Friday, March 25, 2016

மச்சம் வச்சுக்கிட்டா அண்ணன். மச்சத்தை எடுத்துட்டா... தம்பியா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 12)

சரியா மாலை மணி ஆறு.  அலர்மேல் மங்காபுரம் வந்து சேர்ந்தாச்சு. ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் இருந்து அதே பதினைஞ்சு கிமீதான். திருச்சானூர் என்ற பெயர்தான் எல்லோருக்கும் சட்னு தெரிஞ்சமாதிரி இருக்கும். பத்மாவதி தாயார் குடிகொண்டுள்ள ஊர்.  இவளோ அலர்மேல்மங்கை. தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பெண்தான் பத்மாவதி. பதுமம் என்றாலும் தாமரைதான் கேட்டோ!  இந்த அலர்மேல் என்பதுதான் அலமேலுன்னு மருவி இருக்கு.
கலகலப்பான கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்ததும்,  ஏழெட்டுப்படிகள் ஏறி  கோவில் வளாகத்துக்குள் நுழையறோம்.  கம்பித்தடுப்பு வரிசைகளுக்குள் கூட்டம் அலைமோதுது. தரிசனத்துக்கு நிற்கும் வரிசை. அம்பது ரூ கட்டினால்   வரிசையில் காத்துக்கிடக்காமல்  கொஞ்சம் சீக்கிரமா  கோவிலுக்குள்ளே போகலாம்.  காசு கொடுத்து சாமி தரிசனம் கூடாதுன்னாலும்....   நமக்கு நேரக்குறைவு என்பதால் போகட்டும் போன்னு சமாதானம் செஞ்சுக்க வேண்டித்தான் இருக்கு.  டிக்கெட் கவுண்ட்டர் மூடி இருக்கேன்னு  வரிசையை ஒழுங்குபடுத்தும் காக்கிச்சட்டைகளிடம் கேட்டால்,  ஏழரைக்குத்தான் டிக்கெட் தருவாங்களாம்.



இன்னும் ஒன்னரை மணி நேரம் இருக்கே. பேசாம கோவிந்தராஜரைத் தரிசனம் செஞ்சுக்கிட்டு வந்துரலாமேன்னு நம்மவர் சொன்னதால்   வாசலில்  மணிமாலைகள் வித்துக்கிட்டு இருந்த ஒரு முதியபெண்மணியிடம் ஒரு முத்துமாலை மட்டும் நம்ம ஜன்னுவுக்கும் பக்கத்தில் ரங்கோலி போடும் கோல  அச்சு மூணு,  வீட்டுக்கும் வாங்கிக்கிட்டு கோவில் வளாகத்தை விட்டு வெளியே இறங்கினால் பத்மாவதி தாயார் நமக்காக யானையை அனுப்பி இருக்காங்க.
நேரா கீழ்த்திருப்பதி போயிடலாமுன்னு  சீனிவாசனிடம் சொன்னதும்,  பார்க்கிங் கிடைப்பது கஷ்டம் என்றவர்,  பீமா ஹோட்டலில் பார்க்கிங் இருக்கு. ஆனால்.... அங்கே எதாவது  சாப்பிட்டால்தான் கார் நிறுத்திக்கலாம் என்றதும், அது ஒன்னும் பிரச்சனையே இல்லை.  எதாவது  டிஃபன் காபி சாப்பிட்டால் ஆச்சுன்னோம். மாயா ரெஸ்ட்டாரண்ட். ஸ்நாக்ஸ் வகையில்  பஜ்ஜி வடை போண்டா  இருக்கான்னால் இப்ப மணி ஆறரை ஆகிருச்சு. டிஃபன் ஐட்டங்கள்  டைம் முடிஞ்சுருச்சுன்னு  சொன்ன பணியாளர் கொண்டுவந்து கொடுத்த மெனு லிஸ்ட்டில் சீன & வட இந்திய வகைகள் தான் இருக்கே  தவிர நமக்கு ஒன்னும் ஆப்டலை. வெறும் காஃபி  குடிச்சுட்டு, கெமெரா செல்ஃபோன் எல்லாத்தையும்  வண்டியில் வைக்கச் சொல்லிட்டு  நாங்கள்  கோவிலுக்குப் போயிட்டோம்.
இந்த ஊர் முழுக்க முழுக்கப் பெருமாளையே நம்பி இருக்கு! பக்தர்களும்  கணக்கிலடங்காம தினம் தினம் வந்துக்கிட்டே இருக்காங்க. ஊரை அழகு படுத்தும் சமாச்சாரங்களும் சிலைகளும் அங்கங்கே கண்கொள்ளாக் காட்சிதான்!

போனமுறை (2011) வந்தப்பக்கூட  இங்கே புண்டரீகவல்லித் தாயாரை தரிசிக்கலை. கையில் பத்து ரூ மட்டும் எடுத்துக்கிட்டுக் கோவிலுக்குள் நுழைஞ்ச தைரியம்!  தரிசன டிக்கெட் 20 என்றதால் திரும்பி வந்துட்டேன்.  இந்தமுறை கையில் (கோபால் பையில்)  கொஞ்சம் காசு அதிகமாகவே இருக்கு. ஆனால்...  'உன் காசு வேணாம், போ'ன்னு தாயார் இலவச சேவை சாதிச்சாங்க. மஹாலக்ஷ்மி!
அடுத்தபக்கம் மூலவரை தரிசிக்கப்போனால்... என்னவோ புதுமாதிரி ஏற்பாடு. இலவச தரிசன வரிசையில் நின்னு கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து போறோம். வலப்பக்கத் தூண்களில் இருக்கும்  சிற்பங்களையும், சிலவற்றின் சம்பவக் கதைகளையும் நம்மவருக்குச் சொல்லிக்கிட்டே போனதில்  அலுப்பு தெரியலை. அடடான்னு  எதையாவது சுட்டிக் காட்டினோமுன்னா...  அதுக்கான கதையைச் சொல்லணும். ஏற்கெனவே நூறு முறை சொன்ன கதைகளாத்தான் இருக்கும். ஆனால்  இந்தக் காதில்கேட்டு நேரா அந்தக் காதுவழியா வெளியே போயிரும்போல.
ஒரு சந்நிதியை மட்டும் பார்த்துட்டு வெளிவரமுடியாதபடி கயிறு கட்டி ஒரு அரேஞ்ச்மெண்ட். எக்ஸிபிஷனில் ஒவ்வொரு ஸ்டாலாக வரிசையாப் பார்த்துக்கிட்டு வர்றதைப்போல  நாலு சந்நிதிகளைப் பார்த்துட்டுத்தான் வெளியே  வரமுடியும்.
கோவிந்தராஜர், கிடந்த கோலம். பாம்புப் படுக்கை!  காலடியில் அரக்கர்கள் மதுவும் கைடபரும்.(மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே....  நினைவிருக்கோ?)
அவரைக் கும்பிட்டபிறகு அடுத்த ஸ்டால்களில்  நம்ம பார்த்தஸாரதியும் அவர் கூட இருக்கும் ருக்மிணி சத்யபாமா!  (வேறெங்கேயும்  இப்படி பார்த்த நினைவில்லை எனக்கு!) கல்யாணவெங்கடேஸ்வர் ஒரு சந்நிதியில் இருக்கார். ஆண்டாள் சந்நிதியில் பிரஸாதமா அக்ஷதை கிடைச்சது.  அப்புறம் நம்ம ஆஞ்சி, பெரியதிருவடின்னு சகலரையும் சேவிச்சுக்கிட்டே கயித்தை விட்டு வெளியே வர்றோம்.

சந்நிதிகளில் பொதுவான விஷயமுன்னா  ஒன்னே ஒன்னுதான்..... 'தக்ஷிணை போடு. தக்ஷிணை போடு'ன்னு எல்லா மொழிகளிலும் சொல்லிக்கிட்டே இருக்காங்க. என்ன ஆஸ்வாசமுன்னா... எவ்வளவுன்றதையும் அவுங்களே சொல்லிடறதால் நமக்குப் பிரச்சனை இல்லை. பத்து ரூபா, பதி ரூபாய்லு, ஹத்து ருப்யா, தஸ் ருப்யா....

திருமலை கோவில் வருமுன்னேயே இங்கே கீழ்த்திருப்பதியில்  சின்ன அளவில் கோவிந்தராஜர் கோவில் வந்துருக்கு. 1500 வருசங்களுக்கு  முன்னே! அதனால் இவர் ஸ்ரீநிவாஸனுக்கு அண்ணன்! இவரைக் கும்பிட்டு, இவர் அனுமதி வாங்கிக்கிட்டுத்தான் மலையேறணுமுன்னு ஒரு சம்ப்ரதாயம் இருக்கு.
அண்ணன் என்ற ஹோதாவில் இருப்பதால், மேலே மலையில்  தம்பிக்குக் கிடைக்கும் எல்லா காணிக்கைகளையும் தினசரி  மாலை கீழே கொண்டுவந்து  இவரிடம் கணக்கு காமிச்சுட்டுத்தான் கஜானாவுக்கு அனுப்பணும் என்பது வாடிக்கை. இவர்  அந்தக் கால கணக்குப்பிள்ளை.. கணக்கு சரியா இல்லைன்னா அம்புட்டுதான்.

காலப்போக்கில் இந்த  சம்ப்ரதாயமும் மாறிப்போச்சு. வாடிக்கை மறந்ததும் ஏனோ? அப்போ அவ்வளவாக் கூட்டம் இல்லை.  இப்ப மக்கள் வெள்ளம் பெருகிப்போய்  தினசரி வசூலே கோடிகளைத் தாண்டும்போது  அவ்ளோ காசையும் மூட்டைக் கட்டிக்கொண்டுவர்றது  கஷ்டமில்லையோ.... அதனாலே.... அங்கேயே எண்ணி முடிச்சுக் கணக்குகளை மட்டும்  இங்கே தினசரி கொண்டு வந்து காட்டிடறாங்க. (காசைக் கண்ணுலேயே காமிக்கறதில்லைபா. அதான் போல அது எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சுக்கப் பலமொழிகளில் நமக்கு ஓதறாங்க பட்டர்ஸ்!)

'இவரும் அவரும் பெருமாள்தானே, அதெப்படி அண்ணன் தம்பியா இருக்காங்க?'ன்னார் நம்மவர். 'மச்சம் வச்சுக்கறதைப் போலவா'ன்னதும்  அப்படிக்கூட  வச்சுக்கலாம்.  இடி வாங்குனது தம்பி. தப்பிச்சுக்கிட்டவர் அண்ணன்.  அதென்ன இடி? மோவாயில் இடிவாங்கித்தானே  பச்சைக்கற்பூரமும் துளசிச்சாறுமா தினம் சாத்தியாறது இல்லையோ? தயாசிந்து பற்றி விளையாட்டாத் தெரிஞ்சுக்கணுமா...  இங்கே பாருங்களேன். நம்ம 'சிஷ்யகேடி'யின் பதிவுதான்:-)


கிருமிசோழன்  சிதம்பரம் கோவிந்தராஜரைக் கடலில் போட்ட  சமாச்சாரத்தை உலகத்தார் அனைவரும் அறியும் வண்ணம்  'இறை நம்பிக்கை இல்லாதவர்'  சினிமா எடுத்துக்  காமிச்சது லேசில் மறக்கக்கூடியதா?  பெருமாளும் தானும் ஒன்னு என்றதைப்போல அதுலே பத்து அவதாரங்கள் வேற! போகட்டும்........  சாமி இல்லைன்னு சொல்றவங்களுக்குத்தான் எப்பவும் சாமி நினைப்பு! மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே :-)
இப்ப எதுக்கு இந்தக் கதைன்னா..........   சம்பவம் நடந்ததும், பெருமாள் பக்தர்கள் சிலர்  சிதம்பரத்தில் இருக்கும் உற்சவரைக் கடத்திக்கொண்டு வந்து  இங்கே திருப்பதியில் வச்சு  ரகசியமா கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க. சேதி  நம்ம ராமானுஜர் செவிக்குப் போயிருக்கு.

அவருடைய சிஷ்யரும், திருமலைப் பகுதியை அப்போ அரசாண்டுக்கிட்டு இருந்தவருமான யாதவராஜாவிடம் வந்து  சமாச்சாரத்தைச் சொல்லி, இந்தத் தில்லைப்பெருமாளுக்கு அதே போல ஒரு கோவில் கட்டி இங்கே வழிபடணுமுன்னு சொன்னதும் அதே போல ஆச்சு. புதுசா மூலமூர்த்தியை நிர்மாணிச்சு, ஏற்கெனவே இங்கே வந்துட்ட உற்சவர்களுடன் சேர்த்தி பிரதிஷ்டை செஞ்சு, வழிபாட்டு முறைகளையும் சொல்லிக்கொடுத்தார் ஆச்சாரியார்.

கோவிலின் அபிவிருத்திக்காக  மஹாலக்ஷ்மி அவதாரமா இங்கே ஒரு ஆண்டாளையும் பிரதிஷ்டை செஞ்சவர்,  மேலே மலையில் நடக்கும் அத்தனை உற்சவங்களும் இங்கேயும் நடத்தணுமுன்னு  ஏற்பாடும் செஞ்சுடார். அதன்படியே இப்பவும்  அங்கே எப்படியோ அப்படியே இங்கேயும் நடக்குது.
 இதையெல்லாம் தேவஸ்தானம் பொன்(போன்ற ) தகட்டில் பொறிச்சு வச்சுருக்கு, பாருங்க. (படங்கள்: போன பயணத்தில் எடுத்தது. பகல் நேரத்தில் போயிருந்தோம்)

மேற்படி சந்நிதிகள் தவிர  சக்கரத்தாழ்வார்,  ஸ்ரீ ராமானுஜர், திருமலை நம்பி, அனந்தாழ்வார் சந்நிதிகளும், ஸ்ரீகோதண்டராமர், நரசிம்ஹர் சந்நிதிகளும் இருக்கு. நல்லாவே இருட்டிப்போச்சு. நமக்கோ அங்கே தாயாரோடு ஏழரைக்கு அப்பாய்ன்ட்மெண்ட் இருக்கேன்னு மணியைப் பார்த்தால் எட்டாகப்போறது.

அரக்கப்பரக்க அலர்மேல் மங்கையைப் பார்க்க ஓடறோம்....

தொடரும்........:-)



20 comments:

said...

நான் ஒரு அவசரக் குடுக்கை. கோவிந்தராஜனைப் பாருங்கோன்னு சொன்னேன்.
அங்கதானே மேலே சக்கரத்தாழ்வார், ந்ருசிம்ஹர் இருப்பார் இல்லையா.
வெளியில் பாத்திரக்கடைகள் எல்லாம் இருக்கும். திருப்பதி போய் 4 வருடங்கள்
ஆச்சு. அதுவும் கோவிந்தராஜரைப் பார்த்து அதுக்கும் மேலயே ஆச்சு. தாயாரைப் பார்க்க ஆசையாக இருக்கு. பீமாஸ் ல பருப்புப் பொடியும் ஆவக்காயும் வாங்கலாம். ரொம்ப நன்றாக இருக்கும்.

said...

//சாமி இல்லைன்னு சொல்றவங்களுக்குத்தான் எப்பவும் சாமி நினைப்பு! மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே :-)//
//சாமி இல்லைன்னு சொல்றவங்களுக்குத்தான் எப்பவும் சாமி நினைப்பு! மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே :-)//

எங்க ஊர் கோயில் லே தன்வந்திரி சன்னதிக்கு பக்கத்திலே தான் ஆஞ்சி சன்னதி.
ஸோ , தன்வந்தரி பிரசாதம் வாங்கிண்டு இந்தப் பக்கம் திரும்பினா ஆஞ்சி மூஞ்சி தானே கண்ணிலே படுறது.

ஆனா, ஆஞ்சனேயர் அசாத்திய சாதகர்.
மருந்து சாப்பிடும்போது அந்த ஆஞ்சனேயரை நினைச்சதும்
ஆஹா, அந்த வடை ஞாபகம் வருது.
வடை ஞாபகம் வந்தாச்சுன்னா , அத எப்படிப் பண்றது அப்படின்னு சொல்லிக்கொடுத்த கீதா அம்மா ஞாபகம் வருது.
கீதா அம்மா ஞாபகம் வந்தாச்சுன்னா, திருவரங்கம் பெருமாள் ஞாபகம் வருது.
தாயார் ஞாபகம் வருது.
அக்காரவடிசல் ,
அதை எனக்குன்னு எடுத்துக்கொண்டு வந்த என்னோட நண்பர் கிடாம்பி ராமன்.
ராமனை நினைச்சதும் அந்த சீதை ,
உடனே ராம பட்டாபிஷேகம்.

ஆஹா, ஆஹா...

ஆகவே,
ஆஞ்சநேயனை அனுதினமும் நினையுங்கள்.
ஆல் த டைம்.

சுப்பு தாத்தா.

said...

ரொம்ப அழகா ஒவ்வொரு இடத்திற்கும் , பொருளிற்கும் வர்ணனை ...

சூப்பர் அம்மா ...

அதான் நீங்க பதிவு போட்ட உடனே வாசிக்க ரொம்ப ஆசையா ஓடி வரது ..


'இறை நம்பிக்கை இல்லாதவர்' ..!..செம்ம

said...

ஆழ்வார்கள் பாடிய திருப்பதி கீழ்த்திருப்பதின்னு ஒரு நம்பிக்கை உண்டு. அதுனால கூட இவர் அவருக்கு அண்ணன்னு சொல்லி வெச்சிருக்கலாம்.

கீழ்த்திருப்பதி கோயிலுக்கு ஒரு முறை போயிருக்கேன். அருமையான கோயில். சாமி கும்பிட்டுட்டு நேரா பீமாஸ்தான். டிபன் சாப்டுட்டு பெங்களூருக்கு பஸ் ஏறுனது நினைவுக்கு வருது. அருமையான பயணங்கள்.

பத்து ரூபா.. பதி ரூபாய்லு.. ஹத்து ரூபாய்.. அடடா! என்னவொரு முன்னேற்றம். திருத்தணியில திருநீறு கொடுக்காம தட்சணை தட்சணைன்னு தட்டைத் தட்டுறது ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது :(

said...

அருமையான தொடர்... வர்ணனை / எழுத்து நடை மிக அருமை ...

said...

மேகப் பின்னணியில் கோபுரம் படம் அருமை. தகடில் வெளிச்சம்! படங்கள் அருமை.

said...

திருப்பதி திருமலை எல்லாம் போய் ஆகிவிட்டன ஆண்டுகள் என் மனைவி இனி எப்போ என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்கோவிந்தராஜர் சந்நதி பற்றி அதிகம் தெரிவதில்லை. என் பெரிய மகனுக்கு மூன்று வயதில் மொட்டை அடித்த கோபத்தில் அவன் கோபித்துக் கொண்டு போக அவனைத் தேடி அலைந்தது நினைவுக்கு வருகிறது

said...

இருக்குமிடத்துக்குத் தகுந்தாற்போல் எத்தனை வேஷம் போட்டாலும் ஒரிஜினல் ஒருத்தந்தானே.

said...

//இருக்குமிடத்துக்குத் தகுந்தாற்போல் எத்தனை வேஷம் போட்டாலும் ஒரிஜினல் ஒருத்தந்தானே.////
ஜல் மே கும்ப கும்ப மே ஜல் பாஹர் பீதர் பானி என்பார் கபீர்.

ஒரு குளத்திற்குள்ளே பல உருவைக் கொண்ட பல பாத்திரங்களை அமிழ்த்தும்போது எப்படி நீர் பல உருவைக் கொணர்கிறதோ,

அது போலே, பிரும்ம விசாரத்தில் ஈடுபடும் ஒவ்வொருவனும் துவக்கத்தில் அப்பிருமனை ஒவ்வொரு உருவத்தில் வேஷத்தில் கண்டாலும், பூசித்தாலும்
இறுதியில் அவன் ஒருவனே என அறிவோனே அந்தணன்.

ஸ ஏகஹ . விப்ரா பகுதா வதந்தி எனச் சொல்வது வேதம்.

அவன் ஒருவனே. படித்தவர் (என தமை நினைப்பவர்) அவனைப் பல விதமாகப் பகர்வர் என்பது தான் யதார்த்த நிலை.

சுப்பு தாத்தா.
www.pureaanmeekam.blogspot.com

said...

சற்றே இடைவெளிக்குப் பிறகு இன்று தான் வலைப்பக்கம் வர முடிந்தது. விடுபட்ட பகுதிகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.....

தொடர்ந்து வருவேன்.

said...

வாங்க வல்லி.

ஒவ்வொருமுறை போகும்போதும் கோவில் ஏற்பாடுகள் ஒவ்வொரு விதமால்லே இருக்கு. போனமுறை குங்கும அர்ச்சனை தாயாருக்குப் பக்கத்துலே முதல் ஆளா நின்னு பார்த்தோம்.

நளனே வந்து சமைச்சு வித்தாலும் பயண சமயம் ஒன்னும் வாங்கறதில்லையாக்கும். சென்னையை விடும் கடைசிநாள் க்ராண்ட், சரவணாஸ், க்ருஷ்ணா ஸ்வீட்ஸில் என்ன வாங்குறமோ அதுதான்!

said...

வாங்க அத்திம்பேர்.

வடையையோ, குரங்கையோ, யானையையோ பார்த்தால் உடனே என்னை நினைச்சுக்குங்கோ! எல்லாம் சுபம் சுபம் சுபம்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ரசித்து வாசிப்பதற்கு நன்றீஸ்ப்பா !

said...

வாங்க ஜிரா.

அவுங்க கேட்காமல் இருந்தால் இன்னும் கூடுதலாக தட்டில் போடுவோம் என்பதை அவுங்க புரிஞ்சுக்கலை பாருங்களேன்!!!!

said...

வாங்க ராஜபாட்டை ராஜா.

நலமா? இங்கே பார்த்து ரொம்பநாளாச்சே!

புத்தகங்களுக்கான சுட்டிக்கு நன்றீஸ்!

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

அதென்னவோ அவனே கூப்பிட்டால்தான் திருப்பதி பயணம் அமையுமுன்னு சொல்வாங்க. ஆனால் கூப்பிட்டு விட்டு, நல்ல தரிசனம் கொடுக்காட்டி நல்லாவா இருக்கு?

விரைவில் தங்கள் மனைவியின் ஆசைப்படித் திருப்பதி பயணம் கிடைக்க வேண்டிக்கொள்கின்றேன்.

மறக்காமல் நாலு பதிகளையும் தரிசித்து வாருங்கள்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசிப்புக்கு நன்றீஸ்!

said...

வாங்க சாந்தி.

இதுமட்டுமா, நீ எங்கெங்கே யார் யாரைக் கும்பிட்டாலும் அங்கெல்லாம் நானேன்னு வேற சொல்லி இருக்கானேப்பா!!!!

said...

வாங்க அத்திம்பேர்.

வேறெங்கோ படிச்சது.....ஒரு மனிதர்னு வச்சுக்குவோம். அவருடைய தாத்தாவுக்குப் பேரன், அப்பாவுக்கு மகன், மனைவிக்குக் கணவன், பிள்ளைக்கு அப்பன், பேரக்குழந்தைக்குத் தாத்தா இப்படி வெவ்வேற ரோலில் இருந்தாலும் ஆள் ஒருத்தன் தானே? அதைப்போலத்தான் சாமியும். வெவ்வேற பேரில் அங்கங்கே இருந்தாலும் பெரும் ஆள் என்னவோ ஒருத்தரே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்ந்து வருவதற்கு மகிழ்ச்சியும் நன்றிகளும்!