Saturday, October 15, 2005

நியூஸிலாந்து பகுதி 16

மவோரி கதைகள் # 1


ஹினேபாவ்

இந்த நாடு/ஊருலே ப்ளாக்ஸ் னு சொல்ற புதர்கள் எல்லா இடத்துலேயும் இருந்த காலக் கட்டம். இது நம்ம தென்ன
ஓலையைப் போல இருக்கும், பாக்கிறதுக்கு. இதைக் கிழிச்சுக் கிழிச்சு நார் நாரா எடுத்து பலவிதமான கூடைகள், தரையிலே
விரிக்கிற பாய், உடுத்திக்கிறதுக்குத் துணிகள், வீட்டுக்கு உள்புறம் சுவர்க்குமேலே கட்டிவிடற மறைவுன்னு பலவிதமா
முடைவாங்களாம். சரி. கதைக்குப் போகலாம்.

ஹினேபாவ் ன்னு பேரு இருந்த ச்சின்னப்பொண்ணு அவுங்க அப்பா, அம்மா, பாட்டின்னு எல்லோரோடயும் ஒரு
சின்ன கிராமத்துலே வசிச்சு வந்துச்சு. அந்த கிராமம் இருந்த இடம் மவுங்கரிரின்னு சொல்ற ஒரு எரிமலைக்குப்
பக்கத்துலே இருந்தது. ஒரு குறிப்பிட்ட 'ட்ரைப் குரூப்' ஜனங்க அங்கே இருந்தாங்க.

அவளோட குய்ஆ(பாட்டி) தன் பேத்திக்கு, கெட்டி(கூடை)ஃபரிகி( பாய்) ககஹு( துணி) எல்லாம்
முடையறதுக்குச் சொல்லிக் குடுத்தாங்க. அந்த கிராமத்துலே இருக்கற மத்த பொம்பிளைங்களும் இதையெல்லாம்
முடைவாங்கன்னாலும் நம்ம ஹினேபாவ் முடையறது கொஞ்சம் வித்தியாசமாவும் ரொம்ப அழகாவும், நேர்த்தியாவும்
இருந்துச்சு. இதைப் பார்த்த மத்த பொண்களுக்கு பொறாமை.( உலகம் தோன்றியவுடனே இந்த பொறாமையும்
வந்துருச்சு போல!) அதுலே சிலர் சொல்றது, இந்தப் பொண்ணு சூன்யக்காரி.அதனாலேதான் வித்தியாசமா முடைய
வருதுன்னு. போதாக்குறைக்கு நம்ம ஹினேபாவ்க்கு மாலை வெய்யல் போல பொன்னிறமான கூந்தல் வேற. அவளுடைய
கண்களும் பொனாமு ( இங்கே நியூஸி யிலே கிடைக்கிற ஒரு விதப் பச்சைக் கல், கொஞ்சம் ஜேட் போல இருக்கும்)
போல பச்சையா இருக்கு.

ஒருநாள் அந்த கிராமத்துலே இருக்கற பெரியவங்க, முதியோர்கள் எல்லாம் சேர்ந்து, இனிமே இந்த ஹினேபாவ் இங்கே
வசிக்கக்கூடாதுன்னு ஊரைவிட்டுத் துரத்திடறாங்க. அந்தப் பொண்ணு அழுதுகிட்டே ஊரைவிட்டு நடந்து போகுது.
ஒரு நாள் முழுக்க நடந்து ப்ளாக்ஸ் புதர்கள் நிறைய வளர்ந்திருக்கற ஒரு இடத்துக்கு வந்துருது. அங்கேயே ச்சின்னதா
ஒரு குடிசை கட்டிக்கிட்டு தங்கிருது. தினமும் பகல் முழுக்க ப்ளாக்ஸ் கீறியெடுத்து வகைவகையாப் பின்னிக்கிட்டே
இருக்கறதும், ராத்திரியானா நட்சத்திரங்களைப் பார்த்துக்கிட்டே கனவுலகத்துலே வாழறதுமா ஆயிருச்சு அதோட வாழ்க்கை.

மேகக்கூட்டத்தைக் காத்து பலமா வீசிக் கலைக்கறப்போ உண்டாகுற விதவிதமான டிஸைன்களையும், மழைத்துளிங்க
பக்கத்துலே இருக்கற ஏரித் தண்ணிலே விழும்போது தண்ணியிலே உண்டாகுற பேட்டர்ன்களையும் தன்னுடைய
பச்சைக் கண்ணாலே பார்த்து அதே போல பலவிதமான டிஸைனுங்களை தான் முடையுற பாய்களிலேயும், ட்டுகுட்டுகு
( சுவருங்களுக்கு போடற வால் பேனல்ஸ்)விலேயும் கொண்டுவந்துர்ற திறமையும் உண்டாயிருது. எப்பவும் சாமியைத்
துதிச்சுக்கிட்டே விடாம பின்னிக்கிட்டு இருக்கு இந்தப் பொண்ணு. காலம் ஓடிக்கிட்டே இருக்கு.

ஒருநாள் அந்தக் குடிசைக்குப் பக்கமா ஏதோ பேச்சு சத்தம் கேட்டு நம்ம ஹினேபாவ் ஓடிவந்து பார்த்தா, அங்கே
மூணு வாலிபப்பசங்க போறாங்க. இன்னொரு மனுஷஜீவியோட பேச்சை பலவருஷமா கேக்காம இருந்த ஹினேபாவுக்கு'
அந்த சத்தம் தேன்மழையா காதுலே வுழுது. சந்தோஷம் தாங்காம அவுங்களைப் பார்த்து,'கியோரா கொடாவ்'
( வாழ்த்துக்கள்)ன்னு சொல்லுது. இதைக் கேட்ட அந்த இளைஞர்கள்,' ஐய்யய்யோ, இது அந்த ப்ளாக்ஸ் முடையற
பொம்பிளையாச்சே. இது மந்திரமாயமெல்லாம் செய்யறதுலே கெட்டிக்காரின்னு ஊருக்குள்ளெ பேசுனது ஞாபகம்
வருது. நம்ம மேலே எதாவது மகுட்டு( சாபம்) போட்டுரப் போகுது. சீக்கிரமா இந்த இடத்தை விட்டுப் போயிரணும்'ன்னு
தங்களுக்குள் பேசிக்கிட்டே காலை வீசிப் போட்டு நடக்குறாங்க.

ஹினேபாவ் விடாம அவுங்க பின்னாலேயே ஓடிவந்து,'எங்கே போறிங்க?'ன்னு கேக்கறா. சில டோடொரா( ஒரு வகை மரம்)
வெட்டறதுக்காகப் போறோம். கிராமத்துக்கு ஒரு புது ஃபாரெனூயி( ட்ரைப் ஜனங்க கூடிப் பேசற வீடு) கட்டணும்னு சொன்னாங்க.
அப்ப உங்க டொஹூங்கா( பூசாரி) எங்கே? மரம் வெட்டறதுக்கு முன்னாலே அதுக்குண்டான கராக்கியா(ப்ரேயர்)
சொல்லவேணாமா?ன்னு கேக்கறா.

'மரம் வெட்டறதுக்கு எங்க புஜவலிமையே போதும். ஒரு கிழவன் வந்து மந்திரம் சொல்றேன்னு முணுமுணுத்தால்
தான் வெட்டமுடியுமா என்ன? ஏ, சூனியக்காரியே ஓடிப்போ, எங்க வழியிலே குறுக்கிடாதே'ன்னு சொல்லிட்டு
அந்த இளைஞர்கள் போய் பெரிய பெரிய மரங்களை வெட்டித் தூக்கிட்டுப் போனாங்க.

கொண்டு போன மரத்தை அறுத்து, அதுலே அந்த இனத்து( ட்ரைப்)கதைகளையெல்லாம் செதுக்கினாங்க. ஸ்பிரிச்சுவல்
பாதுகாப்புக்குன்னு ஒரு ட்டாபு( இது ஒரு தூண்) ஏத்திவச்சாங்க.பொம்பிளைங்க எல்லாரும் அவுங்க முடைஞ்சு வச்சிருந்த
ட்டுகுட்டுகு, ஃபரிகி எல்லாம் வச்சு அந்த ஃபாரெனூயி சுவத்தை அழகு செஞ்சாங்க. சுவத்துலே எல்லாம் பெரிய பெரிய
பாவா ( அபலோன்னு சொல்லுற அழகான நிறமுடைய சிப்பி) வை வட்டமா வெட்டி பதிச்சாங்க. இது அவுங்க
முன்னோர்கள் கண்ணாம். முன்னோர்கள் எல்லாம் இதுவழியாப் பார்த்து இவுங்களை ஆசீர்வதிப்பாங்களாம்.
எல்லாம் முடிஞ்சதும் 'ஹுயி' ( கூட்டம்) ஆரம்பிச்சது.

வையாட்டா( பாட்டுங்க) பாடி வழிபாடு நடத்துனாங்க. கதைகள் சொல்லப்பட்டன. அதுக்கப்புறம் பெரிய விருந்து.
இதுக்குள்ளே சூரியாஸ்தமனம் ஆயிருச்சு. முதல் முறையா புது ஃபாரெனூயி லே தூங்கறதுக்கு எல்லாரும் உள்ளே
போய் படுத்தாங்க. தூக்கம் வர்றவரைக்கும் பாட்டும் கதை சொல்லறதும் நடந்துக்கிட்டே இருந்துச்சு. வெளிச்சத்துக்காகவும்,
சூட்டுக்காகவும் உள்ளெ எரிஞ்சுக்கிட்டு இருந்த தீ மெல்ல அணைஞ்சு லேசா புகை வந்துக்கிட்டு இருந்தது.

எல்லோருக்கும் நல்ல தூக்கம். அப்பப்ப எதாவது இரவுப் பறவை பறந்து போற சத்தம், இல்லேன்னா ச்சின்னக்குழந்தை
ச்சிணுங்குற சத்தம், புது கட்டிடம் என்றபடியாலே மரச்சட்டம் எழுப்புற ச்சின்ன 'க்ரீச்' சத்தம் தவிர ஒரு அனக்கமும் இல்லே.

அப்ப ஏதோ குலுங்கற மாதிரி இருந்துச்சு. வயசான ஒரு பாட்டி சொன்னாங்க, இந்த வீடு கடவுளுக்குப் பிடிக்கலை'ன்னு.
இளவயசுக்காரங்க சொன்னாங்க, 'வாயை மூடிக்கிட்டுத் தூங்கு. இது லேசான நில நடுக்கம்'னு. அப்புறம் அவுங்களுக்குள்ளே
கிசுகிசுப்பான குரலிலே,'கிழவிக்கு வேற வேலை இல்லை. வயசாயிட்டாவே இந்தப் பிடுங்கல்தான். அதையெல்லாம்
கண்டுக்கக்கூடாது'ன்னு. கொஞ்ச நேரத்துலே சத்தம் எல்லாம் அடங்கிருச்சு. நல்ல ஆழமான தூக்கம்.

அந்த ராத்திரி அங்கெ இருந்த எரிமலையான மவுங்கரிரி, காடுகளின் கடவுளான 'ட்டனே மஹூட்டா' வோட
ஆசீர்வாதம் இல்லாமக் கட்டப்பட்ட அந்த ஃபாரெனூயியை வெறுப்போட பார்த்துச்சு. கோவம் கோவமா வருது.
தாங்கமுடியாம ஒரு குலுக்கல்.

காலையிலே உள்ளே தூங்கிக்கிட்டு இருந்த ஜனம் வெளியே போய்ப் பாக்குது. இதுவரை அவுங்களுக்குப்
பரிச்சயம் இல்லாத ஏதோ ஒரு புது இடத்துலே இருக்கறமாதிரி இருக்கு. என்னடான்னு பார்த்தா விஷயம்
விளங்கிட்டது. அவுங்களோட ஃபாரெனூயியை விட்டுட்டு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே சாம்பல்.
காடு, ஏரி, மலைன்னு ஒண்ணையும் விட்டுவைக்கலை. புல்பூண்டு எல்லாம் போயே போச்சு. ஆறு,ஏரிகளிலே
ஒரு பொட்டுத்தண்ணி கூட இல்லை!

'நல்லவேளை , நம்மளை இந்த மவுங்கரிரி ஒண்ணும் செய்யலே.நம்மளைக் காப்பாத்திருச்சு. நம்ம மேலே இதுக்குக்
கோவம் இல்லே'ன்னு ஒரு இளைஞன் ஆனந்தக் கூச்சல் போட்டான்.

'ஆமாம் நம்மளை இப்ப எதுக்குக் காப்பாத்துச்சு? கொஞ்சம் கொஞ்சமா சாவடிக்க! எல்லாம் இந்த இளைஞர்களாலே
வந்த வினை.சரியான வழிபாடு செய்யாம மரத்தை வெட்டிக் காடுகளின் கடவுளுக்கு கோபத்தை உண்டாக்கிட்டீங்க.
இப்ப இந்த வீட்டுக்குள்ளேயே இருந்து எல்லாரும் சாகணும். சாப்பாடு, தண்ணிக்கெல்லாம் என்ன செய்யறது?
போங்க வாலிபப் பசங்களா. வெளியே போய் இங்கெ இருக்கற எல்லாருக்கும் எதாவது சாப்பாடு, குடிக்கத் தண்ணி
கொண்டு வாங்க'ன்னு ஒரு குய் ஆ ( பாட்டி) கத்துச்சு.

மரம் வெட்டிங்க மூணுபேரும் மெதுவா நடந்து போனாங்க. நடக்குறாங்க நடக்குறாங்க, நடந்துக்கிட்டே இருக்காங்க.
எங்கே பார்த்தாலும் சாம்பல் மூடுன பூமி. வழியும் தெரியலை வாய்க்காலும் தெரியலை. பசியும் தாகமும் உயிரை
வாட்டுது. ஒருநாளு பூராவும் நடந்தபிறகு ஒரு குடிசை கண்ணுலே தெம்படுது.

அது நம்ம ஹினேபாவோட குடிசைதான். அவளும் தப்பிச்சுட்டா! இவுங்களைப் பார்த்ததும் ,'முட்டாப் பசங்களா!
இனிமேலாவது உங்க காவ்மடூவா( பெரியவுங்க) சொல்லைக் கேளுங்க. இப்பத் திரும்பி போங்க. என்னாலே எதாவது
செய்யமுடியுமான்னு பாக்கறென்'னு சொல்லியனுப்புனா.

மாலை மயங்கற நேரத்துலே வழிபாட்டு துதிகளைச் சொல்லிக்கிட்டே, வருசக்கணக்கா முடைஞ்சு வச்சிருந்த பாய்ங்க,
சுவருக்குப் போடற அலங்காரம்ன்னு எல்லாத்தையும் சேகரிச்சு எடுத்துக்கிட்டு, வெளியே எதாவது சத்தம் வருதான்னு
கவனமா காது கொடுத்துக்கிட்டு உக்காந்திருந்தா. வாய்மட்டும் ப்ரேயர் சொல்லிக்கிட்டே இருக்கு. அப்ப வெகுதூரத்துலே
இருந்து ஏதோ பறவையோட சிறகு அடிக்கிறமாதிரி சத்தம் வந்துச்சு. அந்தச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமா நெருங்கிவந்துச்சு.
பிரகாசமான வெள்ளை நிறத்துலே ஒரு பெரிய பறவை அப்படியே மெதுவா அவளோட குடிசைக்கு முன்னாலே வந்திறங்குச்சு.

அது ஒரு ருரு(ஆந்தை). ஹினேபாவ், எடுத்துவச்ச பாய் பத்ராஸ்ங்களை எடுத்துக்கிட்டு மெதுவா வெளியே வந்து அந்தப் பறவையின்
மேலே ஏறி உக்காந்துக்கறா. வத்திப்போன ஆறு, ஏரிகளையெல்லாம் தாண்டி சாம்பல் பூமிக்குமேலே பறந்து போகுது.
அவளும் முடைஞ்சு வச்ச ஒவ்வொரு பாய், மத்ததெல்லாம் ஒவ்வொண்ணா கீழே போட்டுக்கிட்டே போறா. ராத்திரி
முழுசும் எல்லா இடத்துக்கும் பறவை பறந்துக்கிட்டே இருக்கு. ஒரு இடம் விடாம வுழுந்த ப்ளாக்ஸ் பாய்ங்க
அங்கேயே வேர்விட்டு வளர்ந்துருது. ஆறு, ஏரி யெல்லாம் திரும்பவும் தளதளன்னு தண்ணி ரொம்பிருது. எல்லாம்
முந்தி இருந்ததை விட ஜோரா ஆயிருது.

ஆனா ஒரோரு பாயும் போடப் போட ஹினேபாவோட மாவ்ரி( ஆத்மா) அவளைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா விலகுது.
மெலிஞ்சு மெலிஞ்சு அப்படியே காத்துலே கரைஞ்சு போயிடறா. பொழுது விடிஞ்சுருது. அந்தப் பறவை மட்டும் பறந்துக்
கிட்டு இருக்கு.

துக்கத்தோட தூங்கியெழுந்த கிராம ஜனங்க, வெளியே வந்து பார்த்தா, பளபளன்னு புது உலகம் பசுமையா
செழிப்பா இருக்கு. பூமி சரியாயிருச்சு. நம்மளை மன்னிச்சுட்டாங்கன்னு எல்லோரும் ஆனந்தப்படறாங்க.
அப்ப பாட்டி சொல்லுச்சு,'இதெல்லாம் திரும்ப வந்ததுக்குக் காரனம் நம்ம ஹினேபாவ்தான். அவளுக்குத்தான் நாமெல்லாம்
நிஜமாவே நன்றி சொல்லணும். சீக்கிரம் போய் அவளை இங்கே கூட்டிட்டு வாங்க. இனிமே அவ நம்ம கூடத்தான் இருக்கணும்.
ஓடுங்க, சீக்கிரம் கூட்டிட்டுவாங்க'ன்னு.

அந்த மூணு இளைஞர்களும் நாளெல்லாம் நடந்து அங்கே போய்ப் பாக்கறாங்க. குடிசைக் காலியா இருக்கு. எப்பவும்
அங்கே எரிஞ்சுக்கிட்டு இருந்த சிறு தீ கூட அணைஞ்சுபோய் அந்த இடமே 'ஜில்'லுன்னு இருக்கு.

ஹினேபாவ் இங்கே இல்லை. போயிட்டா. நாமதான் தாமதமா வந்துட்டோமுன்னு மூணுபேரும் அழறாங்க. அப்ப
காத்து மெதுவா வீசிக்கிட்டே வருது. ஒரு இளைஞனோட காதுலே வையாட்டா( பாட்டு) கேக்குது. 'அழுகையை
நிறுத்திட்டு கவனமாக் கேளுங்க, ப்ளாக்ஸ் பொம்பளை நமக்காகப் பாடுது'ன்னு சொன்னான். அப்ப இன்னொருத்தன்
சொன்னான்,'மேலே ஆகாயத்துலே அந்த மேகத்தைப் பாருங்க அதுலே ஹினேபாவோட முகம் தெரியுது'ன்னு.
மாலை சூரியனோட மஞ்சள் கிரணமா இருக்கற தலைமுடியோடு ஹினேபாவோட சிரிச்ச முகம் இவுங்களைப்
பார்த்துக்கிட்டு இருந்தது. அவுங்க மூணு பேரும் கிராமத்துக்குத் திரும்பிவராங்க.

மறுநாள், கிராமத்து ஜனங்க, முதியோர்களையும், பெரியவங்களையும் கூட்டிக்கிட்டு நன்றி தெரிவிக்க கடற்கரைக்குப்
போனாங்க. ஹினேபாவோட மாலைச் சூரியன் போல இருந்த பிரகாசமான தலை முடி அங்கே கடற்பாசியா நீள நீளமா
தண்ணியிலே மிதந்து வந்துச்சு. நிர்மலமான தெளிஞ்ச ஆத்துத் தண்ணியிலே பார்த்தவங்களுக்கு ஹினாபாவோட
பச்சைகண் அப்படியே மின்னிக்கிட்டு இருந்துச்சு. கிராமத்தோட சக்கரைவள்ளிக் கிழங்கு தோட்டத்துலே வேலை
செய்யறவங்க எல்லாம் பபாடுவானுக்கு(பூமி மாதா) துதி பாடிக்கிட்டே கிழங்கை நட்டுக்கிட்டு இருந்தாங்க. நம்ம
ஹினேபாவோட ப்ளாக்ஸ் முடையற மெல்லிய விரல் அந்தக் கிழங்குலே இருந்து சீக்கிரம் முளை வர்றதுக்காக
அதை வருடிக்கொடுத்த மாதிரி இருந்துச்சாம்.

பின்னுரை:

1.இதுதான் நான் முதல்முதலா செஞ்ச மொழிபெயர்ப்பு. கதை ன்றது படிக்கச் சுலபமா இருந்தாலும், அதை மொழி
பெயர்க்கறப்ப என் முழி பிதுங்கிருச்சு. இது நிஜமாவே கஷ்டமான வேலைதான். இரா.மு, டோண்டு எல்லாம் எப்படித்
தான் செய்யறாங்களோ?

2. இந்த மவோரி பெயர்கள் எல்லாம் எப்படி உச்சரிக்கணும், அதைத் தமிழிலே எழுதறப்ப எப்படி எழுதணும் என்றெல்லாம்
புரியாம திண்டாடிட்டேன். அப்புறம் ஒரு மவோரி தெரிஞ்ச(!) நண்பர்கிட்டேக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு எழுதுனேன்.

3. ஒரு கதைக்கே தாவு தீர்ந்து போச்சு. இன்னும் ஏகப்பட்டது இருக்கு. முயற்சி செய்யப்போறேன்.

அருஞ்சொற்கள்:


Hinepau ஹினாபாவ்
Flax ப்ளாக்ஸ்
Kuia பாட்டி
Kete கூடை
Whariki பாய் (Floor mat)
Kakahu துணி மரவுரி(Clothing)
Pounamu NZ Green Stone Jade
Makutu சாபம்
Karakia இறைவழிபாடு (Prayer)

Kia ora kou tou ---Greetings
totara ஒரு வகை மரம்tree
wharenui --- ஃபாரெனூயி (tribal meeting place) மவோரிங்க உச்சரிப்பு wha க்கு ஃபா

tohunga -priest

tapu - spiritual protection

tukutuku - சுவர்லே போடர அலங்கார டிசைன் உள்ள பாய் woven wall panel
hui gathering
paua -----abalone

tane mahuta -----god of the forest

kai ------food
kaumatua --- elders
ruru -----owl
mauri ----spirit
waiata --- song

kumara -- sweet potato

papatuanuku earth mother

ஏங்க, எதாவது புரிஞ்சதா?
***************************************************************

4 comments:

said...

நல்லா புரிஞ்சுதே!!!

அட ராமா, இன்னும் ஒரு நாலு நாளைக்கு வேறதையும் பதியாதீங்க!!!!

-------
விளம்பர இடைவேளை
தமிழ்மணத்தில் ஒரே மெகா வரலாற்றுத்தொடர் இதோ..

said...

ஏன்? நாலுநாளாகுமா இன்னும் நல்லாப் புரிஞ்சுக்க?:-)

said...

Dharumi said...
நீங்க உங்க செல்லங்களைப் பத்தி எழுதினாலும், இந்த மவோரிகள் கதை எழுதினாலும் ... ரொம்ப டச்சிங்..டச்சிங்தாங்க!

ஹினேபாவுக்கு - பலவிதமான டிஸைனுங்களை தான் முடையுற பாய்களிலேயும், ட்டுகுட்டுகு-
விலேயும் கொண்டுவந்துர்ற திறமையும் இருந்திச்சுன்னா, நீங்க வார்த்தைகளிலேயே பின்னீர்ரிங்க...பின்னுங்க..பின்னுங்க...

said...

நன்றி தருமி.

நல்லா இருக்குன்னு சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.

இன்னும் கதைகள் வந்துக்கிட்டு இருக்கு.