Friday, December 08, 2017

குருவும் சிஷ்யனும்..... என்று சொல்லலாமா?(இந்திய மண்ணில் பயணம் 86)

எத்தனை முறை இந்தப் பாண்டிக்கு வந்துருக்கேன்.... ஆனாலும்  இந்த வீட்டுக்கு வர வாய்ச்சதோ?  இன்றைக்கு நல்ல வாய்ப்பு. விடக்கூடாதுன்னு,  நம்ம வரதராஜர் கோவிலில் இருந்து கிளம்புனது  'நம்ம முண்டாசு'அங்கே வசிச்ச வீட்டுக்குத்தான்.

ரொம்பக் கிட்டக்க...  அடடா.... தெரியாமல் போச்சே....




 ஈஸ்வர தர்மராஜா கோவில் தெரு  முனையில்  இருக்கு வீடு. இப்ப இதை நினைவகமா மாத்தி இருக்காங்க. கூடவே  பாரதியின் எழுத்துகளை ஆராயும் ஆராய்ச்சி மையமாவும்!

சுமார் பத்து வருசம் இங்கே குடி இருந்துருக்கார்.  1908 முதல்.......     பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி கடிந்து பேசி, எழுதின்னு இருந்ததுலே  இவரைப் பிடிச்சு சிறையில் அடைக்கப்போற சேதி  தெரிஞ்சதும் புதுச்சேரிக்கு 'எஸ்' ஆனார்.  இங்கே தான் ஃப்ரெஞ்சு அரசாங்கத்தின் ஆட்சியா இருந்துச்சே.  வெவ்வேற மாகாணம். வெவ்வேற    ராஜ்ஜியம்!
பாரதியைப் பத்தி நான் சொல்றது சூரியனுக்கே டார்ச் அடிக்கிற மாதிரி!  நம்ம வ.ரா எவ்ளோ சுவாரசியமா எழுதி இருக்கார் பாருங்க.  இந்தச் சுட்டியில் நூல் பிடிச்சுப் போங்க..... கட்டாயம் உங்களுக்கும் பிடிக்கும்!



வாசலில்  உயரம் குறைஞ்ச திண்ணை/வராந்தா அமைப்பு தூண்களுடன்!   முன் பக்கம் இருக்கும் சின்ன ஹாலைக் கடந்து உள்ளே போனதும்  குட்டியா  ஒரு முற்றம், சுத்திவர   தூண்களோடு உள் வராந்தா.   முற்றத்தில்  தொட்டியில் இருக்கும்  சில செடிகளோடு நானும்!   சில பெண்கள்  புத்தக பைண்டிங் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  அவுங்களிடம் படம் எடுக்க அனுமதி  வாங்கினேன்.

இனி இது ஒரு படப்பதிவுன்னு  சொல்லிக்கலாம் னு நினைச்சேன். அப்படியும் சொல்ல நாலு சேதி ஆப்ட்டதே :-)

நம்ம தில்லக்கேணியில் இருக்கும் பாரதியார் இல்லம் ஏற்கெனவே பார்த்ததால்....  இங்கே பிரமிப்பு அவ்வளவா இல்லை.  ஏறக்கொறைய அதே  படங்கள், அவருடைய கைப்பட எழுதிய கட்டுரைகள், பாடல்கள்னு  சேகரிப்பு. கண்ணாடிப்பொட்டிக்குள் காட்சிக்கு வச்சுருக்காங்க.

அப்போ எழுதுன பாரதியும் சாரதியும்  இங்கே !




ஒரு அரைமணி நேரம்தான் அங்கே இருந்தேன். நல்ல சுத்தமா பராமரிச்சுக்கிட்டு இருக்காங்க.  ரங்கோலியில் ஒரு  பாரதி, அருமை!
இந்த வீடு, விரிசல் விட்டுப் பழுதாயிருச்சுன்னு இடையில் ஒரு அஞ்சு வருசம் மூடியே வச்சுருந்து,  புதுப்பிச்சு   சமீபத்தில்தான்  திறந்துருக்காங்களாம்.

மேலே  படம் : பழைய வீடு!  அன்றும்  இன்றும் !
இன்னும்  இந்த மாநிலத்தில்   பாதாள சாக்கடை அமைப்பு  முழுசுமா  வரலைன்னாலும் சென்னையை விடச் சுத்தமான மாநிலம் என்றதை ஒப்புக்கத்தான் வேணும்.


அடுத்ததாகப்போனது  சிஷ்யர் வாழ்ந்த வீட்டுக்கு!   உள்ளூர்க்காரர்!  பாரதி மேல் இருந்த அபிமானத்தால் கனகசபை சுப்புரத்தினம்  என்ற தன்னுடைய பெயரை பாரதிதாஸன்னு மாத்திக்கிட்டார்!  (கனகசபை... அப்பா!)
தாஸன்னு சொல்லிக்கிட்டாரே தவிர ரெண்டு பேருக்கும் வயசு வித்யாசம் அதிகம் இல்லை. ....  வெறும் ஒன்பது வருசம்தான் அவர் வயசில் பெரியவர். அவர் 1882 இல் பிறந்தார். இவர் 1891 !

பாரதியார் புதுச்சேரிக்கு  வந்தது 1908 இல். அப்போ  அவருக்கு  வயசு 26 தான்.  இவருக்கோ  17 !   நல்ல நண்பரா இருக்க வேண்டியவர் அவருடைய தாஸானுதாஸனா மாறிட்டார் பாருங்க!   பதின்மவயசு பிரமிப்பு !!!

ஆனாலும்  நம்ம   பாரதிக்கு எல்லாத்துலேயும்  ஒரு   அவசரம்..... இளரத்தம் கொதிச்சு தேசபக்தியில் ஈடுபட்டு,  பிரிட்டிஷாரை எதிர்த்து எழுதி, வீரமுழக்கம் இட்டு,  ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமுன்னு பாட்டும் எழுதி,   எல்லாத்தையும்  வேகவேகமாச் செஞ்சுட்டு, கனவு கண்டு ஆசைப்பட்ட சுதந்திரம் கிடைக்கும்வரை பொறுமை  இல்லாம முப்பத்தியொன்பது வயசுலேயே....  சாமி கிட்டே போயிட்டாரேன்னு....  பல சமயம் நான் நினைச்சு வருத்தப்படுவேன்.


நிமிஷ நடையில் இந்த வீட்டுலே இருந்து அந்த வீட்டுக்குப் போயிடலாம். 115, பெருமாள் கோவில் தெரு.


 இங்கே  திண்ணை வச்ச பழையகாலத்து வீடு!  தரையெல்லாம் கோலங்கள் போட்டு வச்சுருக்காங்க.  வீட்டு உள் முற்றத்தில்  பாரதிதாஸனின் சிலை !
 இங்கே படம் எடுக்க அனுமதி இல்லையாம்.  வாசலில் இருந்தே நாலு க்ளிக்ஸ். அவ்ளோதான்.

ஆனால்  வலையில் சிலபல படங்கள் இருக்கு. ஒருவேளை  நாம் போகும் நேரம், பொறுப்பில் இருக்கும் ஊழியர்களின் மனசுபோல.....   அல்லது   விஐபிக்களின் விஸிட்?   சுட்டுப்போட்டேன் நானும் :-)


இங்கேயும் பாரதிதாஸனின் வாழ்க்கை வரலாறு,  நடந்த முக்கிய சம்பவங்கள், எழுதுன கவிதைகள், பல்வேறு முக்கிய நபர்களுடன் நடந்த சந்திப்புகளின் படங்கள்னு  வச்சுருக்காங்க.

இவருடைய  எழுத்துகளை ஆராயும் நபர்களுக்கான ஆராய்ச்சி மையமும் இதுதான்.
இந்த வீடுமே ரொம்ப விசாலமாவும், பழைய பளபளப்பு, மினுங்கும் தூண்கள்னு அருமையா இருக்கு. இது இவரின் சொந்த வீடு என்பதால் குடும்பம் கட்டிக் காக்குதுன்னு தோணுச்சு. பலதும் என்னுடைய தோணல்கள்தான்.   மனசு நினைக்கிறதை என்னன்னு  வேணாமுன்னு  சொல்ல முடியுது.... இல்லே....

வாசல் திண்ணைக்குப் பக்கம் இவர் எழுதிய நூல்களின் பட்டியல் ஒன்னு!


இங்கே சுமார் ஒரு மணி நேரம் இருந்துருக்கேன். 

பாரதிதாஸன் என்றதும் சட்னு என் மனசுக்குள்ளே வர்றது  'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ   & சங்கே முழங்கு !'   சினிமாவில் வந்த தாக்கத்தால் இருக்கலாம்.  தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது.....  ப்ச்....

இன்னும் ஒன்னு சொல்லணுமுன்னா.... அவர் ஆத்திகர் இவர் நாத்திகர்.  ஆனால்  தமிழும், கவிதையும்  இவரை அவரிடம் பக்தி  செலுத்த  வச்சுருச்சு!!

வெய்யில் ஏற ஏற  வெளியே சுத்த மனசில்லாமல் போச்சு.  ஷெண்பகாவுக்குத் திரும்பிட்டேன்.

ஷெண்பகாவில்  உள் அலங்காரம் செய்தவர் எங்கூர் பீட்டர் ஜாக்ஸனின்  ரசிகர் போல!    மேற்கூரையில் இருந்து   கருடன்கள் நம்மைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க :-)

திரும்ப வலை மேயல், அண்ணனிடமும் அண்ணியிடம்  ஃபோன்பேச்சு, மதியச் சாப்பாடுன்னு  எல்லாம் இங்கே அறையிலேயேதான்.  எப்பவோ எப்படியோ அசந்து தூங்கிட்டேன்.....    மாலை  அஞ்சரைக்கு   இவர் வந்து எழுப்பும்வரை அப்படி ஒரு தூக்கம் :-)

இதுவரை போகாத, கேள்விப்படாத கோவில் விவரம் ஒன்னு(ம்) கொண்டு வந்துருக்கார்.

வாங்க அங்கே போகலாம்....

தொடரும்..... :-)

10 comments:

said...

இன்னும் மூன்று நாட்களில் மகாகவி பிறந்தநாள் என்னும் நிலையில் பொருத்தமாக பதிவு. பழைய வீட்டின் படமும் இணைத்திருப்பதால் ஒப்பிட முடிகிறது.

said...

பாரதி, பாரதிதாசன் இருவருடைய நினைவு இல்லமும் ஒரே பதிவில்.

பாண்டிச்சேரி பல முறை சென்றதுண்டு என்றாலும் இங்கே எல்லாம் சென்றதில்லை!

said...

அருமை நன்றி
பாரதியின் தேடிச்சோறு நிதம்தின்று - அருமையானக் கவிதை, மகாநதி படத்துல வந்திருக்கு.

said...

பார்த்துள்ளேன். நாம் அவசியம் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று. பகிர்வுக்கு நன்றி.

said...

பாரதிதாசன்னு அவர் எழுதுன மாதிரியே அவர் பேரை எழுதலாம் டீச்சர். :)

துன்பம் நேர்கையில் நல்ல பாட்டு. அதைவிட தமிழுக்கும் அமுதென்று பேர் பாட்டு இன்னும் இனிமையான பாட்டு.

பாரதியிடம் கவிநடையை இரசிப்பேன். பாரதிதாசனிடம் மொழிநடையை இரசிப்பேன்.

said...

வாங்க ஸ்ரீராம்..

இன்றைக்கு பாரதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பார்த்தீர்கள்தானே?

எதையும் இழந்தபிறகுதான் நமக்கு அருமை தெரிகிறது, இல்லே?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அடுத்த முறை போகும்போது பார்வையிட்டால் ஆச்சு. ஒரு ஒன்னரை மணி நேரம் போதும்!

ஆனால் வேளைன்னு ஒன்னு வரணுமே....

said...

வாங்க விஸ்வநாத்.

ரொம்ப பழைய படங்களிலே பாரதியார் பாடல்கள் வந்துருக்கே!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

மிகவும் நன்றி.

said...

வாங்க ஜிரா.

அப்படியும் எழுதலாம்! உச்சரிப்பு மாறிப்போகுதே...

தாஸ், தாஸன், நிதி இவையெல்லாம் வடமொழி எழுத்துகள் இருந்தாலுமே.... தமிழில் விலக்கப்பட்டவைகளா என்ன?

கவிநடை, மொழிநடை ரசிப்பு அருமை!