Monday, September 30, 2019

கேதார் கௌரியில் ......... பூனைக்கு மவுசு ! (பயணத்தொடர், பகுதி 149 )

முக்தேஸ்வர் கோவிலில் இருந்து ஒரு நிமிட் நடையில் கேதார் கௌரி கோவில் இருக்கு.  நாம் அங்கே போகும் வழியில் பாதி தூரத்தில் (!) புதுசா  நம்ம ஆஞ்சிக்கு ஒரு கோவில் கட்டி இருக்காங்க. கேதாரேஸ்வரா கோவில்னு ஒடிஷா டூரிஸம், ஒரு  போர்டும் போட்டு வச்சுருக்கு.  அதுக்குப் பக்கத்தில் கேதார் கௌரி டெம்பிள்னு இன்னொரு போர்டும்.   சுற்றுலாத்துறைக்கு என்ன குழப்பமுன்னு தெரியலை....  ஒருவேளை பார்க்கின் ஒரு பக்கம் இருந்த  இன்னொரு கோவிலுக்கான தகவலோ என்னவோ?   அங்கே ஒன்னும் இல்லைன்னு நாம் போகலை.....  ஆங்.... சொல்ல விட்டுப்போச்சே.... இந்தக் கோவில்கள் இருக்கும்  தோட்டத்துக்கே  கேதார்கௌரி பார்க் னுதான் பெயரே!



இந்தக் கோவிலும் பத்தாம் நூற்றாண்டுக் கோவில்தான்.  சரித்திர முக்கியத்துவம் உள்ளவைகளை  அதன் தோற்றம் மாறாமல் புதுப்பித்து வைக்கணும் என்பதை யாரும் சட்டை செய்யலை போல !  இஷ்டத்துக்குப்  பெயின்ட் அடிச்சு வச்சுருக்காங்க. கோவில் நிர்வாகக்கமிட்டியில் யாரோ பெயிண்ட் கடை வச்சுருக்காங்க ....   ஒரிஜினல் கட்டடங்களைத் தவிர காங்க்ரீட் கட்டடங்களா  கோவில் வளாகத்துக்குள் ஏகப்பட்ட சந்நிதிகள்.....
நுழைவு வாசலில் இருக்கும் சிங்கங்கள் பெரிய மீசையோடு நெத்தியில் நாமம் தரிச்சு ஒரு கையை உயர்த்தி வா வான்னு கூப்பிட்டன :-)

சிவன் சந்நிதியில்  சிவலிங்கம் இருப்பதே தெரியலை....   பாம்பு மட்டும் தலை உயர்த்தி நிக்குது!
சிம்மவாஹினி சந்நிதியில் ஒரே பாம்புக்கூட்டம்!

புள்ளையாருக்கு ரெண்டு தனிச்சந்நிதிகள். அதுலே ஒருவர் செந்தூரப்பூச்சுடன்!

அம்பாள் சந்நிதி, தனிக்கோவில் போலவே  இருக்கு. இது பழைய கட்டடமே.  உள்ளே கௌரி அம்மன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறாள்!  நல்ல அலங்காரம்!




 ஆஞ்சிக்கொரு தனிச்சந்நிதி!  செந்தூரப்பூச்சுடன் கொஞ்சம் மின்னறார்!
மடப்பள்ளியில் எதோ ப்ரசாதம் தயாராகுது.  ச்சும்மா எட்டிப் பார்த்தோம். விறகடுப்பில் வெங்கலபாத்திரத்தில்  தளிகை!  ஏற்கெனவே பயன்படுத்திய பாத்திரங்களைத்  தேய்ச்சு வெயிலில் காய வச்சுருக்காங்க. ச்சும்மா விடலாமோ? க்ளிக் :-)


முற்றத்தில் தலவிருக்ஷம் நிக்குது.  முதல்முறையா இந்தப்  பக்கங்களில் தலவிருக்ஷம் இங்கேதான் பார்த்தேன்.  பக்தர்கள்  ஜரிகைத்துணியில் அலங்கரிச்சு வேண்டுகோள் வச்சுட்டுப் போறாங்க.
வளாகத்தில் அங்கங்கே  இப்படி  மண்டபங்கள்  சின்னச் சின்ன அளவில்....

ஒரு சுவாரஸ்யமான சமாச்சாரம் இருக்கு இந்தக் கோவிலைப் பற்றி....   கோவிலுக்குப் பூனைக்குட்டிகளை நேர்ந்து விடுவாங்களாம்.  ஹைய்யோடா...... 

ஏன்? எதுக்குன்னு கொஞ்சம் தேடினால் ஒரு கதை கிடைச்சது :-)  ஏகப்பட்ட கோவில்கதைகள் இந்த கேதார்கௌரி கோவிலுக்கு இருக்குன்னாலும் நமக்குப் பூனைக் கதை முக்கியம் இல்லையோ !

ஒரு காலத்துலே ஒரு கணவனும் மனைவியும், கணவரின் தாயுமா மூணு பேர் ஒரு வீட்டில் வசிக்கிறாங்க. ரொம்ப ஏழ்மை....  தாய் கடவுள் பக்தி நிறைஞ்சவர்.தினமும் பூஜை செய்யாமல் அன்ன ஆகாரம் எடுக்கமாட்டாராம்.
ஏழையா இருப்பதால் கடவுளுக்குப் படைக்க விதவிதமா ஏதும் செய்ய முடியாது.  காலையில் ஒரு கிண்ணம் பால் மட்டும் வச்சுப் படைச்சுட்டு, அந்தப் பாலையே காஃபிக்குப் (!!!!) பயன்படுத்திக்குவாங்களாம்.

ஒருநாள்  சரியான சாப்பாடே கிடைக்காமல் குடும்பமே பட்டினி. காலையில் வழக்கம்போல் மாமியார் கிண்ணத்தில் பாலை நைவேத்யமா வச்சுட்டுக் கண்ணை மூடி சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க.  மருமகளுக்கு அன்றைக்குக் கொலைப்பசி.

என்ன செய்யலாமுன்னு 'யோசிச்சு'  அரைக்கிண்ணம் பாலை எடுத்து முழுங்கிட்டாங்க.  மாமியார்  கண்ணைத் திறக்கும்போது  அரைக்கிண்ணம் பாலைக் காணோமுன்னா என்ன சொல்வாங்களோன்னு பயம் வந்துருச்சு. சட்னு பால்கிண்ணத்துலெ  விரலை விட்டு முக்கி, அவுங்க வீட்டுப் பூனையை நைஸாக் கூப்பிட்டு அதன் வாயைச் சுத்தித் தடவிட்டாங்க.

கண்ணத் திறந்த மாமியாருக்கு அதிர்ச்சி !~  அரைக்கிண்ணம் பால் குறைஞ்சுருக்கு.  அப்பப் பார்த்து அங்கே யதார்த்தமா அந்தப் பூனை  வருது. அதன் முகத்துலே பால் தடம்.
அவ்ளோதான்.... திருட்டுப்பூனை....சாமி பாலைக் குடிச்சுருச்சேன்னு  அதை நல்லா அடிச்சுட்டாங்க. அடிதாங்காம ஓடிப்போன பூனை ஒரு மரத்துமேலே ஏறி உக்கார்ந்து அழுதுக்கிட்டு இருக்கு.  அப்பதான் கௌரி அம்மன், அந்தப் பூனையைப் பார்த்து மனம் இரங்கி, ஒரு வயதான கிழவி உருவில் அந்த மரத்தாண்டை வந்து பூனையைத் தூக்கிக்கிட்டுப்போய் தன்னுடன் கூடவே வச்சுக்கிட்டாங்க.

அப்போ முதல் பூனையே கௌரிக்கு வாஹனமாவும் அமைஞ்சதுன்னு .... கதை போகுது......

அம்மன் சிலைக்கருகில் பூனையை செதுக்கி இருக்காங்களான்னு பார்த்தால்.... பூக்குவியலுக்கிடையில் ஒன்னும் சரியாத் தெரியலை....
இதுவரை  புபனேஷ்வரில்  பார்த்த கோவில்களில் இங்கே மட்டும்தான் கோவில்கதைகள் நிறைய இருக்கு.  சனமும்  அதிகம் வந்து புழங்கும் கோவில் என்பதால் கதைக்கென்ன பஞ்சம் !!! அதெல்லாம் கதை பண்ணிடமாட்டாங்களா என்ன ?

கேதார்னு ஒரு பையனும் கௌரின்னு ஒரு பொண்ணும் காதலர்கள். சமூகம் இவுங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னு ஓடி வந்து காடாக இருந்த இங்கே ஒளிஞ்சுருந்தாங்க. அப்போ ஒரு சிங்கம்  கேதாரைக் கொன்னுருச்சு. துக்கம் தாங்காமல் கௌரி குளத்தில்  (இப்ப இது இந்தக் கோவில் புஷ்கரணி) குதிச்சுத் தற்கொலை செஞ்சுக்கிட்டாள்.  அப்போ இருந்த மன்னர் இவுங்க நினைவுக்கு இந்த ரெண்டு கோவில்களைக் கட்டினார்னு  கதையை நல்லாவே கட்டிவிட்டுருக்காங்க.

 இதனால் என்ன ஆச்சு?  காதலர்களும், புதுசாக் கல்யாணம் ஆனவர்களும் இங்கே வந்து கும்பிட்டால் நல்லபடியா வாழ்வாங்க. (சிங்கம் அடிச்சுப் போடாது....   )

இது போதாதா.....  கூட்டங்கூட்டமா இளவயசுக்காரர்களை வசீகரிக்க.....


கேதார்னு சிவனுக்கு ஒரு கோவிலும், கௌரின்னு அம்மனுக்கு ஒரு கோவிலுமா பழைய ஸ்டைலிலும், மற்ற சந்நிதிகள் எல்லாம் காலப்போக்கில் வந்து சேர்ந்துக்கிட்ட மாதிரியும்தான் இருக்கு. அம்மன் கோவில்தான் வயசில் மூத்தது, பத்தாம் நூற்றாண்டு.  ஐயன் கோவில் பனிரெண்டாம் நூற்றாண்டு கட்டியதாம்

இதுலே அம்மன் கோவிலின் விமானம்தான் கொள்ளை அழகு! கேதார், ரொம்பவே சுமார். கலிங்கத்துக் கட்டடக்கலையில்  விமானங்களில் சிங்கமுகம் போல ஒரு ராக்ஷஸ உருவம்  செதுக்கி வைப்பது வழக்கமாம். கீர்த்திமுகம் என்று அதுக்கு ஒரு பெயரும் இருக்கு! அநேகமா பத்தாம் நூற்றாண்டுக் கோவில்களில் எல்லாம் தவறாமல் செதுக்கி இருக்காங்கன்னு நினைக்கிறேன். அது இங்கேயும் இருக்கு. 

இந்தக் கேதார் கௌரி கோவிலிலும் நீர்த்தொட்டி போல ஒரு திருக்குளம் உண்டு. Khira Kunda என்ற பெயர். இந்த திருக்குளத்துத் தீர்த்தத்தை குடிச்சால்.... மனுஷ ஜன்மத்தின் பிறப்பு  இறப்பு  சுழற்சியில் இருந்து விடுபடலாமாம்.
இன்னொரு முக்கியமான விஷயம்... இந்தக் கோவிலில்தான் பார்வதி திருக்கல்யாணம் விழா, நம்ம வைகாசி மாச வளர்பிறை சஷ்டி நாளில் நடக்குது. ஷிதல்சஷ்டி(Shital Shashti) ன்னு சொல்றாங்க. அன்றைக்கு லிங்க்ராஜா கோவிலில் இருந்து சிவன், ஊர்வலமா இங்கே வந்து பார்வதியைக் கல்யாணம் செஞ்சுப்பார். நல்ல பெரிய திருவிழாவா நடக்குமாம்.   லிங்கராஜா கோவிலுக்கும், இந்தக் கோவிலுக்கும் ஒரு கிமீ தூரம்தான் !
'காசியில் ரொம்ப சத்தம். ஆழ்ந்து தியானம் பண்ணவே முடியலை. எனக்கொரு அமைதியான இடம் வேணும். எங்கே போகலாமுன்னு பார்த்துட்டு வந்து சொல்லு'ன்னு  கேதார் நாரதரைக்கேட்க... அவர் சொன்ன இடம்தான் நம்ம புபனேஷ்வர் கேதார்கௌரி கோவிலாம்.  பாவம் ... வந்துபார்த்தால் ஏற்கெனவே ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேயே (பிடுங்கல் தாங்காமல்?) கௌரி வந்து தங்கிட்டாங்க....  இனி அமைதி கிடைக்கும்?   ஹாஹா....  )

தொடரும்........... :-)



Friday, September 27, 2019

தங்கத்துலே பதிச்ச அபூர்வ வைரம்!!! (பயணத்தொடர், பகுதி 148 )

மேகேஷ்வரை தரிசனம் செஞ்ச கையோடு  ஒரு ரெண்டரை கிமீ தூரத்தில் இருக்கும்  முக்தேஸ்வர் கோவிலுக்கு ஒரு பத்துநிமிட்டில்  வந்துட்டோம்.  இது  மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு.
பெரிய தோட்டம் போலிருக்கும் இடம்.  நாம் போகும் வழியில்  சிலபல காவியுடை அன்பர்கள் , அவுங்க சுமந்து வந்த காவடிகளை, மதில் சுவரில்  'பார்க்' பண்ணிட்டு ஓய்வாப் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர்களில் ஒருவரிடம் கொஞ்சம் பேச்சுக்கொடுத்து விசாரிச்சேன்.

காவடியில் இருப்பது அவுங்க ஊர்க் கோவிலின் புஷ்கரணித் தீர்த்தமாம். அதை எடுத்துக்கிட்டுப் பூரி நகருக்குப் பாதயாத்திரை போறாங்களாம்.  அங்கே போனதும், கொண்டுபோகும் தீர்த்த்தை  அங்கத்துக்கோவிலில் அபிஷேகம் செஞ்சுட்டு அங்கிருக்கும் புஷ்கரணியில் இருந்து மறுபடி தீர்த்தம் ரொப்பிக்கிட்டுப்போய் அவுங்க ஊர் கோவிலில் அபிஷேகம் செஞ்சு இந்த பக்தி யாத்திரையைப் பூர்த்தி செய்வாங்களாம். 
இதுவரை எவ்வளவு தூரம் நடந்து வந்தாங்களோ தெரியலை....  இங்கிருந்து சுமார் அறுபத்தியஞ்சு கிமீ  போகணும் பூரிக்கு! பக்தி யாத்திரை என்பதால் காலுக்குக் காலணி கூட இல்லை. வெறுங்காலில் இந்த வெயிலில்  நடந்து அவ்ளோதூரம் போறதை நினைச்சாலே எனக்கு 'திக்'ன்னு இருக்கு!
போற வழியில் அங்கங்கே தங்கி, ஓய்வெடுத்துக்கிட்டுப் போறாங்க. 'நல்லபடியாப் போயிட்டு வாங்க'ன்னுட்டு கோவில் வளாகத்தை நோக்கிப் போனால்.... சித்தேஸ்வரா கோவில்னு போர்டு இருக்கு.  இதுக்குள்ளே நுழைஞ்சால் முக்தேஸ்வரா இருக்கார். சித்தியடைஞ்சால் முக்தி என்பதுதான் உண்மை !

ஒரு அஞ்சாறு படிகள் இறங்கிக் கீழே இருக்கும் முற்றத்துக்குப் போகணும்.  நமக்கிடதுபக்கம்  ஒரு மேடையில் வரிசையா ஆறு சந்நிதிகள். மும்மூணா ரெண்டு செட்.
உள்ளே  சின்னதா சிவலிங்கங்கள் ஒரு சந்நிதியில் மட்டும். ரெண்டு சந்நிதிகளில்  தன்வந்த்ரின்னு நானாக நினைச்சுக்கிட்டேன். கையில் என்னவோ கலசம் ஏந்திய சிலை.... இன்னொன்னில் புள்ளையார் (போல) சிலை.




வலப்பக்கம் ஒரு தனிக் கோவில்.
நேராக் கண்ணுக்கெதிரே அந்தாண்டை  ஒரு மேடைப்பகுதியில் இன்னொரு கோவில்!
6 வித்யாசம் கண்டுபிடிங்கற மாதிரிதான் பெரிய கோவில்கள் எல்லாமே இருக்குன்னாலும்  இந்த வலப்பக்கம் இருக்கும் முக்தேஸ்வர் கொஞ்சம் விசேஷப்பட்டவர்.  10 ஆம் நூற்றாண்டு சமாச்சாரம்.  வழக்கமான கலிங்கக் கட்டடக்கலையில் ஒரு புதுமை புகுத்த ஆரம்பிச்ச காலக்கட்டமாம். கோவிலுக்கு முன்னால் இருக்கும் தோரணவாயில்தான் மனசை அப்படியே கொள்ளையடிக்குது!

உச்சியில் ஒரு முகம் (இதைப்போல ஒரு முகத்தைக் கம்போடியா கோவில்களில் பார்த்த நினைவு) ரெண்டு பக்கங்களிலும்  அப்சரஸ் என்னும் தேவலோக கன்னியர்கள்! ஒய்யாரமா சாய்ஞ்சுருக்காங்க.

தோரண வாசலுக்கு அந்தாண்டைக் கொஞ்சம் இடம்விட்டு, சின்னதா ஒரு ஆள் உயரச் சுத்துச்சுவர். அதுக்கொரு வாசல்.  வாசலுக்குள் நுழைஞ்சு போனால் கோவில் வாசப்படி.  இதுவும் அரைவட்டமா இருக்கு. (கொஞ்ச நேரத்துக்கு முன்னே போன  மேகேஷ்வரிலும் இதே ஸ்டைல்தான். ) மேலே  பத்மாசனத்தில் ஒரு சாமி, நாலு கைகளுடன்.
ஜகமோஹனாவுக்குள் நுழையறோம்.  வாசலுக்கு ரெண்டுபக்கச்சுவர்களிலும்  செடிகொடிபோல வளைஞ்சு போகும் சிற்பத்தைப் பார்க்கணுமே..... மனுஷங்க.....

 நாகஸ்தம்பங்கள்கூட  இருக்குன்னாலும் அவை கோவிலின் பக்கவாட்டுச் சுவர்களில்தான்.

ஜகமோஹனாவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியா ஒன்னும் இல்லை. மேலே விதானத்தில்  எட்டு இதழ் பூ!  அதைச் சுத்திக் குட்டிகுட்டியா மனித உருவங்கள் போல தேவதைகளைச்  செதுக்கி இருக்காங்க. (சரியான லைட்டிங் இல்லாததால் நம்ம படம் நல்லா வரலை. கூகுளாரிடம் கேட்டதும் கொடுத்தார். நம் நன்றி  !    By the way  கூகுளாருக்கு இன்றைக்குப் பொறந்தநாளாம்.  ஆச்சு 21 வயசு !  நல்லா இருக்கட்டும்.  )

(எத்தனை மனித, தெய்வ உருவங்கள் பாருங்க....)

 அந்தாண்டை  கருவறைக்குப் போகும் வாசல் முகப்பில்   கஜலக்ஷ்மி. கஜலக்ஷ்மியின் தலைக்கு மேலே  நவகிரஹங்கள். கொஞ்சம் பெரிய அளவில் வச்சுருக்காங்க. மற்ற ஏழுபேரைவிட ராஹும் கேதுவும் ஸ்பெஷல்!  கேதுவுக்கு மூணுதலை நாகம் !

கருவறையில் சிவன், லிங்க ரூபத்தில் அமைதியா இருக்கார். தரிசனம் ஆச்சு!
நம்ம பக்கங்களில் கோவில்களுக்கு  முகப்பு வாசலா ராஜகோபுரமும், உள்ளே சந்நிதிகளுக்கு விமானமும் வெவ்வேற ஸ்டைலில் இருப்பதைப்போல்  இங்கே கட்டலை.  ஒரே மாதிரி  கூம்பு வகையில்  சின்னதும் பெருசுமா இருக்கு. நெடுநெடுன்னு உயரமா இருப்பது  மூலவர் கருவறை விமானம்தான்! ரேகான்னு சொல்றாங்க இதை !
கோவில் வெளிப்பக்கச் சுவர்களில்தான்  அப்படிக் கூட்டங்கூட்டமா சிற்பங்கள். இப்பெல்லாம்  க்வில் க்ராஃப்ட்ன்னு பேப்பர் சுருளில் என்னென்னவோ கைவேலை செய்யறாங்க பாருங்க..... கல்லில் அதைப்போலச் சுருள்சுருளா சுத்திவச்சுருக்காங்க....!  என்னதான் மிருதுவான சாண்ட் ஸ்டோன் என்றாலும் கூட.... இப்படி எப்படி? ஹா.....  ன்னு பார்க்கத்தான் வேணும்!

விதவிதமான  போஸில்  நடனப்பெண்கள், சாமிகள், சிங்கங்கள், யானைகள், குதிரைகள், தேவதைகள்னு அட்டகாசம் போங்க.....  சில சிலைகள் எல்லாம்  என் கையில் ஒரு சாண் அளவுதான்!
எதைச் சொல்ல எதை விடன்னு  இருக்கு.... பேசாம ஒரு ஆல்பம் போட்டாகணும்..... செஞ்சுருவோம்....


கல் பலகணி... வெளிச்சத்துக்கு !

கோவிலைச் சுத்திப் பார்த்து அனுபவிக்கணும்! பின்பக்கம்  சுத்துச்சுவருக்கு  அந்தாண்டை கோவில் புஷ்கரணி, நீச்சல் குளம் போல !  பாதயாத்ரீகர்கள்  குதிச்சுக் கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்காங்க.  படம் எடுத்துக்கிட்டே போன நான், சனம் தண்ணீரில் இருப்பதைப் பார்த்துச் சட்னு நின்னதும்,  'என்னைப்படம் எடு, என்னைப்படம் எடு'ன்னு போஸ் கொடுக்கறாங்க.  க்ளிக்க வேண்டியதாப் போயிருச்சு :-)  

பெரும்பாலும்   இளைஞர் கூட்டம்தான் இப்படிக் கோவிலுக்கு நடையா நடந்து போய்க்கிட்டு இருக்காங்க.
நீச்சல்குளத்துக்கு இந்தாண்டை  ஒரு பத்துப்படிகள் இறங்கிப்போகும் வகையில் இன்னொரு குட்டிக்குளம். மரிசி குண்ட் என்று பெயர்!  கம்பிக்கதவெல்லாம் போட்டு பூட்டி வச்சுருக்காங்க.  ரொம்ப விசேஷமான குளமாம்.  குழந்தை  இல்லாத பெண்கள், இதுலே முங்கி எழுந்தால் 'மகன்' பிறப்பானாம் !!!!!  என்னவோ குழந்தை இல்லாமைக்குக் காரணம் பெண்கள் மட்டும்தான்னு ஒருநினைப்பு அந்தக் காலத்துலே.... ப்ச்....

மக்கள் தொகை அதிகமாகிப்போச்சுன்னு பூட்டி வச்சுருக்காங்க போலன்னு நினைச்சால்... இல்லையாம்.  இந்தக் குளத்துத் தண்ணீரை, குடங்குடமா எடுத்து  ஏலத்தில் வித்துருவாங்கன்னு  ஒடிஷா பத்திரிகை செய்தி! 

அசோகாஷ்டமின்ற நாளில் பெண்கள், மரிசி குண்ட் தண்ணீரில் குளிச்சால்  மகன்  பிறப்பது கேரண்டின்னு .......    ப்ச்.... ( என்னமோ மாதொருபாகன் நினைவு வந்தது உண்மை...... )   
சித்தேஸ்வரரை தரிசனம் செஞ்சுக்கப் பத்துப்படிகள் ஏறிப்போகணும்.  பஞ்சரத அமைப்பாம் !  ஜகமோஹனாவைக் கடந்து கருவறைக்குள் போய் தரிசனம் ஆச்சு.  முக்திக்கும் சித்திக்கும் ஆவுடையார் வெவ்வேறு திசைகளில். வேறொரு வேறுபாடும் தெரியலை. இங்கே சிவன் கொஞ்சம் பெரியவர்னு தோணுச்சு.
இங்கேயும் கருவறை முகப்பில் நவக்ரஹங்கள். கூடவே கீழே இன்னொரு வரிசையில்  செதுக்குச் சிற்பங்கள். யார், என்னன்ற  விவரம் தெரியலை. இதுக்குத்தான் விவரம் உள்ள கைடு வேணுங்கறது.... 
  இதுவரை நாம் இங்கே போன கோவில்களில் இங்கேதான் கூட்டம் அதிகம். இளவயசு மக்கள்  !
முக்தியும் சித்தியும் நமக்கு ஆச்சு.  இந்தப்பகுதியில் இன்னும் ஏகப்பட்டக் கோவில்கள் இருக்கு என்பதால்  இன்னும் சில கோவில்களைப் பார்க்கணும். ம்ம்ம் கிளம்பலாமா?

தொடரும்........... :-)