Monday, May 25, 2015

நாங்களெல்லாம் சும்மாப் பக்கா லோக்கலு. தெரியும்லெ! (தலைநகரத்தில் ! பகுதி 6)

Te papa வில் முக்கியமான  தளம் எதுன்னா நான் நாலாவதைத்தான் சொல்வேன். ஆளில்லாத் தீவில் முதலில் கால் பதிச்ச  உள்ளூர் பூமிபுத்ரர்களான (!)  மவொரி இனத்தின்  வாழ்க்கை எப்படி இருந்ததுன்னு காண்பிக்கும் கண்ணாடி!  இவர்களும் வெள்ளையர் இங்கு வருவதற்கு  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புது நிலம் தேடி வந்தவர்களே! ( Polynesians)  வந்து சேர்ந்தவுடன் நீளமாக இருக்கும் மேகக்கூட்டங்களைப் பார்த்ததும்   த லேண்ட் ஆஃப் லாங் ஒயிட்  க்ளௌட்ஸ் (The land of long white clouds) என்னும் பொருள் வரும் அவர்கள் இனச் சொல்லான  Aotearoa   (அஒடீரோஆ) என்று  இந்த புது நிலப்பகுதிக்கு பெயர் சூட்டலாச்சு.  இப்படியே  கண்ணில் பட்ட அனைத்துக்கும்  அவர்களிடம் ஒவ்வொரு பெயர் உண்டு.  வெள்ளையர் வந்தபின் அவர்களும் கண்ணில் பட்டவைகளுக்கு  அவர்களுக்குத் தெரிஞ்ச பெயர்  வச்சுட்டாங்க. அதனால் இங்கே எல்லா இடங்களுக்கும் ரெவ்வெண்டு பெயர்!


விவரம் புரிஞ்சநாளில்,  எங்க பெயர்தான் அதிகாரபூர்வமா இருக்கணுமுன்னு போராடி சில பெயர்களை மீட்டெடுத்தாங்க மவொரிகள். நியூஸியின் பெரிய நகரங்களுக்கும் மவொரி பெயர்கள் இருந்தாலுமே  வெள்ளையர்கள் வச்ச பெயர்தான் புழக்கத்தில் இப்பவும் இருக்கு.  சின்ன ஊர்களை அப்படியே விட்டுட்டாங்க. அவுங்க மனசுக்கும் கொஞ்சம் சமாதானம் வேணுமுல்ல!

ஆர்வம் இருந்தால் இந்தச் சுட்டியில் பாருங்க. 

படகுகள் பயன்பாட்டுக்கு  வந்த நிமிசம் முதல்  புது இடங்களைத் தேடி, பல நாட்டு மக்களும் கடற்பயணங்கள் செஞ்சுக்கிட்டுதான் இருந்தாங்க.  கேப்டன் ஜேம்ஸ் குக்  நியூஸியைக் கண்டறிந்தார் என்றாலுமே... அவருக்கும் முன்னாலேயே 1642 இல்  புது நிலம் இருப்பதைப் பார்த்த டச்சுக்காரர் ஏபெல் டாஸ்மன்,   அவுங்க நாட்டில் இருக்கும் ஸீலேண்ட் என்ற பெயரில் ஒரு நியூ வைச் சேர்த்து நியூஸீலேண்ட்ன்னு  குறிப்பிடப்போய் , அதுவே  நியூஸிக்கான பெயராகவும் அமைஞ்சுட்டது. அந்த ஊர்க்காரரோ என்னவோ!

(இங்கிலாந்தில் இருக்கும் சில பல ஊர்கள் நியூ வைக் கூடச்  சேர்த்துக்கிட்டு உலகின் பல இடங்களில் இருக்கு. நியூ யார்க், நியூ ப்ளைமௌத், நியூ ப்ரைட்டன்  இப்படி)

ப்ரிட்டிஷ்காரரான கேப்டன் ஜேம்ஸ் குக், புதிய இடங்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில்  பூமியை மூணுமுறை சுத்தி வந்துருக்கார்.  முதல்முறை (1768- 1771)நியூஸியில் கால் பதிக்காமல் கரையோரமாவே பயணம் செஞ்சு, வரை படம் ஒன்னையும் வரைஞ்சு வச்சுருந்தார்.  அவருடைய ரெண்டாம் பயணத்தில்தான் 1774இல்  நியூஸியில் கால் பதிச்சது. மூணாவது பயணத்திலும்(1776-1779) நியூஸி வந்துட்டுப் போயிருக்கார். அவருடைய கெட்ட நேரம்  திரும்பிப்போகும் வழியில் ஹவாயி தீவுகளில் இறங்குனப்ப சண்டை வந்து  லோக்கல்  மக்களால்  கொல்லப்பட்டார்:(

The routes of Captain James Cook's voyages. The first voyage is shown in red, second voyage in green, and third voyage in blue. The route of Cook's crew following his death is shown as a dashed blue line.



குக்கின் கப்பல் எண்டீவர் இப்படித்தான் இருந்தது. இந்த கப்பலின் உருவத்தை நியூஸியின் அரை டாலர் நாணயத்தில் காணலாம்.


இவருடைய ரெண்டாவது பயணத்துக்குப் பிறகுதான் வெள்ளையர்கள்  திமிங்கிலம், ஸீலயன் வேட்டைன்னு இங்கே  வர,போகன்னு  இருந்து, கொஞ்சம் கொஞ்சமா  நிறையப்பேர் வர ஆரம்பிச்சாங்க. பிரிட்டிஷ் ராஜாங்கம், பல்வேறு நாடுகளைப் பிடிச்சு தங்கள் காலனி ஆக்கிக்க ஆரம்பிச்சு இருந்தாங்க அப்பெல்லாம்.  (மனுசனுடைய அடங்காத பேராசை!)

உள்ளூர் மவொரிகளுக்கும் (பல்வேறு தீவுகளில் இருந்து  வந்த பாலினீஸியர்கள்  இங்கே அமைச்சுக்கிட்ட புது வாழ்க்கையில் மவொரி என்ற புது இனமா உருவாகி இருந்தாங்க. மவொரின்னா   உள்ளுர் லோக்கல்  மக்கள்ஸ் என்று  பொருள் உண்டு ) வெள்ளையர்களுக்கும்  முதலில் ஒத்துவராம சண்டைகள் எல்லாம் நடந்துக்கிட்டு இருந்தது அப்போ. அதன்பின்தான் ப்ரிட்டிஷ் அரசு (மாட்சிமை பொருந்திய மஹாராணி விக்டோரியா ஆண்டு வந்த காலகட்டம் அது)  மவொரிகளுடன் ஒப்பந்தம் போட்டு 1840 லே  நியூஸிலாந்து ப்ரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்தில் போச்சு.  அந்த ஒப்பந்தம்தான் இந்த வைட்டாங்கி ஒப்பந்தம் என்பது. Treaty of Waitangi. வைட்டாங்கி என்னும் இடத்தில்  இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் இதுக்கு   வைட்டாங்கி ஒப்பந்தம்னே பெயர்.  இப்பவும் நாங்க  மாட்சிமை தாங்கிய மஹாராணியின் ப்ரஜைகள்தான். நாட்டுக்குத்  தலைமையா கவர்னர் ஜெனரல்தான்  மஹாராணியின் சார்பில் இருக்கார். (பாருங்க ஒன்னு சொல்லணுமுன்னு வந்தால்  எப்படியெல்லாம் 'கதை' நீண்டுக்கிட்டே போகுதுன்னு!)



மேலே படம்: இருபதாம் நூற்றாண்டில் வெள்ளையரும் மவொரிகளும் சேர்ந்து அமைச்ச அரசின் அங்கங்கள் 

 இந்த ஒப்பந்தம்தான் நாலாவது தளத்தில்   எட்டுமீட்டர் அளவுள்ள  விசேஷரகமான  கண்ணாடியில்  பதிஞ்சுருக்கு.  இது நகல் தான். பெருசு பண்ணப்பட்டது.  மேலே  கூரையில் இருந்து தொங்கும் இந்தக் கண்ணாடியின் கனம் முக்கால் டன்!  அழிஞ்சு போன  பகுதிகளில் என்ன இருந்ததுன்னு தெரிஞ்சுக்கும் வகையில் ரெண்டுவெவ்வேற நிறங்களில்  ஒன்னையொன்னு தொடாமல் ரெட்டை  அடுக்குகளா சேர்த்துருக்காங்க.



வசதியான இருக்கைகள் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க இதைப் படிக்க/பார்க்க வரும் மக்களுக்காக! காகிதத்தில் எழுதுனது காலப்போக்கில் அழிய ஆரம்பிச்சதும்   முழிச்சுக்கிட்ட   அரசு  இப்போஅசலை ரொம்பவே பாதுகாப்பான இடத்தில் வச்சுருக்கு.  கோடிக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு எல்லா இடங்களிலும்  வச்சு விநியோகம் செய்யறாங்க. முக்கியமா பள்ளிக்கூடங்களில்! நம்மகிட்டே கூட ஒன்னு இருக்கு:-)



இதைத் தவிர  ரெண்டு  மொழிகளிலும் இருக்கும் ஒப்பந்தத்தை பெருசுபண்ணி தனித்தனியாக சுவர்களில் போட்டுருக்காங்க.  'இங்லீஷில் எழுதுனதுக்கும்,  அப்போ மவொரியில் மொழிபெயர்த்து எங்களிடம் சொல்லிக் கையெழுத்து வாங்கினதுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு. சிலபல விஷயத்தை  மொழி பெயர்க்கும்போது சொல்லாமலே  ஏமாத்திப்புட்டீங்க'ன்னு  இன்றுவரை  ஒரு குற்றச்சாட்டு இருந்துக்கிட்டே இருக்கு. ( பொய் சொல்லலை. ஆனால்  உண்மையைச் சொல்லாமல் இருந்தது!)  அது முக்கியமா ஒவ்வொரு வைட்டாங்கி தினத்துக்கும் ரெண்டுமூணு நாள் முன்னாலே சீரியஸா ஆரம்பிச்சுரும்.  இந்த ஒப்பந்தம் கையெழுத்தான  ஃபிப்ரவரி 6  எங்களுக்கு தேசிய விடுமுறைநாள். வைட்டாங்கி டே!

(இன்னொரு  இடத்தில் ஒப்பந்தம் கப்பலில் கையெழுத்தானது ஏப்ரல் மாசம் 29, வருசம் 1840ன்னு  போட்டுவச்சுருக்காங்க, அது எப்படி முன்னே நகர்ந்துபோய்  ஃபிப்ரவரி 6 ஆச்சுன்னு தெரியலை! ஒருவேளை  ஒப்பந்தத்தை வெவ்வேறு தனிக் குழுக்களிடம் வாசிச்சுக் காட்டி கையொப்பம் வாங்கி போர்ட் நிக்கல்ஸன் என்னும் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய ஏரியல் என்னும் கப்பலில் மஹாராணி சாஹிபாவுக்கு  அனுப்பிய நாளாகவும் அந்த ஏப்ரல் 29 இருக்கலாம்)

வைடாங்கி தினத்தில்  பிரதமரும் மற்றும் சில முக்கிய அதிகாரிகளும் மராய் என்று சொல்லப்படும் மவொரிகளின் சமூகக்கூடங்களுக்குப் போவார்கள். அங்கே  கோபதாபங்களும் வாக்குவாதங்களும், சிலமுறை அவமதிப்புகளும்கூட நடக்கும்.  (உள்ளே வரப்டாது!  மீறி வந்தால் காலை ஒடைச்சுருவோம்!)அரசாங்கம் வாய் பொத்தி, அவர்களிடம் மன்னிப்பு வேண்டுவதும் நடக்கும். இதையெல்லாம் நிறுத்தணும் என்று 1975லே  நடுவர் மன்றம் ஒன்னு அமைச்சு செட்டில் செஞ்சாங்க.  ஆனாலும் மனசுலே இருக்கும்  எரிச்சல்  லேசாப் புகைஞ்சுக்கிட்டுதான் இருக்குன்னு எனக்கு தோணுது.


 ஆரம்பத்துலே  ஆயிரம் வருசங்களுக்கு  முன்னே புதுநிலம் தேடி வந்தாங்கன்னு சொன்னேன் பாருங்க. அவுங்க வந்த படகுகளின் மாதிரிகள், அவர்களது வாழ்க்கை முறை, சமூகக்கூடங்கள் எல்லாம் செஞ்சு வச்சுருக்காங்க. ஒவ்வொரு மரச்சிற்பங்களிலும் நுணுக்கமான வேலைப்பாடு ஆளை அசத்துது!  பார்க்கக் கொஞ்சம் முரட்டு சுபாவம்  உள்ளவர்களைப்போல் இருக்கும் மவொரி மக்களுக்குள் என்ன ஒரு அற்புதமான கலை ஆர்வம் ஒளிஞ்சுருக்கு என்பது  வியப்புதான்!

கனூ என்று சொல்லப்படும் படகு. இதைப்போன்ற படகுகளில்தான்  புலம்பெயந்து வந்துருக்காங்க.  ஒவ்வொன்னும்  15 முதல் 25 மீட்டர் நீளம் என்று சொல்றாங்க.  பல ஆயிரக்கணக்கான  கிலோமீட்டர் தூரத்துக்கு இதில் கடல்பயணம் செஞ்சுருப்பாங்களான்னு  தோணுச்சு எனக்கு!  படகின் முகப்பு பாருங்க. நீண்ட மூக்குடன் ஒரு பறவை!


இதைப் பார்த்தவுடன், நம்ம கேரளாவில்  ஆரன்முளா நதியில்   பள்ளியோடம் என்னும் கருடமுகப்புள்ள படகில் பெருமாள்  ஊர்வலம்  நடக்குமே அதன் நினைவு வந்தது !  ஸ்நேக் போட் ரேஸ்!

அலங்காரத்துக்கு வெள்ளைச்சிறகுகளை தோரணம் போல் கட்டி வச்சுருந்தாங்க. அநேகமா கடற்புறாவின்  சிறகுகளாக இருக்கலாம்!


இதையும் இதையும் பாருங்க!!!







ரெண்டு நாளைக்கு முன்னால் நம்ம வீட்டுலே இருக்கும் நந்தியைக் குளிப்பாட்டி விட்டேன். அபிஷேகம் எல்லாம் இல்லை.  ஜஸ்ட் வெந்நீர்க் குளியல்!  குளிச்சு முடிஞ்சதும்  உடம்பைத் துடைச்சு  வெயில் இருக்கும் இடத்தில் கொண்டு வச்சுட்டு, அது கழுத்தில் போட்டுருக்கும் மணிகளின் அழகையும் காலை மடிச்சு உக்கார்ந்திருக்கும் ஸ்டைலையும் ரசிச்சுக்கிட்டே அகஸ்மாத்தாக் கண்ணை ஓட்டினால்....  ஒரு இடத்துலே அச்சு அசலா ஒரு மவொரி டிஸைன்!  நம்பவே முடியலை!  


காட்சிக்கு வச்சுருக்கும் மாடல்கள் எல்லாம்  உண்மை அளவில்தான் இருக்கு!  சமூகக்கூடம் ஒன்னு புல்வேய்ந்த கூரையுடன்!  என்ன பெருசு!!!   இங்கே மட்டுமே உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் உள்ளே போய்ப் பார்க்கலாம். கட்டாயமாகக் காலணிகளுடன் உள்ளே போகக்கூடாது. ஒருவிதத்தில் இது அவர்களின் கோவில் போல! இந்த சமூகக்கூடம்  மாடல் கிடையாது.  1867 இல்  நியூஸி வரலாற்றில் முதல்முதலா இரும்பு உளிகள் வச்சு செதுக்கிய உண்மையான  அமைப்பு.(உளியின் ஓசை கேட்டுருக்குமோ!) வெள்ளையர் வருமுன் இங்கே  இரும்பு என்ற  பெயர்கூட கிடையாது! அரசு இதை  வாங்கி நமக்குக் காட்சிக்கு வச்சுருக்காங்க.  முன்னோர்களுக்கு மரியாதை கொடுக்கும் மவொரி சமூகத்தின் வரலாறு கொஞ்சம் ஆழ்ந்து வாசிக்கும்போது,  நமக்கும் இவர்களுக்கும்  உள்ள ஒற்றுமை திகைக்க வைக்குது!




இப்ப முற்றிலும் தனிப்பட்ட மவொரிகள் (நூறு சதமான மவொரி ரத்தம் என்கிறார்கள்)  எண்ணிக்கை  மிகவும் கொஞ்சம்தான்.  மற்ற இனங்களுடன் திருமணங்கள்  நடந்து கொஞ்சம் கலப்பினமானவர்களே பெரும்பாலும். அதிலும் மவொரி ஆண்களை  நிறைய வெள்ளையர்கள் மணந்துள்ளனர்!   பல தலைமுறைகள்  கணக்கில்  கடந்து வந்திருந்தாலும்  ஒரு சதமானம் மவொரி சம்பந்தம் உள்ளவர்கள் என்றாலும் கூட (முப்பாட்டனுக்கு முப்பாட்டன் அசல் மவொரியாம்!) அவர்கள்  எந்த மவொரி குழுன்னு பார்த்து ,  அந்தக்குழுவின் மவொரிகளுக்கு  அரசு கொடுக்கும் மான்யத்தின் ஒருவீதம்   கிடைக்கும்படி ஏற்பாடுள்ளது!  அவர்களும் மவொரி எண்ணிக்கையில்  சேர்க்கப்பட்டுள்ளனர்!

தனிப்பட்ட  குழு, குடும்பம் வசிக்கும் சின்ன  வாசலுடன் கூடிய வீடுகூட ஒன்னு இருக்கு!  அங்கே  உள்ளே போகணுமுன்னா உக்கார்ந்தோ இல்லை  உடலை மூணா  மடிச்சுக் குனிஞ்சோதான் போகணும். சின்ன ஜன்னலில் எட்டிப் பார்த்தேன். ஒரு சிலை  உட்கார்ந்திருந்தது.சிலை  பார்க்க அச்சு அசல் உயிருள்ளது போல இருக்கேன்னு....  க்ளிக்கினதும்  மனுசன்போல தலையைத் திருப்புச்சு. அட!  மனுசந்தான்!  ஸ்கூல் பையன். வேற ஊரில் இருந்து  விடுமுறைக்கு வந்துருக்காராம். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தேன். மவொரி ரத்தக் கலப்பு உண்டாம்!

ரக்பி  விளையாட்டுப்  போட்டிகளில்  மற்ற உலக நாடுகளுடன்  விளையாடும்போது  கேம் ஆரம்பிக்குமுன் நாக்கை நீட்டி, கண்ணை உருட்டி, தலையை ஆட்டி,  கை முஷ்டிகளை 'இருடா உன்னை' என்பது போல் காமிச்சு  ஒரு வெல்லுவிளி  சொல்வதை  நீங்க பார்த்திருக்கலாம். கமத்தே கமத்தேன்னு ஆரம்பிக்கும்! இதனுடைய முழு வெர்ஷனை இங்கேதான் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன். பழங்காலத்தில் ஒரு குழு மற்ற குழுவுடன் போரிடும்போது சொல்லும்  வாழ்வா சாவா வசனம் இது!

பச்சை நிறக்கல்லில் (ஜேட்)  டிகி(Tiki)  என்னும்  சின்னச்சின்ன பெண்டெண்டுகள்  கருப்புக் கயிறில் கோர்த்து போட்டுக்கும் வழக்கம்  இவர்களுக்கு உண்டு. அது  ஒரு மனுச உருவத்தில் இருக்கும்.


கீழே உள்ளது  எலும்பில் செதுக்கியது. 


 மவொரிகளின் புராணக்கதைகளின்படி  டிகிதான்  மவொரிக் கடவுள்  (Tane Mahuta  )படைச்ச முதல் மனிதன்!  வானவெளி என்னும்  தந்தைக்கும்  பூமி மாதா என்ற அன்னைக்கும் பிறந்தவர்.   இந்த  டானே மஹுடா தான்  காடுகளுக்கும் பறவைகளுக்கும்  இன்சார்ஜ். இவர் உருவாக்கிய  முதல் மனிதன்  இந்த டிகி.  இந்த உருவத்துக்கு உண்மையான பொருள் நம்ம திருவள்ளுவர் சொன்னதேதான்.

 'இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு' 

  'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்'  

 வியப்பா இருக்கா, இல்லையா? மன்னிக்கத் தெரிஞ்சவந்தான் மனுசன்!





எங்க நாட்டின் 20 செண்ட் நாணயத்தில்   இருக்கும் டிகி உருவம் .


கீழே படம்:  பச்சை ஜேட் கல்லால் செய்த ஆயுதம்! கல்மழு?

நம்ம துளசிதளத்தில் ஒரு பத்து வருசத்துக்கு முன்னால் ஏழெட்டு  மவொரி கதைகளை 'முழி' பெயர்த்து பதிவு செஞ்சுருக்கேன். இவை நம்ம நியூஸிலாந்து புத்தகத்திலும் இணைக்கப்பட்டிருக்கு. (எல்லாம் கொஞ்சம் சுய விளம்பரம்தான்.  விருப்பம் உள்ளவர்கள் இந்தச் சுட்டியில் ஆரம்பிச்சு நூல்  பிடிச்சுப்போனால்  அவைகளை வாசிக்கலாம்:-)

இந்த தளத்தில் இன்னும் நிறைய நேரம் இருந்து அனுபவிக்க முடியும்தான் என்றாலும்  பகல் ரெண்டே கால் ஆயிருச்சேன்னு கீழே எதாவது சாப்பிடலாமேன்னு போனோம். இதே தளத்தில் ஒரு  லைட் ரெஃப்ரெஷ்மென்ட்  ஏற்பாடு இருந்தாலும்  போய்ப் பார்த்தால் எனக்கு சரிப்பட்டு வரலை:(

சாப்பிட்டு வந்து  மீதியைப் பார்க்கலாம், ஓக்கே?

தொடரும்..........:-)

PINகுறிப்பு:   மவொரிகள் வாழ்க்கை முறைன்னு சும்மாச் சொல்லிக்கிட்டே போயிருக்கலாம். ஆனால் அவுங்க எப்ப எப்படி வந்தாங்கன்னு  விஸ்தரிக்கலைன்னா நான் துளசி டீச்சரா  இருக்கமுடியுமோ?

9 comments:

said...

சூப்பர், நிறைய தெரியாத தகவல்கள்...

said...

தலைப்பு லோக்கல், ஆனால் செய்திகளோ... புகைப்படங்கள் வழக்கம்போல எங்களை அந்தந்த இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. தங்களின் தயவால் பல புதிய இடங்களைப் பார்க்கவும் அனுபவிக்கவும் எங்களால் முடிகிறது. நன்றி.

said...

மவொரி பற்றி பல தகவல்கள் வியக்கவே வைத்தது டீச்சர் அம்மா...

said...

மவொரி இனத்தைப் பற்றியும் நியுசிலாந்தின் தொன்மைப் பற்றியும் அறிய தந்தமைக்கு நன்றியம்மா!

said...

சரித்திர பாடம் கற்றுக் கொண்டீர்கள் கற்றுக் கொடுக்கிறீர்கள் மேடம் தாங்க்ஸ்

said...

நந்தியின் அழகு அள்ளுகிறது. படங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி.

said...

டீச்சர்... ஸ்டன்னிங் ஒற்றுமை என்ன என்னன்னு சொல்லலையே? அது அடுத்த பகுதிக்கா?

ஆதிமனிதர்கள் பரவி இருக்கும்போது அவர்களுடன் அப்போதிருந்த கல்சரும்தானே சென்றிருக்கும். பாகிஸ்தானில் (மொஹஞ்சதாரோ ஹரப்பா) நிறைய தமிழ்னாட்டு ஊர் பெயர்கள் இருக்கின்றன என்று ஒரு ஆய்வு பார்த்தேன். வட இலங்கையிலும் திருனெல்வேலி போன்று பல ஊர்ப் பெயர்களைப் பார்க்கலாம்.

நீங்கள் போட்டிருக்கிற மரத்தில் செய்த முகங்கள் போன்று நான் மெக்சிகோவிலும் பார்த்திருக்கிறேன்.

said...

எத்தனை தகவல்கள்.....

பல புதிய தகவல்களை உங்கள் தளத்தின் மூலம் தெரிந்து கொள்கிறேன். நன்றி டீச்சர்.

said...

சூப்பர் படங்கள். மவோரி கதைகள் நினைவிருக்கின்றன. எத்தனை நுணுக்கமான சிற்பங்கள்.

அமெரிக்க இந்தியர்களை விட இவர்களது கலை வண்ணங்கள் இன்னும் பரிமாணம் கூடி நிற்கிறது.