Saturday, December 30, 2023

அதுபாட்டுக்கு அது, இதுபாட்டுக்கு இது !

பொதுவா  ஊர் சமாதானமா இருக்கும்போது கொண்டாட்டங்களுக்கு என்ன குறைவு !  பண்டிகைகளும், விழாக்களும் அது பாட்டுக்கு வந்துக்கிட்டுதானே இருக்கு! நாம்தான் கூடியவரை அவைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைஞ்சுக்கணும்.  அதற்கான மனநிலையை வளர்த்துக்கறது அவ்வளவு கஷ்டமா என்ன ? 'வேணுமெங்கில் வேரிலும் காய்க்கும்'னு பலாமரத்தைச் சொல்றோம்  இல்லையா ? அது போலவேதான்.... இப்பக் கொண்டாட்ட மனநிலை இல்லைன்னா..... 'இதுவும் கடந்து போகும்'னு கொஞ்சநாள் இருந்துட்டு,  மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத்தான் வேணும்.  முடியவே முடியாதுன்னா  இதுக்காக இன்னொரு பிறவி எடுத்து வரணுமா என்ன ? 
பேரக்குழந்தைக்கு ஆறுமாசம் முடிஞ்சு இப்போ ஏழு நடக்குது. முதல் சோறூட்டும் அன்னப்ராஸன சடங்கைச் செய்யவேணும் இல்லையா?  வீடுவரை செஞ்சால் ஆச்சுன்னு சின்ன அளவில்  செஞ்சோம். மொத்தமே அஞ்சுபேர்தான்,  குழந்தை உட்பட !

புது உடுப்பு ஒன்னும் போட்டுக்கலையேன்னு    தாத்தாவின் புது அங்கவஸ்திரத்தை வேட்டியாக் கட்டிவிட்டாச்:-) 
கொஞ்சூண்டு பால்சாதமும், பருப்பு சாதமுமா செஞ்சு , நம்ம பெருமாளுக்குக் காண்பிச்சுட்டு, தாயின் கைகளால் குழந்தைக்கு ஊட்டிவிடச் சொன்னேன். சம்ப்ரதாயம்! புது ருசி பிடிச்சுருக்காம்! 
நம்ம 'இவன்' எப்படியாவது போங்கன்னு, சட்டை செய்யாமல் இருந்தான்.
சாயங்காலமா நம்ம புள்ளையார் கோவிலுக்குப் பிரஸாதமாப் பால்பாயஸம் செஞ்சு கொண்டுபோனோம்.  ரெண்டுமூணுபேர்தான் கோவிலில். அப்புறமா ஒரு நாலுபேர் வந்தாங்க.  பாயஸத்துலே யார் பெயர் இருந்ததோ அவுங்கெல்லாம் வந்தாச்!  தரிசனம்  முடிச்சு வீடு திரும்பினதும் நம்ம இவனை சமாதானப்படுத்தினேன். கோவம் போயே போச் :-) 




இங்கே கோவில்களில் எல்லாம் சிறுகச் சிறுகக் கிடைக்கும் உண்டியல் காசுகளை வச்சு, எதாவது  அபிவிருத்தி செஞ்சுக்கிட்டே இருப்போம்.  அந்த வகையில் நம்ம ஹரேக்ருஷ்ணாவில் புதுசா ஒரு சைதன்ய மஹாப்ரபு  சிலையைத் தோட்டத்தில் நிர்மாணிச்சுருக்காங்க. உள்ளூர் கிருஷ்ண பக்தர் செஞ்சுருக்கார். நல்லாவே இருக்கு ! கோவில்காசைப் பிடுங்கித் தின்னும் வகை, இங்கத்து அரசுக்குத் தெரியாது.

நம்ம வீட்டில் வருஷத்துக்கொருமுறை சூரியனின் ஒளிக்கதிர், ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வீட்டுக்குள் வந்து ஃபோயரில் தொங்கும் Chandelier இன் Crystal ball மீது பட்டு, எதிர்ச்சுவரில் மாயாஜாலம்  காண்பிக்கும். எல்லாம் ஒரு நில விநாடிகளுக்குத்தான். எப்போ வரும் என்பதைக் கவனிச்சு வச்சுக்கலை.  செப்டம்பர் மாதம் என்றவரைதான் தெரியும்.   பார்க்கக் கிடைச்சால் பாக்கியம் என்ற அளவில்தான்.  இந்தமுறை கண்ணில் பட்டது ! உள்ளே போய் செல்ஃபோன் கொண்டுவர்றதுக்குள்  லேசா மங்கிருச்சு. ஆனாலும் நான் விட்டுவைக்கலை :-)
இப்போ நடப்பது புரட்டாசி மாசம்  (Sep-Oct )இல்லையோ !   நம்ம ஃபிஜி தென்னிந்திய சன்மார்க ஐக்கிய சங்கத்தின்  (TISI )  வருடாந்திர கோவிந்தா பூஜை, புரட்டாசி சனிக்கிழமை ஒன்றில் நடத்துவார்கள்.  இந்த சங்கத்தின் ஒரே ஒரு ஒரிஜினல் தென்னிந்தியர் யாருன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன ?  ஹிஹி....

பூஜை நடக்கும் இடம் நம்ம யோகா வகுப்பு  நடக்கும் ஹால்தான். சில வருஷங்கள் நம்ம மாஹாமாரியம்மன் கோவிலில் நடத்தினோம். அதற்கு முன்னே எதாவது பள்ளிக்கூட ஹாலை வாடகைக்கு எடுப்பதுதான் வழக்கம்.  இந்த மாரியம்மன் கோவில் இருக்கும் இடத்தை ஒரு ஃபிஜி நண்பர் தாற்காலிகமாக நமக்குக் கொடுத்திருந்தார். என்னமோ திடீர்னு இடத்தை விற்கப்போய், அம்மனுக்கு இடமில்லாமல் போயிருச்சு.  சங்கத்தலைவர், தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு ஷெட் போட்டு  அம்மனை உக்கார்த்தியிருக்கார். கோவிலுக்கான ஒரு இடம் வாங்கும் முயற்சியில் இப்போது இருக்கோம். ப்ச்.....

இதுவுமே நம்ம சிட்டிக்கவுன்ஸிலின்  கம்யூனிட்டி ஹால்தான். எல்லாப் பேட்டைகளிலும்  சிட்டிக் கவுன்ஸில் லைப்ரரியையொட்டியே  ஹாலும் கட்டிவிட்டுருக்காங்க.  இதே வளாகத்தில்தான் நம்ம புள்ளையார் கோவிலும் இருக்கு !

நாங்க போய் புள்ளையாரைக் கும்பிட்டுக்கிட்டு, அங்கே இருந்த பக்தர்களிடம்,  "கம்யூனிட்டி ஹாலில்  புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் பூஜை நடக்குது!  விருப்பம் இருப்பவர்கள்  வாங்க"ன்னு அழைச்சுட்டு ஹாலுக்குப் போனோம்.  புள்ளையார் கோவில் நேரம் தினமும்  மாலை 7 முதல்  8.30 வரைதான். 




பறை ஒலிக்கப் புரட்டாசி படையல் போட்டுப் பூஜை வழக்கம்போல்  நல்லாவே நடந்துச்சு. ஆக்லாந்து நகரில் இருந்து  நம்ம பூசாரி ஐயா ஷிவ் பிள்ளை வந்து நடத்திக்கொடுத்தார். நம்ம மாரியம்மன் கோவில் ஆரம்பிச்சதுமுதல் சங்கம் நடத்தும்  முக்கிய விழாக்களுக்கெல்லாம் இவர்தான் நம்ம பூசாரி !
புள்ளையார் கோவிலில் தரிசனம் முடிச்சுட்டு, ரெண்டுபேர் இங்கே வந்தாங்க நம் அழைப்பில் வந்தவங்களை எல்லோருக்கும் பொதுவா அறிமுகப்படுத்திட்டு பெருமாள் தரிசனம் பண்ணிவச்சோம்.   நம்ம இந்திய நண்பர்கள்தான். தமிழர்கள்.  ஹைதராபாதில் வேலையில் இருந்தவர்கள் என்பதால்  ஹிந்தி பேசத் தெரிஞ்சுருக்கு.  ஃபிஜி தென்னிந்தியர்கள்  யாருக்குமே தென்னிந்திய மொழிகளில் ஒன்னு கூட பேசவராது. முதல் ரெண்டு மூணு தலைமுறைகளோடு எல்லாம் போச்சு. அங்கே  தென்னிந்தியர்கள் எல்லோருமே மத்ராஸிகளே !  " ஹம்  மத்ராஸி ஹை. மகர் மத்ராஸி நை ஜானே" இப்போ  எல்லோரும் ஹிந்திதான் பேசறாங்க. 





மேலே படம்: சங்கத்தலைவரும் தலைவியும் !

பூஜை முடிஞ்சு பிரஸாதங்களை ஒரு கட்டு கட்டினோமுன்னு தனியாச் சொல்லணுமா என்ன ? 

இன்றைக்கு இன்னொரு விசேஷமும் இருக்கு. நல்ல வேளையா  இந்த ஹாலுக்கு  எதிர்ப்புறம் இருக்கும்  மிகப்பெரிய  ஹாலில்தான். உண்மையில் இது இன்டோர் ஸ்டேடியம்.  நெட்பால், பாஸ்கட் பால், பேட்மின்டன், வாலிபால்ன்னு விளையாடும் வசதிகள் நிறைஞ்சது. பேட்மின்டன் கோர்ட்ன்னா ஆறு  கோர்ட்ஸ் அடுத்தடுத்து   வரிசையா செட் பண்ணிக்கலாம். 1260 சதுர மீட்டர் பரப்பளவு.  நடுவுலே  தூண்கள் ஏதும் இல்லை !  500 பேர்கள் கலந்துக்கும் விழா என்றால் இதை வாடகைக்கு எடுக்கலாம். இதைத்  தனியார் நிறுவனம் நடத்தறாங்க.  நம்மூரில் நடக்கும்  NATIONAL  CAT SHOW  கூட இங்கேதான் !

இப்ப ஏன் அங்கே போறோமுன்னா.....  கர்பா ஆட்டத்தில் கலந்துக்கத்தான். (நல்ல சாப்டாச்சு. செரிக்க வேணாமா ?) நாங்க இங்கே வந்த புதுசுலே எல்லாம் நவராத்ரி சமயம், குஜராத்திகள் சங்கத்தில் மட்டும்தான் கர்பா நடனநிகழ்ச்சி நடக்கும். அதுகூட அந்த ஒன்பது நாட்களுக்குமே  இருக்காது. இடையில் வரும் வீக்கெண்டுக்கு மட்டும்தான். 

இப்போ என்னன்னா.... இந்தியர் கூட்டம் பெருகிப்போய்,  கர்பா ஆடுவது ஒரு முக்கிய கலாச்சார விழாவா ஆகி இருக்கு.  குஜராத்தில் புகழ் பெற்ற கர்பா நடனக்கலைஞர்களை வரவழைச்சு பெரிய ஷோ வா ஆக்கிட்டாங்க. பயங்கரவிலையில் டிக்கெட் ! காசைக்கொடுத்துட்டு ஆடிட்டு வரணும்!  

உள்ளுர் மக்கள்  சும்மா விடுவாங்களா ?  கம்யூனிட்டி ஈவன்ட்ன்னு  நவராத்ரி சமயம் மட்டுமில்லாம  முன்னும்பின்னுமா கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு எங்கே பார்த்தாலும் கர்பா கர்பா.  எங்க யோகா வகுப்புலே கூட கர்பா ஆடறோமுன்னா பாருங்க ! 





அந்தப்பெரிய ஹாலில் நடுவில் சிம்மவாஹினி அம்பே மாதா சந்நிதி  அமைச்சு அதைச் சுத்தியும், அங்கங்கே சின்னச் சின்னக் குழுவாகவும்  ஆடிக்கிட்டு இருக்காங்க.  போனதுக்குக் கொஞ்சநேரம் ஆடினேன்.    அநேகமா எல்லோரும் நமக்குத் தெரிஞ்சவுங்க என்பதால் குசலவிசாரிப்புகளும் குழு ஆட்டங்களுமாப் போச்சு.

சாயங்காலம் ஆறரை முதல் சனம் ஆடிக்கிட்டு இருக்கு. போற போக்கைப் பார்த்தால் ராத்ரி பனிரெண்டுவரைகூடப் போகலாம். நமக்குப் போதுமுன்னு கிளம்பி வீட்டு வந்துட்டோம். நேத்துப் பௌர்ணமி நிலா இன்றைக்கு முகம் காமிச்சது. அதென்னவோ சொல்லி வச்சதுபோல் எல்லாப் பௌர்ணமி தினங்களும் மேகமூட்டத்தோடுதான்.   அத்தி எப்பவாவதுதான் பூக்கும்!

நம்ம செல்லில் படம் வருதான்னு பார்த்தேன். அட ! 



Wednesday, December 27, 2023

ரெட்டைப் பொறந்தநாளைக் கொண்டாடியாச்

 உங்க துளசிதளத்தின் & தளத்தின் புரவலர் நம்ம கோபாலின்  பிறந்ததினத்தைக் கொண்டாட இந்திய அரசே விழாவொன்னு ஏற்பாடு செஞ்சதுன்னு சொன்னால் நம்புவீங்களா ? 

என்ன..... இல்லையா ? 

படங்காமிச்சால் நம்புவீங்கதானே ? இதோ.............. !
துளசிதளத்துக்கு 19 வயசு முடிஞ்சு 20 ஆரம்பிச்சாச்சு !  புரவலர் ரொம்பவே மூத்தவர். மறந்துறாம இருக்கணும் என்றுதான் இவருக்கும் தளத்துக்கும் முடிச்சுப்போட்டு வச்சேன் :-)

பொறந்தநாள்  ஞாயிற்றுக்கிழமையா அமைஞ்சதுலே சிலபல கூடுதல்பலன்கள் கிடைச்சது!

தோழியின் குழந்தையைத் தொட்டிலில் போட்டுப் பெயர்வைக்கும் விழா காலையில் முதல் நிகழ்ச்சி. நம்ம வீட்டில் சாமி கும்பிட்டு முடிச்சு,  நண்பர் குழந்தைக்குத் தொட்டிலிடும் வைபவத்திற்குப் போனோம்.  நம்ம அன்பு விநாயகர் கோவில் இவுங்க வளாகத்துலேதான் இப்போதைக்கு !  ரெண்டு ஆண்குழந்தைகளுக்குப்பின் இவள் பெண். குழந்தையின் அம்மம்மா இந்தியாவில் இருந்து மகளுக்கு  உதவி செய்ய  வந்துருக்காங்க. 
குழந்தைக்கு அழகான தமிழ்ப்பெயர்  தேர்வு செஞ்சுருந்தாங்க .  நயம் புன்னகை !  எப்பவும் புன்னகையோடு இருக்கட்டும் என்று வாழ்த்தினோம் ! 
இன்னும் இரண்டு நண்பர்கள் குடும்பமும் அழைப்பின் பெயரில் வந்துருந்தாங்க .ஏற்கெனவே நமக்குப் பரிச்சயம் உள்ளவர்கள்தான் என்பதால்   பேச்சும் சிரிப்புமாக விழா நடந்துச்சு !



அங்கிருந்து கிளம்பி நேராப் போனது  நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குத்தான். இப்பெல்லாம்  காலை நாலரை முதல் பகல் ஒரு மணிவரைக் கோவிலைத் திறந்து வைக்கறாங்க. நமக்கு நல்ல வசதியாகப் போச்சு.  நாம்தான் விழாக்களையெல்லாம் வீக் எண்டுக்கு நேர்ந்துவிடும் மக்களாச்சே ! அதுவும் விழாக்களுக்கான நேரம் சனிக்கிழமை  மாலையில்தான். 

நமக்கு  மாலை நேரங்களில் வேறு விழாக்களுக்குப் போக வேண்டி இருந்தால், சனிக்கிழமை கோவில் தரிசனத்தைப் பகல் ஒரு மணிக்குள் வந்து முடிச்சுக்கலாம்.

இன்று மாலை Meet & Greet  என்ற நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி நம்ம இந்தியன் ஹைக்கமிஷணரின் (Ms. Neeta Bhushan ji )  அழைப்பு !  யாரைச் சந்திக்கப்போறோமாம் ?  

Dr. Rajkumar Ranjan Singh, Hon'ble Minister of State, Ministry of External affairs, Government of India. 

சாயங்காலம் அஞ்சரைக்கு நிகழ்ச்சி. சந்திப்பு மட்டுமில்லாமல்  உள்ளூர் கலைஞர்கள் மூலம் சிலபல கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செஞ்சுருந்தாங்க.

தலைநகரில் (வெலிங்டன்) இருந்துவரும் விமானம் தாமதமாக வந்திறங்கியதால்  நிகழ்ச்சியும் தாமதம் ஆச்சு. ஆனால் ஒத்திகை பார்ப்பதுபோல்  சில நடனங்களை  ஆடினதில்  பொழுது நல்லாவே போச்சு. கூடியிருந்த மக்களும் நமக்குத் தெரிந்தவர்கள்தான் இல்லையோ !








மேலே படம்: இந்திய ராணுவ அதிகாரி & மனைவியுடன் .பணி ஓய்வு பெற்று, இப்போது நம்ம ஊரில் குடும்பத்துடன் வசிக்கிறார். எங்க ஊர் விஐபி !

அமைச்சர் வந்ததும் விளக்கேற்றி வச்சுக் கூட்டத்தை ஆரம்பிச்சு வச்சார். அரசியல்வியாதிகளின் பேச்சைப்போல் இல்லாமல்  ஏதோ நம் குடும்பத்துப் பெரியவர்களுடன் நடந்த சந்திப்பாகத்தான் எனக்குத் தோணுச்சு. 

 அறிமுகங்கள் எல்லாம் ஆச்சு.  நம்ம ஹைகமிஷணரும் ரொம்பவே அன்பானவர்களாத்தான் இருக்காங்க. நடன நிகழ்ச்சிகளா முதலில் பரதநாட்டியம், அடுத்து வெவ்வேறு மாநிலமக்கள் (மேற்கு வங்காளம், குஜராத்,  பஞ்சாப் ) வழங்கிய  நடனங்கள்ன்னு இந்திய விழாவாக இருந்தது உண்மை. எல்லோரும் நம்மவருக்குப் பொறந்தநாள் வாழ்த்துகளையும் சொன்னாங்க. 

படங்கள் எல்லாம் க்ளிக்கி முடிஞ்சதும்  முக்கிய விருந்தினர்கள் கிளம்பிட்டாங்க.  அமைச்சர் இன்று காலையில்தான் இந்தியாவிலிருந்து  வெலிங்டனுக்கு வந்தார். ஜெட்லேக் இல்லாமல் இருக்குமா ?

அமைச்சர் வாழ்கன்னு சொல்லி, ஏற்பாடு செஞ்சுருந்த  சிற்றுண்டிகளை ஒரு கை பார்த்துட்டு வீட்டு வந்தோம்.  பர்த்டே பார்ட்டி ஆச்சு ! 
நாளைக்கும் இதே நேரம் இங்கே வரணும். ஹிந்து ஸ்வயம் ஸேவக் நம்மூர் கிளை,  மூணுநாட்களுக்கு முந்தியே தகவல் அனுப்பி இருந்தாங்க.

 "மதன்மோஹன் வைத்யா ஜி, நம்மூருக்கு வருகை தருகிறார்.  அவர் நம்மையெல்லாம் சந்திக்க ஏற்பாடு செஞ்சுருக்கோம்"

சந்திப்புக்கு வர்றோமுன்னு பதில் சொல்லியிருந்தோம்.
மறுநாள் நம்ம நண்பரிடமிருந்து ஒரு செய்தி. நண்பர் இங்கே HSS இன் நம்மூர்க்கிளையில் முக்கிய பொறுப்பில் இருக்கார்.  'விருந்தினரை நம்ம வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வரவா'ன்னு  கேட்டதும் சரின்னுட்டோம். பகல் சாப்பாட்டுக்கு வர்றீங்களான்னதுக்கு, இல்லை. ஒரு நாலு மணிக்கு வர்றோமுன்னு சொல்லிட்டார்.  ஹாலில் சந்திப்பு ஆறு மணிக்கு என்பதால்  நம்ம வீட்டுக்கு வந்து, இங்கிருந்து போக சரியாக இருக்குமாம்.

வைத்யா ஜி  வீட்டுக்குள் வந்ததும், நம்ம ஊஞ்சலைப் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி அடைஞ்சார். நேராப்போய் அதுலே உக்கார்ந்தார். எனக்கும் மனசுக்குத் திருப்தியா இருந்தது. நம்ம வீடு நியூஸியில் இருக்கும் இந்தியவீடு ! உள் அலங்காரம் எல்லாம்  இந்திய ஸ்டைலில்தான். 

பூஜை அறைக்குப்போய்  ஸ்வாமி நமஸ்காரம் செஞ்சுட்டு, ரொம்ப நல்லா இருப்பதாகப் பாராட்டினார்.  நாம் எங்கே வாழ்ந்தாலும்  நம்  ஹிந்து பாரம்பரியத்தை விடக்கூடாது.  மனதில் பக்தியோடு இருப்பது நல்லதுன்னு எங்களுக்கு ஆசி வழங்கினார்.  ஊரிலிருந்து உறவினர் வந்ததுபோல் உணர்ந்தேன். 

இவரோடு  HSS உள்ளூர்க்கிளை &  'தலைமையகம் ஆக்லாந்து'  தலைவர்களும் வந்துருந்தாங்க.  அவர்களையும் பூஜையறைக்குள் கூப்பிட்டுக் காண்பிச்சார்.  நம்ம உள்ளூர் கிளைத் தலைவருக்கு  ஒரே வியப்பு !  இவ்வளவு நல்லா வச்சுருக்கீங்களே ! இதுவே கோவில் மாதிரி இருக்கேன்னார்.  

காஃபியா டீயான்னு கேட்டதும்,  சௌத் இண்டியன்ஸ்,  காஃபிதானே ரொம்ப நல்லாத் தயாரிப்பீங்க.  காஃபியே இருக்கட்டுமுன்னார்.  அடடா..... டிக்காஷன் இறங்க ரொம்ப நேரம் ஆகுமே.....  நெஸ்காஃபி போடவா?  இல்லை சௌத் இண்டியா   மூணாறு கண்ணன் தேவன் டீயான்னு கேட்டுட்டு மில்க் குக்கரில் டீ போட்டேன்.  டீ ரெடியானதும் விஸில் அடிச்சது :-)

ஒரு மணிநேரம் போனதே தெரியலை. 

இவர் 2018 இல் ஒரு கருத்தரங்குக்காக நம்மூருக்கு வந்துருக்கார். அந்த விவரங்கள் இதோ இந்தச் சுட்டியில் !   

சுட்டி வேலைசெய்யலைன்னா கீழே இருக்கு லிங்கு.

 https://thulasidhalam.blogspot.com/2018/11/blog-post.html


அப்புறம் எல்லோருமாக் கிளம்பி  ஹாலுக்குப் போனோம்.  இது நம்ம சிட்டிக் கவுன்ஸில் லைப்ரரியைச் சேர்ந்த ஹால்.  ரொம்ப நல்லாக் கட்டி இருக்காங்க.  எங்கூர் 2011 வருஷ  நிலநடுக்கத்துக்கு அப்புறம் கட்டுனது.  நிலநடுக்கம் வந்தாலும்  இடிஞ்சுபோகாத வகையில்  பாதுகாப்பான  கட்டடம்.  பொதுமக்களுக்கு வாடகைக்குக் கிடைக்கும்.  மகளின் கல்யாண ரிஸப்ஷன்கூட இங்கேதான் நடந்தது. 






இன்று  வேலைநாளாக இருந்ததால் சுமாரான கூட்டம். எல்லோருடனும் அறிமுகம் ஆச்சு. போனமுறை வந்திருந்தபோது பார்த்த சில முகங்கள் நினைவுக்கு வந்ததாகச் சொல்லி   நாம் வாழும் சமூகத்திற்கு நாம் செய்யவேண்டிய சேவைகள் பற்றியெல்லாம் சிறிதளவு விவரித்தார். ராத்ரி டின்னருக்கும் ஏற்பாடு  செய்ததால்  அங்கேயே சாப்பாடும் ஆச்சு.

ரெண்டுநாளாத் தொடர்ந்து, பொறந்தநாளைக் கொண்டாடுன திருப்திதான் எங்களுக்கு !