயம் ஸேவக்  பிரிவின் தலைவர் திரு ஹனுமந்தராவ் ஜி,  இந்தக் கொரோனா தாக்குதல் சமாச்சாரங்களில் இந்திய அரசு எந்தவிதமான நிலைப்பாடுகள் எடுத்துருக்கு, இன்னும் என்ன செய்யப்போறாங்க? இன்னும் என்ன செய்யலாம்?  என்பதையெல்லாம் தெளிவுபடுத்தி விவாதிக்கும் ஒரு  ஸூம் மீட்டிங்கில் என்னைக் கலந்துக்கச் சொன்னார்.  எனக்கு முதலில் கொஞ்சம் திகைப்பாத்தான் இருந்துச்சு. இதுலே நான் என்னன்னு விவாதிக்க முடியும் ? விவரம் உள்ளவர்கள் கலந்துக்கிட்டால்தானே நல்லதுன்னேன்.  நீங்க எழுத்தாளர். இதில் கலந்துக்கிட்டு, விவரங்களை எழுதுங்க. இங்குள்ள மக்களுக்கு விவரம் தெரியணும். அதே சமயம் உங்க வலைப்பதிவு மூலம்  இந்தியாவில், முக்கியமா தென்னிந்தியப் பகுதிகளில்  இருப்போர்க்கும்  அரசின் நடவடிக்கை தெரியவரட்டுமுன்னு சொன்னார்.

சரி. நமக்கும் ஒரு நல்ல வாய்ப்புன்னு அவுங்க சொன்ன நேரத்துலே அந்த சந்திப்புலே கலந்துகிட்டேன். உலகின் பலநாடுகளில் இருந்து பலர் கலந்துக்கிட்ட சந்திப்பு அது.

பிஜேபி கட்சியின்  பொதுச்செயலாளராக இருக்கும் திரு சந்தோஷ்ஜி , முதலில்  அரசு என்ன நடவடிக்கை ஆரம்பிச்சதுன்னு தெளிவாக ஆரம்பிச்சு பேசினார். ஜனவரி எட்டு தேதியன்று  நம்ம நாட்டுமக்கள் பாதுகாப்புக்கு என்ன செய்யலாமுன்னு திட்டம் தொடங்கி இருக்கு !   எனக்கு உண்மையிலேயே இது புதுச் செய்தி ! 

 இங்கே நியூஸியில்  ஃபிப்ரவரி மாதக் கடைசியில் நாட்டுக்குள் கொரோனா (இரான் போய் வந்த பயணி மூலம்) நுழையறதுக்கு முந்தி  இதைப்பற்றி ஒன்னும் பெருசா பேசிக்கிட்ட  மாதிரி தெரியலை.   உலகத்தின் கடைசி மூலையில் இருக்கும் நம்மைத் தேடி வைரஸ் வரப்போகுதா என்ன ?என்ற நினைப்புதான் போல !  கடைசியில் நினைப்பே பொழப்பைக் கெடுத்துருச்சுன்றது வேற விஷயம்,....  ப்ச் 


சந்திப்பு ஒரு ஒன்னரை மணி நேரம் நடந்துச்சு. பல விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. அதுவரை தென்னிந்தியா சமாச்சாரங்கள், முக்கியமாகத் தமிழ்நாட்டுலே என்ன நடக்குதுன்னு எப்பவும் கவனிச்சு வச்சுக்கும் எனக்கு,  மேற்படிக் கொரோனா விஷயத்தில் அரசின் நடவடிக்கை ஒன்னுமே  மக்களைப்போய்ச் சேராதவகையில் எதிரிக்கட்சிகள் வ்யூகம் வகுத்து வச்சுருக்கோன்னுதான் தோணுச்சு.

அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு சேனல் வச்சுக்கிட்டு, பொய்யுரைகளைப் பரப்பி விடும் பம்மாத்து எல்லாம் நியூஸியில் இல்லை.  வேண்டாத கணவனின் கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்னு சொல்லும் பழமொழிக்கேற்ப  மத்திய அரசு, முக்கியமா பிரதமர் மோடியின்  மேலே உள்ள வெறுப்பெல்லாத்தையும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவுகளாகக் கொட்டி வச்சுக்கிட்டு இருந்தாங்க பலரும். இவர்களில் நம் நண்பர்களும் உண்டு. இது என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய சோகம்.

பொதுவாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு,  நம்ம நாடு என்ற பாசமும், புரையோடிக்கிடக்கும் ஊழலில் இருந்து  வெளிவராதா என்ற ஏக்கமும்  ஏராளம்.  இதுலே  ஜிஎஸ்டி கொண்டுவந்ததைப்பற்றிக்கூட  வெறுப்பும், இகழ்ச்சியும் கலந்த பதிவுகள் அடக்கம்.   உலகில்  எந்த நாடானாலும்  வரி வசூலிக்காம அரசாங்கத்தை நடத்த முடியுமா?  இங்கே நியூஸியில் கூட பத்து சதமானமாக ஆரம்பிச்ச ஜிஎஸ்டி, பனிரெண்டரை ஆகி, இப்போ பதினைஞ்சாகி இருக்கு.

இங்கே வரி கட்டாத மக்களே இல்லை. பள்ளிக்கூடச் சின்னக்குழந்தைகளுக்கான   சேமிப்புன்னு இருக்கும் போஸ்ட் பேங்கில் கூட  அவர்களுக்குக் கிடைக்கும்  கொஞ்சூண்டு வட்டியில் துளியூண்டு வரிப் பிடித்தம் உண்டு. என்ன ஒன்னு சகல பொருட்களுக்கும்  ஒரு  ரொட்டி, ஒரு முட்டாய் உட்பட  இந்த ஜிஎஸ்டி, பொருளின் விலையிலேயே சேர்க்கப்பட்டுருக்கும்.  கடைக்காரர்களும் எல்லா சமாச்சாரங்களுக்கும்  பில் போட்டுக் கொடுத்துருவாங்க.  ஏமாத்தும் எண்ணம் பொதுவா யாருக்குமே இல்லை.

ஆனால்... கசப்பான விஷயம் ஒன்னும் சொல்லித்தான் ஆகணும்.  இந்தியர் பலர் குடியேறிவந்தபின் அவர்களோடு குணக்கேடுகளும்  கூடவே வந்தாச்சு.   இன்னும் சில குறிப்பிட்ட நாட்டினரும்  இதில் சேர்த்தி.  வரி ஏய்ப்பை ஆரம்பிச்சு வச்சும்,    வெல்ஃபர் கவர்மென்ட் என்றபடியால், இரக்கம் கொண்டு கொடுக்கும் உதவித்தொகையிலும் தாராளமாப் பூந்து விளையாடிக்கிட்டு இருக்காங்க.  இப்ப கொரோனா காலத்தில் மூடிவைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைச் சரிக்கட்ட அரசு கொடுக்கும் தொகையில் ஒரு இந்தியர் அஞ்சு லக்ஷம் டாலர் (சராசரி டாலருக்கு அம்பது ரூபாய்னு வச்சுக்கலாம். கணக்குப்போட்டுக்கறது சுலபம் )ஏமாத்திட்டார்.  தினசரியிலும்,  டிவியிலும், வலையிலும் வெளியிட்டுட்டாங்க.  இந்தியன் என்ற  வகையில் நமக்கு   ரொம்ப அசிங்கமாப் போச்சு கொமாரு....   ப்ச்.... நமக்கு நல்லாவே தெரிஞ்சவர் என்பதால்......   சீன்னு போச்சு.


 கடுமையாகப் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் இருந்த  கொரோனா நோயாளிகள்  எண்ணிக்கை படிப்படியாகக் குறைஞ்சுக்கிட்டே வந்தது.  மருத்துவமனையில் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட  கொரோனா நோயாளிகள் அரசின் கவனிப்பில் தனி அறைகளில்   இருந்தாங்க. மருந்துதான் இதுக்குக் கண்டுபிடிக்கலையே.....   சத்தான உணவும் , கனிவான கவனிப்பும் இருந்ததால்  மெல்ல மெல்ல  இவுங்க எண்ணிக்கையும் குறைஞ்சுக்கிட்டே வந்தது.

தினமும் பகல் ஒருமணிக்குக் கோவிட் செய்திகள்  டிவியில்  சொல்றதைக் கேட்டபிறகுதான் நமக்குப் பகல் சாப்பாடு என்று  ஒரு டைம்டேபிள் போட்டுக்கிட்டோம் நம்ம வீட்டில் . இப்பவும் அப்படியேதான். 
இன்னைக்கு சொல்லிட்டானா ?  புதுக்கேஸ் ஒன்னும் இல்லை. சிலநாட்கள்  மூணு  பேர், ரெண்டு பேர் னு  கேட்டதும்  அதுக்கேத்தபடி  சந்தோஷமும், துக்கமுமாக நாட்கள் போய்க்கிட்டு  இருந்துச்சு.  நாலு வாரம் ஆனதும் ஓரளவு கட்டுக்குள் வந்தாச்சுன்னு   அலர்ட் லெவல் 3 னுக்குப் போறோமுன்னு  அரசின் அறிவிப்பு வந்தது. ஏப்ரல் 27 முதல் ஒரு படி கீழிறங்கியாச்சு !   33 நாட்கள் ரொம்ப மன அழுத்தத்தோடுதான் கடந்து போச்சு.

இதுக்கிடையில்  ரெண்டுநாள் முந்தி ஏப்ரல் 25 அன்று இங்கே ANZAC Day  ( Australia New Zealand Army Corps Day)அஸ்ட்ராலியா நியூஸிலாண்ட்  படையினர் , முதல் உலகப்போரில் ப்ரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் இணைஞ்சு சண்டை போட க் கிளம்பிப்போய்த்  துருக்கியிலே இருக்கற Gallipoli Peninsula என்ற இடத்துலே மாட்டிக்கிட்டு 2721 படைவீரர்கள் 'வீரமரணம் ' அடைஞ்சநாள். எல்லா வருஷமும் இந்த நாள் அரசு விடுமுறைதான். காலையில் சூரியன் வருமுன்  நாட்டின் எல்லா ஊர்களிலும்  கொடியேற்றி  போரில் வீழ்ந்த படையினருக்கான  ப்ரேயர் சர்வீஸ் நடக்கும். Dawn Service.  சின்னச்சின்ன கிராமங்களில் கூட அங்கிருந்துபோய் போரில் கலந்துக்கிட்டவர் ஒரே ஒரு நபராக இருந்தாலும் கூட வார் மெமோரியல் ஒன்னு கட்டி வச்சுருக்காங்க. 

நாங்களும் இங்கே நியூஸி வந்த நாளாய் (அதுஆச்சு 33 வருஷம்) ஒரு சர்வீஸில்  கலந்துக்கணுமுன்னு நினைச்சோமே தவிர, அதிகாலை நாலரைக்கு எழுந்து சர்வீஸ் நடக்கும் இடத்துக்குப் போக ஒரு சோம்பல்.  இந்த வருஷம் லக்டௌன் காரணம் இது ஏதும் இல்லை. எங்க ப்ரதமர் ஒரு அறிக்கை  விட்டாங்க.  25 ஆம் தேதி காலை 6 மணிக்கு அவுங்கவுங்க  வீட்டு வாசலில்  வந்து நில்லுங்க.  ப்ரேயர் சர்வீஸை ரேடியோவில் ஒலிபரப்புவாங்க.  அதைக் கேட்டுக்கிட்டே  அஞ்சலி செலுத்தலாம்.
அட! இது நல்லா இருக்கே.  காலையில் நம்மூட்டு வாசல்தானே, நின்னாப்போச்சுன்னு நின்னோம். நம்ம ரஜ்ஜூ கூட  வந்து கலந்துக்கிட்டான்.  இதுக்கு முதல் ரெண்டு நாட்கள் சின்னப்பிள்ளைங்க இருக்கும் வீடுகளில், பிள்ளைகளுக்கான ஆக்டிவிட்டின்னு பாப்பிப் பூவின் படம் வரைஞ்சு   அலங்கரிப்பதும் நடந்தது. நம்ம பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் படங்கள் வரைஞ்சு ஃபென்ஸ் கட்டைகளில்  ஒட்டி வச்சாங்க.
லெவல் மூணு வந்ததும்  அடைச்சு வச்ச பிஸினஸ்கள், நிறுவனங்கள் , தொழில்கள்னு  சிலபல வகைகள்  வேலைக்குத் திரும்பியாச்சு.  நம்ம மருமகன், ரொம்ப மகிழ்ச்சியோடு வேலைக்குத் திரும்பிப்போனார். வீட்டுலேயே இருந்து போதும் போதுமுன்னு ஆகிருச்சாம்.  கூண்டுக்குள் அகப்பட்ட புலி :-)

வீட்டுக்குள்ளே, தன் பேட்டைக்குள்ளேன்னு அடைஞ்சுருந்த மக்களுக்கும் சின்னதா ஒரு சுதந்திரம் கிடைச்சது.  அவுங்கவுங்க ஊருக்குள்ளே மட்டும் கொஞ்சம் போய் சுத்திக்குங்கன்னாங்க.  ஆனால்  குமிழிக்குள்ளேயே இருக்கணும்.  அடுத்தவங்களைத் தொடப்டாது.  ஆஹா....  மடி காக்கமாட்டோமா,என்ன ?   நாங்களும் பீச் வரைக்கும் போயிட்டு வந்தோம். போய்வர்ற வழியில்தான் நம்ம சனாதன் தர்ம ஹால் இருக்கு. அப்படியே அந்த கேட்வரை போய், ஆஞ்சி சந்நிதிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு வந்தோம். மூடிக்கிடந்தது. விளக்கைக்கூடக் காணோம். ப்ச்.... பாவம் ஆஞ்சி....
அடுத்த ரெண்டரை வாரம் முடிஞ்சதும்  மே மாசம் 13 முதல்  அலர்ட் லெவல் 2 . கொஞ்சம் விதிகள் தளர்த்தினாங்க.  மகளும் வீட்டு ஆஃபீஸைக் காலி செஞ்சுட்டு வேலையிடத்துக்குப் போனாள். 

கோவில்களையும் திறக்கலாமுன்னு சொன்னாங்க.  எல்லோரும் சமூக இடைவெளி  ரெண்டு மீட்டர் கடைப்பிடிக்கணும்.  கோவிலில் ரெஜிஸ்டர் வச்சு எத்தனை மணிக்கு உள்ளே போறோம். எத்தனை மணிக்கு வெளியே வர்றோம், நம்ம பெயர், ஃபோன் நம்பர் எல்லாம் எழுதிவைக்கணும். நாளைபின்னே  யாருக்காவது  கொரோனா வந்துட்டால்  அவுங்க போன இடத்தில் வேற யார்யார் இருந்தாங்கன்னு  கண்டுபிடிச்சு அவுங்களையும் பரிசோதிக்கணும் என்பதுதான் காரணம்.

ஹரேக்ருஷ்ணாவில்  சாமி கூட கம்பிக்கதவு வழியாத்தான் தரிசனம். சோஸியல் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணறார்.

சுமார் அம்பது நபர்கள் வரை ஒன்னாக்கூடலாம். ஆனால் அப்பவும்  அதே இடைவெளி விட்டே ஆகணும்.  எந்தவகை கூட்டம் என்றாலும்  நபர்களின் விவரங்களைப் பதிஞ்சு வைக்க வேண்டியது முக்கியம்.
நாங்களும் எப்போ எப்போன்னு  இருந்தோமா....    எங்க சனாதன தர்ம ஹாலில் பிரதிஷ்டை செஞ்சுருந்த ஆஞ்சியைப் பார்க்க ஓடுனோம். மே 16 ஆம் தேதி.

அன்றைக்கு ஒரு மரணம் , சொந்தத்துலே.... நம்ம சம்பந்தியம்மாவின்  தாய் சாமிக்கிட்டே போயிட்டாங்க.   ரெண்டுமூணு வருஷமாவே உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையோடு கூடிய  சீனியர் சிட்டிஸன் ஹோமில் இருந்தாங்க.  அவுங்க கணவரும் இங்கே இதே ஊரில்  வேறொரு  ஹோமில்தான் இருக்கார். கொரோனா லாக்டௌன்  அறிவிக்கும் முன் வரை, தினமும் மனைவியைப் பார்க்கப் போய் வருவார்.  உடல்நிலை காரணம், அவுங்களுக்குப் பார்வை போயிருந்தது. தினமும் கணவருக்காகக் காத்திருக்கும் மனைவி,  இவர் போனதும் தான்  சாப்பிடுவாங்க.  ரெண்டுபேரும் கொஞ்சம் பேசிக்கிட்டே  கை கோர்த்து உக்கார்ந்துருப்பாங்க.  இதுதான் அவுங்க நாளின் மகிழ்ச்சியான நேரம். லாக்டௌன் வந்தபிறகு,  கணவரால் வெளியே ஹோமை விட்டுப் போக முடியாது.  அங்கே மனைவியும் வேற யாரையும்  சந்திக்கவும் முடியாது. ஹோமுக்குள் வர யாருக்குமே அனுமதி இல்லை. உள்ளேயே இருந்து வேலை செய்யும்  பணியாட்கள் தவிர. பயம்தான்....  கொரோனாவுக்கு சீனியர் சிட்டிஸன்களை ரொம்பவே பிடிக்குமாம்!

இப்ப லெவல் 2 வந்தது முதல் திரும்ப  மனைவியைப் பார்க்க அனுமதி கிடைச்சுப் போய்வர ஆரம்பிச்சார்.  ஆனால் எண்ணி மூணாம் நாளிலேயே நிரந்தரப்பிரிவு ஏற்பட்டுப்போச்சு. 69 வருஷ மணவாழ்க்கை !   சவ அடக்கத்துக்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிச்சாங்க சம்பந்தியம்மாள். மே மாசம் 22 தேதின்னு முடிவாச்சு. பாட்டிக்கு வயசு 92.

அலர்ட் லெவல் 4 இல் சவ அடக்கத்துலே  அநேகமா  யாருமே கலந்துக்க முடியாது.  அதனால் இயற்கை மரணம் அடைஞ்சவங்கள் எல்லாம் மார்ச்சுவரியில் காத்திருந்தாங்க.  கொரோனா மரணத்தைத்தான் உடனுக்குடன் எரிக்க அனுமதி இருந்தது.  அதுவுமே உறவினர் உற்றார் இல்லாமல்தான்.

லெவல் 3 இல் இருபதுபேர்வரை, சவ அடக்கம், கல்யாணம் போன்றவைகளில் கலந்துக்கலாமுன்னு சொன்னாங்க. ரெண்டு மீட்டர் இடைவெளி கடைப்பிடிக்கணும்.

இப்போ லெவல் 2 இல்  அம்பதுபேர் வரைன்னு கணக்கு. உள்நாட்டுப் பயணத்துக்கும் அனுமதி கொடுத்துருந்தாங்க.  எல்லாம் லிமிட்டட் ஃப்ளைட்டுகள்தான். அதிலும்  குறைஞ்ச அளவு ஆட்களை மட்டுமே அனுமதிக்கிறாங்க. சமூக இடைவெளி விமானத்துக்குள்ளும்தான்.

சம்பந்தி வீட்டுலே பெரிய குடும்பம். வெளிநாடு, உள்நாடுன்னு  நெருங்கிய சொந்தம் ஏராளம்.  வெளிநாட்டு உறவினர் யாருமே வர முடியாது.  நியூஸி பார்டர் மூடியாச்சு. உள்நாட்டு சொந்தங்கள் தான் பல ஊர்களிலும் இருந்து.  இவுங்களே  நிறையப்பேர் என்பதால் நாங்க சவ அடக்கத்துக்குப் போகலை.  இங்கத்து வழக்கப்படி, சவ அடக்கத்துக்கான  ப்ரேயர் சர்வீஸ் முடிஞ்சதும்,  சின்னதா  சிற்றுண்டிகளுடன்  ஒரு கெட் டு கெதர் இருக்கும்.  பொதுவா  இது   ஃப்யூனரல் பார்லரிலோ, அவுங்க போகும் சர்ச்சுகளிலோ,  மின்மயானத்திலோ இருக்கும் ஹாலில் தான் நடக்கும்.
கொரோனா காரணம் எல்லாத்திலும் மாற்றம் (தாற்காலிகம்தான்) வந்துட்டதால், நம்ம மகளின் வீட்டில்  இதை வச்சுருந்தாங்க. சம்பந்தியம்மாவின் வீடு   வேற ஊரில்!  நாங்க மகள் வீட்டுக்குப் போய், சம்பந்தியம்மா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிட்டு  வந்தோம்.  தாத்தாவைப் பார்க்கதான் மனசுக்குக் கஷ்டமாப் போச்சு.  வெளிநாட்டுலே இருந்த குடும்ப அங்கங்கள் (தாத்தா பாட்டியின் மகன்கள், உடன்பிறந்தவர்கள் ) எல்லோரும் Zoom வழியில்   கலந்துக்கிட்டாங்க . மறுநாள் தாத்தாவுக்குப் பொறந்த நாள். 93 !  உறவினர் எல்லாம் இப்போ அங்கே கூடி இருப்பதால், இன்றைக்கே பொறந்தநாளை, கேக் வெட்டிக் கொண்டாடியாச்.  எல்லாம் மகளின் ஏற்பாடுதான் ! ஜனனம்,மரணம் ரெண்டும் ஒரே நாளில் கொண்டாடியாச்சு!

பாருங்க.... எனக்கு என்னென்ன அனுபவங்கள் கிடைக்குதுன்னு.....

தொடரும்..........  :-(


11 comments:

said...

புதுப் புது அனுபவங்கள். காலம் நமக்கு பலவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

தொடர்கிறேன்.

said...

நல்ல அணுபவப் பகிர்வு.
இங்குதான் பாதிப்பு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கு.

said...

நன்றி வணக்கம்

said...

கொரோனா எல்லாரையும் கணினி வழி சோஷியல் டிஸ்டன்ஸ் மூலம் சந்திக்க வழிகாட்டிவிட்டிருக்கு .பேங்க் காரரும் இப்போ மைக்ரோசாப்டின் டீம் ஆப் மூலம் வர சொல்றாங்க .எனக்கு ஒரு ட்ரெயினிங் இருக்கு சூசைட் அவெர்னஸ் /ஹெல்ப் டு பிரிவென்ட் ..ட்ரெயினிங் அதையும் ஒன் வீக் கோர்ஸா ஆன்லைனில் சொல்லித்தரப்போறாங்க !!! 
அரசியலில் நம் நாட்டினர் வெளிநாட்டு மக்களிடம் கத்துக்கனும்க்கா ..எனக்கு நம்மூர் அரசியலையும் அரசியல்வியாதிகளையும் பிடிப்பதில்லை .மக்களும்தான் ஒருவரை பிடிக்கல்லன்னா தாக்குவதில் திட்டுவதில்  எவ்ளவுக்கேவலவு தரம் தாழ்த்தணும்னு நினைத்து அவர்கள் தங்களை தாழ்த்திக்கறாங்க :(   ரஜ்ஜூ யோகா செய்றானா :) .நானும் என் நாலுகால் மகள்களுக்கு பெயர் டைம் வரச்சொல்லி கொடுத்திருக்கேன் :) ஒன்னு ஒழுங்கா யிருக்கும் மற்றது அப்போதான் பார்த்து ஜம்ப் பண்ணும் வேணும்னு சத்தம் பண்ணும் :)இங்கும் கொரோனாக்கு சீனியர் சிட்டிசன்ஸை பிடிச்சி :(  
உங்களுக்கு கோயிலுக்கு போக சான்ஸ் கிடைச்சதில் மகிழ்ச்சி .இங்கே இன்னும் திறக்கலை ஆகஸ்ட் திறக்ககூடும்னு சொல்றாங்க .

said...

அன்றே படித்துவிட்டேன்.

என்னதான் இருந்தாலும் வீட்டிலேயே இருப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். எத்தனை நேரம்தான் தொலைக்காட்சியையே பார்ப்பது?

எங்க வளாகத்தில் ஒரு பில்டிங்கில் ஒருவர் ஃபேமிலில கொரோனா என்பதால் அந்தத் தளம் முழுவதும் சானிடைசர் அடித்தார்களாம். இப்போ நடைப்பயிற்சி போவதற்குக்கூட மிகுந்த யோசனையாக இருக்கிறது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

காலம் கற்றுத்தருவதைப் புரிஞ்சுக்கிட்டு அதன்வழியேதான் போகணும். 'நீர்வழிப்படும் புணை போல....

வேற வழியே இல்லை.... ப்ச்...

said...

வாங்க அரவிந்த்,

கவனமா இருங்க..... அதொன்னுதான் நம்மால் முடியும்....

said...

வாங்க விஸ்வநாத்,

வணக்கம்.

said...

வாங்க ஏஞ்சலீன்,

ரஜ்ஜு யோக நித்திரையில் இருப்பான் :-) வரவரக் குறும்பு அதிகமாகிக்கிட்டே போகுது. நேத்தி தியான நேரத்தில் இருமுறை கையைத் தொட்டு மெள்ள நகத்தால் கீறி எழுப்பிக்கிட்டே இருந்தான்....

அரசியல்வியாதிகள் எல்லாம் சுயநலம் பிடிச்சுக்கிடக்குதுகள்..... என்ன சொல்ல ?

எல்லோரும் கவனமா இருங்க..... எப்படியாவது கொரோனா ஒழிஞ்சால் சரி...

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

நான் பொதுவா டிவி பார்க்கறதில்லை.... இப்பதான் கொரோனா காலத்தில் ஸ்பெஷல் நியூஸ் பார்க்கிறேன்.

எல்லோரும் கவனமா இருங்க. ஆரோக்கியமான உடம்பால் கொரோனாவை சமாளிக்க முடியும். கொஞ்சம் படுத்தும்தான்.... நம்பிக்கையோடு இருப்போம்.

said...

புது விதமான அனுபவங்கள்.